Tuesday, April 06, 2004

கவிதாயினி மாலதி மைத்ரி

கவிதையில் எத்தகைய சொற்கள் இடம் பெறலாம் என்ற கேள்வி, ஆதிகாலம் தொட்டு நம்முன் நிற்கிறது. அகத்துறைப் பாடல்களில் தலைவன்-தலைவி பெயர் சுட்டக் கூடாது என்ற மரபு, இன்றுவரை நீடிக்கிறது, ஆனால், கொச்சைச் சொற்களைப் பயன்படுத்தக் கூடாது என்ற நெறிமுறை கைவிடப்பெற்று விட்டது. வேற்று மொழிச் சொற்களைத் தவிர்க்கும் வழக்கம், தொலைந்தே போயிற்று. மங்கல வழக்கு, இடக்கரடக்கல் ஆகிய வற்றைப் பலர் பின்பற்றுவ தில்லை. புதுக்கவிதை தோன்றிய போது அது யாப்பிலிருந்து மட்டும் வெளியேற வில்லை; முந்தைய சிந்தனை, மரபு, வழக்கம், நெறி முறை பலவற்றி லிருந்தும் வெளியேறியது.

இந்த மாற்றத்தைத் தவறு என்று கூற இயலாது. இது, மாபெரும் சமூக மாற்றத்தின் ஓர் அறிகுறி. இந்தச் சமூக மாற்றத்தின் அடையாளமாக, நம் கண் முன் உலவும் சான்றாகத் திகழ்கிறார், மாலதி மைத்ரி (1968). 'சங்கராபரணி', 'நீரின்றி அமையாது உலகு' என்ற இவரது கவிதைத் தொகுப்புகள் இரண்டிலும் முதல் பக்கத்தில் தான் பிறந்த ஆண்டை பெரிய அளவு எண்களில் வெளியிட்டுள் ளார். வயதைச் சொல்வதற்குத் தயங்கும் பெண்களின் மனோ பாவத்தை இவர் முதல் நோக்கி லேயே உடைக்கிறார்.

தமிழ்ப் படைப்புலகைப் பொறுத்தவரை பாலுறுப்பு களின் பெயர்களைப் பயன் படுத்தியோர், மிகக் குறைவு. அப்படியே பயன்படுத்தினாலும் பெண்ணின் மார்பகங்களை. மட்டுமே பலரும் எழுதியுள்ளனர். இடையை வர்ணித்தாலும் அதற்குக் கீழே செல்ல எவரும் துணிந்ததில்ல. இப்போது துணிந்துள்ள சிலருள், ‘யோனி’ என்ற சொல்லை பல முறைகள் பயன்படுத்தியுள்ளவர், மாலதி மைத்ரி.

இது, அதிர்ச்சி மதிப் பீட்டுக்காக என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்தச் சொல், அதிர்ச்சி அளிக்கிறது என்பதே சமுதாயத்தின் பலவீனத்தைப் பறைசாற்றவில்லையா? இன்னும் எவ்வளவு காலத்துக்கு இவ்வாறு அதிர்ச்சி அடைவது?

கடந்த சில ஆண்டுகளாக எயிட்ஸ் விழிப்புணர்வு அமைப்புகள், ஒரு மாபெரும் சாதனையைப் படைத்துள்ளன. ஆணுறை, ஆணுறுப்பு, பெண்ணுறுப்பு, பால்வினை நோய்... போன்ற சொற்களைத் தொடர்ச்சியான பிரச்சாரத்தின் மூலம் புழக்கத்துக்கு அவை கொண்டுவந்துள்ளன. பள்ளி களில் பாலியல் கல்வி வழங்க முயற்சி தொடங்கப் பெற்றுள்ளது. இந்த நிலையில் ஒரு சொல்லைக் கண்டு மிரட்சி அடைவது, வளரும் சமுதாயத் திற்கு அழகில்லை.

எந்த ஒரு சொல்லும் உரிய இடத்தில் பொருத்தமாகக் கையாளப்பெற்றுள்ளதா என நாம் பரிசோதித்துக்கொள்ள லாம். பொருத்தமற்ற இடத்தில் திணிக்கப்பெற்றிருந்தால் கேள்வி எழுப்பலாம். அதில் நியாயம் உண்டு. அந்தச் சொல்லைப் பயன்படுத்துவதே தவறு என்பதில் நியாயமில்லை.

ஏதோ ஒரு பருவ மாற்றத்தில்
எனது அங்கங்கள் ஒவ்வொன்றும்
மிருகமாகவும் பறவையாகவும் மாறி என்னைவிட்டு விலகிச் செல்லத் தொடங்கின....

யோனி ஒரு பட்டாம் பூச்சியாக
மலைகளில் அலைவதைக் கண்டதாக
காட்டில் விறகு பொறுக்கச் சென்ற
பெண்கள் வந்து கூறக்கேட்டேன்

'விஸ்வரூபம்' என்ற இந்தக் கவிதையில் பூமியே ஒரு பெண்ணாக மலர்ந்திருக்கிறது. அதன் பல்வேறு அக-புற மாற்றங்கள் குறியீடுகளாகப் பதிவாகியுள்ளன.

ஔவையின் மகள் நான்
பல காலங்களையும் வெளிகளையும்
பலவித உடல்களினூடாகக் கடந்து சென்று கொண்டிருக்கும் ஔவையின்
மகள் நான்.

ஔவையின் யோனி விரிந்து
இரண்டாயிரமாண்டு கால வெளியையும் மொழி வெளியையும் உள்வாங்கி
என்னைப் பிதுக்கித்தள்ள
என் நகத்தாலேயே தொப்பூழ்க் கொடியைக் கிள்ளித் துண்டித்துவிட்டு
குருதியீரம் காயாமல் நடந்துபோகிறேன்.

இங்கும் 'யோனி' என்ற சொல், குறியீ டாகவே பயன்படுத்தப்பெற்றுள்ளது. இதற்குப் பதில் ‘கருப்பை’ என்ற சொல்லைக் கையாண்டிருக் கலாம் என்றாலும் சொல்லுகின்ற உணர்வின்- செய்தியின் வேகத்தைக் கூட்ட, இப்படி நேரடி யாகக் காட்சிப்படுத்தியுள்ளார்.

ஊரின் அனைத்து வீடுகளும்
நடப்பட்ட பெண்களென நிற்கின்றன
சாளரங்கள் கண்களாகவும் வாசல் யோனியாகவும்
யாரோ ஒரு ஆணிற்காக
ஆயுள் முழுவதும் காத்துக் கிடக்கின்றன
வயதுக்கேற்றபடித் தம் உறவுகளுக்காக....
காலத்தை ஆளும் பெண்கள் வீடாவதில்லை.

ஆண் எப்படி இருந்தாலும் பெண் எந்த எதிர்ப்பும் இல்லாமல் அவனைப் பாதுகாத்து வருகிறாள். இதை எதிர்ப்பதே இக்கவிதையின் அடிப்படையாக உள்ளது. எனினும் இதில் ஏராளமான முரண்களும் கேள்விகளும் குழப்பங் களும் நிறைந்துள்ளன. ‘வாசல் யோனியாக’ என்ற இரு சொற்களால் கவிதை, மிகச் சிக்கலாகி விட்டது. அவற்றிலிருந்து அலை அலையாக எழும் கேள்விகளுக்குக் கவிதைக்குள் விடை இல்லை.

பாலியல் சொற்களில் மரபை மீறியது போலவே இடக்கரடக்கலையும் இவர் பொருட் படுத்தவில்லை. ‘மலம் கழித்தல்’ எனச் சொல்லாமல். ‘வெளிக்குப் போதல்’, . ‘இரண்டுக்குப் போதல்’. எனச் சொல்வது முன்னோர் வழக்கு. ஆனால், மாலதி, இதை மீறியுள்ளார்.

'அத்தையுடன் ஆற்றுக்குக் காலையில்
மலம் கழிக்கப் போகையில்' என்றும்

‘ அரவமற்ற புற்றருகில்
தங்கையுடன் மலம் கழிக்க’ என்றும்

வெளிப் படையாக எழுதியுள்ளார். ‘காலைக் கடன்’ என்ற நல்ல சொல் இதற்கு இருக்கிறதே!

சொற்பயன் பாட்டில்-வெளிப்பாட்டில் சில குறைகள் இருப்பினும் மாலதி மைத்ரியின் கவித்துவம், பிரமாதமாக ஒளி வீசுகிறது; பிரமிக்க வைக்கிறது.

நீருக்கடியில் கிடக்கும் ஒவியம் போல்
அசைந்து கொண்டிருந்தது தூரத்தில் வீடு என்றும்

என் ஆன்மாவைப் போன்ற
கறுத்த கசந்த தேநீரைக் குடித்துக்
கொண்டிருக்கிறேன் என்றும்

மண்ணில் பதிந்த உடைந்த கண்ணாடியாகக்
கிடந்தது கோடை ஆறு என்றும்

தோல் பேரீச்சையாய் ஒடுங்கி என்றும்
வார்த்தைகள் உரசி
பற்றும் மொழிக்காடு என்றும்

நாய் தலைக்குள் சிக்கி
பானை தவிக்கிறது என்றும்

நதி, கலைந்த கருவெனப் பிசுபிசுத்துக் கிடக்க என்றும்

ஒளிப் பருந்து
உறக்கத்தைக் கோழிக்குஞ்சென
ல்விக்கொள்கிறது என்றும்

வரிசை தப்பிய எறும்பு ஒன்று....
தலைதூக்கிப் பார்த்து
என்னைப் போலவே சிரிக்கிறது
வாயிலிருந்து சிறு தானியத்தைத் தவறவிட்டு என்றும்

எதிரே கடல் அடர்நீலத்தில்
குழந்தையின் கையில் கிடைத்த
தண்ணீர்க் குவளையென
தளும்பிக் கொண்டிருக்கிறது என்றும்

ஒரு மீன் குஞ்சு
துள்ளி எழுந்து நழுவுகிறது
அந்தரத்தில் என்றும்

அற்புதமான கவிதைகளை மின்னல் தெறிப் புடன் படைத்துள்ளார்.

மாலதி மைத்ரியின் கவிதைகளில் இயற்கை, பேராட்சி செய்கிறது. தன்னை இயற்கையின் கூறுகளாக, தானே இயற்கையாக, பிரபஞ்சத்தின் செல்ல மகளாகத் தன்னை நினைக்கிறார். இவரின் உருவகங்களில் விரியும் பிரம்மாண்டம், சுவை மிகுந்த கவியாற்றலுடன் மிளிர்கின்றது.

புதுவையில் ஆடை வடிவமைப்பாளராகப் பணியாற்றும் இவர், சங்கராபரணி ஆற்றங்கரையில் பிறந்தவர். ‘கிரணம்’ பதிப்பகத்தின் பதிப்பாளர். பெண் விடுதலைக்குத் தொடர்ந்து குரலெழுப்பி வருகிறார்.

கவித்துவமான ஒரு வரி
மற்ற எல்லாவற்றையும் மறக்கடித்துவிடுகிறது
தெய்வம்போலத் திடீரென மழை கொட்டுகிறது

என்கிறார், மாலதி மைத்ரி.

இந்த மழைநீரை அவசியம் சேமிக்க வேண்டும்.
கவிதாயிணி மாலதி மைத்ரி

கவிதையில் எத்தகைய சொற்கள் இடம் பெறலாம் என்ற கேள்வி, ஆதிகாலம் தொட்டு நம்முன் நிற்கிறது. அகத்துறைப் பாடல்களில் தலைவன்-தலைவி பெயர் சுட்டக் கூடாது என்ற மரபு, இன்றுவரை நீடிக்கிறது, ஆனால், கொச்சைச் சொற்களைப் பயன்படுத்தக் கூடாது என்ற நெறிமுறை கைவிடப்பெற்று விட்டது. வேற்று மொழிச் சொற்களைத் தவிர்க்கும் வழக்கம், தொலைந்தே போயிற்று. மங்கல வழக்கு, இடக்கரடக்கல் ஆகிய வற்றைப் பலர் பின்பற்றுவ தில்லை. புதுக்கவிதை தோன்றிய போது அது யாப்பிலிருந்து மட்டும் வெளியேற வில்லை; முந்தைய சிந்தனை, மரபு, வழக்கம், நெறி முறை பலவற்றி லிருந்தும் வெளியேறியது.

இந்த மாற்றத்தைத் தவறு என்று கூற இயலாது. இது, மாபெரும் சமூக மாற்றத்தின் ஓர் அறிகுறி. இந்தச் சமூக மாற்றத்தின் அடையாளமாக, நம் கண் முன் உலவும் சான்றாகத் திகழ்கிறார், மாலதி மைத்ரி (1968). 'சங்கராபரணி', 'நீரின்றி அமையாது உலகு' என்ற இவரது கவிதைத் தொகுப்புகள் இரண்டிலும் முதல் பக்கத்தில் தான் பிறந்த ஆண்டை பெரிய அளவு எண்களில் வெளியிட்டுள் ளார். வயதைச் சொல்வதற்குத் தயங்கும் பெண்களின் மனோ பாவத்தை இவர் முதல் நோக்கி லேயே உடைக்கிறார்.

தமிழ்ப் படைப்புலகைப் பொறுத்தவரை பாலுறுப்பு களின் பெயர்களைப் பயன் படுத்தியோர், மிகக் குறைவு. அப்படியே பயன்படுத்தினாலும் பெண்ணின் மார்பகங்களை. மட்டுமே பலரும் எழுதியுள்ளனர். இடையை வர்ணித்தாலும் அதற்குக் கீழே செல்ல எவரும் துணிந்ததில்ல. இப்போது துணிந்துள்ள சிலருள், ‘யோனி’ என்ற சொல்லை பல முறைகள் பயன்படுத்தியுள்ளவர், மாலதி மைத்ரி.

இது, அதிர்ச்சி மதிப் பீட்டுக்காக என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்தச் சொல், அதிர்ச்சி அளிக்கிறது என்பதே சமுதாயத்தின் பலவீனத்தைப் பறைசாற்றவில்லையா? இன்னும் எவ்வளவு காலத்துக்கு இவ்வாறு அதிர்ச்சி அடைவது?

கடந்த சில ஆண்டுகளாக எயிட்ஸ் விழிப்புணர்வு அமைப்புகள், ஒரு மாபெரும் சாதனையைப் படைத்துள்ளன. ஆணுறை, ஆணுறுப்பு, பெண்ணுறுப்பு, பால்வினை நோய்... போன்ற சொற்களைத் தொடர்ச்சியான பிரச்சாரத்தின் மூலம் புழக்கத்துக்கு அவை கொண்டுவந்துள்ளன. பள்ளி களில் பாலியல் கல்வி வழங்க முயற்சி தொடங்கப் பெற்றுள்ளது. இந்த நிலையில் ஒரு சொல்லைக் கண்டு மிரட்சி அடைவது, வளரும் சமுதாயத் திற்கு அழகில்லை.

எந்த ஒரு சொல்லும் உரிய இடத்தில் பொருத்தமாகக் கையாளப்பெற்றுள்ளதா என நாம் பரிசோதித்துக்கொள்ள லாம். பொருத்தமற்ற இடத்தில் திணிக்கப்பெற்றிருந்தால் கேள்வி எழுப்பலாம். அதில் நியாயம் உண்டு. அந்தச் சொல்லைப் பயன்படுத்துவதே தவறு என்பதில் நியாயமில்லை.

ஏதோ ஒரு பருவ மாற்றத்தில்
எனது அங்கங்கள் ஒவ்வொன்றும்
மிருகமாகவும் பறவையாகவும் மாறி என்னைவிட்டு விலகிச் செல்லத் தொடங்கின....

யோனி ஒரு பட்டாம் பூச்சியாக
மலைகளில் அலைவதைக் கண்டதாக
காட்டில் விறகு பொறுக்கச் சென்ற
பெண்கள் வந்து கூறக்கேட்டேன்

'விஸ்வரூபம்' என்ற இந்தக் கவிதையில் பூமியே ஒரு பெண்ணாக மலர்ந்திருக்கிறது. அதன் பல்வேறு அக-புற மாற்றங்கள் குறியீடுகளாகப் பதிவாகியுள்ளன.

ஔவையின் மகள் நான்
பல காலங்களையும் வெளிகளையும்
பலவித உடல்களினூடாகக் கடந்து சென்று கொண்டிருக்கும் ஔவையின்
மகள் நான்.

ஔவையின் யோனி விரிந்து
இரண்டாயிரமாண்டு கால வெளியையும் மொழி வெளியையும் உள்வாங்கி
என்னைப் பிதுக்கித்தள்ள
என் நகத்தாலேயே தொப்பூழ்க் கொடியைக் கிள்ளித் துண்டித்துவிட்டு
குருதியீரம் காயாமல் நடந்துபோகிறேன்.

இங்கும் 'யோனி' என்ற சொல், குறியீ டாகவே பயன்படுத்தப்பெற்றுள்ளது. இதற்குப் பதில் ‘கருப்பை’ என்ற சொல்லைக் கையாண்டிருக் கலாம் என்றாலும் சொல்லுகின்ற உணர்வின்- செய்தியின் வேகத்தைக் கூட்ட, இப்படி நேரடி யாகக் காட்சிப்படுத்தியுள்ளார்.

ஊரின் அனைத்து வீடுகளும்
நடப்பட்ட பெண்களென நிற்கின்றன
சாளரங்கள் கண்களாகவும் வாசல் யோனியாகவும்
யாரோ ஒரு ஆணிற்காக
ஆயுள் முழுவதும் காத்துக் கிடக்கின்றன
வயதுக்கேற்றபடித் தம் உறவுகளுக்காக....
காலத்தை ஆளும் பெண்கள் வீடாவதில்லை.

ஆண் எப்படி இருந்தாலும் பெண் எந்த எதிர்ப்பும் இல்லாமல் அவனைப் பாதுகாத்து வருகிறாள். இதை எதிர்ப்பதே இக்கவிதையின் அடிப்படையாக உள்ளது. எனினும் இதில் ஏராளமான முரண்களும் கேள்விகளும் குழப்பங் களும் நிறைந்துள்ளன. ‘வாசல் யோனியாக’ என்ற இரு சொற்களால் கவிதை, மிகச் சிக்கலாகி விட்டது. அவற்றிலிருந்து அலை அலையாக எழும் கேள்விகளுக்குக் கவிதைக்குள் விடை இல்லை.

பாலியல் சொற்களில் மரபை மீறியது போலவே இடக்கரடக்கலையும் இவர் பொருட் படுத்தவில்லை. ‘மலம் கழித்தல்’ எனச் சொல்லாமல். ‘வெளிக்குப் போதல்’, . ‘இரண்டுக்குப் போதல்’. எனச் சொல்வது முன்னோர் வழக்கு. ஆனால், மாலதி, இதை மீறியுள்ளார்.

'அத்தையுடன் ஆற்றுக்குக் காலையில்
மலம் கழிக்கப் போகையில்' என்றும்

‘ அரவமற்ற புற்றருகில்
தங்கையுடன் மலம் கழிக்க’ என்றும்

வெளிப் படையாக எழுதியுள்ளார். ‘காலைக் கடன்’ என்ற நல்ல சொல் இதற்கு இருக்கிறதே!

சொற்பயன் பாட்டில்-வெளிப்பாட்டில் சில குறைகள் இருப்பினும் மாலதி மைத்ரியின் கவித்துவம், பிரமாதமாக ஒளி வீசுகிறது; பிரமிக்க வைக்கிறது.

நீருக்கடியில் கிடக்கும் ஒவியம் போல்
அசைந்து கொண்டிருந்தது தூரத்தில் வீடு என்றும்

என் ஆன்மாவைப் போன்ற
கறுத்த கசந்த தேநீரைக் குடித்துக்
கொண்டிருக்கிறேன் என்றும்

மண்ணில் பதிந்த உடைந்த கண்ணாடியாகக்
கிடந்தது கோடை ஆறு என்றும்

தோல் பேரீச்சையாய் ஒடுங்கி என்றும்
வார்த்தைகள் உரசி
பற்றும் மொழிக்காடு என்றும்

நாய் தலைக்குள் சிக்கி
பானை தவிக்கிறது என்றும்

நதி, கலைந்த கருவெனப் பிசுபிசுத்துக் கிடக்க என்றும்

ஒளிப் பருந்து
உறக்கத்தைக் கோழிக்குஞ்சென
ல்விக்கொள்கிறது என்றும்

வரிசை தப்பிய எறும்பு ஒன்று....
தலைதூக்கிப் பார்த்து
என்னைப் போலவே சிரிக்கிறது
வாயிலிருந்து சிறு தானியத்தைத் தவறவிட்டு என்றும்

எதிரே கடல் அடர்நீலத்தில்
குழந்தையின் கையில் கிடைத்த
தண்ணீர்க் குவளையென
தளும்பிக் கொண்டிருக்கிறது என்றும்

ஒரு மீன் குஞ்சு
துள்ளி எழுந்து நழுவுகிறது
அந்தரத்தில் என்றும்

அற்புதமான கவிதைகளை மின்னல் தெறிப் புடன் படைத்துள்ளார்.

மாலதி மைத்ரியின் கவிதைகளில் இயற்கை, பேராட்சி செய்கிறது. தன்னை இயற்கையின் கூறுகளாக, தானே இயற்கையாக, பிரபஞ்சத்தின் செல்ல மகளாகத் தன்னை நினைக்கிறார். இவரின் உருவகங்களில் விரியும் பிரம்மாண்டம், சுவை மிகுந்த கவியாற்றலுடன் மிளிர்கின்றது.

புதுவையில் ஆடை வடிவமைப்பாளராகப் பணியாற்றும் இவர், சங்கராபரணி ஆற்றங்கரையில் பிறந்தவர். ‘கிரணம்’ பதிப்பகத்தின் பதிப்பாளர். பெண் விடுதலைக்குத் தொடர்ந்து குரலெழுப்பி வருகிறார்.

கவித்துவமான ஒரு வரி
மற்ற எல்லாவற்றையும் மறக்கடித்துவிடுகிறது
தெய்வம்போலத் திடீரென மழை கொட்டுகிறது

என்கிறார், மாலதி மைத்ரி.

இந்த மழைநீரை அவசியம் சேமிக்க வேண்டும்.

No comments: