Wednesday, April 14, 2004

செளந்தரா கைலாசம்

கவிதையும் இசையும் மிகவும் ஒத்திசைவுடையவை. நாம் சொல்லவரும் செய்தியை / உணர்வை, இசை கலந்து சொல்லும்போது செய்தி, அசாத்திய வலிமை பெறுகிறது. எனவேதான் இசை அடிப்படையிலான மரபுக்கவிதை, தனிச் செல்வாக்கோடு திகழ்கிறது. கணிதக் கட்டுமானம் உடைய இது, நினைவிலிறுத்த ஏற்றதாகப் பன்னெடுங்காலமாய் மதிக்கப்பெறுகிறது. கோயில்களில் 'சாமி' வந்து ஆடுவோர், தம்மையறியாது தமக்குத் தொடர்பில்லாதவற்றைச் சொல்வதுபோல் மரபுக்கவிதை, எழுதுவோரே எதிர்பார்க்காத வரிகளைச் சிலநேரம் தந்துவிடும். சங்க இலக்கியம் முதல் 19ஆம் நூற்றாண்டு வரை தமிழில் தோன்றிய அனைத்தும் யாப்பினால் கட்டப்பெற்றவை. தமிழ் மக்களின் உளவியலையும் சிந்தனைப் போக்கையும் கூட எதுகை - மோனைகளும் சந்தமுமே தீர்மானித்தன; தீர்மானிக்கின்றன எனில் மிகையன்று. தமிழக நாட்டுப் பாடல்களும் பழமொழிகளும் இதற்குச் சிறந்த எடுத்துக்காட்டுகள்.

இந்தப் பின்னணியின் பயனாய், தமிழில் மரபுக் கவிதைகள் எண்ணற்றுப் பெருகின. மரபுக் கவிஞர்களும் அவ்வண்ணமே பெருகினர். இவர்களுள் பெரும்பாலோர் , ஆண்கள். கடுமையாகத் தேடினால், ஏதோ ஒரு விழுக்காட்டினர் பெண்கள் தேறுவர். பெயரளவுக்குத்தான் இவர்கள் பெண்கள். எப்பொருளையும் ஆண்களின் பார்வையிலேயே இவர்கள் பார்த்தனர். இந்த இலக்கியச் சிறுபான்மையினரின் இக்கால எடுத்துக்காட்டு, செளந்தரா கைலாசம்.



புலவோர்தரு புறமோதிய
பெருவீரமும் அரிதா?
பலகேடுகள் புரிவார்படை
பனியேசுடர்க் கதிர்நாம்!
அயலார்படை முயலாகிடத்
துகளாகிடக் கிளர்வாய்
புயலாய்எழும் புதல்வோர்தரும்
வனிதாமணிக் குலமே!


எனக் கிடுகிடு சந்தமானாலும்


ஆலே அமர்ந்தவிதை போலே வளர்ந்தநெடு
மாலே பயந்தஎழில் மானே வியந்தவிழி
யாலே அழைத்துஅரு ளாலே அணைத்து ஒளி
வேலே எடுத்துவினை வேரோ டறுத்துவரும்
சேயே கொடுத்தபெருந் தேவீ திருப்புவனத்
தாயே வணங்கவருள் தா!

என அலையடிப்பது போன்ற சந்தமானாலும்

நெஞ்சை விட்டே ஆசை என்ற
நெருப்பு நீங்கவும் - இந்த
நீணித்தில் கொடுமை மாறி
அமைதி ஓங்கவும்
அஞ்சுகின்ற நிலைமை இங்கே
ஏற்படாமலும் - பொல்லா
ஆணவத்துப் பேயின் ஆட்சிக்
காட்ப டாமலும்
எனத் துள்ளல் சந்தமானாலும் அம்மையார் தம் மொழியாளுமையைச் சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளார்.

செளந்தரா கைலாசம் கவிதைகள், இறைவன் சோலை, உள்ளத்தில் நிறைந்த உத்தமர்கள், இதயப் பூவின் இதழ்கள், கவிதைப் பூம்பொழில், நெஞ்சில் விளைந்த நித்திலங்கள், சிந்தை வரைந்த சித்திரங்கள் ஆகிய பாட்டுத் தொகுப்புகளைப் படைத்துள்ளார். இவை தவிர கட்டுரை, சிறுகதை நூல்களையும் படைத்துள்ளார்.

திருச்சி மாவட்டம், செட்டிபாளையம் எனும் சிற்றூரில் 28-2-1927 அன்று தேசிய பின்னணி உடைய குடும்பத்தில் பிறந்தார். 14 வயதில் திருமணம் ஆனவர். பக்தி இலக்கியங்களில் ஆழ்ந்தும் தோய்ந்தும் தாமே பாடல் இயற்றத் தொடங்கினார். தமிழறிஞர்கள் உள்பட பலரும் இவர் முயற்சிகளைப் பாராட்டி ஊக்கமூட்டியுள்ளனர். சிறந்த சொற்பொழிவாளராகவும் திகழும் இவர், சொற்பந்தல் கட்டிப் பல்லோரையும் ஈர்த்துள்ளார்.

உச்சநீதிமன்ற நீதிபதியாக விளங்கிய கைலாசத்தின் மனைவி ; இன்றைய இந்திய நிதியமைச்சர் ப. சிதம்பரத்தின் மாமியார்... என மிகச் செல்வாக்கு வாய்ந்த குடும்பத்தைச் சேர்ந்தவர். எனினும் அமைதியும் பணிவும் பல நற்குணங்களும் கொண்டவர்.

வெண்பா, விருத்தம், கட்டளைக் கலித்துறை, அகவல், பல்வேறு சந்தங்கள் எனப் பற்பல செய்யுள் வடிவங்களையும் ஆற்றோட்டமாக, எதுகையும் மோனையும் கொஞ்சி விளையாடப் பொழிந்துள்ளார், இவர். 50 ஆண்டுகளுக்கும் மேலாகத் தமிழ் இலக்கியத்துடன் தொடர்புள்ள இவர், இயல்பாகவே அதிக எதிர்பார்ப்பைத் தூண்டினார்.

உணர்வுகளின் ஓவியமே
உயர்கவிதை! நெஞ்சத்தின்
இணைவுகளின் சாசனமே
இயற்கவிதை! எழிற் கவிதை!

- என்பது உள்பட கவிதை பிறப்பது எப்படி? என்ற தலைப்பில் பக்கம் பக்கமாக எழுதித் தள்ளியிருக்கிறார், அம்மையார்.

ஆயினும் பெரும்பாலும் கடவுளர் துதியாகவும் மனிதரைப் போற்றுவதாகவும் இவர் பாடல்கள் அமைந்துள்ளன. ஒருவரின் பெற்றோர், ஊர், அவருடைய சிறப்புகள் அனைத்தையும் செய்யுள் வடிவில் அடுக்கியுள்ளார். எதுகை மோனைகளையும் சந்தத்தையும் உருவிவிட்டால் அவை, கவிதை மதிப்பை அன்று ; உரைநடையின் மதிப்பைக்கூட பெறா. இறைத்துதியில் வருணனையும் தலபுராணமும் தாயே நீயே துணை என்பது போன்ற மரபார்ந்த வழிபாடும் வேண்டுதல்களுமே மிகுந்துள்ளன.

வண்ணத் தாமரைப் பூவிலிருப்பாள்!
வதனப் புன்னகை ஒளியை விரிப்பாள்!
- என்ற வரிகள்,
வெள்ளைத் தாமரைப் பூவிலிருப்பாள்!
வீணை செய்யும் ஒலியில் இருப்பாள்!

- என்ற பாரதியின் வரிகளை ஒற்றியுள்ளன.

இதந்தரு வகையில் இந்த
இனியபாரதநாட்டிற்குச்
சுதந்திரம் வாங்கித் தந்த
தூயவர் காந்தி தன்னை
- இங்கு பாரதியின் எதுகைகளை இவர் கையாண்டுள்ளார். இவற்றைத் தாக்கம் என்று சாதாரணமாகச் சொல்லிவிட இயலாது.


தன்னரும் சிறப்பை நூலில் தருகிறார் மாப்போ சியார்!
- இந்த அடியில் ம.பொ.சி. என்ற பெயர், மாப்போ சியார் என வந்துள்ளது.


ஊ.வே.சா. ஐயரைத்தன் உயிராக நினைப்பவனை,
கோவே! என் நெஞ்சமர்ந்த குருவே என் றழைப்பவனை
- என்ற அடிகளில் உ.வே.சா. என்பது, ஊ.வே.சா. ஆகிவிட்டது.


பூவையர் பெருமை புகல்திரு. வீ.க.!
- இங்கு திரு.வி.க., திரு.வீ.க. ஆகிவிட்டது. வேறோர் இடத்தில்


தழைத்திடும் திரு.வி. காவின் தவத்திரு வடிவும்
- என்கிறார். திரு.வி.க., திரு.வி. கா ஆகிவிட்டார். இவை, நீட்டல் விகாரங்கள் எனச் சமாதானம் கூறவேண்டாம். பெயர்ச்சொல்லை மொழிக்குள் கையாளும் திறன் போதவில்லை என்பதே உண்மை.


விலையற்று மிளிர்கின்ற ஒளிமா ணிக்கம்!
விடுதலையைத் தரவந்த தெய்வத் தூது!
உலகத்தின் மூலையிலே துன்பம் மூண்டால்
உள்ளத்தின் நடுவிலிடி விழுந்தாற் போன்ற
நிலையுற்று மிகவாடி நெகிழும் நெஞ்சு!
நிலவிமிருள் தனைச்சாடும் மின்னல் கீற்று!


- எனப் பாரதி என்ற தலைப்பில் பாடிச் செல்கிறார். உள்ளத்தின் நடுவில் இடி விழுந்துபோல் என்ற மிக உக்கிரமான நிலையைக் காட்டிய பிறகு, மிகவாடி என்ற சொல் எதற்கு?


அருள்மண்டும் நெஞ்சினராய் ஆகாது போவோமேல்
இருள்மண்டும் சமுதாயம் இற்றுச் சிதறிவிழும்!
- இங்கு இருள்மண்டும் என்பது சரி ; அருள்மண்டும் என்ற சொல்லாட்சி சரிதானா?


கொஞ்சவய தென்றாலும் கொடிகட்டிப் பறக்கிறது!
தஞ்சமெனப் பலநாடு தாளில்வந்து கிடக்கிறது!
- என அமெரிக்காவைப் பாடுகிறார். பலநாடு கிடக்கிறது என்பதில் ஒருமை / பன்மைப் பிழை உள்ளது.


மனிதரைப் பாடமாட்டேன் என்ற கண்ணதாசனின் பாட்டிற்கு, மனிதரைப் பாடுவேன் என எதிர்ப்பாட்டுப் பாடியவர், அம்மையார். அந்தக் கண்ணதாசனைப் பற்றிப் பாடுகையில்,

....அஞ்சாது வென்றகவி அரசன்உன் புகழ்வாழ்க!
தும்மலிலும் கவிதைத் தொனியிருந்தே அரசாளும் !
.....

- என்கிறார். புகழ்வதற்கு ஓர் அளவில்லையா? தும்மலிலும் கவிதைத் தொனியா? இந்த உயர்வு நவிற்சியைக் கண்ணதாசன்கூட ஒப்புக்கொள்ள மாட்டார்.

இலங்கைச் சிறைவாழ்வால் ஏந்திழையை மாந்தரவர்
நலங்குறைய ஏதும் நவிலுவரோ என்பதனால்
தீக்குளிக்கச் செய்தபின்தான் ஸ்ரீராமன் சீதையினை
ஏற்கத் துணிந்தின்ப வாழ்க்கையிலே ஈடுபட்டான்!
எண்ணுங்கால் இராமபிரான் எப்பொழுதும் மானுடனாய்
மண்ணுலகில் வாழ்ந்திருந்த மாட்சி தெரிகிறது!
- என இராமனின் செயலை நியாயப்படுத்துகிறார். ஆண்களின் கண்வழியே இவர் பார்ப்பதற்கு இதுவே சான்று.

இராணனின் ஈஸ்வர மாலையைத் தமிழாக்கியுள்ளார் என மகிழ்ந்தபோது, வேறொரு பாடலில் வடமொழி மந்திரங்களை அப்படியே தமிழ்ச் சொற்களிடையே கலந்துள்ளார். வடசொற்களும் பெரும் எண்ணிக்கையில் விரவியுள்ளன.

டாமரி, டங்கா ரிணி, ணார்ணா
ஸ்தாண்வீ, தாட்சா யணீ,நாரீ,
தாமஸீ, தாத்ரீ, பார்வதி, பட்
காரிணி என்றே ஓதிடுவோம்.
- இரு தமிழ்ச் சொற்களுக்கு இடங்கொடுத்து விட்டாரே! என்னே தமிழ்ப்பற்று!
கவியரங்கங்கள், கவிதைகளுக்கு எதிரானவை என ஞானக்கூத்தன் முன்பொரு முறை கூறியிருந்தார். அதற்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டு அம்மையாருடைய வரிகள். காகித விலையேற்றத்திற்குக் காரணம் எனப் பலரை வலம்புரி ஜான் சாடுவதுண்டு. இவரை அந்தளவிற்கு மோசமாகச் சொல்ல நான் விரும்பவில்லை. வெறும் சொல்லடுக்காய் விளங்கும் இவரின் செய்யுள்களைச் சிறிய பதிப்பாசிரியப் பணிகூட இல்லாமல் அச்சேற்றியிருப்பது, தமிழுக்கும் கவிதைக்கும் நன்மை தரவில்லை. கவியரங்கத் தலைவர் வாழ்த்து, தன்னைக் கவிபாட அழைத்தமைக்கு நன்றி என்றெல்லாம் உள்ளவற்றை இவர், எந்த அடிப்படையில் கவிதையென நம்புகிறார்?


முன்னாளில் காபாவும் புத்லி பாயும்
முயன்றுசெய்த பெருந்தவமே மோகன் தாஸாய்ப்
பின்னாளில் பிறப்பெடுத்து வந்த தென்று
பேருலகம் அத்தனையும் பேசும் வண்ணம்...

- காந்தியைப் பற்றிய இவ்வரிகள் , மூன்றாம் வகுப்பு மாணவன், பேச்சுப் போட்டியில் மனப்பாடமாய் ஒப்பிக்கும் தோற்றத்தையே அளிக்கின்றன.


மோழை, வதிகின்ற போன்ற சொற்களைத் தம் கவிதையில் கையாண்டுள்ள அம்மையார், தமது புலமையைப் பறைசாற்ற விரும்பியுள்ளார். இந்த இடங்களில் எளிய சொற்களை இவர் பயன்படுத்தியிருக்க முடியும்.

ஏதாவது நல்ல வரி கிடைத்துவிடாதா என மிகவும் முயன்று தேடிப் பார்த்தேன். சொல் விளையாட்டாய்ப் பல அகப்பட்டன. அம்மையாருக்குச் செய்யுளுக்கும் கவிதைக்கும் உள்ள வேறுபாடு தெரியாதிருப்பது, வியப்பளிக்கிறது. இவருக்குக் கவியரசி என்ற பட்டமிருப்பதை, இவரின் எல்லா நூல்களின் பின் அட்டையின் வழி தெரிகிறது. இவருடைய சொற்பொழிவுகளுக்காகப் பெற்ற பட்டங்களைப் பற்றி இப்போது ஆயவில்லை. கவிதைக்காக இவர் பெற்ற பட்டம், தமிழ்நாட்டில் பட்டங்கள் மலிவானவை என்பதைக் காட்டுகின்றன.


உரிய காலத்தில் இவருக்குத் தக்க விதத்தில் கவிதையை அறிமுகப்படுத்தாமல், இவர் எழுதுவதே சரியென்று ஊக்குவித்த தமிழ் அறிஞர்களை நாம் கேள்விக்குட்படுத்த வேண்டும். பாராட்டுவது மட்டுமே ஊக்குவிப்பது என்ற எண்ணம் தவறானது.

உறங்குகின்ற சொற்களினை
ஒவ்வொன்றாய்த் தேர்ந்தெடுத்துத்
திறங்குவியச் சேர்த்துவிட்டால்
செழுங்கவிதை தோன்றாது
- எனப் பலவாறு கவிதைக்கு இலக்கணம் சொல்லி, 'அவை தம் கவிதைகளில் அமைந்துள்ளனவா என்று தீர்மானிக்க வேண்டியவர்கள் வாசகர்களாகிய நீங்கள்தாம்' எனத் தன் நூலொன்றின் முன்னுரையில் கூறியுள்ளார்.

மன்னிக்கவேண்டும் அம்மா!

நல்ல கவிதைக்குத் தாங்கள் இப்போதுகூட முயலலாமே!
அமுதசுரபி, அக்டோபர் 2004

No comments: