Saturday, May 08, 2004

வளர்ந்த இந்தியா : நாம் என்ன செய்யவேண்டும்?

- மாண்புமிகு ஆ.ப.ஜெ. அப்துல்கலாம், இந்தியக் குடியரசுத் தலைவர்
ஆங்கிலத்திலிருந்து தமிழில் - அண்ணா கண்ணன்

இந்தியாவுக்காக என்னிடம் மூன்று இலக்குகள் உண்டு. நமது மூவாயிரம் ஆண்டுக்கால வரலாற்றில் உலகெங்கிலுமிருந்து மக்கள் இங்கு வந்தார்கள்; நமக்குள் பிளவுண்டாக்கினார்கள்; நமது நிலங்களைக் கைப்பற்றினார்கள்; நமது மனங்களை வெற்றி கொண்டார்கள். அலெக்சாண்டரிலிருந்து கிரேக்கர்கள், துருக்கியர்கள், மொகலாயர்கள், போர்த்துகீசியர்கள், பிரித்தானி யர்கள், பிரெஞ்சு மக்கள், டச்சுக்காரர்கள். எல்லோரும் இங்கு வந்தார்கள்; நம்மைக் கொள்ளை அடித்தார்கள்; நம் செல்வங்களை யெல்லாம் எடுத்துச் சென்றார்கள். இத்தனைக்கும் இந்தத் தீங்குகளை நாம் எந்த நாட்டுக்கும் இழைத்ததில்லை. நாம் எவரையும் வெற்றிகொண்டதில்லை.

நாம் அவர்களுடைய நிலத்தையோ, கலாச்சாரத்தையோ, வரலாற்றையோ, கைப்பற்றியதில்லை. நமது வாழ்க்கை முறையை அவர்கள் மீது திணிக்க முயன்றதில்லை. ஏன்? நாம் மற்றவர்களின் சுதந்திரத்தை மதிப்பவர்கள். எனவேதான் என் முதலாவது இலக்காகச் சுதந்திரம் அமைகிறது. சுதந்திரப் போரைத் தொடங்கிய 1857-இல் இந்தியா தன் முதல் இலக்கைப் பெற்றது. இந்தச் சுதந்திரத்தை நாம் கட்டாயம் பாதுகாக்க வேண்டும்; வலுப்படுத்த வேண்டும்; வளர்க்க வேண்டும். நாம் சுதந்திரமாக இல்லாவிடில் எவர் ஒருவரும் நம்மை மதிக்க மாட்டார்கள்.

இந்தியாவுக்கான என் இரண்டாவது இலக்கு, வளர்ச்சி. கடந்த ஐம்பது ஆண்டுகளாக நாம் வளரும் நாடாக இருக்கிறோம். நாம் நம்மை வளர்ந்த நாடாக்குவதற்கு இதுவே சரியான தருணம். ஒட்டு மொத்த வளர்ச்சி விகிதக் கணக்குப்படி உலகின் முன்னணி நாடுகள் ஐந்தனுள் இந்தியாவும் ஒன்று. பல துறைகளில் நாம் 10 விழுக்காடு வளர்ச்சி விகிதத்தைப் பெற்றிருக்கிறோம். நமது வறுமை நிலை மாறி வருகிறது. இன்று நமது சாதனைகள் உலக அளவில் அங்கீகரிக்கப்படுகின்றன. ஆனால், நம்மை வளர்ந்த நாடாகக் காணு வதற்குரிய தன்னம்பிக்கையே இப் போதைய பற்றாக்குறையாய் இருக்கிறது. நான் சொல்வது தவறா?

மூன்றாவது இலக்கு, என்னிடம் உண்டு. இந்தியா, உலக அளவில் எழுந்து நிற்கவேண்டும். இந்தியா எழுந்திருக்காவிட்டால் எவரும் நம்மை மதிக்கமாட்டார்கள். வலிமையே வலிமையை மதிக்கும். படைவலிமை மட்டு மல்லாது பொருளாதார வலிமை யையும் நாம் பெற்றாகவேண்டும். இரண்டும் இணைந்து வளர வேண்டும்.

