Friday, June 04, 2004

வீர தீரச் சிறுவர்கள் : 4

மரணக் குழியிலிருந்து...

செய்தித் தாள்களில் நாம் அடிக்கடி ஒரு செய்தியைப் பார்க்கிறோம். ஆழ்குழாய்க் கிணற்றுக்காகத் தோண்டிய குழியில் விழுந்து குழந்தை பலி, மாணவன் உயிர்ப்போராட்டம், குழிக்கருகில் மற்றொரு குழிதோண்டி அதன் வழியாகச் சென்று மீட்க முயற்சி, தீயணைப்புப் படையினர் இரவு பகலாக முயல்கின்றனர். இத்தகைய செய்திகள் அடுத்தடுத்து வந்தாலும் இறுதியில் மாணவன், பிணமாக மீட்பு என்ற செய்தியே நிலையாகிவிட்டது. மாநகரங்களில் தண்ணீர்ப் பிரச்சினை தலைவிரித்தாடுவதால் ஆழ்துளைக் கிணறுகளும் அதிகரித்து வருகின்றன. இவற்றில் பாதுகாப்பு ஏற்பாடுகள் அறவே இல்லை. முறையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் இல்லை. இதனால் அடிக்கடி உயிரிழப்புகள் ஏற்படுகின்றன.

இவற்றை வருமுன் தடுக்கவேண்டும். நமது துரதிருஷ்டம், அப்படி ஒரு சூழ்நிலை வந்தால் வந்த பின் காக்கவாவது நமக்குத் தெரியவேண்டும். தெரியாவிட்டால் 14 வயது தொடக்குரா மகேஷிடமிருந்தாவது தெரிந்துகொள்ளவேண்டும்.

இந்தத் தொடக்குரா மகேஷ், அப்படி என்ன செய்துவிட்டான்.

அப்படிக் கேளுங்கள்!

ஆந்திராவின் வேமுரு மண்டல் நகரில் மகேஷ், ஒரு குழந்தைத் தொழிலாளி. பல்வேறு கட்டடங்கள் கட்டுவதில் எடுபிடி ஆளாகப் பணியாற்றி வந்தான். அப்படித்தான் ஒரு தேவாலயம் கட்டும் பணியிலும் ஈடுபட்டிருந்தான். அப்போது என்ன நடந்தது?

மகேஷே சொல்லுகிறான்.

"நான் கட்டடத்தின் வேறொரு பகுதியில் வேலைசெய்து கொண்டிருந்தேன். அப்போது அங்கிருந்த ஓர் ஆழ்துளைக் குழியில் ஒரு சிறுவன் விழும் சத்தம் கேட்டது. நான் உடனே அங்கு ஓடி வந்தேன். அங்கிருந்த யாரும் அந்தச் சிறுவனைக் காக்க, எந்த முயற்சியும் எடுக்கவில்லை. என்ன செய்வது என்று கொஞ்ச நேரம் யோசித்தேன். பிறகு, தானாகவே அந்தச் சிறுவனுக்கு உதவ முடிவுசெய்தேன்.

அது 12 அடி ஆழக் குழி. விழுந்த சிறுவன் நரேந்திர குமாரோ 4 வயதுப் பையன். அவனைத் தைரியமாக இருக்கும்படி மேலிருந்து குரல் கொடுத்தேன். அங்கிருந்த மக்களிடம் என் கால்களை ஒரு கயிற்றால் கட்டி, குழிக்குள் என்னைத் தலைகீழாக இறக்குமாறு கேட்டுக் கொண்டேன். அவர்களும் அப்படியே செய்தார்கள். ஆழ்குழாய்க் குழிக்குள் முதலில் என் தலை நுழைந்தது. மெல்ல மெல்ல ஆழத்துக்குப் போனேன்.

உள்ளே போகப் போக கும்மிருட்டாய் இருந்தது. எதுவுமே தெரியவில்லை. ஆனால் அந்தச் சிறுவன் அழுவதை என்னால் கேட்க முடிந்தது. அந்த ஓசையை அடையாளமாக வைத்துக்கொண்டு மெல்ல மெல்ல இறங்கினேன். மணல்கட்டிகளும் கற்களும் தூசும் என்மேல் விழுந்தபடி இருந்தன. நான் என் கண்களைத் திறக்கவே முடியவில்லை. மூச்ச விடக்கூட சிரமமாய் இருந்தது. ஆனால், நான் மெல்ல இறங்கிக்கொண்டே இருந்தேன்.

இறுதியாக, 45 நிமிடங்களுக்குப் பிறகு, நான் அந்தச் சிறுவனை அடைந்துவிட்டேன். அவனுக்கு நம்பிக்கையூட்டி, அவனுடைய இடுப்பு வாரைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டேன். அதன்பிறகு மேலேயிருந்து கயிற்றைப் பிடித்திருந்தவர்களுக்கு நான் ஒரு சமிக்ஞை கொடுத்தேன். அவர்கள் புரிந்துகொண்டு கயிற்றை மேலே தூக்கினார்கள். நாங்கள் இருவரும் பத்திரமாக மேலே வந்து சேர்ந்தோம். கடவுளுக்கு நன்றி. அந்தச் சிறுவன் இப்போது உயிருடன் இருக்கிறான். நலமாகவும் இருக்கிறான். அதை நினைக்கும் போது இப்போதும் எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது."


தொடக்குரா மகேஷைப் பார்த்தீர்களா? எப்பேர்ப்பட்ட தீரச்செயல்! இதற்கு எவ்வளவு துணிவும் மனோவலிமையும் வேண்டும்!

இந்தத் தீரச் செயலுக்காக மகேஷுக்கு தேசிய தீரச் செயல் விருது வழங்கப்பட்டுள்ளது.

இந்த விருது பெற்றவர்களுக்கு அவர்களின் கல்விச் செலவு முழுவதையும் அரசே ஏற்றுக்கொள்ளும், அதன்படி மகேஷ், ஓர் அரசுப் பள்ளியில் ஏழாம் வகுப்பில் சேர்ந்துவிட்டான். முதலில் அவன் பெற்றோர்களால் அவனைப் படிக்கவைக்க முடியவில்லை. இப்போது இந்தத் தீரச் செயலால் அரசே அவனைப் படிக்க வைக்கிறது.

"எதிர்காலத்தில் இந்தியா இராணுவத்தில் சேர்ந்து நாட்டுக்குப் பணியாற்றுவேன்" என்கிறான் மகúஷ். நம்பிக்கை அதிகமாகிறது. இத்தகைய இளைஞர்களின் கைகளில் இந்தியா, பாதுகாப்பாய் இருக்கும்.


வாரசுரபி - ஜூன் 25, 2004

No comments: