Thursday, May 20, 2004

கிங்கரன் மனிதப் பண்ணை

அந்த ஞாயிற்றுக்கிழமை விடிந்துகொண்டிருந்தது. இருள் எனும் மருமக் கதையின் இறுதி அத்தியாயம். யார் வீட்டிலோ மசாலாவில் நர மாமிசத்தைப் புரட்டுகிறார்கள். எழும்போதே காபாலிகனுக்கு நாவூறியது. ஒரு முறை நன்றாக மூச்சிழுத்து வாசம் பிடித்தான். நாகர் தீவின் தேசிய உணவாயிற்றே அது.

உடனே நண்பன் கிங்கரனைப் பார்க்கக் கிளம்பினான், கபாலிகன். வங்கியில் கடன் பெற்று ஒரு மனிதப் பண்ணை வைத்திருந்தான், கிங்கரன். நல்ல லாபம். பாதிக் கடன் அடைத்து விட்டான். காபாலிகனுக்கு என்று கேட்டால் நல்ல மனிதனாக, கொஞ்சம் விலை குறைவாகவே கொடுப்பான். கடன் சொன்னாலும் கோபிக்கமாட்டான்.

“கிங்கரன் மனிதப் பண்ணை’’ என்ற பலகையை நெருங்க நெருங்க, மனிதக் கழிவுகளின் நாற்றம் அடித்தது. கூடவே ‘சலசல’ பேச்சும் கேட்டது. ஒரே விதமான கூண்டுகளில் நிருவாணமாகப் பல நிறங்களில் விதவிதமான மனிதர்கள் “அம்மா’’, “அப்பா’’, “அய்யோ’’, “ஆண்டவா’’, “காப்பாத்து’’, “மொதல்ல நீதான் சாகப்போறே’’, “இல்லை நீதான்’’ எனக் கலவையான குரல்கள்.

“வாடா காபாலி’’ என்ற கிங்கரன், “இதுங்களை வச்சு நாலு காசு சம்பாதிக்கலாம்னு நினைச்சா, பயத்துலயே பாதி சாகுதுங்க. நோய் நொடின்னு கொஞ்சம் போயிடுது. தீனிச் சண்டையில மீதியும் போயிடும் போலிருக்கு’’ என்றான்.

“தீனிச் சண்டையா?’’

“ஆமா. ஒரு கூண்டுக்குள்ள தீனி வச்சா, தலைக்குக் கொஞ்சமா தின்னும்னு பேரு. ஆனா, இதுங்களோ ஒண்ணை ஒண்ணு அடிச்சுகிட்டு தானும் தின்னாம அடுத்ததையும் தின்னவுடாம பண்ணுதுங்க.’’

“சரி சரி. நல்லா கொழுத்ததா பார்த்து ஒண்ணு கொடு. காசு அப்புறம் தரேன்.’’

“நீ ஒண்ணு செய். நேரா நம்ம கறிக்கடைக்குப் போய் வாங்கிக்க. காலையிலதான் ஒரு வண்டி அனுப்பி வச்சேன்.’’

“சரிடா’’

காபாலிகன் கிளம்பினான். கறித் தெருவுக்குள் நுழைந்தபோது ஒரு மனித மண்டையோட்டை எத்தி, நாலைந்து நாகச் சிறுவர்கள், உதைபந்து விளையாடிக்கொண்டிருந்தார்கள். காபாலி, கறிக்கடைக்கு வந்தான். ‘உரித்த மனிதன் 35 பொற்காசு’ ‘உயிருடன் 30 பொற்காசு’ என்ற பலகையைக் கடந்து உள்ளே போனான்.

இரும்புக் கொக்கிகளில் தோலுரித்த மனிதர்கள் வரிசையாகத் தொங்கிக் கொண்டிருந்தார்கள். கறிக்கடையில் இருந்த பயங்கரன், சுறுசுறுப்பாகச் சுழன்றவண்ணம் இருந்தான். வட்டமான மரப்பீடத்தில் ஒரு கொழுத்த மனிதனைக் கிடத்தி, கொடுவாளைத் தூக்கிக் கழுத்தில் இறக்கினான். ‘ஹக்’ என்று ஒரு சத்தம். குத்திட்ட அவன் கண்களில் பல்லாயிரம் ஆண்டைய மரணபீதி தெரிந்தது. கழுத்திலிருந்து குருதி பீரிட்டது. கிடுக்கியில் மாட்டியிருந்த அவன் கை-கால்கள், தரையிறங்கும் விமானம் போல் மெல்லமெல்ல ஓய்ந்தன. பீரிட்ட குருதியை வாளியில் பிடித்துவிட்டு சரசரவெனத் தோலை உரித்தான். கை, கால், மார்பு, இரைப்பை, குடல்... என ஒவ்வொன்றையும் தனித்தனியே பிரித்து அதனதன் தொட்டிகளில் போட்டான்.

குழந்தைகள் அதிக விலைக்குப் போயின. நாகர் தீவின் நான்கு திசைகளையும் நோக்கி, உலகின் மிகத் தீனமான குரலில் அவை முறையிட்டன. எந்தக் கடவுளின் காதிலும் அவை விழவில்லை.

காபாலிகனைப் பார்த்ததும் பயங்கரன் கேட்டான்: “வாங்க வாங்க. என்ன வேணும் பாருங்க. எல்லாம் சுடச்சுட இருக்கு’’.

“எனக்கு உயிரோடு ஒண்ணு கொடு. நான் வீட்டுக்குப் போய் சுத்தம் பண்ணிக்கிறேன்.’’

“எப்படி எடுத்துப் போவீங்க? நான் கடைப் பையன்கிட்ட கொடுத்து அனுப்பவா?’’

“அப்படியே செய்’’ சொன்ன காபாலிகன், பக்கத்திலிருந்த மூத்தார் சூலனைப் பார்க்கச் சென்றான். அவர் சிலகாலமாக நரமாமிசம் உள்பட எந்த மாமிசமும் சாப்பிடவில்லை. காய் -பழம்-கீரை என்று சாப்பிடுவதாகக் கேள்விப்பட்டான். வியப்பு தாங்கவில்லை.

அந்த மூத்தாரைக் காபாலிகனுக்கு நன்றாகத் தெரியும். அவரிடமிருந்து அவன் கற்றவை ஏராளம். எந்த மனித உடலுக்கு என்ன சுவை? எந்த உறுப்பில் சுவை அதிகம்? அந்த உடலை வேகவைப்பதா - சுட்டுத் தின்பதா? தொட்டுக் கொள்ள எது சிறந்தது?... என விரிவாகச் சொல்லித் தந்தவர் அவரே. இப்போது ஏன் இப்படி?...

அவர் வீட்டுக்குள் காபாலி நுழைந்தபோது, அவர் ஒரு குழந்தையைக் கொஞ்சிக் கொண்டிருந்தார். அதைப் பார்த்ததும் அவனுக்கு மீண்டும் நாவூறியது. நிச்சயமாக நல்ல சரக்கு அது.

வணங்கிவிட்டுக் கேட்டான்.

“என்ன வீட்டிலேயே மனிதனை வளர்த்துப் பெரிதாக்கி விற்கப்போகிறீர்கள், அப்படித்தானே? நல்ல குட்டிதான்.’’

“இல்லை காபாலி. இவள் என் செல்ல மகள்.’’

“ஆஹஹ்ஹா. நல்ல வேடிக்கை. இதுவரைக்கும் உங்க வயிற்றுக்குள் எத்தனை மகள்கள் போனார்கள் என்று கணக்கே கிடையாதே.’’

“இப்போது நான் அப்படியில்லை, தெரியாதா?’’

“ஏன்?’’

“அது உயிர்க் கொலை’’

“இதென்ன திடீர் ஞானோதயம்?’’

“ஞானம்தான்’’

“உயிர்ப்படைப்பே ஒரு சுழற்சிதான். தன்னைவிடச் சிறியவற்றை ஒவ்வோர் உயிரினமும் தின்னுகின்றது. மண்ணிலிருந்து புழு வருகிறது. புழுவைக் கோழி தின்னுகிறது. கோழியை மனிதன் தின்னுகிறான். மனிதனை நாம் தின்பதில் என்ன தவறு?’’

“ஒன்றை ஒன்று தின்ன, உயிர்ச் சுழற்சி என்கிறாயே. ஒன்றை ஒன்று காப்பாற்ற உயிர்ச் சுழற்சி என்று நினைத்துப் பார்த்தாயா?’’

“இது நம் இனத்தின் அடையாளம். மனிதக் கறி தின்பவன்தான் சொரணையுள்ள நாகன்’’

“பகுத்தறிவாளன் இப்படி எண்ணமாட்டான். உயிர்க்கொலை ஒரு கொடிய பாவம்’’

“கொன்றால் பாவம் தின்றால் போச்சு’’

“நீ என்னைக் கொன்று தின்னேன். பாவம்தான் போய்விடுமே’’

“அய்யோ, அப்படிச் சொல்லாதீங்க’’

“நானும் இந்தக் குழந்தையும் வேறில்லை’’

அவர் இறக்கிவிட்ட குழந்தை, தத்தித் தத்தி நடந்து வந்தது. காபாலிக்கு மீண்டும் நாவூறியது. அவன் முத்தம் என்ற சொல்லுக்கு அர்த்தம் கண்டான்.

Saturday, May 15, 2004

முதியோரைத் தத்தெடுப்போம்!

முதியோர், கனிகளை ஒத்தோர். அவர்களுக்குள் ஏராளமான அனுபவ விதைகள் உள்ளன. அந்த விதைகளுக்குள் கற்பக மரங்கள் கருக்கொண்டுள்ளன. முதியோரைப் பேணிப் பாதுகாக்க வேண்டியது, சமுதாயத்தின் கடமை.

அக்டோபர் 1, உலக முதியோர் நாள். இதையொட்டி இன்றைய முதியோரின் நிலை குறித்து அறிய முதியோர் மருத்துவத்துறை வல்லுநர் டாக்டர் வ.செ.நடராஜனைச் சந்தித்தோம்.

இவர், இந்தியாவிலேயே முதன்முதலாக முதியோருக்காக, 1978ஆம் ஆண்டு, சென்னை அரசு பொது மருத்துவமனையில் தனிப்பிரிவைத் தொடங்கியவர். இதற்காக 1994இல் டாக்டர் பி.சி.ராய் தேசிய விருது பெற்றார். முதியோர் மருத்துவம் தொடர்பாக 12 நூல்களும் 55 ஆராய்ச்சிக் கட்டுரைகளும் படைத்துள்ளார். டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகம், அண்மையில் இவருக்குக் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கியது.

இவருடனான இந்த நேர்காணல், முதியோருக்கு மிகுந்த பயனளிக்கும் என நம்புகிறோம்.

?: இன்றைய முதியோரின் நிலை எப்படி இருக்கிறது?

நடராஜன்: 60 வயதுக்கு மேலானவரை முதியோர் என்கிறோம். இன்று இந்தியர்களின் சராசரி ஆயுள், 62 வயது. நாடு சுதந்திரம் அடைந்தபோது இந்தச் சராசரி, நாற்பதற்கும் கீழே இருந்தது. இப்போது கிட்டத்தட்ட இரட்டிப்பாயிருக்கிறது.

இன்று முதியோர், நல்ல ஆரோக்கியத்துடன் உள்ளனர். அக்காலத்தில் சாதாரண நோய் நொடியிலேயே முதியோர் இறக்கும் நிலைமை இருந்தது. இன்று 60 வயதில் மாரடைப்பு வந்தாலும் அவரைக் காப்பாற்ற முடிகிறது. எலும்பு முறிந்தால் குணமாக்க முடிகிறது. மனிதன், இறப்பைப் பற்றிக் கவலைப்படாத காலம் வந்துவிட்டது. வாழ்க்கைத் தரம் உயர்ந்துவிட்டது.

இந்தியாவில் 100 கோடி பேரில் முதியோர், 7 கோடிபேர். இன்னும் 5 ஆண்டில் இது, 14 கோடியாகும் வாய்ப்பிருக்கிறது. இந்தியர்களின் சராசரி ஆயுள் வளர்ந்தாலும் 100 வயதுக்கு மேல் இருப்போர் மிகவும் குறைவு.

?: முதியோருக்கு இருக்கும் சிக்கல்கள் என்னென்ன?

நடராஜன்: முதியோரில் 70 சதம் பேர் கிராமத்தில் வசிக்கிறார்கள். நகரத்தில் மட்டுமில்லை; கிராமத்திலும் கூட்டுக் குடும்பம் உடைந்து விட்டது. மூன்றில் ஒரு பங்கு முதியோர், வீட்டுக்கு வெளியே வாழ்கிறார்கள். வேலை வாய்ப்பு, குடும்பப் பிரச்சினை, இடவசதிக் குறைவு, பணமின்மை ஆகிய காரணங்களால் அவர்கள் வீட்டைவிட்டு வெளியேற வேண்டிய நிர்பந்தம் இருக்கிறது.

கண் தெரியாமல், காது கேட்காமல், நடக்க முடியாமல், தன் வேலையைத் தானே செய்யும் ஆரோக்கியமில்லாமல் மற்றவர்களைச் சார்ந்து வாழ்கிறார்கள். 12 சதம் முதியோர், முழுமையாக மற்றவரின் உதவியில் வாழ்கிறார்கள்.

முதியோரைப் பாதிக்கும் மிக முக்கிய பிரச்சினை, வறுமை. 40 சதம் முதியோருக்கு எந்தவித வருவாயும் இல்லை. கிராமத்தில் உள்ள முதியோருக்கு ஓய்வூதியமோ, வைப்பு நிதியோ கிடையாது. வாரந்தோறும் மேல்மருவத்தூரில் பார்க்கிறேன். முதியோர் பலருக்குக் கஞ்சி, கீரை, தேநீர் மட்டுமே கிடைக்கின்றன. இதுவே சாப்பாடு. கோயில் திருவிழா ஏதேனும் வந்தால்தான் நல்ல உணவு கிடைக்கும்.

முதியோருக்கு மன அழுத்தம், அதிகமாகி விட்டது. மற்றவர்கள், தங்களைக் கவனிக்க வில்லை, தம் பேச்சைக் கேட்கவில்லை என்ற உணர்வால் மன உளைச்சலுக்கு உள்ளாகிறார்கள்.

ஆண்களைவிடப் பெண்கள், சராசரியாக இரண்டு ஆண்டுகள் அதிகமாக உயிர் வாழ்கிறார்கள். இதனால் பெண் விதவை எண்ணிக்கை கூடுகிறது. மூன்று பெண் விதவைக்கு ஓர் ஆண்விதவை (3:1) என்ற விகிதம் இருக்கிறது.

?: முதியோருக்கு என்னென்ன நோய்கள் வருகின்றன?

நடராஜன்: முதுமை, நோய்களின் மேய்ச்சல் காடு எனப்படும். முதியோருக்கு சத்துணவுக் குறைவு, கண்புரைநோய், நெஞ்சில் சளி, கை-கால் புண், கொப்புளம், தோல்நோய்கள், காசநோய், மூட்டுவலி, ரத்தஅழுத்தம், நீரிழிவு, மாரடைப்பு, மலச்சிக்கல், எலும்பு வலுவிழத்தல் போன்றவை வருகின்றன.

ஒரு நோய்க்குச் சிகிச்சைபெற வந்தாலும் அவரிடம் பல நோய்களைக் கண்டுபிடிக்கிறோம். பல நோய்கள் இருந்தாலும் எல்லா நோய்களுக்கும் மருந்து தரமாட்டோம். மருந்து, முதுமையின் விரோதி. மருந்தின்றிக் குணப்படுத்தப் பார்ப்போம்.

?: மருந்தின்றி என்னென்ன நோய்களைக் குணப்படுத்தலாம்?

நடராஜன்: மூட்டுவலியென்று வந்தால் உடல் பருமனைக் குறைக்கச் சொல்வோம்.

அதிக ரத்தஅழுத்தத்தைக் குறைக்க, உப்பைப் குறைக்க வேண்டும். உடல் பருமனைக் குறைக்க வேண்டும். புகைபிடிப்பதை நிறுத்த வேண்டும்.

நீரிழிவுக்கு உணவுக் கட்டுப்பாடும் உடற்பயிற்சியும் தேவை.

சத்துணவுப் பற்றாக்குறையிருந்தால் ராகி, கீரை, காளான், கோதுமை, ஏதாவது பழம், 2 கோப்பை பால் உட்கொள்ளவேண்டும்.

?: என்னென்ன உடற்பயிற்சிகள் செய்யலாம்?

நடராஜன்: வேகமாக நடக்கலாம். 3 முதல் 5 கி.மீ அல்லது 45 நிமிடத்திலிருந்து ஒரு மணிநேரம் நடக்க வேண்டும். மிதிவண்டி ஓட்டுதல், நீச்சல், ஆசனம் ஆகியவையும் பயன்தரும்.

பெண்கள், பாய்விரித்துத் தரையில் படுத்து உடற்பயிற்சி செய்யலாம்.

பக்கவாதம் வந்தோர்- நடக்க முடியாதோர் ஆகியோர், உட்கார்ந்தே உடற்பயிற்சி செய்யலாம். அரைமணி நேரம் தொடர்ந்து செய்யமுடியாவிடில் விட்டுவிட்டுச் செய்யலாம். காலை-மாலையில் வெறும் வயிற்றில் செய்வது நல்லது.

?: முதியோர் மருத்துவம் என்பது என்ன?

நடராஜன்: குழந்தை மருத்துவத்தைப்போல முதியோர் மருத்துவம், ஒரு தனித்துறை. 1914இல் டாக்டர் நாய்ஸ்சர் என்பவர், இதைத் தொடங்கினார். உடல்நிலை மட்டுமின்றி மனநிலை, குடும்பநிலை, சமூகநிலை என அனைத்தையும் ஆராய்ந்து அதற்கேற்பச் சிகிச்சை அளிக்கவேண்டும். இது ஒரு தனிக் கலை.

?: முதியோருக்கு நீங்கள் சொல்லும் செய்தி என்ன?

நடராஜன்: நடுத்தர வயதில் பணம் சேமித்துவிட வேண்டும். சிக்கனமாக இருக்கவேண்டும். பிள்ளைகளுக்குத் தாம்தூம் என்று கல்யாணம் செய்யக்கூடாது. பையனையோ பெண்ணையோ எந்தப் பெற்றோரும் நம்பாதீர்கள். உங்கள் சொத்தை நம்புங்கள். சொத்துக்காகவாவது சொந்தம் இருக்கும். கடைசி வரையில் சொத்தைப் பிரித்துக் கொடுத்துவிட வேண்டாம். நகைகளை எல்லாம் லாக்கரில் (பாதுகாப்புப் பெட்டகம்) வையுங்கள். நாய் போன்ற செல்லப் பிராணிகளை வளருங்கள். பொழுதும் போகும், பாதுகாப்பாகவும் இருக்கும்.

?: முதியோரைத் தத்தெடுக்கலாமே?

நடராஜன்: ஆம். அவசியம் செய்யவேண்டும். “ஹெல்ப் ஏஜ் இந்தியா’’ அமைப்பில் அப்படி ஒரு திட்டம் வைத்திருக்கிறார்கள். ஒரு முதியவருக்குப் பத்தாண்டு ஆகும் செலவைப் பெற்றுப் பாதுகாத்து வருகிறார்கள். பள்ளி - கல்லூரி மாணவர்கள், முதியோர் இல்லம் சென்று உதவிசெய்ய வேண்டும். முதியோருக்கு உதவுதல், ஓர் இயக்கமாக வளரவேண்டும்.

நேர்காணல்: அண்ணா கண்ணன்

Monday, May 10, 2004

திருமணம் : சில அனுபவங்கள்

ஆங்கிலத்திலிருந்து தமிழில் : அண்ணா கண்ணன்

நான் என் மனைவியிடம் ஆண்டுக் கணக்காகப் பேசுவதில்லை. அவள் பேசும்போது நான் குறுக்கிடுவதில்லை.
-ரோட்னி டேஞ்சர்ஃபீல்டு

இரண்டு மனைவியருடனும் எனக்குத் துரதிருஷ்டம்தான். முதலாமவள் விலகிவிட்டாள். இரண்டாமவளோ கூடவே இருக்கிறாள்.
-பாட்ரிக் முர்ரே

மகிழ்ச்சியான மணவாழ்வை விரும்பும் கணவன், தன் வாயை மூடவும் காசோலைப் புத்தகத்தைத் திறந்துவைக்கவும் கற்கவேண்டும்.
-கிரௌச்சோ மார்க்ஸ்

தன் எதிரியுடன் உறங்கும் யுத்தம், திருமணம் மட்டுமே.
-யாரோ

திருமணத்துக்குப் பிறகு, கணவனும் மனைவியும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் ஆகிறார்கள். அவர்கள் ஒருவரையொருவர் சந்திப்பதில்லை. ஆனால், சேர்ந்தேவசிக்கிறார்கள்.
- ஹேமந்த் ஜோஷி

எப்படியானாலும் திருமணம் புரிந்து கொள். நல்ல மனைவி கிடைத்தால் மகிழ்வாய். அப்படியில்லாவிடில் தத்துவஞானி ஆகிவிடு வாய்.
- சாக்ரடீஸ்

என்னால் பதில் அளிக்கவே முடியாத ஒரு மாபெரும் கேள்வி. ""ஒரு பெண் விரும்புவது என்ன?''
-புரூட்

கடவுள், மனிதனிடம் நெருப்பை அளித்தார். மனிதன், தீயணைக்கும் கருவியைக் கண்டுபிடித்தான். அவர், காதலை அளித்தார். அவன், திருமணத்தைக் கண்டுபிடித்தான்.
-யாரோ

என் மனைவிக்காகச் சில சொற்கள் என்னிடம் உண்டு. எனக்காக என் மனைவியிடம் சில பத்திகள் உண்டு.
-யாரோ

நான் தீவிரவாதத்தைப் பற்றிக் கவலைப்படுவதில்லை. எனக்குத் திருமணமாகி இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டன.
-சாம் கினிசன்

மின்னணு வங்கியைவிட மிக வேகமாகப் பணத்தைப் பரிமாற்ற ஒரு வழி உண்டு. அதன் பெயர், திருமணம்.
-ஜேம்ஸ் ஷோல்ட் மெக்காவ்ரன்

ஒரு வெற்றிகரமான திருமணத்தின் ரகசியம், அதிக நேரம் வீட்டில் இல்லாதிருப்பதே.
-காலின் சாப்மன்

Saturday, May 08, 2004

வளர்ந்த இந்தியா : நாம் என்ன செய்யவேண்டும்?

- மாண்புமிகு ஆ.ப.ஜெ. அப்துல்கலாம், இந்தியக் குடியரசுத் தலைவர்
ஆங்கிலத்திலிருந்து தமிழில் - அண்ணா கண்ணன்

இந்தியாவுக்காக என்னிடம் மூன்று இலக்குகள் உண்டு. நமது மூவாயிரம் ஆண்டுக்கால வரலாற்றில் உலகெங்கிலுமிருந்து மக்கள் இங்கு வந்தார்கள்; நமக்குள் பிளவுண்டாக்கினார்கள்; நமது நிலங்களைக் கைப்பற்றினார்கள்; நமது மனங்களை வெற்றி கொண்டார்கள். அலெக்சாண்டரிலிருந்து கிரேக்கர்கள், துருக்கியர்கள், மொகலாயர்கள், போர்த்துகீசியர்கள், பிரித்தானி யர்கள், பிரெஞ்சு மக்கள், டச்சுக்காரர்கள். எல்லோரும் இங்கு வந்தார்கள்; நம்மைக் கொள்ளை அடித்தார்கள்; நம் செல்வங்களை யெல்லாம் எடுத்துச் சென்றார்கள். இத்தனைக்கும் இந்தத் தீங்குகளை நாம் எந்த நாட்டுக்கும் இழைத்ததில்லை. நாம் எவரையும் வெற்றிகொண்டதில்லை.

நாம் அவர்களுடைய நிலத்தையோ, கலாச்சாரத்தையோ, வரலாற்றையோ, கைப்பற்றியதில்லை. நமது வாழ்க்கை முறையை அவர்கள் மீது திணிக்க முயன்றதில்லை. ஏன்? நாம் மற்றவர்களின் சுதந்திரத்தை மதிப்பவர்கள். எனவேதான் என் முதலாவது இலக்காகச் சுதந்திரம் அமைகிறது. சுதந்திரப் போரைத் தொடங்கிய 1857-இல் இந்தியா தன் முதல் இலக்கைப் பெற்றது. இந்தச் சுதந்திரத்தை நாம் கட்டாயம் பாதுகாக்க வேண்டும்; வலுப்படுத்த வேண்டும்; வளர்க்க வேண்டும். நாம் சுதந்திரமாக இல்லாவிடில் எவர் ஒருவரும் நம்மை மதிக்க மாட்டார்கள்.

இந்தியாவுக்கான என் இரண்டாவது இலக்கு, வளர்ச்சி. கடந்த ஐம்பது ஆண்டுகளாக நாம் வளரும் நாடாக இருக்கிறோம். நாம் நம்மை வளர்ந்த நாடாக்குவதற்கு இதுவே சரியான தருணம். ஒட்டு மொத்த வளர்ச்சி விகிதக் கணக்குப்படி உலகின் முன்னணி நாடுகள் ஐந்தனுள் இந்தியாவும் ஒன்று. பல துறைகளில் நாம் 10 விழுக்காடு வளர்ச்சி விகிதத்தைப் பெற்றிருக்கிறோம். நமது வறுமை நிலை மாறி வருகிறது. இன்று நமது சாதனைகள் உலக அளவில் அங்கீகரிக்கப்படுகின்றன. ஆனால், நம்மை வளர்ந்த நாடாகக் காணு வதற்குரிய தன்னம்பிக்கையே இப் போதைய பற்றாக்குறையாய் இருக்கிறது. நான் சொல்வது தவறா?

மூன்றாவது இலக்கு, என்னிடம் உண்டு. இந்தியா, உலக அளவில் எழுந்து நிற்கவேண்டும். இந்தியா எழுந்திருக்காவிட்டால் எவரும் நம்மை மதிக்கமாட்டார்கள். வலிமையே வலிமையை மதிக்கும். படைவலிமை மட்டு மல்லாது பொருளாதார வலிமை யையும் நாம் பெற்றாகவேண்டும். இரண்டும் இணைந்து வளர வேண்டும்.

ஏன் இங்குள்ள ஊடகம், எதிர்மறையாக இருக்கிறது? நமது சாதனைகளையும் சொந்த வலிமை களையும் அங்கீகரிக்க ஏன் நாம் கலங்குகிறோம்? நம்முடையது ஒரு மகத்தான நாடு. நம்மிடம் வியப் பூட்டும் பற்பல வெற்றிக் கதைகள் உண்டு. ஆனால், அவற்றை அங்கீ கரிக்காமல் புறக் கணிக்கிறோம். ஏன்? பால் உற்பத்தியில் நாம் முதல் இடத்தில் இருக்கிறோம். விரும்பியவாறு இயக்கும் செயற்கைக் கோள்களில் நாம் முதலிடம் வகிக்கிறோம். கோதுமை உற்பத்தியிலும் அரிசி உற்பத்தியிலும் நாம் இரண்டாம் இடத்தில் இருக்கிறோம்.

டாக்டர் சுதர்சனைப் பாருங்கள். பழங்குடியினர் கிராமங்களைத் தன்னிறைவும் தன் இயக்கமும் கொண்டவையாக அவர் மாற்றிக் காட்டியிருக்கிறார். இவைபோன்ற இலட்சக்கணக்கான சாதனைகள் இருக்கின்றன. ஆனால் நமது ஊடகங்கள், அழிவுகள், தோல்விகள், கெட்ட செய்திகளையே மீண்டும் மீண்டும் காட்டுகின்றன. டெல் அவிவ் நகரில் இருந்தபோது நான் இஸ்ரேலிய செய்தித்தாள் ஒன்றை வாசித்துக்கொண்டி ருந்தேன். அதற்கு முதல் நாள்தான் ஏராளமான தாக்குதல் களும் குண்டுவீச்சுகளும் மரணங்களும் நிகழ்ந்திருந்தன. ஹமாஸ் இயக்கம், முழுதும் தடுக்கப்படும் நிலையில் இருந்தது. ஆனால், அந்தச் செய்தித்தாளின் முதல் பக்கத்தில் படத்துடன் ஒரு செய்தி இருந்தது. ஒரு யூத கனவான், ஐந்து ஆண்டுகளில் தன் பாலை நிலத்தைப் பழத்தோட்டமாகவும் மாபெரும் தானிய விளைநிலமாகவும் மாற்றியிருந்த காட்சியை அதில் கண்டேன். அது, ஒவ்வொருவரையும் விழிப்படையச் செய்யும் அகத்தூண்டுதல் மிக்க புகைப்படம். இரத்தத்தை உறையவைக்கும் படுகொலைகள், குண்டுவீச்சுகள், மரணங்கள் பற்றிய செய்திகள், செய்தித்தாளின் உள்ளே இருந்தன; மற்ற செய்திகளை மறைத்தபடி.

இந்தியாவில் நாம் மரணம், நோய், பயங்கரவாதம், குற்றம் ஆகியவை பற்றி மட்டுமே படிக்கிறோம். ஏன் நாம் இவ்வளவு தூரம் எதிர்மறையாக இருக்கிறோம்? இன்னொரு கேள்வி: ஏன் நாம் வெளிநாட்டுச் சிந்தனைகளால் நிரம்பி யிருக்கிறோம்? நமக்கு வெளிநாட்டுத் தொலைக்காட்சிகள் வேண்டியிருக்கின்றன; வெளிநாட்டுச் சட்டைகள் நமக்குத் தேவை; வெளிநாட்டுத் தொழில்நுட்பத்தை நாம் நாடியிருக்கிறோம்.

ஏன் நமது அனைத்தும் இறக்குமதிகளால் நிறைந் துள்ளன? தன்னம்பிக்கையிலிருந்து சுயமரியாதை உருவாகும் உண்மையை நாம் ஏன் உணரவில்லை?

நான் இந்த ஐதராபாதில் இந்த உரையை ஆற்றவரும் போது, 14 வயதுச் சிறுமி ஒருத்தி, என் கையொப்பத்தைக் கேட்டாள். நான் அவளிடம் "உன் வாழ்வின் இலக்கு எது?' என்று கேட்டேன். "நான் வளர்ந்த இந்தியாவில் வாழ விரும்புகிறேன்' என்று அவள் சொன்னாள். அவளுக்காக நீங்களும் நானும் வளர்ந்த இந்தியாவை உருவாக்கவேண்டும். இந்தியா ஒரு வளரும் நாடில்லை; மிக மிக வளர்ந்த நாடு. இதை நீங்கள் எல்லோருக்கும் அறிவியுங்கள்.

உங்களால் 10 நிமிடங்கள் ஒதுக்கமுடியுமா? இப்போது சொன்னதற்குப் பழிக்குப் பழிவாங்க என்னை அனுமதியுங்கள். நாட்டுக்காக ஒரு பத்து நிமிடங்கள் உங்களிடம் உண்டா? ஆமெனில் தொடர்ந்து படியுங்கள். இல்லாவிட்டால் உங்கள் விருப்பம்.

நமது அரசு திறமையற்றது என நீங்கள் சொல்கிறீர்கள்.
நமது சட்டங்கள் மிகவும் பழையவை என நீங்கள் சொல்கிறீர்கள். நமது நகராட்சி, குப்பைகளை அள்ளுவ தில்லை என நீங்கள் சொல்கிறீர்கள்.

தொலைபேசிகள் வேலை செய்வதில்லை; ரெயில் வண்டிகள் சிரிப்பூட்டுகின்றன; நம்முடையவை, உலகிலேயே மிகவும் மட்டமான விமானப் போக்குவரத்து, அஞ்சல்கள் உரியவரைச் சென்றடைவதேயில்லை.... என்றெல்லாம் நீங்கள் சொல்கிறீர்கள். நாடு பள்ளங்களால் நிரம்பியுள்ளதாகவும் நாய்களுக்கு உணவாகி வருவதாகவும் நீங்கள் சொல்கிறீர்கள். நீங்கள் சொல்கிறீர்கள், சொல்கிறீர்கள், சொல்கிறீர்கள். இவற்றுக்காக நீங்கள் என்ன செய்தீர்கள்?

சிங்கப்பூரில் ஒருவரை எடுத்துக் கொள்ளுங்கள். அவருக்கு உங்கள் பெயரைக் கொடுங்கள். உங்கள் முகத்தைக் கொடுங்கள். நீங்கள் விமான நிலையத்திலிருந்து வெளியே வாருங்கள். நீங்கள் உலகத் தரத்தில் இருக்கிறீர்கள். சிங்கப்பூரில் சிகரெட்டுத் துண்டுகளைச் சாலைகளில் வீசி எறிய முடியாது. கடைகளின் முன்நின்று சாப்பிட முடியாது. மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை பழத்தோட்டச் சாலை வழியே நீங்கள் காரோட்டினால் நீங்கள் 5 சிங்கப்பூர் டாலர் (சுமார் ரூ.60/-) செலுத்துவீர்கள். அவர்களுடைய மறைமுக முடிச்சுகளுக்காகப் பெருமையடைவீர்கள்.

உணவகத்திலோ பேரங்காடியிலோ அதிக நேரம் இருக்கவேண்டி இருந்தால், உங்கள் வாகன நிறுத்துமிடத்திற்கு வந்து வாகன நிறுத்துச் சீட்டைப் புதுப்பித்துச் செல்வீர்கள். சிங்கப்பூரில் நீங்கள் ஏதும் சொல்வதில்லை. மற்றவரை நோக்கி உங்கள் விரல் நீளுவதில்லை. துபாயில் ரமளான் காலத்தில் பொது இடத்தில் உண்ணுவதற்கு நீங்கள் துணிவதில்லை.

ஜெட்டாவில் தலையை மூடாமல் வெளியே செல்ல நீங்கள் துணிவதில்லை.

"என் எஸ்.டி.டி. மற்றும் ஐ.எஸ்.டி. அழைப்புகளுக்கான கட்டணத்தை வேறெவர் தொலைபேசிக் கட்டணத்தி லேனும் சேர்த்துவிடுங்கள்' என இலண்டன் தொலைபேசி இணைப்பக ஊழியரை, 10 பவுண்டுகளுக்கு (ரூ.650/-) நீங்கள் விலைக்கு வாங்கத்
துணிவதில்லை.

வாஷிங்டனில் மணிக்கு 55 மைல்களுக்கு மேலான வேகத்தில் (மணிக்கு 88 கி.மீ) நீங்கள் பயணிக்கத் துணிவதில்லை. அப்படிப்போய், போக்குவரத்துக் காவலரிடம் மாட்டினால் "ஜான்தா ஹை மெய்ன் கவுன் ஹுன்' (நான் யாரென்று உனக்குத் தெரியுமா?) என நீங்கள் கேட்பதில்லை. "நான் இப்பேர்க்கொத்தவரின் மகன். இந்தா இரண்டு ரொட்டித் துண்டுகளை எடுத்துக் கொண்டு தொலைந்து போ' எனச் சொல்ல நீங்கள் துணிவதில்லை.

ஆஸ்திரேலியா, நியூசிலாந்தின் கடற்கரைகளில் குப்பைத் தொட்டி அல்லாத வேறெங்கும், காலிசெய்த தேங்காய்களைத் தூக்கிப்போட நீங்கள் துணிவதில்லை.

டோக்கியோவின் வீதிகளில் நீங்கள் ஏன் வெற்றிலை எச்சிலைத் துப்புவதில்லை?

பாஸ்டனில் தேர்வெழுத ஆள்மாறிகளை நீங்கள் அனுப்புவதில்லை. போலிச் சான்றிதழ்களை நீங்கள் விலைக்கு வாங்குவதில்லை. இப்போதும் நாம் உங்களைப் பற்றித்தான் பேசிக்கொண்டிருக்கிறோம்.

வெளிநாடுகளில் வெளிநாட்டு முறையை ஏற்று மதிக்கிற நீங்கள் உங்கள் மண்ணில் மதிப்பதில்லை. இந்திய மண்ணில் இறங்கிய நொடியிலேயே காகிதங்களையும் சிகரெட்டுத் துண்டுகளையும் வீசி எறிகிறீர்கள். வேறொரு நாட்டின் உணர்வுபூர்வமான, பாராட்டத்தக்க குடிமகனாக உங்களால் இருக்க முடிகிறதெனில் ஏன் அதேமாதிரி இந்தியாவில் இருக்கமுடியவில்லை?

நாம் வாக்களிக்கச் செல்கிறோம்; ஓர் அரசைத் தேர்ந்தெடுக்கிறோம்; அதன் பிறகு நம் எல்லாப் பொறுப்பு களையும் இழந்து விடுகிறோம். நமது பங்களிப்பு ஒட்டுமொத்த மாக மோசமாக இருந்த போதும் அரசு எல்லாவற்றையும் செய்ய வேண்டு மென்று எதிர்பார்க் கிறோம். ஆனால், எல்லா இடங்களிலும் குப்பைகளைப் போடுவதை நாம் நிறுத்தப்போதில்லை. தெருவில் கிடக்கும் ஒரு துண்டுச் சீட்டையும் எடுத்துக் குப்பைத் தொட்டியில் நாம் போடப்போவதில்லை. ரெயில்வே துறை, தூய கழிவறைகளை அளிக்கவேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். ஆனால், முறையாகக் கழிவறை களைப் பயன்படுத்துவதை நாம் கற்கப் போவதில்லை. இந்தியன் ஏர்லைன்சும் ஏர் இந்தியாவும் சிறந்த உணவையும் கழிவறை வசதியையும் அளிக்கவேண்டும் என்று விரும்புகிறோம். ஆனால், ஒரு சிறிய வாய்ப்பிலும் அற்பசொற்பமாகத் திருடுவதை நாம் விடப்போவதில்லை. இது, பொதுப்பணிகள் புரியும் ஊழியர்களுக்கும் பொருந்தும். இதுவே எரியும் பிரச்சினைகளான பெண்கள், வரதட்சிணை, பெண் குழந்தை.... மற்றும் பிறருக்கு வரும்போது நாம் சத்தமாக விவாதிக்கிறோம்; எதிர்க்கிறோம். ஆனால், நமது வீட்டுக்குள், இதற்கு எதிர்மாறாகச் செயல்படுவதைத் தொடர்ந்துகொண்டே இருக்கிறோம். இதற்கு நாம் கூறும் காரணம் என்ன? ""ஒட்டுமொத்த சமூகமும் மாற வேண்டும்.'' என் மகனின் வரதட்சணை வாங்கும் உரிமையைப் பேணுவேனாயின் இது
எப்படி சாத்தியம்? ஆக, இந்த அமைப்பை மாற்றப் போவது யார்?

ஒரு சமூக அமைப்பானது, எப்படி இருக்கவேண்டும்? நமக்கு மிகவும் வசதியானதாக, நமது அண்டை வீட்டாருக்கு வசதியாக, மற்ற வீடுகளுக்கு, பிற மாநகரங்களுக்கு, பிற சமுதாயங்களுக்கு மேலும் அரசுக்கு வசதியாக இருக்கவேண்டும். ஆனால் நிச்சயமாக, எனக்கும் உங்களுக்கும் அல்ல. ஒரு பாதுகாப்பான பட்டுப்பூச்சிக் கூட்டுக்குள் நம்மையும் நமது குடும்பங்களையும் பூட்டிக் கொண்டு, தொலைதூரத்தில் உள்ள நாடுகளைப் பார்த்தபடி, திருவாளர் தூய்மைக்காகக் காத்துக்கொண்டு, ஒரு கம்பீரமான கரத்தின் வழியே அதிசயங்கள் நிகழ்வதை எதிர்பார்த்திருக்கிறோம். அல்லது நாட்டை விட்டு ஓட்டமெடுக்கிறோம்.

சோம்பல் நிறைந்த கோழையைப்போல அச்சங்களால் "நாய்வேட்டை'யாடப்பட்டு நாம் அமெரிக்காவுக்கு ஓடுகிறோம். அவர் களின் புகழில் சுகமாகக் குளிர்காய்ந்தபடி அவர்களின் அமைப்பைப் போற்றுகிறோம். நியூயார்க், பாதுகாப்பை உறுதிசெய்யாத போது, நாம் இங்கிலாந்துக்கு ஓடுகிறோம். இங்கிலாந்தில் வேலையில்லாத் திண்டாட்டத்தை அனுபவித்தபிறகு, அடுத்த விமானத்திலேயே வளைகுடாவுக்குப் பறக்கிறோம். வளை குடாவில் போர் வந்துவிட்டால் இந்திய அரசு நம்மைக் காப்பாற்றித் தாயகத்துக்கு அழைத்து வரவேண்டுமென்று வற்புறுத்து கிறோம். எல்லோரும் துஷ்பிர யோகம் செய்கிறோம். நாட்டைக் கற்பழிக்கிறோம். நமது சமூக அமைப்பை மேம்படுத்த, எவரும் சிந்திக்க வில்லை. நமது மனசாட்சி, பணத்துக்காக அடகு வைக்கப்பட்டுள்ளது.

அன்பார்ந்த இந்தியர்களே! இந்தக் கட்டுரை, அதிகபட்ச சிந்தனைகளைத் தூண்ட வேண்டும்; நம்மை மகத்தான ஆத்ம பரிசோதனைக்கு அழைக்கவேண்டும்; நமது மனசாட்சியைக் குத்தவும் வேண்டும்..... அமெரிக்கர்களுக்கான ஜே.எஃப். கென்னடியின் சொற்களை இந்தியர்களுக்காக நான் எதிரொலிக்கிறேன்....

அமெரிக்காவும் இதர மேலை நாடுகளும் இன்றுள்ள நிலைக்கு இந்தியாவை உயர்த்த நாம் என்ன செய்யவேண்டும்? இந்தியாவுக்காக நம்மால் என்ன செய்ய முடியும் என்று உங்களையே கேளுங்கள். அதைச் செய்யுங்கள்.

இந்தியாவிற்கு நம்மிடமிருந்து எது தேவையோ அதைச் செய்வோம். நகைச் சுவைகளுக்கும் திணிப்பு அஞ்சல்களுக்கும் மாற்றாக, எல்லா இந்தியர்களுக்கும் இந்த மின்னஞ்சலை மடைமாற்றம் செய்யுங்கள். நன்றி.

Friday, May 07, 2004

ப்ரியம் எழுதிய அலைகளின் மீதொரு நிழல்

மிக வசதியாக ஆசிரியர் அல்லது வங்கி ஊழியராய் இருந்துகொண்டு இலக்கியம் படைப்பது ஒரு வகை. இங்கு உபரி நேரம் கிடைக்கும். ஆனால், எழுத்தோடு தொடர்பில்லாத - கடும் உழைப்பை வேண்டும் பணிகளில் இருப்போர் இலக்கியம் படைப்பது, வேறொரு வகை. தையல்காரராய் இருந்தபடி கவிதை படைத்துவரும் ப்ரியம், இரண்டாம் வகையைச் சேர்ந்தவர்.

ப்ரியம் கவிதைகளின் முதல் தொகுப்பு, அலைகளின் மீதொரு நிழல் என்ற தலைப்பில் வெளியாகியுள்ளது. இதில் 82 கவிதைகள் உள்ளன. இதன் முதல் கவிதையே பள்ளியிருந்து நின்று தையல் வேலைக்கு வந்தது பற்றித்தான்.

பிரமிளின் தொடர்ச்சியாய்த் தன்னைக் கருதும் ப்ரியத்தின் மொழி, மிகவும் எளிமையானது. எவரும் புரிந்துகொள்ளக் கூடியது.

பூனை எப்போது திருட்டுப் பூனையாயிற்று? என்ற இவரின் கேள்வியே இதற்குச் சிறந்த எடுத்துக்காட்டு.

கவிதையைக் காட்சிப்படுத்துவதில் ப்ரியம், பெரிய அளவில் வெற்றி பெற்றிருக்கிறார். இவரின் ஒவ்வொரு கவிதைக்குள்ளும் பல கதைகள் அமைந்திருக்கின்றன. "சீரியல் லைட்"டில் சித்திரம் வரையும் உத்தி உண்டு. அரசியல் மற்றும் கோயில் விழாக்களில் இது,
இன்றியமையாததாகிவிட்டது. அவற்றுக்கு மின்சாரம் எங்கிருந்து போகிறது என்பதை யாருமே கண்டுகொள்வதில்லை.

பயமுறுத்தும் மாகாளியை, சீரியல் விளக்குகளில் அமைக்கிறான் ஒருவன். பயமில்லையோ அவனுக்கு?

ஆயிரம் ஓயர் சூடிய மாகாளியிடமும் உன்னிடமும்
இணைப்புகளில்
அடிக்கடி பணியாற்றும் தோழனை
அழைத்துக் கேட்டேன்
என்ன தோழா இந்த வேலை...
ஓ... அதுவா ஜூஜூபி
என்கிறான்.

பேச்சு வழக்கைப் பயன்படுத்திக் கவிதைக்கு உயிர்த்துடிப்பு ஊட்டுகிறார், ப்ரியம்.

நேரில் நிற்கிற தேவதையைவிட ஒரு கற்பனைப் பெண், மிகவும் கவர்ச்சியானவள்.

பாரதியின் கண்ணம்மா, கலீல் ஜிப்ரானின் செல்மா, கலாப்ரியா & நகுலனின் சுசீலா ..... எனப் படைப்பாளர்கள் ஒரு குறிப்பிட்ட பெண்ணை முன்வைத்துப் படைப்பை வெற்றிகரமாக நகர்த்தியிருக்கிறார்கள். அந்த வரிசையில் கவிஞர் பிரியம் அவர்களின் சௌம்யா என்ற பாத்திரம், படிப்பவர் மனத்துள் ஒரு சுகமான கதகதப்பை ஏற்படுத்துகிறது.

"பாலினம்" என்ற கவிதையில் முதல் அறிமுகம்.

"மல்லிகை பறிக்கும் சாக்கில் நாற்காலி மீது
நிற்கும் சௌம்யா தன் சட்டைக்குள்
முலைகளை மூடி முகத்தைத் திருப்புவாள்"


அதன் பிறகு சௌம்யா வரும் இடமெல்லாம் அவள் நாற்காலி மீது நிற்கும் காட்சியை மறக்க முடியவில்லை.

"அறைக்குள் யாரேனும் நடமாடுகிறார்களா
பாரேன் என்கிறேன்
யாரிருக்கப் போகிறார்கள் உன்னைத் தவிர
என்கிறாள் சௌம்யா"
(அவன்)

"கிரவுண்டில் ஸ்கிப்பிங்
பிராக்டிசின்போது சௌம்யாவை
யாரும் பார்க்கக்கூடாது...
(சூர்யம்)

"கனியா முலைகளை கவனி
திரட்சி கொண்ட யோனிப் பிசுபிசுப்பை அறி
சதை புரளும் யுத்தத்தில் வெற்றி
கொள்ளேன் எûத் தாழம்பூ வாசத்துடன் தழுவுகிறாய்"

"சௌம்யா! உன் மர்மக் கைகளின்
ரேகைகளில் பதிந்த வாசகத்தை
வாசிக்கப் பழகு"
(அ. விஸ்வ மித்திரம்)

"பம்பு செட்டில் குளிக்கப் போன
சௌம்யாவை
நனைய, நனைய, சீண்டி...
வரப்போர மேட்டில் தலைப்பாகை தெரிந்தவுடன்
தலைதெறிக்க ஓடிவந்தாச்சு"
(லீவு முடிந்து பள்ளி திரும்பும் படலம்)

"ஒரு பதில் சொல்லேன் சௌம்யா" என்ற தலைப்பிலேயே ஒரு கவிதை உள்ளது. அது,

"திரும்பத் திரும்ப இக்கவிதைகளை
காணும் நீ என்னதான்
சொல்லப்போகிறாய்"
என முடிகிறது.

நேரடியாகப் பெயர் வராவிட்டாலும் பெண்ணின் உறுப்பெழில் வர்ணனை வரும் இடமெல்லாம் சௌம்யாவின் ஞாபகம் வருகிறது. எடுத்துக்காட்டுக்கு ஒன்று.

"நான் மலர்ந்துவிட்டேன் என
வாயாடி மலரிரண்டு வெள்ளை பனியனுக்குள்
அலட்டுகின்றன"
(நாய்க்குடை)

சௌம்யாவின் அழகை மட்டுமில்லை, கோவிலில் இருக்கும் காளியம்மையின் பேரழகையும் பிரியம் கண்டிருக்கிறார்.

"மஞ்சளரைச் சீலைக்குள் மெருகு குலையா
முலைகள் பொங்க
இடைமீறும் பிருஷ்டங்கள் தரை பரவி
வலக்காலை நடுவில் பொருத்திய
வண்ணம்
வனப்புடன் தான் அமர்ந்திருக்கிறாள்.
வந்தபாடில்லை பரமேச்வரன்!"
(அம்மை)

"மறுசிருஷ்டி" கவிதையில், கோரக் கற்சிலையாய் நின்ற காளிக்குச் சுடிதார். துப்பட்டா, ஷாம்பு குளியல், ஒற்றை ரோஜா, குதிகால் உயர்ந்த காலனி அணிவித்து நவநாகரிகப் பெண்ணாய் மாற்றியிருப்பது எவரும் செய்யாத புதுமை.

பெண் வர்ணனை மட்டும்தான் இந்தப் புத்தகத்தில் இருக்கிறதா? அப்படியில்லை. விரிந்து பரந்த உலகைக் குறும்படங்களாய்த் தன் கவிதைகளில் பதிவு செய்துள்ளார், ப்ரியம்.

தேநீரைப்பற்றி ஒரு கவிதை படைத்துள்ளார். ஒவ்வொரு தேநீர்க் கடையிலும் ஒட்டிவைக்கப்படவேண்டிய அந்தக் கவிதை.

"தேநீர் வாழ்க!
தேநீர் குடித்தவர் வாழ்க!
தேநீர் கொடுத்தவர் வாழ்க!
தேநீரால் தொடங்கிய
நட்பும் உறவும் காதலும் வாழ்க!
தேநீரைப் பருகாது விலகுபவர் ஒழிக!
தேநீருக்காக இனி கவிதைகள் எழுதுபவர் யாவரும் வாழ்க!
தேநீர் ஒன்றே பேராதரவாம்
எளியோர்க்கு. அதனால் தேநீர்க்
கடைகள் வாழ்க.


இதேபோன்று மிதிவண்டியின் பெருமை களைப் பாடும் ஒரு கவிதை உள்ளது. அது, எல்லா மிதிவண்டிக் கடைகளிலும் ஒட்டிவைக்க ஏற்றது.

"சைக்கிள் ஒரு தத்துவமாம். பூக்கள்போல அதுவும் ஒன்றாம். எளிமையான வாழ்விற்கு எடுத்துக்காட்டாம்.
சைக்கிள்களால் வாழ்பவர் புவியில் பலகோடி. சைக்கிளைப்போல வாழ்பவர் புவியில் சிலகோடி. சைக்கிளை நீயும் வாழ்த்துப்பா" (வாழ்த் துப்பா) என அக்கவிதை முடிகிறது.

எளிய தமிழில் எதார்த்த வாழ்வை எடுத்துரைக்கும கவிஞர் பிரியம் அவர்களின் கவிதைகள், அனைவரும் படித்து மகிழத்தக் கவை. நவீன தமிழுக்கு அளவெடுத்துக் கொள்ளுங்கள், இந்த நூலிலிருந்து.


நூல்: அலைகளின் மீதொரு நிழல்
ஆசிரியர்: பிரியம்
விலை: ரூ. 35/-

கிடைக்குமிடம்: எழில், 21, மாதவரம் நெடுஞ்சாலை, (வடக்கு) பெரம்பூர், சென்னை - 600 011.


வாரசுரபி - மே 14, 2004

Thursday, May 06, 2004

பன்முகநாதன்

- அண்ணாகண்ணன்

தினத்தந்தியில் 40 ஆண்டுகள் செய்தி ஆசிரியராய் இருந்தவர்; புதின எழுத்தாளர்; வரலாற்று நூலாசிரியர் மனிதநேயம் மிக்க பண்பாளர்... எனப் பன்முகநாதனாய் விளங்குபவர், ஐ. சண்முகநாதன்.

“ஒரு தமிழன் பார்வையில் 20ஆம் நூற்றாண்டு’’ என்ற நூலில் மூலம் ஏற்கனவே இவர் உலகின் கவனத்தை ஈர்த்துள்ளார். இப்போது கற்காலம் முதல் கம்ப்யூட்டர் காலம்வரை உலக வரலாறு என்ற புதிய நூலைப் படைத்துள்ளார். இது விரைவில் வெளிவர உள்ளது.

உலகம், இந்தியா, தமிழ்நாடு என 3 பகுதிகளாக இந்நூல் விரிந்துள்ளது. வரலாற்றில் புகழ்பெற்ற மனிதர்கள், சம்பவங்கள், நாடுகளைப் பற்றி எளிய நடையில் கதைபோல் விவரிக்கிறார் நூலாசிரியர்.

“மாவீரன் நெப்போலியன் சிறைவைக்கப் பட்ட ஹெலீனாத்தீவின் நீளம் 15கி.மீ அகலம் 10கி.மீ என்ற செய்தியை வாசிக்கும்போது அந்த மாமன்னன் ஆண்டது எத்தனை பெரிய நிலம் மாண்டது எத்தனை சிறிய நிலம் என்று அனுதாபத்தால் உச்சுக்கொட்டுகிறது உதடு.

“மனித குலத்தின் மாபெரும் விஞ்ஞானியான எடிசன், சின்ன வயதிலேயே ஏன் எதற்கு என்று கேள்வி கேட்கும் வல்லவராம்.

பறவைகள் அடைகாத்துக் குஞ்சு பொரிப்பதையும் பார்த்த எடிசன் தன் வயிற்றுக்கு அடியில் முட்டையை வைத்துக்கொண்டு படுத்திருந்தார். இந்தச் சுவையான செய்தி இதில் பதிவாகியிருக்கிறது.

கொடியவர் கொடுமைக்காரர் என்று அறியப்பட்ட ஔரங்கசீப் பொதுவாழ்வில் எவ்வளவு தூய்மையானவராக இருந்தார் என்பதற்கு அவர் எழுதிய கடைசி உயில் சாட்சியாகிறது.

என் கைகளால் தைக்கப்பட்ட குல்லாய்களை விற்ற பணம் 4 ரூபாய் 2அணா, என் தலையணைக்கு அடியில் இருக்கின்றது. நான் இறந்தபின் என் உடல்மீது போர்த்துவதற்குத் துணிவாங்க அதைப் பயன்படுத்துங்கள். “இந்த உயில் எழுத்து ஔரங்கசீப்பின் மீதிருந்த அத்தனை அழுக்கையும் சலவை செய்து விடுகிறது’’ என்று பத்மஸ்ரீ வைரமுத்து எடுத்துக் காட்டுகிறார்.

“இந்த உலக வரலாற்று நூலை எழுதி ஒரு புதிய வரலாறு படைத்திருக்கிறார்’’ என்ற
கி. வேங்கடசுப்பிரமணியனின் கூற்று, வழி மொழியத் தக்கது.

பல அரிய புகைப்படங்களும் சித்திரங்களும் இந்நூலுக்கு வலிமை சேர்க்கின்றன.

வெளியீடு :
பூம்புகார் பிரசுரம்
127 (ப.எண் 63)
பிரகாசம் சாலை (பிராட்வே)
சென்னை-600 108.




அமுதசுரபி - செப்டம்பர் 2003

Saturday, May 01, 2004

கவிஞர் முத்துலிங்கம்

காமம் இல்லாமல் இலக்கியமா?

“அன்புக்கு நான் அடிமை - தமிழ்ப்
பண்புக்கு நான் அடிமை ’’


“இது நாட்டைக் காக்கும் கை - உன்
வீட்டைக் காக்கும் கை’’
இந்தக் கை நாட்டின் நம்பிக்கை - இது
எதிர்காலத் தாயகத்தின் வாழ்க்கை ’’


“மாஞ்சோலைக் கிளிதானோ மான்தானோ
வேப்பந்தோப்புக் குயிலும் நீதானோ!!’’


உள்பட 1,500 திரைப்பாடல்களை எழுதிக் குவித்தவர், கவிஞர் முத்துலிங்கம். கலைமாமணி, பாவேந்தர் பாரதிதாசன் விருது, சிறந்த பாடலாசிரியர் விருது, கலைத்துறை வித்தகர் விருது ஆகியவற்றைப் பெற்றவர்; முன்னாள் அரசவைக் கவிஞர்; முன்னாள் மேலவை உறுப்பினர்.


இந்தப் பாட்டிலக்கியப் பாவலரை “அமுதசுரபி’’ சார்பாகச் சந்தித்தோம்.



?: உங்கள் இளமைப் பருவம் பற்றிச் சொல்லுங்கள்.

மு: சிவகங்கை மாவட்டம், கடபங்குடி என்னும் சிற்றூரில் 1942இல் பிறந்தேன். சொந்தத்தொழில், விவசாயம். பள்ளி இறுதி வகுப்பு வரைக்கும் படித்தேன். பாடத்தில் மனப்பாடப் பகுதியாக, கம்பராமாயணத்தி லிருந்து ஆறு பாடல்கள் வைத்திருந்தார்கள். அதன் சொல்ஓசையில் ஈர்க்கப்பட்டு கம்ப ராமாயணம் முழுவதையும் படித்தேன். அர்த்தம் தெரிந்து படிக்கவில்லை. சந்தத்துக்காகவே படித்தேன். அந்த வாசிப்பு, சிலப்பதிகாரம், மணிமேகலை... எனத் தொடர்ந்தது.
என் 15ஆவது வயதில் முதல் கவிதை எழுதினேன். அதைக் கல்கிக்கு அனுப்பினேன். ஆனால், திரும்பி வந்தது. திரும்பி வந்த அந்தக் கவிதை 44ஆண்டுகள் கழித்து கலைமகளில் அண்மையில் வெளியானது.

?: திரைத்துறைக்கு எப்போது வந்தீர்கள்?

மு: 1966இல் முரசொலியில் உதவி ஆசிரிய ராய்ச் சேர்ந்தேன். தி.மு.கவிலிருந்து 1972இல் எம்.ஜி.ஆர் விலகினார். எம்.ஜி.ஆர் ரசிகனா யிருந்த நான், முரசொலியிலிருந்து விலகி அலை யோசையில் சேர்ந்தேன். அது, எம்.ஜி.ஆர் ஆதரவு இதழாக இருந்தது. அங்கிருந்தபோது பாலமுருகன் என்ற கதாசிரியரை பாடல் எழுத வாய்ப்பு கேட்டுச் சந்தித்தேன். அவர், டைரக்டர் பி.மாதவனிடம் அறிமுகப்படுத்தினார். மாதவன் தயாரித்த ‘பொண்ணுக்குத் தங்க மனசு’ படத்தில் “தஞ்சாவூர் சீமையிலே தாவி வந்தேன் பொன்னியம்மா’’ என்ற பாட்டை எழுதினேன்.
அதன்பிறகு எம்.ஜி.ஆருக்கு எதிரான செய்திகளை வெளியிட்ட அலையோசையி லிருந்து விலகினேன். அதுதெரிந்து, எம்.ஜி.ஆர் கூப்பிட்டார். “விஷயம் கேள்விப்பட்டேன். பணம் கொடுக்கிறேன். வாங்கிக்கங்க’’ என்றார். “பணம்வேண்டாம். வேலை கொடுங்க’’ என்றேன். வற்புறுத்தினார். “உங்க அன்பு போதும்’’ என்று மறுத்துவிட்டேன். அதன்பிறகு எம்.ஜி.ஆர் தாம் நடித்த படங்களில் எல்லாம் பாட்டெழுத வாய்ப்பளித்தார்.
‘உழைக்கும் கரங்கள்’ படத்தில் “கந்தனுக்கு மாலையிட்டாள் கானகத்து வள்ளிமயில்’’ என்ற பாட்டில் தொடங்கினேன். மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் படம் வரைக்கும் தொடர்ந்து எழுதினேன்.
“இது நாட்டைக் காக்கும் கை - உன்
வீட்டைக் காக்கும் கை’’ என்ற பாடலை எம்.ஜி.ஆரே தேர்தல் பிரச்சாரத்திற்குப் பயன்படுத்தினார். எம்.ஜி.ஆர் முதல்வரானதும் “வாஷிங்டன் போஸ்ட்’’ பத்திரிகை என்னையும் அந்தப் பாடலையும் குறிப்பிட்டு இத்தகைய பாடல்களைப் பாடி எம்.ஜி.ஆர் ஆட்சிக்கு வந்தார் என எழுதியது. அவர் தம் சொந்தத் திறமையாலேயே ஆட்சிக்கு வந்தார். ராமருக்கு அணில்போல வேண்டுமானால் என் பங்கு இருக்கலாம்.

?: படத் தயாரிப்புக் குழுவினர் பாடல் வரிகளை மாற்றச் சொல்வது குறித்து....?

மு: இயக்குநர், இசையமைப்பாளர்கள் எதை விரும்புகிறார்களோ அதைக் கொடுப்பதுதான் எங்கள் வேலை. அதற்குத்தான் பணம் கொடுக்கிறார்கள். வெளியே எழுதும் கவிதை இலக்கியம் வேறு. சினிமாவுக்கு எழுதும் பாட்டிலக்கியம் வேறு. எல்லாக் கவிஞர்களாலும் டியூனுக்கு எழுதிவிட முடியாது. இது, ஒரு தனிக் கலை. பெரிய இலக்கியக் கவிஞர்கள்-பலருக்கு வழிகாட்டி- முன்னோடி என்று சொல்லப் படுகிறவர்கள்கூட இதில் தோற்றுப்போயிருக் கிறார்கள்.

?: திரைப்படத் தயாரிப்புக் குழுவினரின் அன்றைய எதிர்பார்ப்பும் இன்றைய எதிர்பார்ப்பும் எப்படி உள்ளன?

மு: அன்று, பாட்டில் கருத்துகள்-கவிதை நயங்கள் இருக்கவேண்டும் என்பது இயக்குநர் - இசையமைப்பாளர் தயாரிப்பாளர்களின் எண்ணமாய் இருந்தது. இப்படத்தின் மூலம் ஏதேனும் ஒரு படிப்பினை ஊட்டவேண்டும் என்ற நினைப்பும் இருந்தது. இப்போது, அந்த நினைப்பெல்லாம் இல்லை. பணம் சம்பாதிக்க வேண்டும். அதற்கேற்ப என்ன செய்தால் சரியாக இருக்குமோ அதை மட்டுமே செய்து கொண்டிருக்கிறார்கள்.
இன்றைய கவிஞர்கள், நன்றாக எழுதக் கூடியவர்களே. ஆனால், அப்படி எழுதுவதற்கான காட்சிகள் படத்தில் இருப்பதில்லை.
அன்று, இசையமைப்பாளர்கள், வார்த்தைக்கு முக்கியத்துவம் கொடுத்தார்கள். இன்று, வாத்தியக் கருவிகளுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். அதனால்தான் சில பாடல்கள் ரசனைக் குறைவாக கலாசாரத்தைச் சீர்குலைக்கும் வகையில் இருக்கின்றன. அது, கவிஞர்கள் குற்றமல்ல. இயக்குநர்; இசையமைப்பாளரின் பொறுப்பு.
ஆனால், இளையராஜா இசையமைப்பில் இப்படிப்பட்ட ரசனைக் குறைவான பாடல்கள் இடம்பெறாது.

?: இன்று, பாலுணர்வைத் தூண்டும் பாடல்கள் அதிகமாகிவிட்டதே?

மு: காமம் இல்லாமல் இலக்கியமும் இல்லை. கோயில் சிற்பங்களும் இல்லை. காமக் கலையின் பல நுணுக்கங்களை வெளிப்படுத்தவே ஒரிசாவில் ‘கோனாரக்’ சூரியக் கோயிலைக் கட்டியுள்ளார்கள். காமத்தை வெளிப்படுத்து வதில் ஒன்றும் தவறில்லை. அதை, இலைமறை காயாகச் சொல்லவேண்டும்.
“பாவையுடல் பாற்கடலில்
பள்ளிகொள்ள நான்வரவா?’’ எனப் புலமைப்பித்தனின் பாடலில் வரும். “தென்றலில் ஆடும் கூந்தலில் கண்டேன் மழைகொண்ட மேகம்’’ என்ற பாடலின் சரண வரிகள், அவை. அர்த்தம் என்னவோ காமம்தான். ஆனால், ஆழ்வார் பாசுரம்போல் இருக்கிறது.
இப்போது அப்படியா எழுதுகிறார்கள்?

?: அரசவைக் கவிஞராக உங்கள் அனுபவம் எப்படி?

மு. காங்கிரஸ் ஆட்சியில் நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளை, முதல் அரசவைக் கவிஞர் ஆனார். இராஜாஜி முதல்வரான பிறகு, அப்பதவியை நீக்கினார். எம்.ஜி.ஆர் ஆட்சியில் கண்ணதாசனையும் புலமைப்பித்தனையும் அரசவைக் கவிஞர்கள் ஆக்கினார். அதற்குப் பிறகு நான் மட்டுமே அப்பதவியில் இருந்தேன். கலைஞர், ஆட்சிக்கு வந்ததும் ‘நானே ஒரு கவிஞன். என் ஆட்சியில் இன்னொரு கவிஞன் எதற்கு?’ எனக்கேட்டு அப்பதவியை ரத்து செய்தார். சுதந்திர இந்தியாவில் தமிழ்நாட்டில் நான்கு பேருக்கு மட்டுமே அப்பெருமை கிடைத்தது. அரசவைக் கவிஞர் என்பது இலாகா இல்லாத அமைச்சரைப் போல. அவருக்கு கார், தொலைபேசி, உதவியாளர் ஆகிய வசதிகள் உண்டு. அது ஒரு அலங்காரப் பதவி மட்டுமே.

? எம்.ஜி.ஆருடன் உங்கள் அனுபவங்கள்?

மு. நிறைய இருக்கு. ஒருமுறை, சத்யா ஸ்டூடியோவில் ‘மீனவ நண்பன்’ படப்பிடிப்பில் அவரைப் பார்த்தேன். அப்போது எலலாப் பாடல் காட்சிகளையும் எடுத்து முடித்திருந்தார்கள். பாடலுக்குவேறு காட்சி இல்லையே என்று இயக்குநர் ஸ்ரீதரும் தயாரிப்பாளர் சடையப்ப செட்டியாரும் சொன்னார்கள். கனவுப் பாடலாகப் போடுங்க என்றார்.
அப்படி எழுதியதுதான் ‘தங்கத்தில் முகமெடுத்து’ என்ற பாடல். தன்னை நம்பியவருக்கு உதவ வேண்டும் என்ற உயர்ந்த நோக்கம், அது.
வேறொரு முறை ‘அன்புக்கு நான் அடிமை’ படத்தில் பாட்டின் பல்லவி ஏற்கப்பட்டது. வேறு சரணம் வேண்டும் என்றார் எம்.ஜி.ஆர். வாகினி ஸ்டூடியோவில் சுருட்டுப்பிடித்தபடி நடந்துகொண்டே யோசித்தேன். சுருட்டுப் பிடித்தவாறு நான் எழுதிய 200க்கும்மேலான பாடல்கள் ஹிட் ஆகியுள்ளன. அப்படி அங்கே ஓரத்தில் இருந்த மூங்கில் தட்டிகளைப் பிடித்துக்கொண்டு சிறிது தூரம் நடந்தேன். அதைப் பார்த்த தயாரிப்பாளர் என்ன இவன்? மரத்தைப் பிடிக்கிறான் மட்டையைப் பிடிக்கிறான்; சரணத்தைப் பிடிக்கலையே என்றார். அதைக் கேட்டதும் “எதையும் பிடிக்காத ஆளைவைத்து எழுதிக்கோங்க’’ என்று சொல்லிவிட்டு வெளியே வந்து விட்டேன்.
இசையமைப்பாளர் எம்.எஸ். விஸ்வ நாதனும் இயக்குநர் கே. சங்கரும் வந்து என்னிடம் அரை மணி நேரம் பேசினார்கள். திரையுலக நிலவரங்களை எடுத்துச் சொன்னார்கள். அதன்பிறகு எழுதிக் கொடுத்தேன். எம்.ஜி.ஆருக்கு அப்பாடல் மிகவும் பிடித்திருந்தது.

?. திரையுலகில் நீங்கள் அதிக சிரமப்பட்டீர்களா?

ப. யாராக இருந்தாலும் சிரமப்படாமல் எந்தத்துறையிலும் வெற்றிபெறமுடியாது. திறமை -முயற்சி - நம்பிக்கை- உழைப்பு இந் நான்கும் இருந்தால் எந்தத் துறையிலும் வெற்றி பெறமுடியும்.
எதிர்காலம் எல்லாருக்கும் உண்டு. அது எப்போது எந்த நேரத்தில் யார்மூலம் வரும்? அதுதான் தெரியாது.