Monday, April 12, 2004

கவிதாயினி திலகவதி

இன்று பேருந்தும் மகிழுந்தும் 'சீறு'ந்தும் பொதியுந்தும் இயக்கும் பலர், முதலில் மிதிவண்டியில்தான் தொடங்கியிருப்பார்கள். அதுபோல, சிறுகதை, புதினம், கட்டுரை, நாடகம், ஆய்வு என எழுத்துத் துறையினரும் நடிப்பு, நிருவாகம், இசை, அரசியல்....என வேறு துறைகளைச் சேர்ந்தோரும் முதலில் கவிதையிலிருந்துதான் தொடங்கியிருக்கிறார்கள். படைப்பாளிகள் என்று அறிவித்துக்கொள்ளாத பலர், ' நானும் முன்னே கவிதையெல்லாம் எழுதியிருக்கேன்' எனச் சொல்வதை நாம் அதிகம் கேட்கிறோம். கலை - இலக்கிய உலகின் எளிய, கவர்ச்சிகரமான முதன்மை நுழைவாயிலாகக் கவிதையே விளங்குகிறது.

இப்படிக் கவிதையில் தம் உணர்வுகளை வெளிப்படுத்தப் பயின்றோர், நாளடைவில் பிற கலை வடிவங்களையும் எளிதில் கைக்கொள்ள முடிகிறது. இவ்வகையில் அனைத்து இலக்கிய வடிவங்களின் தாயாகவும் கவிதை திகழ்கிறது. கவிதையில் தொடங்கி, சிறுகதை, புதினம், கட்டுரை, மொழிபெயர்ப்பு ஆகியவற்றில் முத்திரை பதித்தமைக்கு, வாழும் எடுத்துக்காட்டுகளுள் ஒருவர், திலகவதி, இ.கா.ப.

தமிழ்நாட்டிலிருந்து இந்திய காவல் பணிக்குத் தேர்வான முதல் பெண் அலுவலர் என்ற பெருமைக்குரியவர், திலகவதி. காக்கிச் சட்டைக்குள் இரும்பு இதயங்கள் மட்டுமே இருக்கும் என்ற எண்ணத்தைப் பொய்யாக்கும் சிலருள், முதன்மையானவர்.
மனிதநேயத்தோடும் நேர்மை - நாணயத்தோடும் பணியாற்றுகிறார். கடமையில் கண்ணும் கருத்துமாக இருக்கும் அதேநேரம் , இலக்கியத்தில் எண்ணும் எழுத்துமாக இருக்கிறார். முதலில் கவிக்குயிலாக இருந்த இவர், பின்னர் பஞ்சவர்ணக் கிளியாக மாறிப் போனார்.

அலைபுரளும் கரையோரம் என்ற இவரின் முதல் கவிதைத் தொகுதி, 1987-இல் வெளியானது. 50-க்கும் மேலான நூல்கள், பல்வேறு பரிசுகள் - விருதுகள், சாகித்திய அக்காதெமி - தமிழ் ஆலோசனைக் குழு உறுப்பினர் என அழுத்தமான தடம் பதித்திருக்கிறார். வெளிவந்து 17 ஆண்டுகளுக்குப் பிறகும், ஒரு நூலின் பல பக்கங்கள், இன்றைக்கும் பொருந்துவது, வியப்பளிக்கிறது.

கொழுகொம்பாய் இருந்தவர்கள்
தங்களையே தாக்கும்
தரமற்ற வெறும் தடிகளாகி,
தழுவ வரும்

கொடிகளையே உறிஞ்சி வாழும்
கொடியுருவிகளாகிப் பல
கொடுமை பயப்பதனால்,

இப்போது-
தரை மீது மட்டும்
படரத் தயாராகி விட்டன
கொடிகள்
என்கிற வரிகள், தனித்து வாழும் பெண்களின் குரலோடு இணைந்து ஒலிக்கின்றன.

பெரிய பெரிய போஸ்டர் தனிலே
சிறிய ஆடை அணிந்த மாதர்
என்ற வரிகளும் சமூகத்தைச் சிறப்பாகப் படம்பிடிக்கின்றன.

தலைசிறந்த
அடிமைக்கு
தலைவன் பட்டம்
தரவும் படும்

பந்தயக் குதிரைகள்
வயலை உழும்;
வீணைகள்

அடுப்பில் எரியும்;
இந்த நாட்டில்
எதுவும்
நடக்கும்
'நல்லதோர் வீணை செய்தே அதை நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ?' என்ற பாரதியின் ஏக்கத்தை இவர், வேறு வகையில் வெளிப்படுத்தியுள்ளார்.

அநாதைக்குத்தான் தெரியும்
அன்பின் தேவை
வறிஞனுக்குத்தான் இருக்கும்
செல்வத்தில் மோகம் அடிமைக்குத் தான் இருக்கும்
சுதந்திர தாகம்
பெண்ணுக்குத்தான் புரியும்
விடுதலையின் அருமை

என்ற கவிதை, பெண்ணின் நிலையையும் தேவையையும் தெளிவாகக் காட்டுகின்றது.

வறுமையில்
வாடியவரை
அவன்
ஒரு
தீ- கம்யூனிஸ்ட்.

வசதி கொஞ்சம்
வந்த பின்
வ-கம்யூனிஸ்ட்.

செல்வம்
வந்த பின்
அவன்
ஒரு
கேபிடலிஸ்ட்

இளமை
இருந்தவரை
அவன்
ஒரு reformist

முதுமை
வந்தபோது
அவன் ஒரு
காந்தீய வாதி

அவனை
சந்தர்ப்பவாதி
என்பது
தவறு

சராசரி இந்தியன்
என்பதே
சரியான
விளக்கம்

அரசியல்வாதிகளை இக்கவிதை, தோலுரிக்கிறது என்றால், அடுத்து வருவது, நமது விழாக்களின் உண்மை நிலையை அம்பலப்படுத்துகிறது.

பேச்சாளர்
பேசினார்
மைக் முன்னால்!

விழாத் தலைவர்
பேசினார்
மேடையில்
இருந்த
சிலரோடு.

அவையினர்
ஒருவரோடொருவர்
பேசினர்.

- இதென்ன, கடந்த 17 ஆண்டுகளாகத் தமிழ்நாடு உறைந்துவிட்டதா? அன்று பாடியவை, இன்றைக்கும் அப்படியே பொருந்துவதைப் பார்த்தீர்களா?

புதுக்கவிதையில் மட்டுமின்றி, மரபுக் கவிதையிலும் திலகவதி, திறன் காட்டியிருக்கிறார்.

என்னடா மனிதன் நீயோர்
ஏந்திழை இன்கை பற்றப்
பொன் பொருள் மெத்தை பீரோ
பூந்துகில் ஆடை கட்டில்
இன்னமும் பாத்திரங்கள்
ஏதேதோ வேண்டுமென்பாய்!
கன்னலைச் சுவைப்பதற்கும்
கைக்கூலி கேட்கின்றாயே!

இதுபோன்ற தனிப்பாடல்கள் தவிர்த்து, 35 எண்சீர் விருத்தங்களில் மீண்டும் சகுந்தலை என்ற குறுங்காவியமே பாடியிருக்கிறார். பல பாடல்கள், மிகவும் சுவையாக உள்ளன. சகுந்தலை யாரென்றே தெரியாது என துஷ்யந்தன் மறுத்தபோது, சகுந்தலை பாடுகிறாள்:

......"என்றோஎன் தாயுமெனை விட்ட கன்றாள்!
இன்றென்னைத் தாயாக்கி இவனும் விட்டான்!
இன்றெங்கே சென்றிடுவேன் ? ஏ பூ மாதா!
இனியுன்னை அன்றியெனை ஏற்பார் யாரோ!"

சில பாடல்களில் யாப்பு, கச்சிதமாக அமையவில்லை என்றாலும் எந்த வடிவத்தையும் ஆளுவதற்கான இவரின் முயற்சி, பாராட்டத்தக்கது.

புதுக்கவிதை என்ற வடிவில் உள்ள பலவும் நீர்த்துள்ளன.

வளர்ப்பு நாய்கள்
ஆள் வந்ததும் செயல்படும்
ஆனால் தோட்டத்து ரோஜா
யாருக்காகவும் என்றில்லாமல்
தானே தனக்குள்
பரவசப்பட்டு
ஒரு நாள்
சந்தோஷமாய்ச் சிரிக்கும்


இதில் முதல் மூன்று வரிகளிலேயே கவிதை முடிந்துவிட்டது. ஆனால், வீணாக மேலும் 5 வரிகள் நீளுகின்றன. பல, கவிதையாக முதிராமல் கருத்தாகவும் முழக்கமாகவும் வெளிப்பட்டுள்ளன.
தருமபுரியில் பிறந்த இவர், 1976-இல் இ.கா.ப. அதிகாரியாகப் பணியைத் தொடங்கினார். வேலூர், திருச்சி, சென்னை எனப் பல பகுதிகளில் பல பொறுப்புகளை வகித்த இவர், இப்பொழுது, கடலோரக் காவல் பிரிவின் கூடுதல் டி.ஜி.பி. யாகப் பணியாற்றுகிறார். தேயுமோ சூரியன், அரசிகள் அழுவதில்லை என்ற புதினங்களுக்காகத் தமிழக அரசின் சிறந்த நாவலாசிரியர் விருதினை இரு முறை பெற்றவர். அமுதசுரபி புதினப் போட்டியில் முதல் பரிசு உள்பட மேலும் பல பரிசுகளும் விருதுகளும் பெற்றுள்ளார். தொலைக்காட்சித் தொடர்களுக்கும் திரைப்படத்திற்கும் பங்களித்துள்ளார். மிகச் சிறப்பாகப் பேசக் கூடியவர்.
பன்முகத் திறமை மிக்க இவர், பாரதியின் புதுமைப் பெண்ணுக்குரிய இலக்கணங்கள் பொருந்தியுள்ளவர். எண்பதுகளில் அமுதசுரபியில் வெளிவந்த இவரின் தனிமை என்ற கவிதை, இவரை யார் என்று காட்டும்.

சொற்களால் காயப்படாத
பொருள் அடர்ந்த அமைதியில்
அலையும் ஓசையும்
கடலாய் நான் ஆகி விட மாட்டேனா?

உயிரும் உணர்வும் கரைந்து கரைந்து
காற்றாய் அருவமாய்
சுருதியின் உயர்வில் ஒன்றாய்
மருவி விட மாட்டேனா?

காட்சியும் புலனும் இதயமும்
இயக்கத்தை நிறுத்த
எல்லையிலா வெட்ட வெளியில்
நான் இணைந்து விட மாட்டேனா?

மயிலிறகாய் வருடும் இந்த வரிகளுக்குள் திலகவதியின் ஆன்மா, விழித்திருக்கிறது.

No comments: