Thursday, May 20, 2004

கிங்கரன் மனிதப் பண்ணை

அந்த ஞாயிற்றுக்கிழமை விடிந்துகொண்டிருந்தது. இருள் எனும் மருமக் கதையின் இறுதி அத்தியாயம். யார் வீட்டிலோ மசாலாவில் நர மாமிசத்தைப் புரட்டுகிறார்கள். எழும்போதே காபாலிகனுக்கு நாவூறியது. ஒரு முறை நன்றாக மூச்சிழுத்து வாசம் பிடித்தான். நாகர் தீவின் தேசிய உணவாயிற்றே அது.

உடனே நண்பன் கிங்கரனைப் பார்க்கக் கிளம்பினான், கபாலிகன். வங்கியில் கடன் பெற்று ஒரு மனிதப் பண்ணை வைத்திருந்தான், கிங்கரன். நல்ல லாபம். பாதிக் கடன் அடைத்து விட்டான். காபாலிகனுக்கு என்று கேட்டால் நல்ல மனிதனாக, கொஞ்சம் விலை குறைவாகவே கொடுப்பான். கடன் சொன்னாலும் கோபிக்கமாட்டான்.

“கிங்கரன் மனிதப் பண்ணை’’ என்ற பலகையை நெருங்க நெருங்க, மனிதக் கழிவுகளின் நாற்றம் அடித்தது. கூடவே ‘சலசல’ பேச்சும் கேட்டது. ஒரே விதமான கூண்டுகளில் நிருவாணமாகப் பல நிறங்களில் விதவிதமான மனிதர்கள் “அம்மா’’, “அப்பா’’, “அய்யோ’’, “ஆண்டவா’’, “காப்பாத்து’’, “மொதல்ல நீதான் சாகப்போறே’’, “இல்லை நீதான்’’ எனக் கலவையான குரல்கள்.

“வாடா காபாலி’’ என்ற கிங்கரன், “இதுங்களை வச்சு நாலு காசு சம்பாதிக்கலாம்னு நினைச்சா, பயத்துலயே பாதி சாகுதுங்க. நோய் நொடின்னு கொஞ்சம் போயிடுது. தீனிச் சண்டையில மீதியும் போயிடும் போலிருக்கு’’ என்றான்.

“தீனிச் சண்டையா?’’

“ஆமா. ஒரு கூண்டுக்குள்ள தீனி வச்சா, தலைக்குக் கொஞ்சமா தின்னும்னு பேரு. ஆனா, இதுங்களோ ஒண்ணை ஒண்ணு அடிச்சுகிட்டு தானும் தின்னாம அடுத்ததையும் தின்னவுடாம பண்ணுதுங்க.’’

“சரி சரி. நல்லா கொழுத்ததா பார்த்து ஒண்ணு கொடு. காசு அப்புறம் தரேன்.’’

“நீ ஒண்ணு செய். நேரா நம்ம கறிக்கடைக்குப் போய் வாங்கிக்க. காலையிலதான் ஒரு வண்டி அனுப்பி வச்சேன்.’’

“சரிடா’’

காபாலிகன் கிளம்பினான். கறித் தெருவுக்குள் நுழைந்தபோது ஒரு மனித மண்டையோட்டை எத்தி, நாலைந்து நாகச் சிறுவர்கள், உதைபந்து விளையாடிக்கொண்டிருந்தார்கள். காபாலி, கறிக்கடைக்கு வந்தான். ‘உரித்த மனிதன் 35 பொற்காசு’ ‘உயிருடன் 30 பொற்காசு’ என்ற பலகையைக் கடந்து உள்ளே போனான்.

இரும்புக் கொக்கிகளில் தோலுரித்த மனிதர்கள் வரிசையாகத் தொங்கிக் கொண்டிருந்தார்கள். கறிக்கடையில் இருந்த பயங்கரன், சுறுசுறுப்பாகச் சுழன்றவண்ணம் இருந்தான். வட்டமான மரப்பீடத்தில் ஒரு கொழுத்த மனிதனைக் கிடத்தி, கொடுவாளைத் தூக்கிக் கழுத்தில் இறக்கினான். ‘ஹக்’ என்று ஒரு சத்தம். குத்திட்ட அவன் கண்களில் பல்லாயிரம் ஆண்டைய மரணபீதி தெரிந்தது. கழுத்திலிருந்து குருதி பீரிட்டது. கிடுக்கியில் மாட்டியிருந்த அவன் கை-கால்கள், தரையிறங்கும் விமானம் போல் மெல்லமெல்ல ஓய்ந்தன. பீரிட்ட குருதியை வாளியில் பிடித்துவிட்டு சரசரவெனத் தோலை உரித்தான். கை, கால், மார்பு, இரைப்பை, குடல்... என ஒவ்வொன்றையும் தனித்தனியே பிரித்து அதனதன் தொட்டிகளில் போட்டான்.

குழந்தைகள் அதிக விலைக்குப் போயின. நாகர் தீவின் நான்கு திசைகளையும் நோக்கி, உலகின் மிகத் தீனமான குரலில் அவை முறையிட்டன. எந்தக் கடவுளின் காதிலும் அவை விழவில்லை.

காபாலிகனைப் பார்த்ததும் பயங்கரன் கேட்டான்: “வாங்க வாங்க. என்ன வேணும் பாருங்க. எல்லாம் சுடச்சுட இருக்கு’’.

“எனக்கு உயிரோடு ஒண்ணு கொடு. நான் வீட்டுக்குப் போய் சுத்தம் பண்ணிக்கிறேன்.’’

“எப்படி எடுத்துப் போவீங்க? நான் கடைப் பையன்கிட்ட கொடுத்து அனுப்பவா?’’

“அப்படியே செய்’’ சொன்ன காபாலிகன், பக்கத்திலிருந்த மூத்தார் சூலனைப் பார்க்கச் சென்றான். அவர் சிலகாலமாக நரமாமிசம் உள்பட எந்த மாமிசமும் சாப்பிடவில்லை. காய் -பழம்-கீரை என்று சாப்பிடுவதாகக் கேள்விப்பட்டான். வியப்பு தாங்கவில்லை.

அந்த மூத்தாரைக் காபாலிகனுக்கு நன்றாகத் தெரியும். அவரிடமிருந்து அவன் கற்றவை ஏராளம். எந்த மனித உடலுக்கு என்ன சுவை? எந்த உறுப்பில் சுவை அதிகம்? அந்த உடலை வேகவைப்பதா - சுட்டுத் தின்பதா? தொட்டுக் கொள்ள எது சிறந்தது?... என விரிவாகச் சொல்லித் தந்தவர் அவரே. இப்போது ஏன் இப்படி?...

அவர் வீட்டுக்குள் காபாலி நுழைந்தபோது, அவர் ஒரு குழந்தையைக் கொஞ்சிக் கொண்டிருந்தார். அதைப் பார்த்ததும் அவனுக்கு மீண்டும் நாவூறியது. நிச்சயமாக நல்ல சரக்கு அது.

வணங்கிவிட்டுக் கேட்டான்.

“என்ன வீட்டிலேயே மனிதனை வளர்த்துப் பெரிதாக்கி விற்கப்போகிறீர்கள், அப்படித்தானே? நல்ல குட்டிதான்.’’

“இல்லை காபாலி. இவள் என் செல்ல மகள்.’’

“ஆஹஹ்ஹா. நல்ல வேடிக்கை. இதுவரைக்கும் உங்க வயிற்றுக்குள் எத்தனை மகள்கள் போனார்கள் என்று கணக்கே கிடையாதே.’’

“இப்போது நான் அப்படியில்லை, தெரியாதா?’’

“ஏன்?’’

“அது உயிர்க் கொலை’’

“இதென்ன திடீர் ஞானோதயம்?’’

“ஞானம்தான்’’

“உயிர்ப்படைப்பே ஒரு சுழற்சிதான். தன்னைவிடச் சிறியவற்றை ஒவ்வோர் உயிரினமும் தின்னுகின்றது. மண்ணிலிருந்து புழு வருகிறது. புழுவைக் கோழி தின்னுகிறது. கோழியை மனிதன் தின்னுகிறான். மனிதனை நாம் தின்பதில் என்ன தவறு?’’

“ஒன்றை ஒன்று தின்ன, உயிர்ச் சுழற்சி என்கிறாயே. ஒன்றை ஒன்று காப்பாற்ற உயிர்ச் சுழற்சி என்று நினைத்துப் பார்த்தாயா?’’

“இது நம் இனத்தின் அடையாளம். மனிதக் கறி தின்பவன்தான் சொரணையுள்ள நாகன்’’

“பகுத்தறிவாளன் இப்படி எண்ணமாட்டான். உயிர்க்கொலை ஒரு கொடிய பாவம்’’

“கொன்றால் பாவம் தின்றால் போச்சு’’

“நீ என்னைக் கொன்று தின்னேன். பாவம்தான் போய்விடுமே’’

“அய்யோ, அப்படிச் சொல்லாதீங்க’’

“நானும் இந்தக் குழந்தையும் வேறில்லை’’

அவர் இறக்கிவிட்ட குழந்தை, தத்தித் தத்தி நடந்து வந்தது. காபாலிக்கு மீண்டும் நாவூறியது. அவன் முத்தம் என்ற சொல்லுக்கு அர்த்தம் கண்டான்.