Sunday, April 11, 2004

மாலதி

பெண்களின் மனத்தை ஆழங்காண முடியாத கடல் என்றார்கள். அவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதைக் கண்டுபிடிக்க முடியாது என்றனர். இப்படி மடித்த பொட்டலமாகவும் திரை மூடிய சித்திரமாகவும் இருந்தது அவர்களின் இயல்பு அன்று. அது, அவர்கள் மீது திணிக்கப்பட்ட ஒன்று. அதிர்ந்து பேசாமையும் அதிகம் பேசாமையும் எதிர்த்துப் பேசாமையும் அவர்களின் இயல்புகளாகக் கருதப்பட்டன. கணவனுக்காக எதையும் விட்டுக்கொடுக்கும் பெண்ணை, பெரும் பத்தினி என்று போற்றினர். பிறகு, அதுவே அவளின் கடமையும் ஆயிற்று. சாதாரண விருப்பங்களைத் தெரிவிக்கக்கூட அவளுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. காதல், காமம் ஆகியவற்றைத் தெரிவிப்பதோ, பெரும் இழிவாகக் கருதப்பட்டது.

சங்க கால அகப் பாடல்களில் மடலேறுவது ஆணுக்கு மட்டுமே உரியது. காதலின் உச்ச நிலையில் "இவளை நான் விரும்புகிறேன்" என்பதைத் தெரிவிக்க, மொட்டையடித்துக்கொண்டு, பனையோலைகளால் ஆன குதிரை மேல் ஏறி, ஓலையின் கீறல்களால் உடலெங்கும் காயமாகி, ஊர்வலம் வருவதை மடலேறுதல் என்றனர். இப்படிப் பெண்கள் மடலேறக்கூடாது என இலக்கணம் கூறுகிறது. இந்த விதியை முதன்முதலில் திருமங்கையாழ்வார் மீறினார். இறைவனை ஆணாகவும் தன்னைப் பெண்ணாகவும் கற்பித்துக்கொண்ட இவர், தான் மடலேறுவதாகப் பாடியுள்ளார். ஒரு வகையில் இதை ஓர் ஆண்தான் பாடியுள்ளார் என அமர்த்தினால், மடலேறுவதாகப் பாடிய முதல் பெண்ணாக மாலதியை நாம் குறிப்பிடலாம்.

"பிறப்புகளில் எல்லாம்
நெடிதுயிர்த்த வேட்கையில்
உடல் கொடுத்தேன் ஆகுதியாய்

உன் பேரை மந்திரப்படுத்தி
வெட்டிச் சிதைத்த செருக்கை
மொட்டையடித்து மடலேற்றி
வீழ்த்தினேன் இதயக் கணப்பில்.

கண்ணீர்ப் புனல் மீறி
வெந்து நீறானது என் உடமை

இப்போது வா வந்து விடு

தங்க மல்லிகைப் பூவை நெகிழ்த்து
மங்கு மௌனங்களைப் பேச விடு.

அமைதியை முழக்கு பேரிகையாய்
ஆசையை அமர்த்தி அழவிடு

வா வந்துவிடு."


"மடலேற்றம்" என்ற தலைப்பிலான இக்கவிதையின் மூலம் ஒரு புதிய அத்தியாயத்தை மாலதி தொடங்கியுள்ளார். நெல்லை மாவட்டம், பிரம்மதேசத்தைப் பூர்வீகமாகக் கொண்டு, சென்னையில் பிறந்து, பெங்களூரில் வசித்து, மராட்டிய மாநிலம், சதாராவில் வாழ்ந்து வருகிறார், மாலதி. இதுவரை வரிக்குதிரை, தணல் கொடிப் பூக்கள், மரமல்லிகைகள் ஆகிய மூன்று கவிதைத் தொகுப்புகளைப் படைத்துள்ளார். பள்ளியில் படிக்கும்போதே கவிதை முயற்சியில் இறங்கிய மாலதி, திருமணத்திற்குப் பிறகு அதைக் கைவிட்டார். நீண்ண்ண்ண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டு(ம்) எழுதத் தொடங்கி, 1999இல் இவருடைய முதல் தொகுப்பு வெளியானது.

சமுதாயம் சொல்வதைத் திருப்பிச் சொல்வதற்குச் சிந்தனையாளர்கள் தேவையில்லை. கிளிப்பிள்ளைகளே போதும். விபச்சாரத்தைச் சமுதாயம் இழிவாகப் பார்க்கிறபோது, மாலதி அதை வேறொரு கோணத்திலிருந்து பார்க்கிறார்.

"சோரம் மிகப் புனிதமானது
ஏனெனில் பணம் பத்திரங்கள் துச்சம் அதில்
பிறிதும் கண்மூடிக் காதல்
அதில்தான்.

லட்சியங்கள் நிற்பதில்லை
அதன் முன்.
பாசாங்கு ஓடினபின்
சுவடு விடாமல்.

திறந்த, முழு சரணடைவு
அதில்தான்
அன்புடை நீ மாசுபடுத்தாதே இதை.
இன்னொரு திருமணமாக்கி இதையும்."


சொத்து பத்துக்காகவும் வீட்டு வேலைக்கு ஆள் வேண்டியும் அந்தஸ்துக்காகவும் பலாபலன்களைக் கணக்கிட்டும் மனப்பொருத்தம் இல்லாமலும் நிறைவேறும் திருமணங்கள், மாசு பட்டுத்தான் உள்ளன. ஒருவரை மனத்தால் நினைத்தாலே அவர் கற்பிழந்தவர் ஆகிறார். உள்ளொன்றும் புறமொன்றும் இல்லாமல், தமது மனச்சான்றின்படி எவர் ஒருவர் தூய்மையாளரோ, அவர் இந்தக் கவிதையின் மீது கல்லெறியலாம்.

மாலதி, இந்தக் கருப்பொருளை வேறொரு விதமாகவும் பதிவு செய்துள்ளார்.

"..............
வெற்றிலைச் சாற்று உதடுகளின்
உலர்வு போல் இயல்பான
ஆயிரமாயிரம் பகலிரவுகளைக்
கொண்டு கால் மாட்டில் வையுங்கள்.

கற்பைப் பற்றின உங்கள்
மலைப் பிரசங்கத்தில்
கலந்துகொள்ள வருகிறோம் நாங்கள்."


இதில் பயின்று வரும் ஒவ்வொரு சொல்லும் மிகுந்த வீரியம் மிக்கவை. இது எழுப்பும் கேள்விகள், மிக வலிமையானவை.

மாலதியின் தலைகீழ்ச் சிந்தனை, மேலும் தொடர்கிறது. "நிலம் என்னும் நல்லாள்" என வள்ளுவர் வாக்கிருக்க, இவர், "நிலம் என்னும் பொல்லாள்" என்ற தலைப்பில் கவிதை வடிக்கிறார்.

"அனிச்சமும் அன்னத்தின் தூவியும் மாதர்
அடிக்கு நெருஞ்சிப் பழம்" எனக் குறளிருக்க,

நெருஞ்சிப் பழம் எடுத்துப்
பிழிந்து வைத்தேன்
கை எரிந்தாலும் உனக்காக

நீ வெளிச்சங்களில் குணசாலி......."


என்கிறார், மாலதி. "வெளிச்சங்களில் குணசாலி" என்ற சொற்களில்தான் எவ்வளவு பொருள்கள்.

வீடே பெண்ணுக்குச் சொர்க்கம், பாதுகாப்பு என்றெல்லாம் பலர் எண்ணியிருக்கையில்

"வீட்டுக்குள் என்ன கிடக்கிறது
பிணைப்பும் தளையும் தவிர?
சதைக்குள் இரத்தத்துக்குள்
ஈரங்களுக்குள் துடிக்கும் உறவு
வீட்டுக்குள் நிச்சயம் இல்லை"


என்று அடித்துச் சொல்கிறார். குடும்ப வாழ்வையே வெறுப்பவர் போலும் என நினைத்தால், மகளைப் பற்றி இனிக்க இனிக்கப் பாடியுள்ளார்.

"தன் வீட்டை விட
என் வீட்டை நேசிக்கும்
விருந்தாளி......

கண்ணாலே முத்தமிட்டு
குரலுக்கு இசை தடவி........

செலவுக்கெல்லாம் கவலைகொண்டே
செலவுகள் நிறைய வைத்து

இதயத்தில் அனைவருக்கும்
மிகப் பெரிய வரவு வைத்து....

வீட்டுக்கு வளைபோட்டு
கொலுசிட்டுக் குழைவிக்கும்
என் விருந்தாளி

இன்னொருத்தன் பெண்டாட்டி
அடுத்த வீட்டுச் சொத்து
நான் பெற்ற என் மகள்"


என்கிற போது, இவரின் பேரானந்தம் நமக்குப் புரிகிறது.

"நீ என்
பிச்சைப் பாத்திரத்தில் விழுந்த
வைரமாலை.
விளிம்புகளில் வந்த வானவில்.
யுகதீபம், கருணைக் கடல்
என்
நெற்றிப் பொட்டின் நேர் விளக்கம்
முழுசாய் அன்பின் விரிவு நீ
அப்படியும் உன்னுடன் தான்
என் சச்சரவுகள்"


மாலதிக்குத் தன் மனத்திற்கிசைந்தவரைக் கொண்டாடவும் தெரிந்திருக்கிறது. ஆனால், ஏக்கமும் இயலாமையும் கோபமும் விரக்தியும் இவரின் பல கவிதைகளில் வெளிப்படுகின்றன. கவிதை எழுதுவதை, "பழக்கமான குற்றம்" என்பதும் "தோத்தாங்குளிகளெல்லாமே கொஞ்சம் கவிதை எழுதி வைக்குமோ" என்பதும் "கவிதை எழுதுவது இளக்காரத்துக்குரிய செயல் என்பதில் சந்தேகமில்லை" என்பதும் மாற்றிக்கொள்ள வேண்டிய எண்ணம். இப்படித்தான் "கவிதை எழுதறவனெல்லாம் அயோக்கியனாகவும் ஒழுக்கக் கேடனாகவும் இருப்பான்" என்று சுரதா, ஒரு முறை சொன்னார். பாலகுமாரனோ, "கவிதை , சோம்பேறிகளின் வேலை" என்று சொன்னதாக ஞாபகம். உதிரி உதாரணங்களைத் துறைசார்ந்த பொதுக்கருத்தாக மாற்றுவது, மிகவும் தவறு.

மாலதியின் கவிதைகளில் வடசொற்கள், அதிக அளவில் இடம் பெற்றுள்ளமை, சிறிது நெருடலைத் தருகிறது. இவர், தமிழ்நாட்டுக்கு வெளியே வெகுகாலமாய் வாழ்வதால் இது நேருகிறது எனினும் சொற்களைத் தேர்ந்தெடுப்பதில் இவர் இன்னும் கொஞ்சம் அக்கறை காட்டலாம்.

தன்னைப் பற்றிய சுய மதிப்பீடு, இவரிடம் உள்ளமை பாராட்டுக்குரியது.

"தன்னிரக்கம் வேண்டாம்
புலம்பாதே
முறையீடு செய்யாதே
என்று நிறைய சொல்லிக்கொள்கிறேன்
எனக்கு நானே
ஆனாலும்
ரணம் தேடித் தடவுகிற
களிம்புக் கை போல
மனசு
வலி தேடிப் போய்
சுகம் கொண்டாடுகிறது"


என்ற தன்நோக்கு, ஒரு சிறந்த முன்நோக்கு.

தொலைபேசித் துறையில் முதன்மைக் கணக்கு அலுவலராகச் சதாராவில் பணியாற்றும் மாலதி, சிறுகதை, கட்டுரை வடிவங்களிலும் முத்திரை பதித்து வருகிறார். எளிமையும் தன் கருத்தைக் கூர்மையாக எடுத்து வைக்கும் துணிவும் ஒப்பனையற்ற உண்மையும் மாலதியின் கவிதைகளுக்குத் தனித்துவம் சேர்க்கின்றன.

"இந்த மௌனத்தில் அப்பிக்கொண்ட
நினைவுகளின் வண்ணக் கலவையை
அந்தர்யாஹம் அனுபவிக்கிறது

ஹோலி முடிந்தும்
குளிக்க மனமில்லாத
குழந்தை போல"


என்கிறார், மாலதி.

எங்கள் ஹோலி, இன்னும் முடியவில்லை.

No comments: