Thursday, May 06, 2004

பன்முகநாதன்

- அண்ணாகண்ணன்

தினத்தந்தியில் 40 ஆண்டுகள் செய்தி ஆசிரியராய் இருந்தவர்; புதின எழுத்தாளர்; வரலாற்று நூலாசிரியர் மனிதநேயம் மிக்க பண்பாளர்... எனப் பன்முகநாதனாய் விளங்குபவர், ஐ. சண்முகநாதன்.

“ஒரு தமிழன் பார்வையில் 20ஆம் நூற்றாண்டு’’ என்ற நூலில் மூலம் ஏற்கனவே இவர் உலகின் கவனத்தை ஈர்த்துள்ளார். இப்போது கற்காலம் முதல் கம்ப்யூட்டர் காலம்வரை உலக வரலாறு என்ற புதிய நூலைப் படைத்துள்ளார். இது விரைவில் வெளிவர உள்ளது.

உலகம், இந்தியா, தமிழ்நாடு என 3 பகுதிகளாக இந்நூல் விரிந்துள்ளது. வரலாற்றில் புகழ்பெற்ற மனிதர்கள், சம்பவங்கள், நாடுகளைப் பற்றி எளிய நடையில் கதைபோல் விவரிக்கிறார் நூலாசிரியர்.

“மாவீரன் நெப்போலியன் சிறைவைக்கப் பட்ட ஹெலீனாத்தீவின் நீளம் 15கி.மீ அகலம் 10கி.மீ என்ற செய்தியை வாசிக்கும்போது அந்த மாமன்னன் ஆண்டது எத்தனை பெரிய நிலம் மாண்டது எத்தனை சிறிய நிலம் என்று அனுதாபத்தால் உச்சுக்கொட்டுகிறது உதடு.

“மனித குலத்தின் மாபெரும் விஞ்ஞானியான எடிசன், சின்ன வயதிலேயே ஏன் எதற்கு என்று கேள்வி கேட்கும் வல்லவராம்.

பறவைகள் அடைகாத்துக் குஞ்சு பொரிப்பதையும் பார்த்த எடிசன் தன் வயிற்றுக்கு அடியில் முட்டையை வைத்துக்கொண்டு படுத்திருந்தார். இந்தச் சுவையான செய்தி இதில் பதிவாகியிருக்கிறது.

கொடியவர் கொடுமைக்காரர் என்று அறியப்பட்ட ஔரங்கசீப் பொதுவாழ்வில் எவ்வளவு தூய்மையானவராக இருந்தார் என்பதற்கு அவர் எழுதிய கடைசி உயில் சாட்சியாகிறது.

என் கைகளால் தைக்கப்பட்ட குல்லாய்களை விற்ற பணம் 4 ரூபாய் 2அணா, என் தலையணைக்கு அடியில் இருக்கின்றது. நான் இறந்தபின் என் உடல்மீது போர்த்துவதற்குத் துணிவாங்க அதைப் பயன்படுத்துங்கள். “இந்த உயில் எழுத்து ஔரங்கசீப்பின் மீதிருந்த அத்தனை அழுக்கையும் சலவை செய்து விடுகிறது’’ என்று பத்மஸ்ரீ வைரமுத்து எடுத்துக் காட்டுகிறார்.

“இந்த உலக வரலாற்று நூலை எழுதி ஒரு புதிய வரலாறு படைத்திருக்கிறார்’’ என்ற
கி. வேங்கடசுப்பிரமணியனின் கூற்று, வழி மொழியத் தக்கது.

பல அரிய புகைப்படங்களும் சித்திரங்களும் இந்நூலுக்கு வலிமை சேர்க்கின்றன.

வெளியீடு :
பூம்புகார் பிரசுரம்
127 (ப.எண் 63)
பிரகாசம் சாலை (பிராட்வே)
சென்னை-600 108.




அமுதசுரபி - செப்டம்பர் 2003

No comments: