Thursday, June 03, 2004

வீர தீரச் சிறுவர்கள் : 3

திருடனைப் பிடித்த ஹென்னா

ஹென்னா பிறந்தது என்னவோ, இராஜஸ்தான் மாநிலத்தின் ஜோத்பூரில்தான். அவள் தந்தை லெப்டினன்ட் கர்னல் பக்ஷி, அப்போது அந்த ஊரில் பணியாற்றிக்கொண்டிருந்தார். இப்போது அவர் அரியானா மாநிலத்தில் உள்ள அம்பாலாவிற்கு இடம் மாறியுள்ளார். அம்பாலாவில் உள்ள கர்த்தரும் மேரியும் பள்ளிக்கூடத்தில் ஆறாம் வகுப்புப் படிக்கிறான், ஹென்னா ஆமாம், ஆறாம் வகுப்புப் படிக்கும் ஹென்னாதான் ஆறடி உயரமுள்ள முரட்டுத் திருடனைப் பிடித்துக் கொடுத்தாள்.

இது எப்படி நடந்தது?

1999 ஆம் ஆண்டு. ஆகஸ்டு 3 ஆம் தேதி. நள்ளிரவு. டைபாய்டு காய்ச்சலின் காரணமாக ஹென்னா, பள்ளிக்குச் செல்லாமல் வீட்டிலேயே இருந்தாள். வீட்டில் இருந்தது மட்டுமின்றி பகலில் தூங்கத் தொடங்கினாள். அது தொடர்ந்தது. அதனால் இரவில் அடிக்கடி விழிப்பு வந்துவிடும். ஹென்னாவின் அறையிலேயே அவள் தம்பியும் தூங்குவான். அவன் தூக்கம் கெடக்கூடாது என்பதற்காக ஹென்னா மிக அமைதியாக இருப்பாள். சிறு சத்தமும் எழாமல் இருக்கச் செய்வாள்.

சாதாரணமாகவே இரவில் விழிக்கிற ஹென்னாவுக்கு அன்று இரவு ஏதோ ஒரு சத்தமும் கேட்டது. ஹென்னா, ""படக்கென்று'' விழித்துக்கொண்டாள்.

ஓர் ஒல்லியான, உயரமான மனிதன், அவர்களின் அறைக்குள் நுழைவதைக் கண்டாள். பார்த்த உடனேயே தெரிந்துவிட்டது. அவன், ஹென்னாவின் அப்பா இல்லை, வேற்று ஆள் என்று. அவன், ஹென்னா அறையினுள் நுழைந்து கதவை உட்புறத்திலிருந்து சாத்தினான். ஹென்னா, தூங்குவது போல் பாவனை செய்தால். அவர்களின் படுக்கைக்கு அருகே ஒர் இரும்பு அலமாரி இருந்தது. அதற்குள் அவள் அம்மாவின் நகைகள் இருந்தன. அந்தத் திருடன், நேராக அந்த இரும்பு அலமாரியை நெருங்கினான். அதைத் திறக்கச் சில முறைகள் முயன்றான். ஆனால் அவனால் திறக்க முடியவில்லை.

பிறகு அவன், அந்த அறைக் கதவைத் திறந்து வெளிவந்து பக்ஷியின் படுக்கையறைக்குள் நுழைந்தான். அது ஹென்னா படுத்திருந்த அறைக்கு அடுத்த அறை. அந்தத் திருடன், பக்ஷியை நெருங்கினான். அவர் தூங்குகிறாரா என்று சோதித்தான். பக்ஷியை நோக்கி அவன் குனிந்தபோது, ஹென்னா 'திருடன்' 'திருடன்' 'ஓடி வாங்க', 'ஓடி வாங்க' என்று கூச்சலிட்டாள். அவன் பயந்துவிட்டான் போலும். அறைக் கதவை நோக்கி ஓடி வந்தான். அங்கேதான் ஹென்னா நின்றிருந்தாள். அவளை ஒரே தள்ளாய்த் தள்ளிவிட்டான். ஹென்னா கீழே விழுந்தாள். ஆனால், உடனே எழுந்துவிட்டாள். முன்னால் ஓடிக்கொண்டிருந்த அவனைத் துரத்தினாள். கொஞ்சம் நெருங்கியதும் ஒரே தாவு தாவி அவன் கால்களைப் பிடித்துவிட்டாள்.

அப்போது அவர்கள் இருவரும் வீட்டின் வெளிவாசல் கதவுக்கருகே இருந்தார்கள். ஹென்னா தன் முழு ஆற்றலையும் பயன்படுத்தி அவன் கால்களை இறுகப் பிடித்திருந்தாள். அந்தத் திருடனும் அவள் பிடியிலிருந்து விடுபட்டுத் தப்பிக்கக் கடுமையாக முயன்றான். அந்த நேரத்தில் பக்ஷி வந்து அவன் மூக்கில் ஓங்கி ஒரு குத்துவிட்டார்.

அந்தத் திருடனைக் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்கள் அவன் பிடிபட்டதைக் கண்டதும் வீட்டுக்கு வெளியே காத்திருந்த அவன் கூட்டாளிகள் ஓடிவிட்டார்கள். ஆனால் காவலர்கள் பிறகு அவர்களையும் பிடித்துவிட்டார்கள்.

அந்தத் திருடன் ஏற்கெனவே இரண்டு முறைகள், பக்ஷி வீட்டிலிருந்து பணம் திருடியதையும் சில அலுவலக ஆவணங்களைத் திருடியதையும் ஒப்புக்கொண்டான். அந்த ஆவணங்கள், மீண்டும் கைப்பற்றப்பட்டன. அந்தத் திருடன் 3 பேர் கொண்ட கொள்ளைக் கூட்டத்தைச் சேர்ந்தவன் என்பதும் அந்தக் கூட்டம், நூற்றுக்கு மேலான திருட்டுகளில் தொடர்புடையது என்பதும் பின்னர் தெரிந்தது. இந்தத் தீரச் செயலுக்காக ஹென்னாவுக்கு, 1999 ஆம் ஆண்டின் தீரக் குழந்தைகளுக்கான கீதா சோப்ரா விருது வழங்கப்பட்டது.

ஹென்னாவின் பெற்றோர்களுக்கும் நண்பர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் இது பெரும் மகிழ்ச்சியைத் தந்தது. அவர்கள் ஹென்னாவை வெகுவாகப் பாராட்டினார்கள். ஆனால் ஹென்னாவின் தம்பியோ. "இதுக்கு அதிருஷ்டம் தான் காரணம். திருடன் வந்தபோது நான் மட்டும் விழித் திருந்தால் அவனை நிச்சயம் பிடித்திருப்பேன்" என்கிறான். அடடே அக்காவுக்கு உள்ள வீரம், தம்பியிடமும் இருக்கிறதே.

ஹென்னா, சக்தி நிறைந்த சிறுமி. நன்றாக நாட்டியமும் ஆடுவாள். அவளுக்குக் குதிரைச் சவாரி, கூடைப் பந்து, நீச்சல் ஆகியவை பிடிக்கும். குழந்தைத் தொழிலாளர்களை முழுமையாகத் தடைசெய்யவேண்டும் என்றும் விரும்புகிறாள்.

பெரியவளானதும் ஹென்னா என்ன ஆக விரும்புகிறாள்?

"நான் பெரியவள் ஆனதும் இந்திய விமானப் படைவில் போர் விமானம் ஓட்டுவேன். தலைசிறந்த விமான ஓட்டி என்று பேரெடுப்பேன்" என்கிறாள், ஹென்னா.

இந்த வானுயர்ந்த இலக்கை ஹென்னா நிச்சயமாக எட்டுவாள்.


வாரசுரபி, ஜூன் 18 2004

No comments: