Friday, April 16, 2004

கனிமொழி

கவிதையின் அளவு என்ன? பாத்துளி முதல் பார காவியம் வரை தமிழில் படைக்கப்பட்டுள்ளன. இரண்டடியில் கவிபாடி, திருவள்ளுவர் ஒரு சிறந்த எடுத்துக்காட்டாய் விளங்குகிறார். குறுந்தொகையில் எட்டு வரிகளை ஒட்டியே பாடல்கள் அமைந்தன. சங்கப் பாடல்கள், மிகுந்த சொற்சிக்கனம் உடையவை. கவிதையல்லாவிடினும் இரண்டு -மூன்று சொற்களில் அமைந்துள்ள ஆத்திசூடியையும் நாம் கூர்ந்து நோக்கவேண்டும். 'நறுக்கென்று நாலே வார்த்தையில் சொல்' என முன்னோர் சொல்லுவர். 'கவிதை மின்னலுடைத்தாகுக' என்றான் பாரதி. சுருங்கச் சொல்லி விளங்கவைக்கும் மரபு நமக்குண்டு.

ஆனால், பத்தாயிரத்திற்கும் மேலான பாடல்களைக் கொண்ட கம்பராமாயணமும் இங்கு கொண்டாடப் பெறுகிறது. காவியங்களில் ஆயிரம் பாடல்கள் என்பது, சர்வ சாதாரணம். இம்மென்றால் எழுநூறும் எண்ணூறும் அம்மென்றால் ஆயிரமுமாய்ப் பாடித் தள்ளியவர்கள், பலர். காலம் முழுதும் இதே வேலையாய்ச் சொற்சிலம்பம் ஆடினால் எழுத்தாணி கூர்மழுங்கி, ஏடு பிதுங்குவது இயல்புதானே! இக்காலத்திலும் பலர் காவியங்கள் படைக்க முயலுகிறார்கள். இன்று கவிஞர்கள், காவியம் படைப்பதன் நோக்கங்களுள் ஒன்று, அதிகப் பக்கங்களை ஓட்ட முடியும் என்பது. ஏற்கெனவே உலவும் கதையை எடுத்துக்கொண்டு படைத்த காவியங்கள், அன்றும் இன்றும் நிறைய உண்டு. கவிதை நடையில் கதையைச் சொல்லும் இம்முயற்சிகள் பலவற்றில் கதையம்சமே அதிகம். பாலில் நீரைக் கலந்துவிட்டு இதுவும் பால்தான் எனச் சாதிக்கும் தேநீர்க்கடைக்காரரை நமக்குத் தெரியாதா என்ன?

பார்வையாளர் இருக்கைகளில் இருக்கவேண்டியவர்கள் எல்லோரும் கால்பந்து மைதானத்தினுள் இறங்கி, ஆட்டக்காரர்களை அசையவிடாமல் செய்தாலோ, அல்லது மைதானத்திலிருந்து விரட்டிவிட்டாலோ, ஆட்டம் எப்படி இருக்கும்? தமிழ்க் கவிதைப் படைப்பு, இப்போது இந்த ஆபத்துக்கு ஆளாகியிருக்கிறது. அச்சுப் பரப்பு முழுவதையும் எழுத்துகளால் நிரப்புவதும், தேவையற்ற சொற்களால் நிரப்புவதும் பெருகிவரும் காலம், இது.

மரபுக் கவிதைகள் பல நேரங்களில், கருப்பொருளைத் தீர்மானிக்கும் முன்பே வடிவத்தைத் தீர்மானித்து விடுகின்றன. கட்டுப்பாடில்லாமல் சொற்களை வாரி இறைக்கும் கெட்ட பழக்கம், தமிழில் அதிகமுள்ளது. இதனால்தான் கவியரங்கம், கவிதைப் போட்டி போன்றவற்றை நடத்துவோர், 16, 24, 32 என வரிகளைக் குறிப்பிட்டு கவிதை, அதற்குள் அமையவேண்டுமென நிபந்தனை விதிக்கின்றனர். உரைநடையில் 10 வரிகளில் சொல்வதைக் கவிதையில் ஒரு வரியில் சொல்லலாம். பாலைச் சுண்டக் காய்ச்சுவதுபோல சொற்களைச் சுருக்கினால்தான் கவிதை மெருகேறும்.

மேடை, வானொலி, தொலைக்காட்சிக் கவியரங்குகளில் 10 நிமிட நேரம் கொடுத்தால் நீட்டி முழக்கிக் கதைபேசும் காட்சிகள்தான் அரங்கேறும். மூன்று நிமிடங்களில் முடிக்கச் சொன்னால் கவிதை அம்மட்டோடு பிழைப்பதற்கு வாய்ப்புண்டு. புத்தகம், இதழ், மேடை, பிற ஊடகங்கள் அனைத்திலும் இப்படித் திரும்பும் இடமெங்கும் ஊளைச் சதையோடு தமிழ்க்கவிதை காட்சியளிக்கிறது. நல்லவேளையாக, ஹைகூ வடிவம் வந்தது. வெறும் தண்ணீரே இதில் பால் என்ற பெயரில் வந்தாலும் எல்லாம் மூன்று வரிகளில் முடிவதால், பரவாயில்லை என ஆசுவாசப்படுத்திக்கொள்கிறோம். குறைவான வரி எல்லை உடைய லிமரிக், லிமரைகூ போன்ற இறக்குமதி வடிவங்களும் தோன்றியிருப்பது, ஒரு நல்ல அறிகுறி.

இப்படி வடிவங்களில் சிக்கிக்கொள்ளாமல் குறைவான சொற்களில் கவி படைக்கும் சிலரும் இப்போது வளர்ந்துள்ளனர். அவர்களுள் ஒருவர், கனிமொழி.




எத்தனை முறை விலக்கினாலும்

திரும்பத் திரும்பப் புரண்டு

மேலே கால்தூக்கிப் போடும்

குழந்தையாய் நினைவுகள்


-மொத்தமே நான்கே வரிகள். அருமையான உவமை. கச்சிதமாய் அமைந்துள்ளது. மேலும் சில துளிப்பாக்களைப் பாருங்கள்.



அந்த

அயோக்கிய ஜோசியன்

என் சிறகுகளை

முறித்துப் போடாதவரை

நானும் பகுத்தறிவுவாதிதான்!



*


தழும்புகள் உள்ளன

தீயென்றும் தெரிகிறது

ஆனாலும்

இன்னும் பூக்களைச் சொரிந்துகொண்டுதான்

இருக்கிறது

மரம்



*


வானம் வசப்பட வேண்டாம்

எனக்குப் பழக்கமானது

பூமி மட்டுமே.



*


தோல் தேய்ந்து

தொலைந்து போகும் வரை

கழுவுகிறேன் சபைக்கு சரிப்படாத

என் கருப்பு நிறத்தை.



*


கதவுகள் மூடியே இருக்கட்டும்

அஸ்திவாரங்கள் ஆடிக்கொண்டிருந்தாலும்

தென்றலையாவது தடுக்கலாம்.



*


என் காதலில்

பெருமைப்பட ஒன்றுமில்லை.

சுவாசிப்பதைப் பற்றிச்

சிலாகித்துச் சொல்ல

என்ன இருக்கிறது?



*


எந்நாடு போனாலும்

தென்னாடு உடைய சிவனுக்கு

மாதவிலக்குள்ள பெண்கள்

மட்டும் ஆவதே இல்லை.



- இங்கு எடுத்துக்காட்டப்படும் ஒவ்வொன்றிலும் உண்மை, ஆழ்ந்த அனுபவம், சமூக விமர்சனம், வித்தியாசமான அணுகுமுறை போன்றவை இணைந்து கவிதை வடிவம் பெற்றுள்ளன.



ஆனால், 'கவிமொழியைத் தீவிரமாகக் கைக்கொள்ளாமல் மூன்று வரித் துணுக்குகளாகவே உங்கள் உணர்வுகளை வெளிப்படுத்துவதேன்?' என்ற கேள்வியைக் கனிமொழி முன் வைத்தார்கள். அதற்கு, 'உணர்வதுதானே கவிதையாக முடியும். வரித்துணுக்குகள் என்றால் அந்த விஷயத்தைப் பற்றிச் சொல்ல என்னிடம் அதற்கு மேல் ஒன்றும் இல்லாதிருக்கலாம். சொல்ல நினைத்ததைச் சொல்லி முடித்தபின் ஏன் வடிவத்தை வளர்த்திக்கொண்டு போகவேண்டும்?' என்று பதில் அளித்துள்ளார்.



'எந்தத் தலைப்பானாலும் சரி, இந்தா பிடி எட்டு எண்சீர் விருத்தங்கள்' என்கிற ஆசு கவிகள் மத்தியில் 'அதைப் பற்றிச் சொல்ல என்னிடம் வேறு ஒன்றும் இல்லை' எனச் சொல்வதற்குத் துணிச்சல் வேண்டும்.



கனிமொழி, உண்மையைப் பேசுகிறார் என்பதற்கு இவர் கவிகளில் நிறைய சான்றுகள் கிடைக்கின்றன.




தன் இளம் இருட்டுச் சுவர்களுக்குள்

என்னைப் பத்திரமாய்ச் சீராட்டிய வீடு,

அம்மாவின் பழைய சேலையைப் போல

மெத்தென்று மனதைத் தழுவும்



-என அநேகக் கவிஞர்களைப் போல் பழைய நினைவுகளில் ஆழ்கிறார், கனிமொழி. நிறம், கற்பு, சுதந்திரம், ஆணாதிக்கம்....எனப் பெண்கள் பலரும் கையாண்ட கருப்பொருட்களை இவரும் விட்டுவைக்கவில்லை.



கனிமொழியின் தலைப்பிடப்படாத ஒரு கவிதையின் முழு வடிவத்தைப் பார்ப்போம்.




மேஜையின் விளிம்பில்

வைக்கப்பட்டிருக்கும்

மெல்லிய கண்ணாடிக்

குவளையைப் போல் உள்ளது

நம்பிக்கை.




விபரீதமான ஒரு தருணத்தை

எதிர்நோக்கிக் காத்திருக்கிறது

திரவம்.




எங்கு வைத்தாலும்

நகர்ந்து விளிம்புக்கு வந்துவிடுகிறது

குவளை.




அவசரத்தில் எறியப்படும்

வார்த்தைகளையும்

நழுவிவிழும் உண்மைகளையும்

அறியப்படாதுபோகும் ஸ்பரிசங்களையும்

எதிர்நோக்கிச்

சிதறிப்போதலை வேண்டியபடி.




ஆனால்

என்றுமே

காலியாய் இருப்பதில்லை மேசை.



- இது, சிறப்பாக இருந்தாலும் கவிதையின் இரண்டாவது வரியும் இரண்டாம் பத்தியும் கடைசிப் பத்தியும் தேவையற்றவை என்பது, என் கருத்து. அவை இல்லாவிட்டாலும் கவிதை, இதே உணர்வை அளிக்கின்றது.



கனிமொழி, கருவறை வாசனை, அகத்திணை என்ற இரு கவிதைத் தொகுப்புகளை அளித்துள்ளார். முன்னாள் முதல்வரின் மகள். ஆயினும் மிக எளிமையோடும் எளியவற்றின் மீது அன்போடும் மென்மையான உணர்வுகளோடும் விளங்குகிறார். வாசிக்கத் தூண்டும் எளிய வரிகளும் மெல்லிய சோகமும் தவழும் இவர் கவிதைகள், கவிதையை நாடி வருவோரை ஏமாற்றுவதில்லை.




என்ன சொல்லி என்ன

என்ன எழுதி என்ன

நான் சொல்ல வருவதைத் தவிர

எல்லாம் புரிகிறது உனக்கு

-என்கிறார், ஒரு கவிதையில்.




நீங்கள் சொல்ல வருவது புரிகிறது, கனிமொழி.


அமுதசுரபி, டிசம்பர் 2004

No comments: