Sunday, January 04, 2004

எழுதுகோலின் கண்ணீர்


தமிழ்ச் சூழலில் எழுத்தாளர்களின் நிலைமை இன்று மிகவும் இரங்கத்தக்கதாய் உள்ளது. அவர்களின் பொருளீட்டும் திறன் இறங்கு முகமாய் உள்ளது. இதனால் எழுத்தை முழுநேரத் தொழிலாய் எடுத்துக்கொண்டவர்கள், சத்தில்லாத கசப்பு மருந்தை விழுங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்கள்.

அரசு ஊழியர், ஆசிரியர், பெரிய-நடுத்தர நிறுவனங்களில் பணியாற்றுவோர், வங்கி ஊழியர்... போன்று வெகு சில துறையினர் மட்டும் ஓரளவு பாதுகாப்பான இடத்தில் இருக்கிறார்கள். இவர்கள் அல்லாமல் பலர்  பகுதிநேர வேலைக்கும் நாள் கூலிக்கும் உதவியாளர் என்ற பெயரில் எடுபிடி வேலைக்கும் செல்ல, எழுத்தாளர்கள் நிர்ப்பந்திக்கப்படுகிறார்கள். அப்படியே ஒரு வேலை கிடைத்தாலும் ரூ.1000 முதல் ரூ.3000 வரைதான் சராசரி ஊதியம் கிடைக்கிறது. இந்த ஊதியத்திற்கு அவர்கள் நாளுக்கு 12 மணிநேரமும் அதற்கு மேலும் பணியாற்றவேண்டியிருக்கிறது. கூடுதல் பணிச்சுமை குறித்து மூச்சு விட்டால்கூட உடனே வேலைக்கு ஆபத்தாகி விடுமோ என்று கவலைப்பட்டு "கடனே' என்று உழைக்கிறார்கள்.

இன்றிருக்கும் விலைவாசியில் இந்தத் தொகை போதுமா? அவர்களின் வாழ்க்கைத் தரம் குறித்து இந்தச் சமுதாயத்துக்கு ஏன் அக்கறை இல்லை? எழுத்தாளர்களின் உண்மையான திறமைக்கும் உழைப்புக்கும் இப்போது பெறுவதைப் போலப் பத்து மடங்கு கொடுக்கவேண்டும். இன்னும் எவ்வளவு காலத்திற்குப் பொன் வைக்கும் இடத்தில் பூ வைப்பது?

இவையெல்லாவற்றையும் விடக் கொடுமை, வேலையில் சேர்ந்த பிறகு ஏதும் எழுதக்கூடாது என்ற முன் நிபந்தனையில் வேலையில் சேர்ப்பது. எழுத்தாளர்கள், தம் சாரத்தையெல்லாம் மூட்டைகட்டி வைத்து விட்டு, தன்னைவிடத் தன் குடும்பத்திற்காகத் தன் எழுத்தையே தியாகம் செய்கிறார்.
அப்படியே அவரை எழுத அனுமதித்தாலும் சர்ச்சையில்லாத - சிக்கலில்லா தவற்றையே எழுதலாம் என்றும் நிர்வாகத்தினர் பலர் கட்டுப்பாடு விதிக்கிறார்கள்.

"இதற்கெல்லாம் நான் கட்டுப்பட  முடியாது. நீயுமாச்சு உன் வேலையுமாச்சு' என எழுத்தாளர் வெளியே வந்தால், அவருடைய மனைவியும் பிள்ளைகளும் "எங்களுக்கு என்ன வழி?' எனக் கேட்கிறார்கள். கிடைத்த வேலையைச் செய்து பொருளீட்டும் அவலம் நிகழ்கிறது.

வானொலி, தொலைக்காட்சி, பருவ இதழ்கள், திரைத்துறை ஆகிய அனைத்து ஊடகங்களிலுமே வாய்ப்புக் கிடைப்பது மிகவும் சிரமமாக உள்ளது. அப்படியே கிடைத்தாலும் தொடர்ந்து கிடைப்பதில்லை. கிடைக்கிற வாய்ப்பிலும் எழுத்தாளர் தாம் விரும்புவதை வெளிப்படுத்த இயலுவதில்லை.
இந்த வாய்ப்புகளுக்காகத் தவமிருக்கும் எழுத்தாளர்களின் தன்மானம் இழிவுபடுத்தப்படுகிறது. இந்த இழிவுகளைப் பொறுத்துக்கொள்ளாவிடில் வாய்ப்பை வேறொருவருக்கு வழங்கிவிடுவேன் என்ற மறைமுக மிரட்டல் வேறு இருக்கிறது. எழுதியதற்கு ஊதியம் கேட்டாலே "வாய்ப்பிழப்பு மிரட்டல்' வருகிற அளவுக்கு இது முற்றிப்போய்விட்டது.

பெரிய கதாசிரியர், வசனகர்த்தா, பாடலாசிரியர் ஆகிவிடுவது என்ற கனவுகளோடு திரைத்துறையில் உழன்று வருவோர், வாய்ப்புக் கிடைக்கும் என்ற நம்பிக்கையில், தம்படைப்புகள் இன்னொருவர் பெயரில் வெளிவர உடன்படுகின்றனர். அவர்கள் ஏமாற்றப்படுகிறார்கள் என்பதைச் சொல்லத் தேவையில்லை.

இதைவிடப் பெருங்கொடுமை, வெளிப்படையாகவே, ஒருவர் எழுத இன்னொருவர் பெயரில் வருவதே. மோசடியும் வரலாற்று ஏய்ப்புமான இச்செயலுக்கு எழுத்தாளர்கள் உடந்தையாய் இருப்பது, பெரும் வருத்தத்திற்கும் கன்டனத்திற்கும் உரியது.

இத்தகைய சிந்தனைச் சுரண்டலுக்கும் உழைப்புக் கொள்ளைக்கும் யார் காரணம்?

".......
உன்னையறிந்தோ தமிழை ஓதினேன் என்னை ?
விரைந்தேற்றுக் கொள்ளாத வேந்துண்டோ? - உண்டோ
குரங்கேற்றுக் கொள்ளாத கொம்பு?''<
br>என்று பாடும் துணிச்சலை, இன்றைய எழுத்தாளர்கள் இழந்துவிட்டதேன்?

மன்னர்களுக்கு அறிவுரை - ஆலோசனை கூறி, உத்தரவு பிறப்பித்த படைப்பாளர்கள், இன்று "எழுத்துத் தொழிலாளி'களாகச் சிறுமைப்பட்டது ஏன்?

"இணைந்தே இருப்பது வறுமையும் புலமையும்' என்ற வசனம், இவ்வளவு குரூரமாகவா நிரூபிக்கப்படவேண்டும்?

தவறு யார் பேரில் இருக்கிறது?

கல்வியறிவும் எழுத்தறிவும் மிகக் குறைவானவர்களிடம் இருந்த அக்காலத்தில் அத்தகையோர் மீது மதிப்பு இருந்தது. சிறந்த கல்விமான்களின் - புலவர்களின் சொல், உயிர்பெற்று அப்படியே நடக்கும் என்று நம்பினார்கள். இதனால்தான் "அறம்' பாடும் இலக்கியமே பிறந்தது.

ஊர் ஊராகச் செல்லும் புலவர், தம் ஊருக்கு வந்தால் அவர் எங்கள் வீட்டில்தான் தங்கவேண்டும் என மக்கள் போட்டியிட்டார்கள். அவரிடம் "நற்சொல்' பெறத் தம் பிள்ளைகளை அழைத்து வந்தார்கள். அன்று கலாரசிகர்கள் அதிகம். ஒரு பாடலுக்கு ஊரையே - நாட்டையே பரிசளிக்க அரசர்கள் முன்வந்தனர். அதில் தற்புகழ்ச்சி என்ற உள்நோக்கம் இருந்தாலும் பொதுவான காவியங்களுக்கும் அரசர்கள் ஆதரவளித்தார்கள். ‘என் ஆட்சிக் காலத்தில் இக்காவியம் படைக்கப்பட்டது’ எனத் தற்பெருமை கொள்ளும் உள்நோக்கம் இதிலும் உண்டு. எனினும் படைப்பாளிகளுக்குப் பாதுகாப்பு இருந்தது.

இன்று 75% பேர் எழுத்தறிவு பெற்றிருந் தாலும் இன்று கலா ரசிகர்களின் எண்ணிக்கை, மிகக் குறைவு. மனிதர்களின் மனங்கள் சுருங்கிவிட்டன. அள்ளிக் கொடுக்க முடிந்தவர்களும் கிள்ளியே கொடுக்கிறார்கள். "என் வேலையை ஒத்தி வைத்துவிட்டு, படைப்பைப் படித்ததே எழுத்தாளருக்குத் தந்த வெகுமதி' என வாசகர்கள் நினைக்கத் தொடங்கிவிட்டார்கள். புத்தகங்களையும் இதழ்களையும்  பலர் இலவசமாகப் படிக்கவே விரும்புகின்றனர்.

நிலம் முழுதும் வறண்டுவிடுமானால் எழுத்தாளர் தம் விதையை எங்கே போய் விதைப்பார்? எழுதுகோலைப் பிடித்தவர் ஏழ்மையில் வாடினால் அது, இந்த மண்ணுக்கன்றோ மானக் கேடு?

மிஞ்சி மிஞ்சிப் போனால், எழுத்தாளருக்குப் பெரிய வருவாய், அவருக்குக் கிட்டும் புகழ்தான். படிப்போர் சொல்லும் "நல்லா இருக்கு' என்ற ஒரு பாராட்டுதான். இந்த வாய்ச் சொல்லை மட்டும் கொண்டு எழுத்தாளர்களும் அவர்களின் குடும்பத்தாரும் வாழ்ந்துவிட முடியுமா?

இதழ்கள் தரும் சன்மானம், கழுதை தேய்ந்து கட்டெறும்பாகவில்லை. தொடக்கத்திலிருந்தே கட்பெறும்பாகத்தான் இருக்கிறது. அதிக விற்பனையுள்ள ஒரு சில இதழ்களைத் தவிர பெரும்பாலான இதழ்களை நட்டமில்லாமல் நடத்துவதே பெரும் சிக்கலாய் இருப்பதால், இதழ் முதலாளிகளைக் குற்றம் சொல்ல முடியாது.

ஆனால், நல்ல வருமானம் ஈட்டும் தொலைக்காட்சி அலைவரிசைகளும் பண்பலை ஒலிபரப்புகளும் திரைத்துறையும் எழுத்தாளர்களை அதிகமாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். அவர்களுக்கு ஓரளவு நல்ல சன்மானமாவது அளிக்கவேண்டும்.

எழுத்தாளருக்கு உரிய குறைந்த பட்ச மதிப்பையும் ஊதியத்தையும் நாம் வரையறுத்து வழங்கியாகவேண்டும். அவர்களுக்கு ஏராளமான வாய்ப்புகளை உருவாக்கித் தரவேண்டும்.

நூலகங்களில் எழுத்தாளர்களைப் பணியில் அமர்த்தலாம். பள்ளிக்கூடங்களில் படைப்பிலக்கியச் சிறப்பாசிரியர்களை நியமிக்கலாம். பிரச்சாரத்திற்கும் விளம்பரத்துக்கும் அரசு ஒதுக்கும் தொகையை எழுத்தாளர் வழியாகச் செலவிடலாம். அவர்கள் வழியாகப் பிரச்சாரம் செய்யலாம்.

எழுத்தாளருக்குக் குறைந்த வாடகையில் வீடு, போக்குவரத்து, மருத்துவ வசதி, அவர்களின் பிள்ளைகளுக்குக் கல்வி... என வாய்ப்புள்ள வசதிகளை ஏற்படுத்தி, மிகுதியாக்கி, எழுத்தாளரின் சமூக மதிப்பை உயர்த்தவேண்டும்.

அரசு மட்டுமின்றி நாட்டிலிருக்கும் அனைவரும் இதுகுறித்துச் சிந்திக்கவேண்டும்.

"கல்வி சிறந்த தமிழ்நாடு - புகழ்க்
கம்பன் பிறந்த தமிழ்நாடு',
"வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து
வான் புகழ் கொண்ட தமிழ்நாடு'
என்ற பாரதியின் வாக்குகளை உச்சரித்துப் பெருமை கொள்கிறோம். அவற்றை நம் பிள்ளைகளின் பாடப் புத்தகங்களில் இடம்பெறச் செய்துள்ளோம்.

கவிஞர்களும் எழுத்தாளர்களும் நம் நாட்டின் செல்வங்கள் என்று நாம் பெருமை பேசுகிறோம். சங்க இலக்கியத்திற்காகவும் ஏனைய இலக்கியங்களுக்காகவும் இங்கும் வெளி மாநிலங்களிலும் - நாடுகளிலும் நாம் மார்தட்டிக்கொள்கிறோம்.

தற்கால இலக்கியவாதிகளின் நலன்களில் நாம் அக்கறைகொள்ள வேண்டாமா? புதிய பெருமைகளை நோக்கிப் பயணிக்க அவர்களை ஊக்குவிக்க வேண்டாமா?

எழுதுகோலின் கண்ணீரைத் துடைக்க, நம் அனைவரின் கரங்களும் நீளட்டும்.   


Saturday, January 03, 2004

கவிதையில் சொல் மேலாண்மை

கடந்த இரண்டாயிரம் ஆண்டுகளில் தமிழ்ப் படைப்பாளிகள் அதிகம் கையாண்ட ஒரு வடிவம், கவிதைதான். கவிதையோடு ஒப்பிடும்போது உரைநடையை "நேற்று' பிறந்த வடிவம் எனலாம். கவிதை என்ற பெயரில் வருகின்ற அனைத்தும் கவிதைகள்தானா, எது கவிதை என்ற விசாரணைக்குள் இப்போது நான் இறங்கப் போவதில்லை. கவிதை என்ற பரப்பிற்குள் சொற்கள் எவ்வாறு இடம்பெறுகின்றன, எவ்வாறு இடம் பெறலாம், எவ்வளவு இடம் பெறலாம் என்பது குறித்துக் கூற விரும்புகிறேன். விசுவாசமான பணியாளைப் போல மொழியை வேலை வாங்குவது எப்படி? நமது கருத்துகளையும் உணர்வுகளையும் சரியாகப் பிரதிபலிக்கக்கூடிய சொற்களைத் தேர்ந்தெடுப்பது எப்படி என்றும் பார்ப்போம்.

"கவிதை, தானாகப் பிறப்பது. அது, கவிஞரின் வழியாக வருகிறதே தவிர கவிஞருக்குச் சொந்தமானது இல்லை" þ இப்படி ஒரு கூற்று சிலரிடம் இருக்கிறது. கவிஞரின் எண்ணங்கள், வாழ்வனுபவம், திறமை, புலமை, உணர்வுகள், தேவை ஆகியவற்றை ஒட்டியே அவரிடம் கவிதை பிறக்கிறது. மரபணுக்கள் வழியே பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய உணர்வுகள் கூட அவரிடம் வெளிப்படலாம். ஆனால் அவர் எழுதிய கவிதைக்கு அவரே முழுப் பொறுப்பாளராவார். தேவை ஏற்பட்டால் அதை மாற்றி எழுதவோ, திருத்தி எழுதவோ அவர் முன்வரவேண்டும்.

தமிழ்க் கவிதைகளில் ஊளைச் சதை என்ற நிலைமாறி தமிழ்க் கவிதையே ஓர் ஊளைச் சதையாக ஆகிவிடுமோ என்ற அச்சம் நிலவுகிறது. தேவைக்கு அதிகமாக இருக்கிற சொற்களை நாம் ஊளைச் சதை என்கிறோம். இன்று பெரும்பாலான கவிதைகள், 2 வரிகளில் சொல்லவேண்டியதை 10 வரிகளில் சொல்கின்றன. ஒரே சொல்லில் சொல்ல வேண்டியதை இரண்டு வரிகளில் சொல் கின்றன. மௌன இடைவெளிகளிலும் சொற்களே நிரம்பி வழிகின்றன.

இங்கு நண்பர்கள் சிலரின் கவிதை வரிகளை மேற்கோள் காட்ட விரும்புகிறேன். இந்த வரிகள் இவர்களின் ஒட்டுமொத்த கவிதைக்கான எடுத்துக்காட்டு அல்ல. இவர்கள் நல்ல வரிகளையும் வேறு இடங்களில் படைத்துள்ளார்கள் என்பதை நினைவூட்டுகிறேன்.

புதுகை மா.உதயகுமாரின் புது வருஷம் பிறந்தது என்ற கவிதை:

வறுமையை
ஒழித்திடப் பிறந்தது
புத்தாண்டு!
பெருமையை
வளர்த்திடப் பிறந்தது
புத்தாண்டு!
வாய்மையைப்
பெருக்கிடப் பிறந்தது
புத்தாண்டு!
தீமையைக்
கருக்கிடப் பிறந்தது
புத்தாண்டு!


இப்படியாக மேலும் 40 வரிகள் இதில் இடம் பெற்றுள்ளன. 1991-இல் ஏப்ரல் 14 அன்று திருச்சி வானொலி நிலையத்தில் ஒலிப்பரப்பான இது, 1996-இல் வெளியான இவரின் வறுமை தந்த வரிகள் என்ற முதல் கவிதை நூலில் இடம்பெற்றுள்ளது.

தொடக்கநிலைக் கவிஞருக்கு உரிய அடையாளங்களை இதில் காணலாம். வானொலி- தொலைக்காட்சிக் கவிதைகள், கவியரங்கக் கவிதைகள், மேடைக் கவிதைகள் ஆகியவற்றின் பொது இயல்பு, அவற்றின் நீர்த்துப்போன கவியம்சம் தான். இதனை ஈடுகட்டுவதற்காக உச்சரிப்பையும் "கம்பீரமாக''ப் படிப்பதையும் அவர்கள் நம்பியிருக்கிறார்கள்.

அடுத்து பாரி கபிலனின் களத்து மேடு (2001) தொகுப்பிலிருந்து ஒன்று.

சிகரெட் புகைத்து
அணைக்காமல்
விட்டெறிந்த
விரல்களுக்கு
நெருப்பிலிருந்து
தனித்துப் பறக்கும்
பொறி கண்டு
குப்பைகளும்
அதைச் சார்ந்த
குடில்களும்
அலறுகின்றன


இது, கவிதைக்குரிய தன்மை எதையும் பெறாமல் தீயணைப்புத் துறையின் அறிவிப்பைப் போல உள்ளது. ஆனாலும் ஒரு கவிதைத் தொகுப்புக்குள் இடம்பெற்றுவிட்டது.

அடுத்து, மல்லை மணிவாசகம் எழுதிய மாணிக்கப் பரல்கள் என்ற நூல் (1997). இதற்கு அப்போதைய கல்வி அமைச்சர் க. அன்பழகனார், அணிந்துரை அளித்துள்ளார். அதில், அவர் எடுத்துக்காட்டிய ஒன்று :

"மனித வாழ்க்கைக்கு 'இலக்கு' வேண்டும் என்பதனைக்

குறிக்கோள் இல்லாக் குவலய வாழ்க்கை
முறிந்து போகும் முடமாய் ஆகும்.
கொள்கை மாறாக் குறிக்கோள் வேண்டும்
கொள்கையில் வென்று குவலயம் ஆளலாம்


என்று பாடியுள்ளது இன்றைய இளைஞர்கட்கு வேண்டப்படும் இன்றியமையாத கருத்தென்பேன்".

இவர் கூறியுள்ளதன்படி இப்பாடலில் கருத்து மட்டுமே உள்ளது, கவிதை இல்லை.

அடுத்து, மு.வீரமுத்துவின் ஏவுகணைக் கவிதைகள் (1997) என்ற நூலில் கூட்டணி

நதிகளின் கூட்டணி கடல்தானே!
நரைகளின் கூட்டணி முதுமைதானே!
கோள்களின் கூட்டணி சூரியன்தானே!
காற்றின் கூட்டணி புயல்தானே!
அரசியல் கூட்டணி ஆட்சிதானே!
மனங்களின் கூட்டணி காதல்தானே!


இவை, மிகச் சாதாரண வரிகள். உரைநடை என்ற தகுதியைக்கூட பெற இயலாதவை. "ஓர் ஒன்று ஒன்று; ஓர் இரண்டு இரண்டு" என்ற வாய்பாடு போன்று எழுதப் பெற்றுள்ளது. ஆனால், அச்சேறிவிட்டது.

கடலில் ஒரு துளியைத்தான் நான் எடுத்துக் காட்டியுள்ளேன். இவைபோல் இலட்சக்கணக்கானவை, கவிதை என்ற பெயரில் தமிழில் புழங்குகின்றன. கவிதை எது என்று புரிந்துகொள்ளாமையும் சிறந்த கவிதைகளை வாசிக்காமையும் முறையான பயிற்சின்மையும் இத்தகைய கவிதைகள் பெருகக் காரணம்.

இவற்றுள் பல, நூலகங்களில் இடம் பிடித்து விடுகின்றன. "கவிதை" என்ற அடுக்கில் இவை அனைத்தும் இருக்கும்போது நல்ல கவிதை நூலைத் தேர்ந்தெடுப்பதே மிகவும் சிரமமாகிவிடுகிறது.

மிக வெளிப்படையாகத் "தாம் கவிதைகள் இல்லை" என அறிவித்துக்கொண்டவற்றைக் கண்டோம். அறிவிப்புகள், முழக்கங்கள் போதனைகள், சாடல்கள், புலம்பல்கள்... எனப் பலவும் கவிதையிலிருந்து முற்றிலும் அந்நியப் பட்டவை. ஒரு வகையில் இவை எளிமை யானவை; வசதியானவை. தன் கருத்து þ இயங்குதளம் ஆகியவற்றை வெளிப்படுத் துவதில் இவர்களுக்குத் தயக்கங்கள் இல்லை.

ஆனால், பூடக அம்சத்தோடும் திருகிய சொற்களோடும் வருகிற நவீன கவிதைகள் பல, அடிப்படை நேர்மை இல்லாதவை. "புரியாத கவிதைகள்" எனக் கண்டனம் பெறுகிறவை, அவை. கவிதைகளைப் பூட்டுவது தவறில்லை, ஆனால் சாவிகளையும் அங்கேயே வைக்க வேண்டும் என்பதே நமது கோரிக்கை.

நவீன கவிதைகளில் தன்னிரக்கமும் இயலாமையும் எதிர்மறை உணர்வுகளும் அதிகமாகப் பதிவாகி வருகின்றன. எளிய சொற்களைப் பயன்படுத்தினாலும்கூட வாக்கிய அமைப்புகளும் வகையுளிகளும் கவிதையைச் சிக்கலாக்கி விடுகின்றன. நிறுத்தற் குறிகளோ, மேற்கோள் குறிகளோ, இடைவெளிகளோ இல்லாமல், நினைத்த இடத்தில் எல்லாம் வளைத்து ஒடித்து எழுதுவது, தவறான போக்கு.

தமிழ்மணவாளனின் அலமாரியில் ஓர் இராஜகிரீடம் தொகுப்பில் இடம்பெற்றுள்ள அகம் என்ற கவிதை இது.

உட்சேரும் தவிர்த்த லரிதாகும்
அழுத்தும் உள்ளுக்குள் கனமாகும்
காலத்தில் சுமையாகும் பின்
வலிக்கும் மருந்தின்றி இறுகும்
புலனாகும் நாய் வாலாட்டாது
குரைக்கும் விமானம் மேலெழும்பாமலே
களம் ஓடும் தகவலறிந்து கம்ப்யூட்டர்
கட்டுப் பாடிழக்கும் கட்டளை
ஏற்க மறுக்கும் யதார்த்தச்
செயல் விலக இயல்பு தடைபடும்
எதுவென அறிதலியலாது ஏதோ
வாகும் வெளிச்செல்ல எத்தனிக்க
இடமின்றித் தடுமாறும் குழப்பம்
ஊடாடும் எனினும் வழியின்றித்
தெளிவு உறங்கும் இடம்
வாய்த்ததும் புறம்செல்லும்
பாறைப் பனி உருகும் நீராகும்
சிலு சிலுப்பில் பூப்பூக்கும்
சுதந்திரமாய்


வாசிப்பை எளிமைப்படுத்தும் எந்தச் சிறு உதவியையும் கவிஞர், இங்கு செய்யவில்லை. அத்துடன் முற்றுப்புள்ளி, அரைப்புள்ளிகளைக் கூட பயன்படுத்தாமல் வாசகருக்குக் குழப்பத் தையும் உண்டாக்குகிறார்.

அடுத்து, லாவண்யா எழுதிய இன்னும் வரவில்லை உன் நத்தை ரயில் என்ற தொகுப்பில், என்ன செய்யலாம்? என்றொரு கவிதை: அது,

எஞ்சியதெனக்கென் தந்தையிடமிருந்து
புராதன நினைவுச்சின்னமாயொரு வீடு
.

என்று தொடங்குகிறது "எஞ்சியதெனக்கென்", "நினைவுச்சின்னமாயொரு" என்பது போல் நூலில் பல இடங்களிலும் இரண்டு-மூன்று சொற்களைச் சேர்த்துச் சேர்த்து எழுதியுள்ளார். இது வாசிப்பிற்கு இடையூறு செய்வதாய் உள்ளது.

அடுத்து, கவிதையிலிருந்து எந்தவொரு சொல்லையும் உருவ முடியாதபடி கச்சிதமாக இருக்கவேண்டும். என்பதாகும், எனப்படும், எனவே, அதனால், நான் சொல்ல வருவது... போன்ற விவரிப்புத் தன்மையுடைய சொற்கள் கவிதையில் இடம்பெறக்கூடாது. கவிதை, சுண்டக் காய்ச்சிய பாலாக இருக்கவேண்டும், தேநீர்க் கடையில் கிடைக்கும் பாலாய் இருக்கக்கூடாது.

ஆசு எழுதிய என்றொரு மௌனம் (1999) நூலில், பசியுடன் சில வினாக்கள் என்ற கவிதை இப்படித் தொடங்குகிறது:

பசியுடன் படுத்துக்கொள்வோம்
என அழுகுரலிடும் அன்பானவளே
கரையான்கன் அரித்து சேதப்படுத்திய
பழைய புல்லாங்குழலின் சுரம் பாடுமோ
நம் துயரம்.


இதில் "கரையான்கள் அரித்து சேதப்படுத்திய பழைய" என்பதற்குப் பதில் "கரையான்கள் அரித்த புல்லாங்குழலின்" என இருந்தாலே போதும். நமக்குச் செய்தி, விளங்கிவிடுகிறது.

பழநிபாரதியின் காதலின் பின்கதவு (2001) என்ற நூலில் யாருக்கும் தெரியாதவள் என்ற கவிதை:

உடைந்து கிடந்தன
வளையல் துண்டுகள்
உதிர்ந்து கிடந்தன
மல்லிகைப் பூக்கள்
புகைந்துகொண்டிருந்தது
சிகரெட் துண்டு
கிழிந்து கிடந்தது
ரவிக்கை
காவல் நிலையத்திற்குப் பின்னால்
ஆணுறைகள்
கடைவீதியில்
வளையல்
பூ
ரவிக்கை என்று
வந்துபோனார்கள்
நிறையப் பெண்கள்
எந்தப் பெண்ணுக்கும்
தெரியவில்லை
அந்தப் பெண்ணைப் பற்றி


இதில் "காவல் நிலையத்திற்குப் பின்னால் ஆணுறைகள்" என்ற இரு வரிகளில் நிறைய செய்திகள் அடங்கியுள்ளன. மேலும் தேவையெனில்

வளையல் துண்டுகள்,
உதிர்ந்த மல்லிகை,
புகையும் சிகரெட்
கிழிந்த ரவிக்கை
காவல் நிலையத்திற்குப் பின்னால்
ஆணுறைகள்


எனச் சுருக்கலாம். குறைந்தபட்சம் நான்கு வரிகளை மிச்சப்படுத்தலாம்.

அடுத்து, சொற்களைப் பொருத்தமாகக் கையாளுவது குறித்துப் பார்ப்போம். வரலாற்று நாவலாசிரியருக்கு உள்ள விழிப்புணர்வு, நம் கவிஞர்களுக்கு இருக்கவேண்டும்.
வட்டார வழக்குகளோ, தொழிற் பெயர்களோ, திசைச் சொற்களோ, பல்வேறு பருவங்கள், பழக்க-வழக்கங்கள் சார்ந்த சொற்களோ - அவற்றை முரண்களற்றுப் பொருத்தமாகக் கையாளவேண்டும்.

மாலதி மைத்ரியின் நீரின்றி அமையாது உலகு (2003) நூலில் அறுந்த வால் என்ற கவிதை,

எனது கனவில் சிறுபூச்சியாய்
சுவரில் ஊர்ந்துகொண்டிருக்கிறாய் நீ
வாய்பிளந்து உன்னை விழுங்க வருகிறேன்
அசைவின் அதிர்வில் சுதாரித்து
அறையளவு புடைத்தெழுந்து
என்னைக் கால்களால் கவ்வியிழுக்கிறாய்


எனத் தொடர்கிறது கவிதை. பொதுவாக வாயால் பற்றுவதையே 'கவ்வுதல்' என்போம். கைகால்களால் 'பிடித்து' இழுக்கலாம். 'கவ்வி' இழுக்க முடியாது.

பச்சையப்பன் கல்லூரி மாணவர் ஒருவர், கடலைத் தாண்டும் ஓடங்கள் எனத் தன் கவிதைத் தொகுப்புக்குத் தலைப்பிட்டிருந்தார். ஓடங்களால் கடக்கத்தான் முடியும், தாண்ட முடியாது, என அது குறித்து விமர்சித்திருக்கிறேன்.

ஒரு பொருள் குறித்த பல சொற்கள், தமிழில் உள்ளன. சிரிப்பு, புன்னகை, முறுவல், நகைப்பு, இளிப்பு எனப் பல சொற்கள் முன் நிற்கும்போது கவிஞர்தான் தமக்கு ஏற்ற சொல்லைத் தேர்ந்தெடுக்கவேண்டும்.

காடு, கானகம் என்ற சொற்களுக்குப் பொருள் ஒன்றாயினும் காடு þ முழுவதும் வல்லினச் சொல். கானகத்திலோ மெல்லினத் தின் ஆட்சி இருக்கிறது. கோபத்துடன் சொல்லும் போது "காட்டான்" என்றும் பாராட்டிச் சொல்லும்போது "கானக மனிதன்" என்றும் சொல்கிறோம் இல்லையா?

இதுபோலவே தமிழின் இலட்சக் கணக்கான சொற்கள், கவிஞருக்கு முன் இருக்கும்போது, அவர், தமது கவிதைக்கு மிகப் பொருத்தமான சொல்லையே தேர்ந்தெடுக்க வேண்டும். சிற்பி, தன் சிற்பத்திற்கு அணுவணு வாக அழகேற்றுவதுபோல் கவிதைக்கு மெருகேற்ற வேண்டும்.

தமிழ்க் கவிஞர்கள், ஒவ்வொரு சொல்லுக்கும் மாற்றுச் சொற்கள் குறித்து விரிவாக அறிந்திருக்க வேண்டும். நானறிந்த பலர், அதிக வடசொற்களைக் கலக்கிறார்கள். வடசொற்களின் மெல்லின ஓசையில் அவர்களுக்கு ஓர் ஈர்ப்பு இருப்பதாகத் தெரிகிறது. அத்தகைய சொற்களை, முயன்றால், தமிழிலேயே அவர்களால் பெற முடியும்.

கவிதையின் அளவு குறித்து, கவிஞர்கள் மிகுந்த விழிப்புடன் இருக்கவேண்டும். 32 வரிகள், 24 வரிகள் 16 வரிகளுக்கு மிகாமல் கவிதை வாசிக்குமாறு பலர் வலியுறுத்துவதன் காரணம் இதுவே. எவ்வளவு அதிகமாக எழுதுகிறோம் என்பதைவிட எவ்வாறு எழுதுகிறோம் என்பதே முக்கியமானது.

நீள் கவிதைகள் தமிழில் வெற்றிபெற இயலவில்லை. குறுங்கவிதைகளே இங்கு அதிகச் செல்வாக்குடன் உள்ளன. பாரதியின் குயில் பாட்டை விட அவரின் அக்கினிக் குஞ்சு, மகத்தான வெற்றி பெற்றுள்ளது. எனவே, தமக்குள்ளேயே சுய வரையறைகளுடன் கவிஞர்கள் இயங்குவது நல்லது.

வீதியில் நடக்கும்போது திடீரெனக் கிடைக்கும் ஒரு சில்லரைக் காசைப்போல், நமக்குத் திடீரென ஒரு சொல்லோ, ஒரு வரியோ கிடைக்கும். அதன் தூண்டுதலில் நாம் ஒரு முழுக் கவிதையை உருவாக்க வேண்டும். அது, எல்லோர்க்குமான கவிதையாக, குறைகளின்றி இலக்கணப் பிழைகள் இல்லாமல் அமைவது இன்றியமையாதது.

பலர், ஒற்றுப் பிழைகள், சந்திப் பிழைகள், ஒருமைþபன்மைப் பிழைகள் புணர்ச்சிப் பிழைகள்... என ஏராளமான பிழைகளோடு எழுதி வருகிறார்கள். ஓட்டையுள்ள பலூனில் காற்று தங்காது.

நாம் நமது கவிதையை ஆளவேண்டும். அப்போதுதான் நம் கவிதை, உலகை ஆளும்.



(முரண்களரி அமைப்பின் சார்பில் சென்னை, அண்ணாசாலை, தேவநேயப் பாவாணர் மைய நூலகத்தின் சிற்றரங்கில் 4.7.2004 அன்று மாலை வாசிக்கப்பெற்றது.)

Friday, January 02, 2004

ஜனரஞ்சகக் கதையின் இலக்கணங்கள்

நான், வெகுமக்கள் இதழ் ஒன்றில் பணியாற்றிய போது, சிறுகதைகளை ஒரு கட்டம் வரைக்கம் தேர்வுசெய்யும் பொறுப்பினை என்னிடம் அளித்தார்கள். அதற்கு முன்பு சிறுகதைகளை எப்படித் தேர்ந்தெடுப்பது என்பதற்கு எனக்குச் சில குறிப்புகள் கொடுத்தார்கள். நான் எழுத் தாளன் - கவிஞன் என்றாலும் தங்களுக்கு என்ன தேவை எனத் தெரிவிக்கவே அந்தக் குறிப்புகள்.

1. எந்தக் கதையையும் முழுதும் படிக்காதீர்கள். நேரம் போதாது. முதலில் கொஞ்சம், நடுவில் கொஞ்சம், கடைசியில் கொஞ்சம் படித்தால் போதும். கதை தேறுமா தேறாதா என்பது தெரிந்துவிடும்.

2. மிகவும் அழுகைக் கதையாக, சோகம் -விரக்தி-இறுக்கமாக இருந்தால் கதையை எடுக்கக்கூடாது.

3. வயதானவர்கள் மட்டுமே இடம் பெறும் கதைகள் வேண்டாம். இனம் பெண் பாத்திரங்கள் அவசியம் தேவை. இல்லாவிடில் கதைக்குப் படம் வரைவதில் சிக்கல் இருக்கும்.

4. இதழில் 3-4 பக்கங்களுக்கு மேல் வரும் கதைகளை விட்டுவிடலாம்.

5. அந்தந்த நேரத்திற்கு ஏற்ப, கதைகளை எடுக்கவேண்டும். ரம்ஜான் வருகிறது என்றால் அதற்கேற்ப, கிறிஸ்துமஸ் என்றால் அதற் கேற்ப, தேர்தல், காதலர்தினம், குஜராத் பூகம்பம்... என எந்த நேரத்திற்கு ஏற்ற கதையாக இருக்கவேண்டும். (வியப்பு யாதெனில், இதழில் மனநிலை புரிந்து வாசகர்களே எழுத்தாளர்களே நேரத்திற் கேற்ற கதைகளை முன்கூட்டியே அனுப்பி விடுவார்கள்.

6. நன்றாக இருந்தாலும் தொடர்ந்து ஒருவரின் கதைகளை எடுக்கக்கூடாது. இந்து-முஸ்லிம்-கிறித்தவர், ஆண்-பெண், பிரபல எழுத்தாளர். கிராமம் சார்ந்தது - நகரம் என் மாறி மாறிக் கதைகளை எடுக்கவேண்டும்.

7. கதையில் அதிகப் பாத்திரங்கள் இருக்கக்டாது. 3-4 பிரதான பாத்திரங்களுக்கு மேல் இருந்தால் வேண்டாம்.

8. கதை, படித்தவுடன் புரியவேண்டும். இருண்மையாக, குழப்பமாக, தெளிவில் லாமல் இருந்தால் வேண்டாம்.

தேர்ந்தெடுத்த பிறகு கதையைத் திருத்தி தேவைப்பட்டால் வெட்டி, ஒட்டி, இதழுக்கேற்ப தயாரிக்க வேண்டும். இதற்கும் நிறைய குறிப்புகள் உண்டு.

1. மிக நீண்ட வசனங்களைக் குறைக்க வேண்டும்.

2. கவர்ச்சிகரமாகத் தலைப்பு வைக்க வேண்டும்.

3. தேவைப்பட்டால் பாத்திரங்களின் பெயர்களையே ஊரையோ சம்பவங்களை யோ கூட மாற்றலாம்.

4. தேவைக் அதிகமாக இருந்தால் கதையைத் தயவு தாட்சண்யம் பார்க்காமல் வெட்டிவிடவேண்டும்.

இப்படியாகப் பல குறிப்புகள் கொடுப்ப துண்டு.

கதையைத் தேர்ந்தெடுத்துத் திருத்திய பின் அதற்கேற்ப ஓவியரை அழைத்து ஒரு காட்சியைச் சொல்லிப் படம் வரையச் சொல்லவேண்டும். அந்தக் காட்சியில் யார் யார் இருக்கிறார்கள், எங்கே, என்ன செய்கிறார்கள், என்ன உடை-மனநிலையில் இருக்கிறார்கள்... என எல்லாம் சொல்ல வேண்டும். அப்போதுதான் கதைக்குப் பொருத்தமான படம் கிடைக்கும். கதையை ஓவியரிடம் அனுப்பிப் படம் வாங்க, நேரமாகிவிடும்.

இளம் பெண், கதையில் மிகச் சிறிய இடத்தில் வந்தாலும் படத்தில் அவர்தான் பெரிய இடத்தில் இருப்பார். விதவிதமாகக் கவர்ச்சியாக வரையும் ஓவியர்களின் திறமை, பெரியது.
இதழில் ஒரு கதை இடம் பெறுவதற்குப் பல காரணங்கள் இருக்கும். வேண்டியவர், நண்பர் என்ற முறையில் சிலர், பிரபல மானவர் என்ற வகையில் சிலர், இதழின் பல்சுவைத் தன்மையையும் பன்முகத்தையும் காட்டுவதற்காகச் சிலர்... இதழில் இடம் பெறுவார்கள். வேறு காரணாங்களும் உண்டு.

கதைகள், பொதுவாகத் தேர்வுக் குழுவி னரின் பார்வைக்குச் செல்வது வழக்கம். அதில் பலர் பிடிக்காமலே கருத்துத் தெரிவிப்பார்கள். ஒரே கதையை மிகச் சிறப்பானது என்பார் ஒருவர், பிரசுரிக்கத் தகுதியில்லை என்பார் மற்றொருவர்.

இந்தப் படிகளையெல்லாம் கடந்து தான் வெகுஜன இதழ்களில் சிறுகதைகள் வெளியாகின்றன. எனவே அதனால் பெருமகிழ்ச்சி அடைய ஒன்றுமில்லை. கதை வெளிவராததால் வருத்தமடையவும் தேவையில்லை.

எழுத்தாளரின் சுதந்திரத்தைப் பாதுகாத்தல், கருத்துரிமையை மதித்தல், படைப்பு தன்ளைவில் நியாயமாய் இருத்தல், கச்சிதம், தீவிரம், உண்மை.... போன்ற ஏராளமான அம்சங்களுக்கு வெகுஜன இதழில் சாத்தியமில்லை.

இவை தவிர, ஜனரஞ்சகச் சிறுகதைக் கான வேறு இலக்கணங்களும் உண்டு. அவற்றில் முதன்மையானது. பெரும்பா லானவர்களின் கருத்துக்கு ஏற்பவே அவை இருக்கும். பெரும்பாலோர் ஆதரிக்கும் விஷயத்தை கதை எதிர்க்காது எதிர்ப்பதை ஆதரிக்காது. அப்படிச் செய்தால் அது வெகுமக்கள் எதிர்பார்க்கும் கதை ஆகாது.

பாத்திரங்களின் பெய்கள் வடமொழியாகவும் உரையாடல்கள் ஆங்கிலச் சொற்களோடும் இருக்கும். (பாத்திரங்களுக்குப் புதிய புதிய வடமொழிப் பெயர்களைக் கண்டுபிடக்க, நமது எழுத்தாளர்கள் பெரிதும் சிரமப்படுகிறார்கள்.) இதில் யதார்த்தம் என்று வேறு சொல்லிக்கொள்வார்கள். யதார்த்தத்தில் எத்தனையோ வகைகள் உண்டு. வட்டார வழக்குகள் உண்டு. தனக்குப் பிடித்ததை எழுதிவிட்டு அல்லது மக்களுக்குப் பிடிக்கும் என்ற நினைப்பில் எழுதிவிட்டு சப்பைக் கட்டு கட்டுவார்கள்.

கதையின் எடுப்பு, தொடுப்புகளில் என்ன வித்தயாசம் செய்தாலும் முடிவுகளில் வெகஜன எழுத்தாளர்கள் பெரிதும் வெகு மக்கள் முடிவுகளையே எடுப்பார்கள். வெகுமக்கள் வரும்பும் அனைத்தையும் இவர்களின் பாத்திரங்களும் விரும்பும்.

1,2,3,4... என்ற முறையிலேயே இவர்கள் சிந்தித்துப் பழக்கப்பட்டவர்கள். ஒரு மாற்றத்துக்கு 4,3,2,1 என்றோ, 3,4,1,2. என முறைமாற்றியோ சிந்திக்க மாட்டார்கள். சோதனை முயற்சிகளை வெகுமக்கள் எழுத்தாளரிடம் எதிர்பார்க்க முடியாது.

தற்காலச் செய்திகளை, நிகழ்ச்சிகளை முன்னிறுத்தி ஒரு தோற்றத்தைக் கொடுக்கும். ஆனால், கதை, பழைய விஷயங்களையே பேசும். இதுவரை பயன்படுத்தாத கரு, களம், பாத்திரங்களின் மீதான தேடல் இருக்காது.

பேரிதழ்களில் எழுத வருவோருக்குப் புகழ் வேட்கை மிக அதிகம். ஆனால், அதை மூடி மறைப்பார்கள். தன் படைப்பு சிதைக்கப் பட்டாலும் தன் பெயர் வெளிவந்தால் போதும் எனச் சமரசம் செய்துகொள்வார்கள்.

சிற்றிதழாளர்களிடமும் இத்தகைய குணங்கள் இருக்கின்றன. இந்த அம்சங்களின்படி அவர்களும் பேரிதழழூ மனோ பாவம் கொண்டவர்களே.

பேரிதழில் பணியாற்றினாலும் - எழுதினாலும் இந்த அம்சங்கள் இல்லாதவர் கள், சிற்றிதழ் மனோபாவம் உடையவர்களே.

எழுத்தாளர்கள், தம் எழுத்தின் மீது பிரேமையும் கர்வமும் கொள்கிறார்கள். எனக்குத் தெரிந்து, கவிஞர்கள் தான்தான் பெரிய ஆளு என்பதுபோல் பேசுவார்கள். இப்போது அநேக எழுத்தாளர்கள் இப்படிக் கூறத் தொடங்கியுள்ளார்கள்.

எழுத்தையும் பணம் கூட்டவும் புகழ் ஈட்டவும் பந்தா காட்டவும் பயன்படுத்துவோர், அது குறித்து அலட்டிக் கொள்ளாமல் இருப்பது நல்லது. இதைப் பெரிய திறமையாகவும் சிறப்பாகவும் சொல்லத் தொடங்கினால் அவர்கள் கடுமையான விமர்சனங்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.

சிற்றிதழ், பேரிதழ் என்ற வரையறை களைவிட்டுவிட்டு, தன் நெஞ்சறிவது பொய்யற்க என்ற அளவிலாவது எழுத்தாளர்கள் இயங்கட்டும்.

Thursday, January 01, 2004

‘இதோ, தமிழிலக்கியப் பொற்காலம்’

மூவாயிரம் ஆண்டுக்கு மேல் தொடரும் தமிழிலக்கிய வரலாற்றில் சங்க காலம் (கி.மு. 300 கி.பி. 100), சோழர் காலம் (கி.பி. 900-1200) ஆகியவற்றைப் பொற்காலம் என்று இலக்கிய வரலாற்று நூல்கள் குறிப்பிடுகின்றன அக்காலங்களில் தோன்றிய நூல்களின் சிறப்பாலும் படைப்பாளருக்கு இருந்த சமூக மதிப்பாலும் இக்கருத்தை முன் வைத்தனர்.

அக்காலங்களைக் காட்டிலும் நடப்புக் காலம். ஒரு பொற்காலத்துக்கு உரிய அடையாளங்களோடு திகழ்கிறது. 1901-இல் தொடங்கி, தற்போது நடைபெறும் 2002 வரையான காலப்பகுதியில் தமிழிலக்கியம் மாபெரும் வளர்ச்சி கண்டுள்ளது, இந்த வீச்சு. வரும் ஆண்டுகளிலும் இருக்கும் என்று நம்பலாம். இப்பெரும் பாய்ச்சல், தமிழிலக்கிய நெடும்பாதையில் இதற்கு முன் எக்காலத்திலும் நிகழ்ந்ததில்லை.

எண்ணிக்கை
இக்காலத்தில் படைப்பாளர் எண்ணிக்கையும் படைப்புகளின் எண்ணிக்கையும் மிகுந்து பெருகின. 1901க்கு முந்தைய தமிழ்ப்படைப்புகள் அனைத்தையும் ஒருதட்டிலும் 1901 முதல் வெளிவந்த தமிழ்ப்படைப்புகள் அனைத்தையும் மற்றொரு தட்டிலும் வைத்தால் பிந்தைய தட்டு, முந்தைய தட்டைவிட அதிக கனத்துடன் இருக்கும். எண்ணிக்கையில் மட்டுமின்றி தரத்திலும் அவற்றுள் பல சிறந்துள்ளன.

அமைப்புகள்
தமிழ்-இலக்கிய அமைப்புகள், சங்கம்-கழகம், மன்றம் போன்றவை பல்கிப் பெருகியதும் இக்காலத்தில்தான். 1901-இல் மதுரையில் பாண்டித்துரைத் தேவர், நான்காம் தமிழ்ச் சங்கத்தைத் தொடங்கினார்.

அது முதல் இக்காலப் பகுதியில் ஆயிரக்கணக்கான தமிழ் அமைப்புகள் தோன்றி, மொழி, இலக்கிய வளர்ச்சிக்குப் பங்காற்றின. குடியாட்சி: 1901-க்கு முன் தமிழ்நாட்டில் முடியாட்சி மட்டுமே இருந்தது. 1901-க்குப் பின்தான் தமிழ்நாடு, முதன் முதலாகக் குடியாட்சியைச் சந்தித்தது. இப்புற* சுதந்திரம், படைப்பாளரிடையே அகச் சுதந்திர வாயிலை அகலத் திறந்தது,

அரசு சார்பில் தமிழ் வளர்ச்சி & பண்பாட்டுத்துறை ஒன்றை உருவாக்கி, அதற்கெனத் தனி அமைச்சரை நியமித்தது, 1901-க்கு முந்தைய தமிழக ஆட்சி வரலாற்றில் எங்கும் காணமுடியாத ஒரு நிகழ்வு. அரசு விருதுகள், அரசவைக் கவிஞர், உலகத் தமிழ் மாநாடுகள், போன்றவை நிறுவனமயமான தமிழ் வளர்ச்சிக்கு உதவுகின்றன.

இலக்கிய வடிவங்கள்:

1901-க்கு முன் பெரும்பாலும் செய்யுளின் ஆதிக்கமே இருந்தது. ஆனால், நடப்புக் காலத்தில் உரைநடை தன் பெருஞ்செல்வாக்கை நிலை நாட்டியது. சிறுகதை, புதினம், கட்டுரை, நாடகம். கடித இலக்கியம், பயண இலக்கியம்... போன்ற பற்பல கிளைகள் தமிழ் இலக்கியத்தில் தோன்றி, தனித் தனித் துறைகளாக வலுப்பெற்றது நடப்புக் காலத்தில்தான்.

நாட்டுப்புறப் பாடல்களும் ‘வட்டார வழக்கில் அமைந்த படைப்புகளும் இலக்கிய அங்கீகாரம் பெற்றது இக்காலத்திலே. புதுக்கவிதை. ஹைக்கூ போன்றவையும் மேற்கத்திய சித்தாந்தங்களை உள்ளடக்கிய நவீன படைப்புகளும் வளர்ந்து வருவது நிகழ்காலத்தில்தான்.

கருப்பொருள்:

1901க்கு முந்தைய படைப்புகளின் கருப்பொருள்களை அகம்-புறம் என எளிதில் அடக்கி விடலாம். ஆனால் இன்று, பெண்மனம், ஒடுக்கப்பட்டோர். போராளிகள், விளிம்புநிலை மக்கள், எய்ட்ஸ் விழிப்புணர்வு, அரவானியர்... எனப் பலவற்றைக் கருப்பொருள்களாகக் கொண்ட படைப்புகள் வருகின்றன. படிமம், குறி*டு, வடிவம், படைப்புக் களம், வெளிப்பாட்டு உத்தி... என, முற்றிலும் புதிய படைப்புகள் வெளிவருகின்றன, படைப்பில் சோதனை முயற்சிகளும் நடைபெறுகின்றன.

ஆய்வுகள்:
1901 முந்தைய ஆய்வுப் பணிகள், பெரும்பாலும் உரையாசிரியராலேயே நிகழ்ந்தன. அவையும் விளக்க முறையிலும் பாராட்டு முறையிலுமே நடந்தன. ஆனால், அறிவியல் அடிப்படையிலான ஆய்வுகளும் பெண்ணியம்-மார்க்சியம், தலித்தியம் போன்ற சித்தாந்த அடிப்படை ஆய்வுகளும் நடப்புக் காலத்தில்தான் தோன்றின. கல்வி வளர்ச்சி பெற்று ( தமிழ்நாட்டில் எழுத்தறிவு பெற்றோர் 75%) கல்லூரி, பல்கலைக்கழகம் வழியே நிறுவன முறை ஆய்வுகள் ஆழ வேரூன்றியதும் இக்காலத்திலே: இதழ்கள், அமைப்புகள், தனிமனிதர் மூலம் நூல் திறனாய்வு வலுப்பெற்றதும் நடப்புக் காலத்தில்தான்.

ஊடகம்:
அச்சு எந்திர வரவுக்குப் பின், மெல்ல எழுந்த நூல் பதிப்பு முயற்சி, நடப்புக் காலத்தில் அசாதாரண வேகம் பெற்றது. பல்லாயிரக்கணக்கான இதழ்கள் தோன்றி, தமிழ் மொழி - இலக்கியத்தைச் சிகர நிலைக்கு இட்டுச் சென்றன. இன்றும் பன்நூறு இதழ்கள், பல பட நிறுவனங்கள், பத்திற்கும் மேலான தொலைக்காட்சி அலைவரிசைகள், வானொலியின் பல்வேறு வட்டார அலை வரிசைகள், இணைய வானொலி... போன்றவை தமது தீனிக்காகப் படைப்பாளர்களைத் தொடர்ந்து பேசவும் எழுதவும் தூண்டுகின்றன பிழைதிருத்தம், உள்ளீடு... போன்றவற்றுக்குப் பல மென்பொருள்கள் தோன்றியுள்ளன. அறிவியல் மொழிக்கான மதிப்பைத் தமிழ் இப்போதுதான் பெறுகிறது. வானொலி, தொலைக்காட்சி, திரைப்படம், இணையம் என்ற ஊடகங்களின் வரவும் வளர்ச்சியும் தமிழுக்கு சஞ்சீவித் தன்மையை ஏற்படுத்திவிட்டன.

குறுந்தட்டுகளிலும், இணையத்திலும் சேமிக்கப் பெறும் தமிழிலக்கியத்தை இனி எந்தக் கறையானும் கடல்கோளும் அழித்துவிட முடியாது. தமிழுக்குள்ள இத்தகைய பாதுகாப்பு, நடப்புக் காலத்திற்கு முன் எப்போதுமே இருந்ததில்லை.

மொழிபெயர்ப்பு:
பிற மொழியிலிருந்து தமிழுக்கும் தமிழிலிருந்து பிற மொழிக்கும் ஏராளமான மொழி பெயர்ப்புகள் நடப்புக் காலத்தில் நிகழ்ந்துள்ளன, 1954 இல் தொடங்கிய ‘சாகித்ய அகாதமி’ அமைப்பு, இதுவரை தமிழுக்கு 260 நூல்களையும், தமிழிலிருந்து பிறமொழிகளுக்கு 90 நூல்களையும் மொழி பெயர்த்துள்ளது. உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனமும் ஆசியவியல் நிறுவனமும் பல மொழி பெயர்ப்பு முயற்சிகளை மேற்கொண்டுள்ளன. இவை தவிர, தனித்தனியாகப் பதிப்பகங்களும் தமிழ் அமைப்புகளும் மொழி பெயர்ப்பாளர்களும் பல மொழிபெயர்ப்புகளைச் செய்து வருகின்றனர். இதன் பயனாகத் திருக்குறள், சங்க இலக்கியம் தொட்டு, தற்கால இலக்கியம் வரை உலக நாடுகளுக்கு அறிமுகம் ஆகியுள்ளன. உலக இலக்கியங்களும் பிற மாநில இலக்கியங்களும் தமிழ் மண்ணுக்கு அறிமுகமாகியுள்ளன.
1901க்கு முந்தைய மொழிபெயர்ப்புகள் பலவும் வடமொழியையே முலமாகக் கொண்டவை. ஆனால் நடப்புக் காலத்தில் பல மொழிகளிலிருந்தும் தமிழுக்கு ஆக்கங்கள் வருகின்றன.

இலக்கியம்-மக்கள் நெருக்கம்:
இலக்கியம் என்பது முற்காலத்தில் அரசவைக்கும் மேட்டுக் குடிக்கும் உரியதாக இருந்தது. பாரதி தொடங்கி, பலரும் இலக்கியத்தை மக்களிடம் கொண்டு சென்றனர், பொது விழாக்களில் கவியரங்கம், பட்டி மன்றம் ஆகியவை இயல்பான உறுப்புகளாகி விட்டன. பள்ளி-கல்லூரிகளில் மாணவர்களுக்குப் பேச்சு-கட்டுரை-கவிதை-நாடகப் போட்டிகள் நடத்தப் பெறுகின்றன. பல்வேறு அமைப்புகளும் மாதம்தோறும் இலக்கியக் கூட்டங்கள், கவியரங்குகள் ஏற்பாடு செய்கின்றன.
திரைப்படப் பாடல்களுக்கும், உரையாடல்களுக்கும் கோடிக்கணக்கான சுவைஞர் உள்ளனர். எனவே இலக்கியத்துக்கும் மக்களுக்கும் நல்ல நெருக்கம் வளருகிறது. முடியாட்சிக் காலத்தில் கூண்டுக் கிளியாக இருந்த தமிழிலக்கியம், குடியாட்சியில் குயில் தோப்பாக வளமையுற்றுள்ளது.

இலக்கிய ஆட்சியாளர்கள்:
முற்காலத்தில் அரசர்கள் கவிஞர்களாய் இருந்துள்ளார்கள். ஆனால். தற்காலக் குடியாட்சி முறையில்
கவிஞர்களாய் இருக்கும் வேட்பாளர்களை மக்கள் தேர்ந்தெடுத்து, தங்கள் தலைவர்களாய் அறிவிக்கிறார்கள்.
ஆ.ப.ஜெ. அப்துல்கலாம், இந்தியக் குடியரசுத் தலைவர் ஆனதும், மு.கருணாநிதி தமிழகத்தின் முதல் அமைச்சராய் 4 முறைதேர்வுபெற்றதும், சி.என். அண்ணாதுரை, கவிதை நடைப்பேச்சால் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தியதும். நெடுஞ்செழியன், குமரி அனந்தன், காளிமுத்து, வலம்புரி ஜான் எனத் தொடரும் இலக்கியவாதிகளும், தமிழக அரசியலை அணி செய்துள்ளார்கள். தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதாவும் ஒரு கதாசிரியர் என்பது குதிப்பிடத்தக்கது. இது, இலக்கியவாதிகள் மேல் மக்களுக்கு இருக்கும் நம்பிக்கையையே காட்டுகிறது.

குறைபாடுகள்:
நடப்புக் காலத்தில் தமிழில் பிறமொழிக் கலப்பு அதிகமாகிவிட்டது. தமிழ் படித்தவர்களும் படைப்பாளிகள் பலரும் பொருளாதாரத்துக்கு வேறொரு தொழிலைச் செய்ய வேண்டி இருக்கிறது. தமிழ் மக்களிடம் இலக்கிய நூல் வாங்கும் பழக்கம் அதிகம் வளராததால் ஆயிரம் படிகள் அச்சிட்டு அதை விற்கவே போராடும் எழுத்தாளர் பலர் உள்ளனர்.

எழுத்தாளரிடையே குழு மனப்பான்மை அதிகரித்துவிட்டது. படைப்பை விட்டுப் படைப்பாளியை விமர்சிக்கும் போக்கு நிலவுகிறது. எழுத்தாளர் பலரிடையே சொல்லுக்கும் செயலுக்குமான இடைவெளி நீண்டு விட்டது. பிழைப்புக்காக எதையும் எழுதும் துணிவு(!) சிலரிடம் உள்ளது.

இந்தக் குறைகள் களையப் பெற்றால் ‘இதோ, தமிழிலக்கியப் பொற்காலம்’ என்று நாம் உறுதியாகச் சொல்லலாம்.

- அண்ணா கண்ணன்
(கோகுலம் கதிர் மாத இதழ் - செப்டம்பர் 2002