ஏன் இங்குள்ள ஊடகம், எதிர்மறையாக இருக்கிறது? நமது சாதனைகளையும் சொந்த வலிமை களையும் அங்கீகரிக்க ஏன் நாம் கலங்குகிறோம்? நம்முடையது ஒரு மகத்தான நாடு. நம்மிடம் வியப் பூட்டும் பற்பல வெற்றிக் கதைகள் உண்டு. ஆனால், அவற்றை அங்கீ கரிக்காமல் புறக் கணிக்கிறோம். ஏன்? பால் உற்பத்தியில் நாம் முதல் இடத்தில் இருக்கிறோம். விரும்பியவாறு இயக்கும் செயற்கைக் கோள்களில் நாம் முதலிடம் வகிக்கிறோம். கோதுமை உற்பத்தியிலும் அரிசி உற்பத்தியிலும் நாம் இரண்டாம் இடத்தில் இருக்கிறோம்.

டாக்டர் சுதர்சனைப் பாருங்கள். பழங்குடியினர் கிராமங்களைத் தன்னிறைவும் தன் இயக்கமும் கொண்டவையாக அவர் மாற்றிக் காட்டியிருக்கிறார். இவைபோன்ற இலட்சக்கணக்கான சாதனைகள் இருக்கின்றன. ஆனால் நமது ஊடகங்கள், அழிவுகள், தோல்விகள், கெட்ட செய்திகளையே மீண்டும் மீண்டும் காட்டுகின்றன. டெல் அவிவ் நகரில் இருந்தபோது நான் இஸ்ரேலிய செய்தித்தாள் ஒன்றை வாசித்துக்கொண்டி ருந்தேன். அதற்கு முதல் நாள்தான் ஏராளமான தாக்குதல் களும் குண்டுவீச்சுகளும் மரணங்களும் நிகழ்ந்திருந்தன. ஹமாஸ் இயக்கம், முழுதும் தடுக்கப்படும் நிலையில் இருந்தது. ஆனால், அந்தச் செய்தித்தாளின் முதல் பக்கத்தில் படத்துடன் ஒரு செய்தி இருந்தது. ஒரு யூத கனவான், ஐந்து ஆண்டுகளில் தன் பாலை நிலத்தைப் பழத்தோட்டமாகவும் மாபெரும் தானிய விளைநிலமாகவும் மாற்றியிருந்த காட்சியை அதில் கண்டேன். அது, ஒவ்வொருவரையும் விழிப்படையச் செய்யும் அகத்தூண்டுதல் மிக்க புகைப்படம். இரத்தத்தை உறையவைக்கும் படுகொலைகள், குண்டுவீச்சுகள், மரணங்கள் பற்றிய செய்திகள், செய்தித்தாளின் உள்ளே இருந்தன; மற்ற செய்திகளை மறைத்தபடி.

இந்தியாவில் நாம் மரணம், நோய், பயங்கரவாதம், குற்றம் ஆகியவை பற்றி மட்டுமே படிக்கிறோம். ஏன் நாம் இவ்வளவு தூரம் எதிர்மறையாக இருக்கிறோம்? இன்னொரு கேள்வி: ஏன் நாம் வெளிநாட்டுச் சிந்தனைகளால் நிரம்பி யிருக்கிறோம்? நமக்கு வெளிநாட்டுத் தொலைக்காட்சிகள் வேண்டியிருக்கின்றன; வெளிநாட்டுச் சட்டைகள் நமக்குத் தேவை; வெளிநாட்டுத் தொழில்நுட்பத்தை நாம் நாடியிருக்கிறோம்.

ஏன் நமது அனைத்தும் இறக்குமதிகளால் நிறைந் துள்ளன? தன்னம்பிக்கையிலிருந்து சுயமரியாதை உருவாகும் உண்மையை நாம் ஏன் உணரவில்லை?

நான் இந்த ஐதராபாதில் இந்த உரையை ஆற்றவரும் போது, 14 வயதுச் சிறுமி ஒருத்தி, என் கையொப்பத்தைக் கேட்டாள். நான் அவளிடம் "உன் வாழ்வின் இலக்கு எது?' என்று கேட்டேன். "நான் வளர்ந்த இந்தியாவில் வாழ விரும்புகிறேன்' என்று அவள் சொன்னாள். அவளுக்காக நீங்களும் நானும் வளர்ந்த இந்தியாவை உருவாக்கவேண்டும். இந்தியா ஒரு வளரும் நாடில்லை; மிக மிக வளர்ந்த நாடு. இதை நீங்கள் எல்லோருக்கும் அறிவியுங்கள்.

உங்களால் 10 நிமிடங்கள் ஒதுக்கமுடியுமா? இப்போது சொன்னதற்குப் பழிக்குப் பழிவாங்க என்னை அனுமதியுங்கள். நாட்டுக்காக ஒரு பத்து நிமிடங்கள் உங்களிடம் உண்டா? ஆமெனில் தொடர்ந்து படியுங்கள். இல்லாவிட்டால் உங்கள் விருப்பம்.

நமது அரசு திறமையற்றது என நீங்கள் சொல்கிறீர்கள்.
நமது சட்டங்கள் மிகவும் பழையவை என நீங்கள் சொல்கிறீர்கள். நமது நகராட்சி, குப்பைகளை அள்ளுவ தில்லை என நீங்கள் சொல்கிறீர்கள்.

தொலைபேசிகள் வேலை செய்வதில்லை; ரெயில் வண்டிகள் சிரிப்பூட்டுகின்றன; நம்முடையவை, உலகிலேயே மிகவும் மட்டமான விமானப் போக்குவரத்து, அஞ்சல்கள் உரியவரைச் சென்றடைவதேயில்லை.... என்றெல்லாம் நீங்கள் சொல்கிறீர்கள். நாடு பள்ளங்களால் நிரம்பியுள்ளதாகவும் நாய்களுக்கு உணவாகி வருவதாகவும் நீங்கள் சொல்கிறீர்கள். நீங்கள் சொல்கிறீர்கள், சொல்கிறீர்கள், சொல்கிறீர்கள். இவற்றுக்காக நீங்கள் என்ன செய்தீர்கள்?

சிங்கப்பூரில் ஒருவரை எடுத்துக் கொள்ளுங்கள். அவருக்கு உங்கள் பெயரைக் கொடுங்கள். உங்கள் முகத்தைக் கொடுங்கள். நீங்கள் விமான நிலையத்திலிருந்து வெளியே வாருங்கள். நீங்கள் உலகத் தரத்தில் இருக்கிறீர்கள். சிங்கப்பூரில் சிகரெட்டுத் துண்டுகளைச் சாலைகளில் வீசி எறிய முடியாது. கடைகளின் முன்நின்று சாப்பிட முடியாது. மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை பழத்தோட்டச் சாலை வழியே நீங்கள் காரோட்டினால் நீங்கள் 5 சிங்கப்பூர் டாலர் (சுமார் ரூ.60/-) செலுத்துவீர்கள். அவர்களுடைய மறைமுக முடிச்சுகளுக்காகப் பெருமையடைவீர்கள்.

உணவகத்திலோ பேரங்காடியிலோ அதிக நேரம் இருக்கவேண்டி இருந்தால், உங்கள் வாகன நிறுத்துமிடத்திற்கு வந்து வாகன நிறுத்துச் சீட்டைப் புதுப்பித்துச் செல்வீர்கள். சிங்கப்பூரில் நீங்கள் ஏதும் சொல்வதில்லை. மற்றவரை நோக்கி உங்கள் விரல் நீளுவதில்லை. துபாயில் ரமளான் காலத்தில் பொது இடத்தில் உண்ணுவதற்கு நீங்கள் துணிவதில்லை.

ஜெட்டாவில் தலையை மூடாமல் வெளியே செல்ல நீங்கள் துணிவதில்லை.

"என் எஸ்.டி.டி. மற்றும் ஐ.எஸ்.டி. அழைப்புகளுக்கான கட்டணத்தை வேறெவர் தொலைபேசிக் கட்டணத்தி லேனும் சேர்த்துவிடுங்கள்' என இலண்டன் தொலைபேசி இணைப்பக ஊழியரை, 10 பவுண்டுகளுக்கு (ரூ.650/-) நீங்கள் விலைக்கு வாங்கத்
துணிவதில்லை.

வாஷிங்டனில் மணிக்கு 55 மைல்களுக்கு மேலான வேகத்தில் (மணிக்கு 88 கி.மீ) நீங்கள் பயணிக்கத் துணிவதில்லை. அப்படிப்போய், போக்குவரத்துக் காவலரிடம் மாட்டினால் "ஜான்தா ஹை மெய்ன் கவுன் ஹுன்' (நான் யாரென்று உனக்குத் தெரியுமா?) என நீங்கள் கேட்பதில்லை. "நான் இப்பேர்க்கொத்தவரின் மகன். இந்தா இரண்டு ரொட்டித் துண்டுகளை எடுத்துக் கொண்டு தொலைந்து போ' எனச் சொல்ல நீங்கள் துணிவதில்லை.

ஆஸ்திரேலியா, நியூசிலாந்தின் கடற்கரைகளில் குப்பைத் தொட்டி அல்லாத வேறெங்கும், காலிசெய்த தேங்காய்களைத் தூக்கிப்போட நீங்கள் துணிவதில்லை.

டோக்கியோவின் வீதிகளில் நீங்கள் ஏன் வெற்றிலை எச்சிலைத் துப்புவதில்லை?

பாஸ்டனில் தேர்வெழுத ஆள்மாறிகளை நீங்கள் அனுப்புவதில்லை. போலிச் சான்றிதழ்களை நீங்கள் விலைக்கு வாங்குவதில்லை. இப்போதும் நாம் உங்களைப் பற்றித்தான் பேசிக்கொண்டிருக்கிறோம்.

வெளிநாடுகளில் வெளிநாட்டு முறையை ஏற்று மதிக்கிற நீங்கள் உங்கள் மண்ணில் மதிப்பதில்லை. இந்திய மண்ணில் இறங்கிய நொடியிலேயே காகிதங்களையும் சிகரெட்டுத் துண்டுகளையும் வீசி எறிகிறீர்கள். வேறொரு நாட்டின் உணர்வுபூர்வமான, பாராட்டத்தக்க குடிமகனாக உங்களால் இருக்க முடிகிறதெனில் ஏன் அதேமாதிரி இந்தியாவில் இருக்கமுடியவில்லை?

நாம் வாக்களிக்கச் செல்கிறோம்; ஓர் அரசைத் தேர்ந்தெடுக்கிறோம்; அதன் பிறகு நம் எல்லாப் பொறுப்பு களையும் இழந்து விடுகிறோம். நமது பங்களிப்பு ஒட்டுமொத்த மாக மோசமாக இருந்த போதும் அரசு எல்லாவற்றையும் செய்ய வேண்டு மென்று எதிர்பார்க் கிறோம். ஆனால், எல்லா இடங்களிலும் குப்பைகளைப் போடுவதை நாம் நிறுத்தப்போதில்லை. தெருவில் கிடக்கும் ஒரு துண்டுச் சீட்டையும் எடுத்துக் குப்பைத் தொட்டியில் நாம் போடப்போவதில்லை. ரெயில்வே துறை, தூய கழிவறைகளை அளிக்கவேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். ஆனால், முறையாகக் கழிவறை களைப் பயன்படுத்துவதை நாம் கற்கப் போவதில்லை. இந்தியன் ஏர்லைன்சும் ஏர் இந்தியாவும் சிறந்த உணவையும் கழிவறை வசதியையும் அளிக்கவேண்டும் என்று விரும்புகிறோம். ஆனால், ஒரு சிறிய வாய்ப்பிலும் அற்பசொற்பமாகத் திருடுவதை நாம் விடப்போவதில்லை. இது, பொதுப்பணிகள் புரியும் ஊழியர்களுக்கும் பொருந்தும். இதுவே எரியும் பிரச்சினைகளான பெண்கள், வரதட்சிணை, பெண் குழந்தை.... மற்றும் பிறருக்கு வரும்போது நாம் சத்தமாக விவாதிக்கிறோம்; எதிர்க்கிறோம். ஆனால், நமது வீட்டுக்குள், இதற்கு எதிர்மாறாகச் செயல்படுவதைத் தொடர்ந்துகொண்டே இருக்கிறோம். இதற்கு நாம் கூறும் காரணம் என்ன? ""ஒட்டுமொத்த சமூகமும் மாற வேண்டும்.'' என் மகனின் வரதட்சணை வாங்கும் உரிமையைப் பேணுவேனாயின் இது
எப்படி சாத்தியம்? ஆக, இந்த அமைப்பை மாற்றப் போவது யார்?

ஒரு சமூக அமைப்பானது, எப்படி இருக்கவேண்டும்? நமக்கு மிகவும் வசதியானதாக, நமது அண்டை வீட்டாருக்கு வசதியாக, மற்ற வீடுகளுக்கு, பிற மாநகரங்களுக்கு, பிற சமுதாயங்களுக்கு மேலும் அரசுக்கு வசதியாக இருக்கவேண்டும். ஆனால் நிச்சயமாக, எனக்கும் உங்களுக்கும் அல்ல. ஒரு பாதுகாப்பான பட்டுப்பூச்சிக் கூட்டுக்குள் நம்மையும் நமது குடும்பங்களையும் பூட்டிக் கொண்டு, தொலைதூரத்தில் உள்ள நாடுகளைப் பார்த்தபடி, திருவாளர் தூய்மைக்காகக் காத்துக்கொண்டு, ஒரு கம்பீரமான கரத்தின் வழியே அதிசயங்கள் நிகழ்வதை எதிர்பார்த்திருக்கிறோம். அல்லது நாட்டை விட்டு ஓட்டமெடுக்கிறோம்.

சோம்பல் நிறைந்த கோழையைப்போல அச்சங்களால் "நாய்வேட்டை'யாடப்பட்டு நாம் அமெரிக்காவுக்கு ஓடுகிறோம். அவர் களின் புகழில் சுகமாகக் குளிர்காய்ந்தபடி அவர்களின் அமைப்பைப் போற்றுகிறோம். நியூயார்க், பாதுகாப்பை உறுதிசெய்யாத போது, நாம் இங்கிலாந்துக்கு ஓடுகிறோம். இங்கிலாந்தில் வேலையில்லாத் திண்டாட்டத்தை அனுபவித்தபிறகு, அடுத்த விமானத்திலேயே வளைகுடாவுக்குப் பறக்கிறோம். வளை குடாவில் போர் வந்துவிட்டால் இந்திய அரசு நம்மைக் காப்பாற்றித் தாயகத்துக்கு அழைத்து வரவேண்டுமென்று வற்புறுத்து கிறோம். எல்லோரும் துஷ்பிர யோகம் செய்கிறோம். நாட்டைக் கற்பழிக்கிறோம். நமது சமூக அமைப்பை மேம்படுத்த, எவரும் சிந்திக்க வில்லை. நமது மனசாட்சி, பணத்துக்காக அடகு வைக்கப்பட்டுள்ளது.

அன்பார்ந்த இந்தியர்களே! இந்தக் கட்டுரை, அதிகபட்ச சிந்தனைகளைத் தூண்ட வேண்டும்; நம்மை மகத்தான ஆத்ம பரிசோதனைக்கு அழைக்கவேண்டும்; நமது மனசாட்சியைக் குத்தவும் வேண்டும்..... அமெரிக்கர்களுக்கான ஜே.எஃப். கென்னடியின் சொற்களை இந்தியர்களுக்காக நான் எதிரொலிக்கிறேன்....

அமெரிக்காவும் இதர மேலை நாடுகளும் இன்றுள்ள நிலைக்கு இந்தியாவை உயர்த்த நாம் என்ன செய்யவேண்டும்? இந்தியாவுக்காக நம்மால் என்ன செய்ய முடியும் என்று உங்களையே கேளுங்கள். அதைச் செய்யுங்கள்.

இந்தியாவிற்கு நம்மிடமிருந்து எது தேவையோ அதைச் செய்வோம். நகைச் சுவைகளுக்கும் திணிப்பு அஞ்சல்களுக்கும் மாற்றாக, எல்லா இந்தியர்களுக்கும் இந்த மின்னஞ்சலை மடைமாற்றம் செய்யுங்கள். நன்றி.

No comments: