Wednesday, April 07, 2004

கவிதாயினி மீனாட்சி

மற்ற எழுத்து வடிவங்களைவிட கவிதை, மிகவும் உணர்வுமயமானது, செயற்கையும் பாவனைகளும் நிரவல்களும் இல்லாமல் மென்மையான - உண்மையான உணர்வுகளைத் தொடர்ந்து தக்கவைப்பது, கவிஞருக்குப் பெரும் சவால். இதில் தோல்வி அடைகிறபோதுதான் கவிஞர்கள், வார்த்தை விளையாட்டுகளிலும் உருவ-உத்தி வேறுபாடுகளிலும் கவனம் செலுத்தி, ஈடுகட்டப் பார்க்கிறார்கள். இத்தகைய படைப்புகள், இரசமிழந்த கண்ணாடியைப் போல் வாசகர் முன்னால் சரணடைகின்றன.

நீண்ட காலமாக எழுதுவது என்பது வேறு. நீண்ட காலமாய்க் கவிஞராய் வாழ்வது என்பது வேறு. அவ்வகையில் கடந்த 35 ஆண்டுகளாகத் தானே ஒரு கவிதையாக வாழும் அரிய பிறவி, மீனாட்சி.

சொற்கள் அல்லாத ஓசைகளைக் கவிதையில் பயன்படுத்த ஓர்அசாத்திய திறமை வேண்டும். நம் கவிஞர்கள், "ஏ இந்தியனே', "ஓ நண்பனே' என "ஏ, ஓ' என்ற ஓசைகளால் கவிதையைச் செயற்கையாக்கி இருப்பதை நாம் அறிவோம். "அடடா', "அடே', "டாய்...' என ஏராளமான நாடகத்தன்மை மிக்க ஓசைகள் இங்கு புழங்குகின்றன. ஆனால், மீனாட்சியின் கவிதைகளில் ஓசைகள், மிக இயல்பாய் இடம் பெற்றுள்ளன.

நான் ஒரு அற்பப் புழு..../அலகால் அரிசியைக் கொத்தி/பாலையும் குடித்தேன்./பம் பம் பம்பம்..../ சங்கொலிப் பாதையில்/ சங்கிலி உடைத்துப் பறக்கிறேன்/ நானும் பறக்கிறேன்

-இதில் பம் பம் பம்பம் என்ற ஓசை, கவிதைக்கு உற்சாகத் தன்மையை ஊட்டிவிட்டது.

கண்ணாடிகூட கண்சிமிட்டுமா?/எனக்குள்ளே தத்தீம் தீம் தீம்/ தீபம் நின்றது / ஊய் ஊய்...

என்பதிலும்

இனி சங்கீதமே நம் துணை/ குடிசைக்குள்ளும்/ வஸந்த மோஹன ஹம்ஸத்வனிகள்/ பல்லவி பூரிப்புகள்/ காந்தார ககன ஜோர்கள்/ நிஷாத நிச்சயங்கள்/ கப கப நீ/ கப கப ஸா

என்பதிலும்

ஸரி கம பத நிஸ/விமர்சகர்களே/ என் மெளன எல்லைக்குள்/கணை தொடுக்காதீர்கள்/ ஸநி தப மக ரிஸ/ இளைப்பாறுங்கள்/ இன்னும் சிறிது நேரம்
என்பதிலும்

காசுக்குப் புன்னகைக்கும் /ஆயா தள்ளிவரும் / இரும்பு வண்டியிலே/மகவைக் கிடத்திவிட்டு / டாடா சொல்லுகிறாள்/ பெற்றுப் போட்டவள்./ ஆகாச வீதியிலே/அன்னை முகம் தேடுகிறான் / தேவாரம் பாடாத / ஞான சம்பந்தன் /குயிலி சொல்கிறது / குக்கூ கூயி/குக்கூ கூயி

என்பதிலும்

முதிர் அந்தியின் வானம்/தழல் துண்டம்/ புரட்சியின் சின்னம்/நறுக்..../ பாச்சைத் தாவல்/

என்பதிலும்

என் மெளனங்களை மேடையாக்கி /மரபுத் தூபப் புகையெழுப்பி/புனிதக் கூண்டுகளை வடிக்கிறவர்களே!/ நான் நிமிர்ந்தெழும் நல்லோரையில்/ இந்தப் பிரமிடுகள் எல்லாம்/என் சுட்டுவிரல் குடைகளே! /தத்தரிகிட தத்தரிகிட தித்தாம்

என்பதிலும்

சின்னஞ்சிறு ஓசை அலகுகள், கவிதைக்கு அபாரமான சுவையை அளிக்கின்றன.

புதுமையின் மீது நாட்டமும் தீவிரமான தேடலும் இல்லாத கவிதை, எளிதில் வீழ்ச்சியடையும். ஆனால், மீனாட்சியின் கவிமனம், குழந்தையின் குதூகலத்தோடு இவ்வுலகின் புதிய தரிசனங்களை நம் முன் விரிக்கின்றது.

தருமன் கைராட்டை/ இயங்கிய இழுப்பில் /பருத்திக் கம்பி முண்டு முடிச்சாய்/தண்டில் கொண்டை சுற்றியது./அருகே,/கொண்டையவிழ்ந்த அரையாடைப்/பாஞ்சாலி / நெசவுக்காரக் கண்ணனைத்தான் /கூவி அழைத்தாள்

என்ற உருவகம், தனித்துவம் மிக்கது.

வயிற்று நோவில் /துடிக்கும் தவளை /சொத்தைப் பல்லால் /பாம்பின் அவதி

என்பதிலாகட்டும்

கார்த்திகை விளக்கு /இருட்டுக்குப் பொட்டு

என்பதிலாகட்டும்

அம்மா என்ன செய்வாள்? /பிஞ்சு முகம் படிப்பாள் /கவிதைகள் உதட்டில் எழுதுவாள் /காவியம் கண்ணில் பேசுவாள் /கைக்குள் உலகம் சேர்ப்பாள் /நெஞ்சுக்குள் உயிர் வளர்ப்பாள் /அம்மா /அம்மம்மா

என்பதிலாகட்டும்

பொன்வண்டே /எத்தனை அழகு நீ /உன்னை உன் அழகை /ஓவியமாய் எழுதமாட்டேன் /குரல் கூட்டிப் பிரபந்தங்கள் பாடமாட்டேன் /உன் பொன்னை நூலாக்கி/இழையோட விடமாட்டேன்

என்பதிலாகட்டும் மீனாட்சியின் அபூர்வ மான கவித்துவம், நம்மைச் சிலிர்க்கச் செய்கிறது.

மதுரை நாயகியே... /உன்னருகே ஓடிவரும் /உன் மகளை /உன் மகனே /வழிவம்பு செய்கின்றான். /கோயிலிலும் காப்பில்லை /உன் காலத்தில் - அழகி நீ! / எப்படி உலாப் போனாய்?

என்ற பிரபல கவிதைக்குச் சொந்தக்காரர், இவர். உலக உயிரினங்களைத் துன்புறுத்தும்- கொல்லும் கொடுமையை மிக எளிய சொற்களால் மிக மிக ஆழமாகக் கண்டிக்கிறார். மின் விசிறியில் அடிபட்ட குருவிக்கு இரங்கல் பாடுகிறார். அணு குண்டு பரிசோதனையிலிருந்து, பெண்களுக்கெ திரான வன்முறைகள் வரை உலகின் பற்பல பிரச்சி னைகளைத் தீவிரமாக கண்டிக்கிறார். ஜெர்மனியிலிருந்தபோது

விஜய் கண்ணா, உன் கரடிக் குட்டியே தேவலை

என நட்புடன் பேசியுள்ளார்.

வானத்தில் பூரண நிலா /மூங்கிலில் ஏழு ஸ்வரம் /முத்தமிடாத உதடுகள்

எனக் காதல் உணர்வையும் ஏற்றமுறப் பாடுகிறார்.

நெருஞ்சி (1970), சுடுபூக்கள் (1978), தீபாவளிப் பகல் (1983), மறுபயணம் (1998)

ஆகிய நான்கு கவிதை நூல்களைப் படைத்தவர்; ஜெர்மனி, பிரான்சு, ஹாலந்து போன்ற பல நாடுகளுக்குப் பயணித்தவர்; புதுவை ஆரோவில்லில் இளைஞர்கள் கல்வி மையம் என்ற 24 மணிநேரப் பள்ளியை நடத்துபவர்; ஆரோவில் கிராமச் செய்தி மடல் என்ற மாத இதழின் ஆசிரியர்; வினோபாஜி ஆசிரமத்தின் மூன்று சகோதரிகளுடன் சேர்ந்து ஆயிரம் கிராமங்கள் நடந்து சென்றவர்; தன்னை ஓர் உலகப் பிரஜையாக அறிவித்துக்கொண்டிருக்கிறார்.

நானே பாரதி /என் காலத்தின் கவிச் சக்கரவர்த்தினி /முன் எப்போதும் போலவே பேசுகிறேன் /என் கவிதை /சோதி மிக்க நவகவிதை/இந்த விதை களர் நிலங்களிலும் /கிளர்ச்சி செய்யும் /மண் கீறும் / ஊற்றடைப்புகளை-வெடியெனத் தகர்க்கும்

என்கிறார், மீனாட்சி.

ஆஹா, வந்தனங்கள் பேரரசி!

- அண்ணா கண்ணன்

No comments: