Friday, May 07, 2004

ப்ரியம் எழுதிய அலைகளின் மீதொரு நிழல்

மிக வசதியாக ஆசிரியர் அல்லது வங்கி ஊழியராய் இருந்துகொண்டு இலக்கியம் படைப்பது ஒரு வகை. இங்கு உபரி நேரம் கிடைக்கும். ஆனால், எழுத்தோடு தொடர்பில்லாத - கடும் உழைப்பை வேண்டும் பணிகளில் இருப்போர் இலக்கியம் படைப்பது, வேறொரு வகை. தையல்காரராய் இருந்தபடி கவிதை படைத்துவரும் ப்ரியம், இரண்டாம் வகையைச் சேர்ந்தவர்.

ப்ரியம் கவிதைகளின் முதல் தொகுப்பு, அலைகளின் மீதொரு நிழல் என்ற தலைப்பில் வெளியாகியுள்ளது. இதில் 82 கவிதைகள் உள்ளன. இதன் முதல் கவிதையே பள்ளியிருந்து நின்று தையல் வேலைக்கு வந்தது பற்றித்தான்.

பிரமிளின் தொடர்ச்சியாய்த் தன்னைக் கருதும் ப்ரியத்தின் மொழி, மிகவும் எளிமையானது. எவரும் புரிந்துகொள்ளக் கூடியது.

பூனை எப்போது திருட்டுப் பூனையாயிற்று? என்ற இவரின் கேள்வியே இதற்குச் சிறந்த எடுத்துக்காட்டு.

கவிதையைக் காட்சிப்படுத்துவதில் ப்ரியம், பெரிய அளவில் வெற்றி பெற்றிருக்கிறார். இவரின் ஒவ்வொரு கவிதைக்குள்ளும் பல கதைகள் அமைந்திருக்கின்றன. "சீரியல் லைட்"டில் சித்திரம் வரையும் உத்தி உண்டு. அரசியல் மற்றும் கோயில் விழாக்களில் இது,
இன்றியமையாததாகிவிட்டது. அவற்றுக்கு மின்சாரம் எங்கிருந்து போகிறது என்பதை யாருமே கண்டுகொள்வதில்லை.

பயமுறுத்தும் மாகாளியை, சீரியல் விளக்குகளில் அமைக்கிறான் ஒருவன். பயமில்லையோ அவனுக்கு?

ஆயிரம் ஓயர் சூடிய மாகாளியிடமும் உன்னிடமும்
இணைப்புகளில்
அடிக்கடி பணியாற்றும் தோழனை
அழைத்துக் கேட்டேன்
என்ன தோழா இந்த வேலை...
ஓ... அதுவா ஜூஜூபி
என்கிறான்.

பேச்சு வழக்கைப் பயன்படுத்திக் கவிதைக்கு உயிர்த்துடிப்பு ஊட்டுகிறார், ப்ரியம்.

நேரில் நிற்கிற தேவதையைவிட ஒரு கற்பனைப் பெண், மிகவும் கவர்ச்சியானவள்.

பாரதியின் கண்ணம்மா, கலீல் ஜிப்ரானின் செல்மா, கலாப்ரியா & நகுலனின் சுசீலா ..... எனப் படைப்பாளர்கள் ஒரு குறிப்பிட்ட பெண்ணை முன்வைத்துப் படைப்பை வெற்றிகரமாக நகர்த்தியிருக்கிறார்கள். அந்த வரிசையில் கவிஞர் பிரியம் அவர்களின் சௌம்யா என்ற பாத்திரம், படிப்பவர் மனத்துள் ஒரு சுகமான கதகதப்பை ஏற்படுத்துகிறது.

"பாலினம்" என்ற கவிதையில் முதல் அறிமுகம்.

"மல்லிகை பறிக்கும் சாக்கில் நாற்காலி மீது
நிற்கும் சௌம்யா தன் சட்டைக்குள்
முலைகளை மூடி முகத்தைத் திருப்புவாள்"


அதன் பிறகு சௌம்யா வரும் இடமெல்லாம் அவள் நாற்காலி மீது நிற்கும் காட்சியை மறக்க முடியவில்லை.

"அறைக்குள் யாரேனும் நடமாடுகிறார்களா
பாரேன் என்கிறேன்
யாரிருக்கப் போகிறார்கள் உன்னைத் தவிர
என்கிறாள் சௌம்யா"
(அவன்)

"கிரவுண்டில் ஸ்கிப்பிங்
பிராக்டிசின்போது சௌம்யாவை
யாரும் பார்க்கக்கூடாது...
(சூர்யம்)

"கனியா முலைகளை கவனி
திரட்சி கொண்ட யோனிப் பிசுபிசுப்பை அறி
சதை புரளும் யுத்தத்தில் வெற்றி
கொள்ளேன் எûத் தாழம்பூ வாசத்துடன் தழுவுகிறாய்"

"சௌம்யா! உன் மர்மக் கைகளின்
ரேகைகளில் பதிந்த வாசகத்தை
வாசிக்கப் பழகு"
(அ. விஸ்வ மித்திரம்)

"பம்பு செட்டில் குளிக்கப் போன
சௌம்யாவை
நனைய, நனைய, சீண்டி...
வரப்போர மேட்டில் தலைப்பாகை தெரிந்தவுடன்
தலைதெறிக்க ஓடிவந்தாச்சு"
(லீவு முடிந்து பள்ளி திரும்பும் படலம்)

"ஒரு பதில் சொல்லேன் சௌம்யா" என்ற தலைப்பிலேயே ஒரு கவிதை உள்ளது. அது,

"திரும்பத் திரும்ப இக்கவிதைகளை
காணும் நீ என்னதான்
சொல்லப்போகிறாய்"
என முடிகிறது.

நேரடியாகப் பெயர் வராவிட்டாலும் பெண்ணின் உறுப்பெழில் வர்ணனை வரும் இடமெல்லாம் சௌம்யாவின் ஞாபகம் வருகிறது. எடுத்துக்காட்டுக்கு ஒன்று.

"நான் மலர்ந்துவிட்டேன் என
வாயாடி மலரிரண்டு வெள்ளை பனியனுக்குள்
அலட்டுகின்றன"
(நாய்க்குடை)

சௌம்யாவின் அழகை மட்டுமில்லை, கோவிலில் இருக்கும் காளியம்மையின் பேரழகையும் பிரியம் கண்டிருக்கிறார்.

"மஞ்சளரைச் சீலைக்குள் மெருகு குலையா
முலைகள் பொங்க
இடைமீறும் பிருஷ்டங்கள் தரை பரவி
வலக்காலை நடுவில் பொருத்திய
வண்ணம்
வனப்புடன் தான் அமர்ந்திருக்கிறாள்.
வந்தபாடில்லை பரமேச்வரன்!"
(அம்மை)

"மறுசிருஷ்டி" கவிதையில், கோரக் கற்சிலையாய் நின்ற காளிக்குச் சுடிதார். துப்பட்டா, ஷாம்பு குளியல், ஒற்றை ரோஜா, குதிகால் உயர்ந்த காலனி அணிவித்து நவநாகரிகப் பெண்ணாய் மாற்றியிருப்பது எவரும் செய்யாத புதுமை.

பெண் வர்ணனை மட்டும்தான் இந்தப் புத்தகத்தில் இருக்கிறதா? அப்படியில்லை. விரிந்து பரந்த உலகைக் குறும்படங்களாய்த் தன் கவிதைகளில் பதிவு செய்துள்ளார், ப்ரியம்.

தேநீரைப்பற்றி ஒரு கவிதை படைத்துள்ளார். ஒவ்வொரு தேநீர்க் கடையிலும் ஒட்டிவைக்கப்படவேண்டிய அந்தக் கவிதை.

"தேநீர் வாழ்க!
தேநீர் குடித்தவர் வாழ்க!
தேநீர் கொடுத்தவர் வாழ்க!
தேநீரால் தொடங்கிய
நட்பும் உறவும் காதலும் வாழ்க!
தேநீரைப் பருகாது விலகுபவர் ஒழிக!
தேநீருக்காக இனி கவிதைகள் எழுதுபவர் யாவரும் வாழ்க!
தேநீர் ஒன்றே பேராதரவாம்
எளியோர்க்கு. அதனால் தேநீர்க்
கடைகள் வாழ்க.


இதேபோன்று மிதிவண்டியின் பெருமை களைப் பாடும் ஒரு கவிதை உள்ளது. அது, எல்லா மிதிவண்டிக் கடைகளிலும் ஒட்டிவைக்க ஏற்றது.

"சைக்கிள் ஒரு தத்துவமாம். பூக்கள்போல அதுவும் ஒன்றாம். எளிமையான வாழ்விற்கு எடுத்துக்காட்டாம்.
சைக்கிள்களால் வாழ்பவர் புவியில் பலகோடி. சைக்கிளைப்போல வாழ்பவர் புவியில் சிலகோடி. சைக்கிளை நீயும் வாழ்த்துப்பா" (வாழ்த் துப்பா) என அக்கவிதை முடிகிறது.

எளிய தமிழில் எதார்த்த வாழ்வை எடுத்துரைக்கும கவிஞர் பிரியம் அவர்களின் கவிதைகள், அனைவரும் படித்து மகிழத்தக் கவை. நவீன தமிழுக்கு அளவெடுத்துக் கொள்ளுங்கள், இந்த நூலிலிருந்து.


நூல்: அலைகளின் மீதொரு நிழல்
ஆசிரியர்: பிரியம்
விலை: ரூ. 35/-

கிடைக்குமிடம்: எழில், 21, மாதவரம் நெடுஞ்சாலை, (வடக்கு) பெரம்பூர், சென்னை - 600 011.


வாரசுரபி - மே 14, 2004

No comments: