Tuesday, April 20, 2004

குட்டி ரேவதி

கவிதையை அடைவதற்கு ஆயிரக்கணக்கான வழிகள் உண்டு. உணர்வுப் பெருவெள்ளத்தில் ஒரு சருகென விழலாம். அறிவு நெடுஞ்சாலையின் போக்குவரத்துச் சமிக்ஞைகளுக்கு நின்று நின்றும் செல்லலாம். ஞானக் குகை வழியாக ஊர்ந்தவாறும் போகலாம். நோக்கின்றிக் கண்மூடித்தனமாய்ச் செல்லும்போதும் கவிதையின் மீது மோதிக்கொள்ளும் வாய்ப்பு உண்டு. மொழியின் முதுகில் ஏறிக்கொள்ளும்போது அதுவும்கூடச் சில நேரங்களில் நம்மைக் கவிதையிடம் அழைத்துச் சென்றுவிடும்.

படைப்பாளியின் சமையல் அறையில் மொழி முதலில் ஒன்றும் தெரியாததுபோல் அஞ்சறைப் பெட்டிகளுக்குள் அமர்ந்திருக்கும். ஒரே மாதிரியான உணவுகளை நாள்தோறும் சமைக்கும்போது மொழி, தன் சுவையை இழந்துகொண்டே வருகிறது. புதுமையான சமையலில் மொழி, இதுவரை காட்டாத சுவைகளை வெளிப்படுத்திவிடும். புதுவிதக் கலவைகளை உண்டாக்கும்போது அந்த உணவால் ஊரே மணக்கும்.

நல்ல உணவானது, சூடு, சுவை, மணம், ஆற்றல் ஆகிய நான்கையும் தருவதாய் இருக்கும். நல்ல படைப்பாளி ஒரே மாதிரி சமைக்கமாட்டார். வேதியியல் ஆராய்ச்சிக் கூடத்தில் சோதனைகளில் ஈடுபடுபவரைப் போல் அவரிடம் ஒரு தொடர்ந்த ஆய்வு இருக்கும்.

தொடர்பற்ற இரு சொற்களை ஒரு புள்ளியில் இணைக்கும் போது ஒரு புதுவித மின்சாரம் பாய்வதைச் சிலர் உணர்ந்திருப்பார்கள். வெவ்வேறு தோட்டத்து மலர்களைக் கோக்கும் போது மாலையின் அழகு கூடும்தானே! கலப்பினப் பசுவும் தாவரங்களும் அதிக வீரியத்துடன் விளங்குவது, அறிவியல் உண்மை ஆயிற்றே!

குட்டி ரேவதியின் சமையல் மிகச் சிறப்பாய் இருக்கிறது. அவரின் சொற்களுக்குள் செறிவான மின்னோட்டம் உள்ளது. வெவ்வேறு சொற்கூட்டில் இருக்கும் பறவைகளை இவர் சிறந்த முறையில் இணை சேர்க்கிறார்.

கணுக்கால் வரை மரணத்தின் சகதி
இழுவிசை மீறி இன்னும் நீண்டதூரம்
கால் களைக்க நடக்கவேண்டும்
நினைவின் வேர்கள்
பூமியின் இதயத்திலிருந்து
வெளியேறிப் புடைத்திருக்கும் படிவங்களில்
தங்கி இளைப்பாறலாம்
அங்கும் பொறிக்கப்பட்டிருக்கும்
சமீபத்திய மரணத்தின் நிழல்

இந்தக் கவிதையில் 'மரணத்தின் சகதி' என்ற சொற்சேர்க்கையைக் காணுங்கள். இந்த இரு சொற்களுக்கு நேரடித் தொடர்பு கிடையாது. இவற்றை இணைத்த பிறகு இப்பொழுது பெறக்கூடிய பொருள்கள் பற்பல. இன் என்ற ஐந்தாம் வேற்றுமை உருபு, இவர் கவிதைகளில் பெரும் ஆதிக்கம் செலுத்துகிறது. இதே கவிதையில் நினைவின் வேர்கள், பூமியின் இதயம், மரணத்தின் நிழல் ஆகிய சொற்சேர்க்கைகளையும் இங்கு நோக்குவது பொருத்தம் உடையது.

....செவிலித்தாயின் கண்களுக்குள்ளிருந்து அவளது ஆர்வத்தின்
நாய்க்குட்டி அடிக்கடி எட்டிப் பார்ப்பது பிடிக்கவில்லை....
-இங்கு ஆர்வத்தின் நாய்க்குட்டி என்ற சொற்சேர்க்கை, மிக அழகாகப் பொருந்தியுள்ளது.

எங்கோ பூமியின் தொடையறுத்துப் பாய்கிறது
எமது தோழர்களின் ரத்தம்
- 'பூமியின் தொடை' என ஏன் சொல்லவேண்டும்? உருண்டை வடிவப் பூமிக்குத் தலையும் காலும்கூட கிடையாதே! பிறகு எப்படி தொடை வந்தது? அப்படியே சொல்லவேண்டியிருந்தாலும் வேறு உறுப்புகளைச் சொல்லியிருக்கலாமே! தொடை என்றது ஏன்? அதிகச் சிந்தனைகளைத் தோற்றுவிக்கும் இச்சொல், துரியோதனனின் தொடை வரைக்கும் என்னை அழைத்துச் சென்றது.

அம்முத்தத்தின் மீது படர்ந்திருக்கிறது
நினைவுகளின் நூலாம்படை - என்றும்

எனது மார்பின் பள்ளத்தாக்குகள்
சிறு ஓலத்தையும் பன்மடங்கு எதிரொலிக்கின்றன -என்றும்

மதில் சுவரிலிருந்து பந்தைப்போல்
துள்ளிக் குதிக்கிறது கறுப்புப்பூனை.....
ஒரு பகலின் விளிம்பிலிருந்து
மறு பகலின் கைப்பிடிச்சுவருக்குத் தாவுகிறது - என்றும்

..உனது கடிதத்திலிருந்து
எழும் நறுமணப் புகை
அன்றைய இரவும் பகலும் கமழ்ந்து
அறையின் மூலையில் பூனையாய்ச் சுருண்டு அமர்ந்திருக்கிறது
- என்றும் குட்டி ரேவதியின் சொற்கலவைகள், புதிய சுவையை அளித்தவண்ணம் உள்ளன.

துருப்பிடித்த மீசைகள், ஒளியின் கண்ணிமைகள், புத்தகத்தின் மார்பு, இரவின் தோட்டங்கள், ஏக்கங்களின் சமுத்திரம், உடலின் சுனை, மரணத்தின் வாசனை, உடலின் நதிப்படுகை, மார்பின் புல்வெளி, கவிதையின் தழைகள், கனவின் விதை, நினைவின் அகராதி, நினைவின் நகக்கணுக்கள், இதயத்தின் சருமம், மனதின் கண்ணாடி, மெளனத்தின் கைகள், கடிதத்தின் முனகல்கள், துயரப் பறவையின் நீலச் சருகு, இமைகளின் வரப்பு, தூய அருவிகளின் வெண்பாடல்.... என இவரின் கலப்பினச் சொற்கள் நீண்டுகொண்டே செல்கின்றன. இவை, சராசரியான சொல்லோட்டத்தை மீறியவை. புதிய வெளிகளையும் பொருள்களையும் கண்டடைவதற்கான இடைவிடாத தேடல், குட்டி ரேவதியிடம் உள்ளது. அதற்கான சான்றுகளே, இவை.

சொற்களைக் கொம்பு சீவி விடுவதோடு அற்புதமான காட்சிகளையும் இவர் வழங்குகிறார்.

தேநீரின் ஆவி
ஜன்னலின் வெளிச்சத்தில்
ஒரு பறவையாகிறது
ஒரு கனவு நீண்ட நேரமாக
அமர்ந்திருக்கிறது மேசை மீது
- என இவர் காட்டும் ஒரு காட்சி தனித்துவத்தோடு ஒளிவீசுகிறது.

கதவுக்கும் வலைஜன்னலுக்கும் இடையே சிக்கிக்கொண்ட
வண்டொன்று
சிறையில் அடைக்கப்பட்ட வீரனைப்போல்
ஓயாமல் சுவர்களோடு மோதுகிறது
- என்ற காட்சியில் வீர வண்டின் பராக்கிரமம், நம் கண் முன் விரிகிறது. வண்டுக்கே இவ்வளவு வீரம் இருக்கும்போது, மனிதர்கள் கோழைத்தனமாய் இருக்கலாமா? என்பது இதனுள் இருக்கும் மறைமுகக் கேள்வி.

அதிகாலையில் பறவைகள் அலகினால்
இறகைக் கோதுவதையும்
ஒரு சூரியக் கதிரினால் சுகமாய்ச் சொறிந்துகொள்வதையும்
காண்கிறேன்
- என்கிற காட்சி, மிக வசீகரமாய் இருக்கிறது.

மழை, நடனப்பெண்ணின் அவிழ்ந்த உடையைப்போல்
தரையில் கிடந்தது
- என்கிற உவமையைக் கையாளும் முதல் நபர் இவரே.

...மருத்துவச்சி வந்தாள்
சூலுற்றவளை நிர்வாணித்தாள். மெல்ல...
அகட்டிய காலின் இரு உள்தொடைகளிலும்
சாம்பல் உதிரும் சிகரெட் சூடுகள்
கண்களாய்க் கனன்றுகொண்டிருந்ததைக் கண்டாள்
அதிர்ச்சியில் காதுகளைப் பொத்திக்கொண்டாள்:
'இன்னுமா அவனுக்கு நீ மனைவி?'
- இந்த எளிய சொற்களுக்குள் ஒரு பெரிய வாழ்வையே சித்திரிக்க முடிகிறத என்றால் குட்டி ரேவதி, உங்களால் வேறு என்னதான் முடியாது?

முலைகள், பூனையைப் போல் அலையும் வெளிச்சம், தனிமையின் ஆயிரம் இறக்கைகள் ஆகிய கவிதைத் தொகுப்புகளை இவர் வழங்கியுள்ளார். முலைகள் என்று தன் முதல் நூலுக்குத் தலைப்பு இட்டதால் கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டுள்ளார். இவரின் தொகுப்பில் சில பாலியல் கவிதைகள் உள்ளன. ஆனால் அவை, செயற்கையாக வலிந்து எழுதியவை அல்ல. மிக இயல்பான வெளிப்பாடு.

மரம் திரையாகிறது
மறைவில் அவள் தன் நெஞ்சைத் திறந்து
இரு செந்தாமரைகளைப் பரிசளிக்கிறாள்
சலனமற்றிருந்த பறவைகள்
திரை அசைவில் கலைந்து
தாமும் தாமரைகளாய் நீந்துகின்றன
சிலந்தியாகி அங்கும் இங்குமாய்
மரத்தைச் சுற்றிப் பின்னுகிறாள் அவனை
எரியும் உடலின் கொழுந்தாகி
மரம் நிற்கிறது
நின்றவாறே - என்ற வரிகளில் தவறேதும் இல்லை.

முலைகள்
சதுப்புநிலக் குமிழிகள்

பருவத்தின் வரப்புகளில்
மெல்ல அவை பொங்கி மலர்வதை
அதிசயித்துக் காத்தேன்...
-எனத் தொடங்கி நீளும் இவரின் தலைப்புக் கவிதை, மெச்சத்தக்க விதத்தில் அமைந்துள்ளது.

சித்த மருத்துவராய்ப் பணியாற்றும் இவர், சென்னையில் வசிக்கிறார். திரைப்படம் சார்ந்தும் இயங்கிவரும் இவர், சில செய்திப் படங்களில் இணை இயக்குநராகப் பணியாற்றியுள்ளார். 15-6-1974-இல் பிறந்தவர். இனவரை மருந்தியல் துறையில் முனைவர் பட்ட ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளார். தான் தேர்ந்த பாதையில் உறுதியாக நடைபோடும் இவர், முதிர்ந்த படைப்பாளியின் வீச்சைப் பெற்றுள்ளார்.

...உணர்வுகளின் குவியல் நான்
ஒளிதேசத்தில் வாழ விரும்பும்
விடுதலைப் பறவை...
ஒரே பிறப்பில்
அழவும் சிரிக்கவும் ரசிக்கவும்
பொழியவும் எரிக்கவும் மகிழவும்
அழியவும் ஜனிக்கவும் பூத்தவள்
...-என்கிறார் குட்டி ரேவதி.

இவரைச் 'சித்த' மருத்துவர் என அழைப்பது தகும்.

No comments: