Saturday, January 03, 2004

கவிதையில் சொல் மேலாண்மை

கடந்த இரண்டாயிரம் ஆண்டுகளில் தமிழ்ப் படைப்பாளிகள் அதிகம் கையாண்ட ஒரு வடிவம், கவிதைதான். கவிதையோடு ஒப்பிடும்போது உரைநடையை "நேற்று' பிறந்த வடிவம் எனலாம். கவிதை என்ற பெயரில் வருகின்ற அனைத்தும் கவிதைகள்தானா, எது கவிதை என்ற விசாரணைக்குள் இப்போது நான் இறங்கப் போவதில்லை. கவிதை என்ற பரப்பிற்குள் சொற்கள் எவ்வாறு இடம்பெறுகின்றன, எவ்வாறு இடம் பெறலாம், எவ்வளவு இடம் பெறலாம் என்பது குறித்துக் கூற விரும்புகிறேன். விசுவாசமான பணியாளைப் போல மொழியை வேலை வாங்குவது எப்படி? நமது கருத்துகளையும் உணர்வுகளையும் சரியாகப் பிரதிபலிக்கக்கூடிய சொற்களைத் தேர்ந்தெடுப்பது எப்படி என்றும் பார்ப்போம்.

"கவிதை, தானாகப் பிறப்பது. அது, கவிஞரின் வழியாக வருகிறதே தவிர கவிஞருக்குச் சொந்தமானது இல்லை" þ இப்படி ஒரு கூற்று சிலரிடம் இருக்கிறது. கவிஞரின் எண்ணங்கள், வாழ்வனுபவம், திறமை, புலமை, உணர்வுகள், தேவை ஆகியவற்றை ஒட்டியே அவரிடம் கவிதை பிறக்கிறது. மரபணுக்கள் வழியே பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய உணர்வுகள் கூட அவரிடம் வெளிப்படலாம். ஆனால் அவர் எழுதிய கவிதைக்கு அவரே முழுப் பொறுப்பாளராவார். தேவை ஏற்பட்டால் அதை மாற்றி எழுதவோ, திருத்தி எழுதவோ அவர் முன்வரவேண்டும்.

தமிழ்க் கவிதைகளில் ஊளைச் சதை என்ற நிலைமாறி தமிழ்க் கவிதையே ஓர் ஊளைச் சதையாக ஆகிவிடுமோ என்ற அச்சம் நிலவுகிறது. தேவைக்கு அதிகமாக இருக்கிற சொற்களை நாம் ஊளைச் சதை என்கிறோம். இன்று பெரும்பாலான கவிதைகள், 2 வரிகளில் சொல்லவேண்டியதை 10 வரிகளில் சொல்கின்றன. ஒரே சொல்லில் சொல்ல வேண்டியதை இரண்டு வரிகளில் சொல் கின்றன. மௌன இடைவெளிகளிலும் சொற்களே நிரம்பி வழிகின்றன.

இங்கு நண்பர்கள் சிலரின் கவிதை வரிகளை மேற்கோள் காட்ட விரும்புகிறேன். இந்த வரிகள் இவர்களின் ஒட்டுமொத்த கவிதைக்கான எடுத்துக்காட்டு அல்ல. இவர்கள் நல்ல வரிகளையும் வேறு இடங்களில் படைத்துள்ளார்கள் என்பதை நினைவூட்டுகிறேன்.

புதுகை மா.உதயகுமாரின் புது வருஷம் பிறந்தது என்ற கவிதை:

வறுமையை
ஒழித்திடப் பிறந்தது
புத்தாண்டு!
பெருமையை
வளர்த்திடப் பிறந்தது
புத்தாண்டு!
வாய்மையைப்
பெருக்கிடப் பிறந்தது
புத்தாண்டு!
தீமையைக்
கருக்கிடப் பிறந்தது
புத்தாண்டு!


இப்படியாக மேலும் 40 வரிகள் இதில் இடம் பெற்றுள்ளன. 1991-இல் ஏப்ரல் 14 அன்று திருச்சி வானொலி நிலையத்தில் ஒலிப்பரப்பான இது, 1996-இல் வெளியான இவரின் வறுமை தந்த வரிகள் என்ற முதல் கவிதை நூலில் இடம்பெற்றுள்ளது.

தொடக்கநிலைக் கவிஞருக்கு உரிய அடையாளங்களை இதில் காணலாம். வானொலி- தொலைக்காட்சிக் கவிதைகள், கவியரங்கக் கவிதைகள், மேடைக் கவிதைகள் ஆகியவற்றின் பொது இயல்பு, அவற்றின் நீர்த்துப்போன கவியம்சம் தான். இதனை ஈடுகட்டுவதற்காக உச்சரிப்பையும் "கம்பீரமாக''ப் படிப்பதையும் அவர்கள் நம்பியிருக்கிறார்கள்.

அடுத்து பாரி கபிலனின் களத்து மேடு (2001) தொகுப்பிலிருந்து ஒன்று.

சிகரெட் புகைத்து
அணைக்காமல்
விட்டெறிந்த
விரல்களுக்கு
நெருப்பிலிருந்து
தனித்துப் பறக்கும்
பொறி கண்டு
குப்பைகளும்
அதைச் சார்ந்த
குடில்களும்
அலறுகின்றன


இது, கவிதைக்குரிய தன்மை எதையும் பெறாமல் தீயணைப்புத் துறையின் அறிவிப்பைப் போல உள்ளது. ஆனாலும் ஒரு கவிதைத் தொகுப்புக்குள் இடம்பெற்றுவிட்டது.

அடுத்து, மல்லை மணிவாசகம் எழுதிய மாணிக்கப் பரல்கள் என்ற நூல் (1997). இதற்கு அப்போதைய கல்வி அமைச்சர் க. அன்பழகனார், அணிந்துரை அளித்துள்ளார். அதில், அவர் எடுத்துக்காட்டிய ஒன்று :

"மனித வாழ்க்கைக்கு 'இலக்கு' வேண்டும் என்பதனைக்

குறிக்கோள் இல்லாக் குவலய வாழ்க்கை
முறிந்து போகும் முடமாய் ஆகும்.
கொள்கை மாறாக் குறிக்கோள் வேண்டும்
கொள்கையில் வென்று குவலயம் ஆளலாம்


என்று பாடியுள்ளது இன்றைய இளைஞர்கட்கு வேண்டப்படும் இன்றியமையாத கருத்தென்பேன்".

இவர் கூறியுள்ளதன்படி இப்பாடலில் கருத்து மட்டுமே உள்ளது, கவிதை இல்லை.

அடுத்து, மு.வீரமுத்துவின் ஏவுகணைக் கவிதைகள் (1997) என்ற நூலில் கூட்டணி

நதிகளின் கூட்டணி கடல்தானே!
நரைகளின் கூட்டணி முதுமைதானே!
கோள்களின் கூட்டணி சூரியன்தானே!
காற்றின் கூட்டணி புயல்தானே!
அரசியல் கூட்டணி ஆட்சிதானே!
மனங்களின் கூட்டணி காதல்தானே!


இவை, மிகச் சாதாரண வரிகள். உரைநடை என்ற தகுதியைக்கூட பெற இயலாதவை. "ஓர் ஒன்று ஒன்று; ஓர் இரண்டு இரண்டு" என்ற வாய்பாடு போன்று எழுதப் பெற்றுள்ளது. ஆனால், அச்சேறிவிட்டது.

கடலில் ஒரு துளியைத்தான் நான் எடுத்துக் காட்டியுள்ளேன். இவைபோல் இலட்சக்கணக்கானவை, கவிதை என்ற பெயரில் தமிழில் புழங்குகின்றன. கவிதை எது என்று புரிந்துகொள்ளாமையும் சிறந்த கவிதைகளை வாசிக்காமையும் முறையான பயிற்சின்மையும் இத்தகைய கவிதைகள் பெருகக் காரணம்.

இவற்றுள் பல, நூலகங்களில் இடம் பிடித்து விடுகின்றன. "கவிதை" என்ற அடுக்கில் இவை அனைத்தும் இருக்கும்போது நல்ல கவிதை நூலைத் தேர்ந்தெடுப்பதே மிகவும் சிரமமாகிவிடுகிறது.

மிக வெளிப்படையாகத் "தாம் கவிதைகள் இல்லை" என அறிவித்துக்கொண்டவற்றைக் கண்டோம். அறிவிப்புகள், முழக்கங்கள் போதனைகள், சாடல்கள், புலம்பல்கள்... எனப் பலவும் கவிதையிலிருந்து முற்றிலும் அந்நியப் பட்டவை. ஒரு வகையில் இவை எளிமை யானவை; வசதியானவை. தன் கருத்து þ இயங்குதளம் ஆகியவற்றை வெளிப்படுத் துவதில் இவர்களுக்குத் தயக்கங்கள் இல்லை.

ஆனால், பூடக அம்சத்தோடும் திருகிய சொற்களோடும் வருகிற நவீன கவிதைகள் பல, அடிப்படை நேர்மை இல்லாதவை. "புரியாத கவிதைகள்" எனக் கண்டனம் பெறுகிறவை, அவை. கவிதைகளைப் பூட்டுவது தவறில்லை, ஆனால் சாவிகளையும் அங்கேயே வைக்க வேண்டும் என்பதே நமது கோரிக்கை.

நவீன கவிதைகளில் தன்னிரக்கமும் இயலாமையும் எதிர்மறை உணர்வுகளும் அதிகமாகப் பதிவாகி வருகின்றன. எளிய சொற்களைப் பயன்படுத்தினாலும்கூட வாக்கிய அமைப்புகளும் வகையுளிகளும் கவிதையைச் சிக்கலாக்கி விடுகின்றன. நிறுத்தற் குறிகளோ, மேற்கோள் குறிகளோ, இடைவெளிகளோ இல்லாமல், நினைத்த இடத்தில் எல்லாம் வளைத்து ஒடித்து எழுதுவது, தவறான போக்கு.

தமிழ்மணவாளனின் அலமாரியில் ஓர் இராஜகிரீடம் தொகுப்பில் இடம்பெற்றுள்ள அகம் என்ற கவிதை இது.

உட்சேரும் தவிர்த்த லரிதாகும்
அழுத்தும் உள்ளுக்குள் கனமாகும்
காலத்தில் சுமையாகும் பின்
வலிக்கும் மருந்தின்றி இறுகும்
புலனாகும் நாய் வாலாட்டாது
குரைக்கும் விமானம் மேலெழும்பாமலே
களம் ஓடும் தகவலறிந்து கம்ப்யூட்டர்
கட்டுப் பாடிழக்கும் கட்டளை
ஏற்க மறுக்கும் யதார்த்தச்
செயல் விலக இயல்பு தடைபடும்
எதுவென அறிதலியலாது ஏதோ
வாகும் வெளிச்செல்ல எத்தனிக்க
இடமின்றித் தடுமாறும் குழப்பம்
ஊடாடும் எனினும் வழியின்றித்
தெளிவு உறங்கும் இடம்
வாய்த்ததும் புறம்செல்லும்
பாறைப் பனி உருகும் நீராகும்
சிலு சிலுப்பில் பூப்பூக்கும்
சுதந்திரமாய்


வாசிப்பை எளிமைப்படுத்தும் எந்தச் சிறு உதவியையும் கவிஞர், இங்கு செய்யவில்லை. அத்துடன் முற்றுப்புள்ளி, அரைப்புள்ளிகளைக் கூட பயன்படுத்தாமல் வாசகருக்குக் குழப்பத் தையும் உண்டாக்குகிறார்.

அடுத்து, லாவண்யா எழுதிய இன்னும் வரவில்லை உன் நத்தை ரயில் என்ற தொகுப்பில், என்ன செய்யலாம்? என்றொரு கவிதை: அது,

எஞ்சியதெனக்கென் தந்தையிடமிருந்து
புராதன நினைவுச்சின்னமாயொரு வீடு
.

என்று தொடங்குகிறது "எஞ்சியதெனக்கென்", "நினைவுச்சின்னமாயொரு" என்பது போல் நூலில் பல இடங்களிலும் இரண்டு-மூன்று சொற்களைச் சேர்த்துச் சேர்த்து எழுதியுள்ளார். இது வாசிப்பிற்கு இடையூறு செய்வதாய் உள்ளது.

அடுத்து, கவிதையிலிருந்து எந்தவொரு சொல்லையும் உருவ முடியாதபடி கச்சிதமாக இருக்கவேண்டும். என்பதாகும், எனப்படும், எனவே, அதனால், நான் சொல்ல வருவது... போன்ற விவரிப்புத் தன்மையுடைய சொற்கள் கவிதையில் இடம்பெறக்கூடாது. கவிதை, சுண்டக் காய்ச்சிய பாலாக இருக்கவேண்டும், தேநீர்க் கடையில் கிடைக்கும் பாலாய் இருக்கக்கூடாது.

ஆசு எழுதிய என்றொரு மௌனம் (1999) நூலில், பசியுடன் சில வினாக்கள் என்ற கவிதை இப்படித் தொடங்குகிறது:

பசியுடன் படுத்துக்கொள்வோம்
என அழுகுரலிடும் அன்பானவளே
கரையான்கன் அரித்து சேதப்படுத்திய
பழைய புல்லாங்குழலின் சுரம் பாடுமோ
நம் துயரம்.


இதில் "கரையான்கள் அரித்து சேதப்படுத்திய பழைய" என்பதற்குப் பதில் "கரையான்கள் அரித்த புல்லாங்குழலின்" என இருந்தாலே போதும். நமக்குச் செய்தி, விளங்கிவிடுகிறது.

பழநிபாரதியின் காதலின் பின்கதவு (2001) என்ற நூலில் யாருக்கும் தெரியாதவள் என்ற கவிதை:

உடைந்து கிடந்தன
வளையல் துண்டுகள்
உதிர்ந்து கிடந்தன
மல்லிகைப் பூக்கள்
புகைந்துகொண்டிருந்தது
சிகரெட் துண்டு
கிழிந்து கிடந்தது
ரவிக்கை
காவல் நிலையத்திற்குப் பின்னால்
ஆணுறைகள்
கடைவீதியில்
வளையல்
பூ
ரவிக்கை என்று
வந்துபோனார்கள்
நிறையப் பெண்கள்
எந்தப் பெண்ணுக்கும்
தெரியவில்லை
அந்தப் பெண்ணைப் பற்றி


இதில் "காவல் நிலையத்திற்குப் பின்னால் ஆணுறைகள்" என்ற இரு வரிகளில் நிறைய செய்திகள் அடங்கியுள்ளன. மேலும் தேவையெனில்

வளையல் துண்டுகள்,
உதிர்ந்த மல்லிகை,
புகையும் சிகரெட்
கிழிந்த ரவிக்கை
காவல் நிலையத்திற்குப் பின்னால்
ஆணுறைகள்


எனச் சுருக்கலாம். குறைந்தபட்சம் நான்கு வரிகளை மிச்சப்படுத்தலாம்.

அடுத்து, சொற்களைப் பொருத்தமாகக் கையாளுவது குறித்துப் பார்ப்போம். வரலாற்று நாவலாசிரியருக்கு உள்ள விழிப்புணர்வு, நம் கவிஞர்களுக்கு இருக்கவேண்டும்.
வட்டார வழக்குகளோ, தொழிற் பெயர்களோ, திசைச் சொற்களோ, பல்வேறு பருவங்கள், பழக்க-வழக்கங்கள் சார்ந்த சொற்களோ - அவற்றை முரண்களற்றுப் பொருத்தமாகக் கையாளவேண்டும்.

மாலதி மைத்ரியின் நீரின்றி அமையாது உலகு (2003) நூலில் அறுந்த வால் என்ற கவிதை,

எனது கனவில் சிறுபூச்சியாய்
சுவரில் ஊர்ந்துகொண்டிருக்கிறாய் நீ
வாய்பிளந்து உன்னை விழுங்க வருகிறேன்
அசைவின் அதிர்வில் சுதாரித்து
அறையளவு புடைத்தெழுந்து
என்னைக் கால்களால் கவ்வியிழுக்கிறாய்


எனத் தொடர்கிறது கவிதை. பொதுவாக வாயால் பற்றுவதையே 'கவ்வுதல்' என்போம். கைகால்களால் 'பிடித்து' இழுக்கலாம். 'கவ்வி' இழுக்க முடியாது.

பச்சையப்பன் கல்லூரி மாணவர் ஒருவர், கடலைத் தாண்டும் ஓடங்கள் எனத் தன் கவிதைத் தொகுப்புக்குத் தலைப்பிட்டிருந்தார். ஓடங்களால் கடக்கத்தான் முடியும், தாண்ட முடியாது, என அது குறித்து விமர்சித்திருக்கிறேன்.

ஒரு பொருள் குறித்த பல சொற்கள், தமிழில் உள்ளன. சிரிப்பு, புன்னகை, முறுவல், நகைப்பு, இளிப்பு எனப் பல சொற்கள் முன் நிற்கும்போது கவிஞர்தான் தமக்கு ஏற்ற சொல்லைத் தேர்ந்தெடுக்கவேண்டும்.

காடு, கானகம் என்ற சொற்களுக்குப் பொருள் ஒன்றாயினும் காடு þ முழுவதும் வல்லினச் சொல். கானகத்திலோ மெல்லினத் தின் ஆட்சி இருக்கிறது. கோபத்துடன் சொல்லும் போது "காட்டான்" என்றும் பாராட்டிச் சொல்லும்போது "கானக மனிதன்" என்றும் சொல்கிறோம் இல்லையா?

இதுபோலவே தமிழின் இலட்சக் கணக்கான சொற்கள், கவிஞருக்கு முன் இருக்கும்போது, அவர், தமது கவிதைக்கு மிகப் பொருத்தமான சொல்லையே தேர்ந்தெடுக்க வேண்டும். சிற்பி, தன் சிற்பத்திற்கு அணுவணு வாக அழகேற்றுவதுபோல் கவிதைக்கு மெருகேற்ற வேண்டும்.

தமிழ்க் கவிஞர்கள், ஒவ்வொரு சொல்லுக்கும் மாற்றுச் சொற்கள் குறித்து விரிவாக அறிந்திருக்க வேண்டும். நானறிந்த பலர், அதிக வடசொற்களைக் கலக்கிறார்கள். வடசொற்களின் மெல்லின ஓசையில் அவர்களுக்கு ஓர் ஈர்ப்பு இருப்பதாகத் தெரிகிறது. அத்தகைய சொற்களை, முயன்றால், தமிழிலேயே அவர்களால் பெற முடியும்.

கவிதையின் அளவு குறித்து, கவிஞர்கள் மிகுந்த விழிப்புடன் இருக்கவேண்டும். 32 வரிகள், 24 வரிகள் 16 வரிகளுக்கு மிகாமல் கவிதை வாசிக்குமாறு பலர் வலியுறுத்துவதன் காரணம் இதுவே. எவ்வளவு அதிகமாக எழுதுகிறோம் என்பதைவிட எவ்வாறு எழுதுகிறோம் என்பதே முக்கியமானது.

நீள் கவிதைகள் தமிழில் வெற்றிபெற இயலவில்லை. குறுங்கவிதைகளே இங்கு அதிகச் செல்வாக்குடன் உள்ளன. பாரதியின் குயில் பாட்டை விட அவரின் அக்கினிக் குஞ்சு, மகத்தான வெற்றி பெற்றுள்ளது. எனவே, தமக்குள்ளேயே சுய வரையறைகளுடன் கவிஞர்கள் இயங்குவது நல்லது.

வீதியில் நடக்கும்போது திடீரெனக் கிடைக்கும் ஒரு சில்லரைக் காசைப்போல், நமக்குத் திடீரென ஒரு சொல்லோ, ஒரு வரியோ கிடைக்கும். அதன் தூண்டுதலில் நாம் ஒரு முழுக் கவிதையை உருவாக்க வேண்டும். அது, எல்லோர்க்குமான கவிதையாக, குறைகளின்றி இலக்கணப் பிழைகள் இல்லாமல் அமைவது இன்றியமையாதது.

பலர், ஒற்றுப் பிழைகள், சந்திப் பிழைகள், ஒருமைþபன்மைப் பிழைகள் புணர்ச்சிப் பிழைகள்... என ஏராளமான பிழைகளோடு எழுதி வருகிறார்கள். ஓட்டையுள்ள பலூனில் காற்று தங்காது.

நாம் நமது கவிதையை ஆளவேண்டும். அப்போதுதான் நம் கவிதை, உலகை ஆளும்.



(முரண்களரி அமைப்பின் சார்பில் சென்னை, அண்ணாசாலை, தேவநேயப் பாவாணர் மைய நூலகத்தின் சிற்றரங்கில் 4.7.2004 அன்று மாலை வாசிக்கப்பெற்றது.)

No comments: