Monday, August 15, 2005

காந்தளகம் - 20 ஆண்டுகள்

புத்தக மதிப்புரை
ஈழத் தமிழ் இலக்கியம்
சக்தி வசந்தன்

------------------------------------------
நூல் : காந்தளகம் 20 ஆண்டுகள்
ஆசிரியர் : கவிஞர் அண்ணா கண்ணன்
வெளியீடு : காந்தளகம்,
824, அண்ணா சாலை,
சென்னை-600 002.
பக்கம்: 192

-------------------------------------------
எந்தத் தொழிலையும் வெறும் தொழிலாகவும் வியாபாரமாகவும் மட்டும் செய்யவும் முடியும். அதே தொழிலை செய்யும் விதத்தால், வெளிப்பாட்டுத் தரத்தால் ஒரு கலையாகவும், தவமாகவும், வேள்வியாகவும் இயற்றவும் முடியும்.

சென்னையிலுள்ள 'காந்தளகம்' என்ற பதிப்பகம், இரண்டாவது வகைக்கு ஒரு சான்றாக அமைந்துள்ளது. அதன் சாதனைச் சரித்திரத்தைத்தான், இந்தக் 'காந்தளகம்-20 ஆண்டுகள்' என்ற அழகிய நூல் பல கோணங்களில் படமாக்கி உள்ளது.

'காந்தளகம்' துவக்கத்தில் ஈழ மண்ணில் வேரூன்றியது. பின் 1980-ல் தமிழ்நாட்டில் கிளை பரப்பி-கடந்த இருபது ஆண்டுகளில்-அந்தக் கிளையே ஒரு பெருமரமாக வளர்ந்தோங்கி வாகை சூடி நிற்கிறது.

''ஈழத்திற்கோர் இலக்கியப் பாலம் அமைத்தது காந்தளகம்'' என்பது உண்மைதான். நம் வடலூர் வள்ளலாரிடம் வாதிட்ட ஈழத்து ஆறுமுக நாவலரின் படைப்புகளிலிருந்து, இன்றுள்ள செ.யோகநாதனின் படைப்புகள்வரை பலவற்றை அது வெளியிட்டு 'ஈழத்தமிழ் இலக்கியத்தை வளப்படுத்தியுள்ளது. இலக்கியத் துறையில் மட்டுமல்ல, கணினி, வர்த்தகம், வரலாறு போன்ற துறைகளிலும், அது குறிப்பிடத்தக்க சாதனைகளைச் செய்துள்ளது.

வரலாற்றுத் துறையில் அது செய்துள்ள ஒரு சிறப்புமிக்கப் பணி, தமிழில் 'தேசப் பட'மென்றும் 'அட்லஸ்' என்றும் கூறப்படும் பூகோளப் படங்களை 'நிலவரை' என்ற புறநானூற்றுப் பெயரில் பகுதி பகுதியாக-வெகு நுட்பமாகத் தயாரித்துள்ளதாகும்.

அதேபோல் ''மின்னம்பலத்தில் ஒரு நூல் அம்பல''மாக www.tamilnool.com என்ற ஒரு தளத்தை உருவாக்கி, தமிழ் நூல்கள் அனைத்தையும் துறைவாரியாகப் பிரித்ததும், 'காந்தளக'த்தின் தனிப் பெரும் சாதனைகளில் ஒன்றாகும்.

இதேபோல் தமிழ் இலக்கியத்தையும் கலாசாரத்தையும் கணினி அஞ்ஞானத்தையும் ஒரு புதிய நூற்றாண்டில் கொண்டு வந்து நிறுத்தி நிலைப்படுத்திய அருந்தொண்டை, அது பல ஆண்டுகளுக்கு முன்பே துவங்கிவிட்டது என்ற செய்தி வியப்பளிக்கிறது.

அந்த வகையில் இதன் படைப்பாளியான மறவன் புலவு திரு.க.சச்சிதானந்தன் அவர்கட்கு, உலகத் தமிழர் அனைவருமே கடமைப்பட்டவராவார்கள்.

அவரது சாதனைகளில் பங்கு கொண்டோரிலிருந்து பார்த்து அனுபவித்தவர்கள் வரை பலரும் அவரது 'காந்தளக'த்தைப் பற்றி கூறியுள்ளக் கருத்துகளின் இனிய தொகுப்புதான் இந்த நூல்.

நூல் அமைப்பில் அச்சிலும், கட்டமைப்பிலும், தரத்திலும், திறத்திலும் 'காந்தளகம்' எப்போதுமே மற்றவர்கட்கு ஒரு முன்னோடியாக விளங்கும். அந்த ஓட்டத்தின் அழகை இதிலும் நம்மால் பார்க்க முடிகிறது. பயனுள்ள நூல்.

Monday, August 01, 2005

கவிதாயினி மதுமிதா




விக்கிரமாதித்யனின் அதிசய சிம்மாசனம் ஒரு நிலத்தில் புதைந்திருந்தது; காவலன் ஒருவன், அதன் மேல் நின்றான். அவனிடம் பரிவும் விருந்தோம்பலும் இன்னபிற நற்குணங்களும் நிறைந்திருந்தன. அந்தப் பீடத்திலிருந்து இறங்கினான்; மறுநொடி அந்த நற்குணங்கள் யாவும் அவனை விட்டு நீங்கின. இப்படி ஒரு கதை உண்டு. அது, உண்மையோ? பொய்யோ? இங்கே அதை ஒரு தொன்மக் குறியீடாய்க் கொள்வோம்.

ஒரு வகையில் காதலும் அந்தச் சிம்மாசனம் போலத்தான். காதலின் மேல் நிற்கும்போது நிற்பவர், இந்த உலகையே மறந்துவிடுவார். நல்லவராகவும் வல்லவராகவும் மாறிவிடுவார். குறிப்பிட்ட இருவர் மட்டுமே நிறைந்த, முற்றிலும் ஏகாந்தமான உலகம் ஒன்றிற்குள் நுழைந்துவிடுவார்கள். பிரபஞ்சப் பொருட்கள் யாவும் அவர்களின் ஏவலுக்குக் காத்திருக்கும். ஈருயிர் ஓருயிராகும் பரிணாமத்தில் கூடலும் ஊடலும் கனவும் கற்பனையும் மெளனமும் பிதற்றலுமாய் ஒரு பித்து நிலையில் சஞ்சரிப்பார்கள். அது, ஒரு வகை அதீத உலகம். அங்கே எதுவும் இயல்பாய் இருக்காது. பனித்துளிக்குள் பிரபஞ்சத்தையே காண்பது போல் களிகூத்து நிகழ்த்துவார்கள்.

காதல் கவிதைகளுக்குள் சில பொதுவான இயல்புகள் உண்டு. 'கடைக்கண்ணால் பார்; மரணத்தை வெல்கிறேன்', 'கிளுகிளுவெனச் சிரி; கிழக்குடன் போட்டியிடுகிறேன்', 'பார்வையால் என்னைக் கொல்கிறாய்', 'பசி இல்லை', 'துயில் இல்லை', 'உன்னைக் காணாமல் (வளையல்/ கைக்கடிகாரம் கழலும் அளவுக்கு) இளைக்கிறேன்', 'உடனே உன்னைப் பார்க்காவிட்டால் உயிர் உடலை விட்டுப் போய்விடும்',

'என் மனம் என்னிடம் இல்லை, உன்னிடம் வந்துவிட்டது', 'விலகாதே! எப்போதும் என் பக்கத்திலேயே இரு', 'விலகியிருக்கிறாய், தனிமையின் வெப்பம் தகிக்கிறது', 'என் துணையே, உனக்குத் துயரா? தொல்லைசெய்யும் ஆளைக் காட்டு, கீசிடுறேன்', 'உனக்காக எதுவும் செய்வேன், உயிரும் கொடுப்பேன்'....... எனக் காதலர்களின் ஒவ்வோர் அசைவையும் கவனியுங்கள். அவை, ஒரு தனித்த தளத்தில் இருந்தே எழுகின்றன. காதலர்கள் பெரும்பாலும் தரையில் நிற்பதில்லை; மிதக்கிறார்கள். அந்த மனோ நிலையைத் தக்க வைப்பதே, காதல் கவிதைகளின் பணியாய் இருக்கிறது.

இவை அல்லாமல், வருணனைகளும் காதல் கவிதைகளின் பெரும்பகுதியைப் பிடித்து வைத்துள்ளன. உறுப்பு வருணனைகள், குரல்- நிழல்- பண்பு, நிமிர்ந்தது, குனிந்தது, நடந்தது ... என எதையும் விடாமல் வருணிக்கிறார்கள். புற வாழ்வில் அழுக்கு என்றும் குப்பை என்றும் கருதப்பெறும் பலவும் காதலர் உலகில் விலைமதிக்க முடியாதவை ஆகின்றன. காதலியின் ஒற்றை முடி, நகத் துண்டு ஆகியவற்றைக் காதலன் போற்றிப் பாதுகாக்கிறான். காதலன் சூட்டிய பூ காய்ந்து சருகானாலும் காதலி அதைத் தூக்கி எறிவதில்லை. இந்தப் பொருள்களையே இப்படிப் பாதுகாத்தால் பரிசுப் பொருள்களை எப்படிப் பாதுகாப்பார்கள்!

இவையெல்லாம் உயிரோடு இருக்கும் காதலுக்குப் பொருந்தும். இணையில் ஒருவர் மறைந்தாலோ, பிரிந்தாலோ, தொலைந்தாலோ, அந்த இன்னொருவர், கொடுந்துன்பத்திற்கு உள்ளாவார். மகிழ்வின் உச்சத்தில் இருந்த நிலை மாறி, இப்போது அதற்கு நேர் எதிராய்த் துன்ப சாகரத்தின் ஆழத்தைத் தொட்டுவிடுவார். துணையின் ஒருவர் பிரிந்தால், இன்னொருவருக்கு உலகமே தலைகீழாக மாறிவிடுகிறது. ஒருதலைக் காதலும் இந்த வரிசையில் வைக்கத் தக்கதே. துன்பியல் காதல் கவிதைகளில் மரணம் என்ற சொல் உறுதியாக இருக்கும். சொல் மட்டுமா?

இப்படிக் காதலின் இயல்புகளையும் அறிகுறிகளையும் சொல்லக் காரணம் என்ன? தமிழில் வெளிவந்திருக்கும் இலட்சக்கணக்கான காதல் கவிதைகளின் சாரமே, இவை. இத்தகைய கூறுகள் இல்லாமல் எந்தக் கவிதையும் இல்லை. இந்த உணர்வுகளைத்தான் காதல் கவிஞர்கள், வெவ்வேறு சொற்களில், வெவ்வேறு சூழல்களில், வெவ்வேறு கோணங்களில், வெவ்வேறு ஆட்களின் முன் வெளிப்படுத்தி வருகிறார்கள்.

சங்க காலத்திலிருந்து வெவ்வேறு அலைவரிசைகளில் தொடரும் இந்த மரபு, இன்று வரை இடைவெளி இல்லாமல் நீடித்து வருகிறது. அந்த மரபில் வருகிறார், மதுமிதா (41).

சற்றே தலை சாய்ப்பாய்
முடிக்கற்றை நெற்றியில் வந்து
அழகாய் அழகு சேர்க்கும்

லேசாக ஒதுக்குவாய்
கையை எடுக்கும் முன்பே
அதே இடத்தில் அரைநொடியில்
அசைந்தாடி வந்து நிற்கும் அழகு முடி

என்னை நலம் விசாரிக்க

- என அழகியலோடு கவிதை பாடத் தெரிந்திருக்கிறது, இவருக்கு.

மனமெனும் சாதனத்தை
என் செய்வேன்
முடியைக் கட்டி
மலையை இழுப்பதாய்
உன்னில் பிணைத்துள்ளேன்

- என அற்புதமாக வடித்துள்ளார்.

விழியால்
முழுதாய்
விழுங்கி விட்டேன்.

செரிக்க இயலவில்லை
உன் நினைவை

- என்கிற போதும்

சற்றே தலைசாய்த்து
சிறு பார்வை பார்த்தாய்
மனம்
பெரு வெள்ளத்தில்
அடித்துச் செல்லப்பட்டு விட்டது

- என்கிற போதும்

"பேச வேண்டாம்"
என சொல்லிவிட்டு
ஒருநாள் முடிவதற்குள்
பரிதவித்து
"ஒரு வருடம் ஆனது போலிருக்கிறது"
என நான் சொல்ல
அருகில் ஒன்று சேர்த்து
"இல்லை 11 வருடம் போலிருக்கிறது"
என நீ சொல்ல
அனலில் விழுந்த புழுபோல் துடித்ததாக
இருவரும் உணர்ந்தோமே
ஞாபகம் இருக்கிறதா???

- என்கிற போதும் காதலின் அதீத மனோநிலையை அடையாளம் காணலாம்.

காதல், உடல் சார்ந்ததா? மனம் சார்ந்ததா? இது, நெடுங்காலமாக நிலவும் ஒரு கேள்வி. உடல் சார்ந்ததைக் காமம் என இக்காலத்தில் அழைக்கிறோம். உடல் சார்ந்ததாய் இருப்பது தரக் குறைவு என்றும் பலர் கருதுகின்றனர். இது, அவர்களின் சொந்தக் கருத்து அன்று. இந்தச் சமுதாயமும் ஊடகங்களும் அந்தக் கருத்தை ஆழமாக விதைத்துள்ளன. காதல், மனம் சார்ந்தது என்பது பெரும்பாலோர் கருத்து. அப்படியானால் மனம் மட்டுமே சார்ந்ததா? அவ்விதம் இல்லை. மனத்திற்கும் உடலுக்கும் காதலில் சரிசமமான இடம் உண்டு.

பார்வையாலோ, உடலாலோ தீண்டுதல், காதலுக்குத் தூண்டுதல் ஆகிவிடுகிறது. தொலைதூரத்தில் இருக்கிற, பார்க்காத இருவரிடையே காதல் சாத்தியமே. அவர்கள் தொலைபேசியில் குரல்வழியே, காதலைப் பகிரலாம். அந்த வசதியும் இல்லாதோர், கடிதம் மூலம் பகிர்கிறார்கள். இங்கும் கடிதத்தின் சொற்கள், குரலாக மாறி மனத்தில் ஒலிக்கின்றன என்பதை நாம் நினைவில் கொள்ளவேண்டும். எப்போது குரல் ஒலிக்கிறதோ, அப்போதே அது உடலோடு தொடர்பு உடையதாகி விடுகிறது. புகைப்படமோ, ஓவியமோ கூட உருவத்தை எடுத்துச் செல்லும் ஊடகங்களே.

பார்வையற்றவர்களிடையே கூட குரலும் தீண்டுதலும் முக்கிய இடம் பெறுகின்றன. செவிப்புலனும் பார்வையும் ஒரே நேரத்தில் இழந்தவர்களும் தீண்டுதலால் காதலைப் பரிமாறுகின்றனர். தொலைதூரத்தில் இருந்து கடிதம் கூட எழுதிக்கொள்ளாமல், எந்தத் தூதுவரும் இல்லாமல் இருவர் காதலிக்க முடியுமா? ஒரே நேரத்தில் ஒரே மாதிரி இருவர் சிந்தித்து உள்ளனர்; உரையாடியும் உள்ளனர். இதை டெலிபதி என்கின்றனர். அப்படிப்பட்ட காதலர் யாரேனும் உண்டா என்கிற தகவல் இல்லை. அப்படி இருந்தால் அது, மனம் மட்டுமே தொடர்புடைய காதல் என ஏற்கலாம்.

இதிலிருந்து நமக்குத் தெரிவது, உடலின் பங்கு சிறிதளவேனும் இல்லாமல் காதல் சாத்தியமில்லை என்பதே. ஆயினும் நம் மக்களின் புற மனத்தில் முத்தமிடுதல், தீண்டுதல், அணைத்தல் உள்ளிட்ட காதற் செயல்பாடுகள், தவறு என்று பதிந்துள்ளன. அவை இல்லாமல் காதல் சுவைக்காது.

என்
இடது கன்னம் உணர்வது
குளிர் தென்றலா
பனித்துளியா
உன் இதழா என்பதை
அறியும் முன்னே

விடைபெறும் கணம்
முடிந்து விட்டது

- என்ற வரிகளிலும்

செவ்விதழ்கள் பரிசளித்த ஒற்றைவரி
இப்போது விழிகளில் பார்
எத்தனை செவ்வரிகள்

- என்ற வரிகளிலும் தீண்டுதலின் பங்கு வெளிப்பட்டுள்ளது.

எத்தனை ஓசைகள்
இருந்தாலும்

உனது
சுவாசத்தின் சப்த
அலைவரிசை மாற்றம்
அறிந்து

உன் உணர்வின்
லயத்தைத்
தெரிந்து கொள்வேன்

- என்ற கவிதையும் தனியே குறிப்பிடத்தக்கது. மதுமிதாவின் பல கவிதைகளிலும் தனிமை, முக்கிய இடம் வகிக்கிறது.

தவிக்கத் தவிக்க
தனியே விட்டுச் சென்றாய்
கொடிது கொடிது
தனிமை கொடிது
அதனினும் கொடிது
இளமையில் தனிமை

- என்ற வரிகளும்

சிறிதும் இரக்கமின்றி
எதிர்வரும் தனிமை,
கழுத்தை நெரிக்கும்
ஆவேசத்துடன்

- என்ற வரிகளும் எதை உணர்த்துகின்றன என்பதை நீங்களே முடிவு செய்யுங்கள். நினைவுகளின் ஊசலாட்டம், சுமை, தீவிரம் ஆகியவற்றைப் பல கவிதைகள் படம் பிடித்துள்ளன.

முரண்டு செய்து
அடம் பிடித்து
விடாமல் உன்னினைவைப்
பிடிவாதமாய் பற்றிக் கொண்டு

நேரம் காலம் புரியாது
தலை கீழாய்த்
தொங்குகிறது
வௌவால் மனசு

- என்றும்

மனம் ஒரு உடும்புதான்
விடாமல் உன்னையே
இறுகப் பற்றிக் கொண்டுள்ளதே...!

- என்றும் அது வெளிப்பட்டுள்ளது.

காதல் கவிதைகளை நூற்றுக் கணக்கில் எழுதித் தள்ளியிருக்கிறார், மதுமிதா. இன்றைய திரைப்படப் பாடலாசிரியர்கள் இதற்கென இரவும் பகலுமாய் உழைத்துக்கொண்டிருக்க, இங்கு இவர் தனியே ஆலாபனை செய்து வருகிறார்.

பொதுவாக ஒரு மென்மையான தொனியில், வலிக்காத வார்த்தைகளில், பொங்கிவரும் உணர்வலைகள் பதிவாகியுள்ளன. நல்ல கவிதைகள் பல இருந்தாலும் கூட, வெறும் சம்பவங்களும் விவரிப்புகளும் மிகுந்துள்ளன. நடையில் உரைநடை இழையோடுகிறது. அதீத உணர்வுகளைப் பேசும் போது கவிதை, தனித்த நடையைக் கையாளுவது நல்லது.

நட்பினும் பெரிது
காமம் கடந்தது
காதலும் அன்று

அன்பே
என்ன பெயர் வைக்கலாம்
நமதன்பிற்கு

- என்கிற கவிதையில், 'நமதன்பிற்கு' என்ற சொற்களைவிட 'இதற்கு' என்ற சொல்லைப் பயன்படுத்தி இருக்கலாம்.

அறுபத்தி ஐந்து ஆண்கள்
இருபத்தி இரண்டு பெண்கள்
பதிமூன்று சிறுவர்கள்
ஐந்து நாய்
ஏழு காகம்
இரண்டு நண்டு
மூன்று குதிரை
கடந்து சென்ற
இவற்றைக் கேள்
காத்திருந்த
நேரம் முழுவதும்
உன்னை வாழ்த்தியதை
அவையேனும்
உனக்குச் சொல்லட்டும்

- என்று ஒன்றை எழுதியுள்ளார். இதில் அடிப்படைப் பிழை ஒன்று உள்ளது. காதலன் (என்று வைத்துக்கொள்வோம்); சொன்னபடி வரவில்லை, காத்திருக்க வைத்துவிட்டான்; அதற்காக அவனைக் காதலி திட்டவில்லை, வாழ்த்துகிறாள்; சரி அவள் திட்டவே முடியாத அளவுக்கு நேசம் வைத்திருக்கிறாள் என்றே இருக்கட்டும். படைப்பில் உள்ள 'நேரம் முழுவதும்' என்ற சொற்கள் உண்மையானவை இல்லை. ஏனெனில், தெருவில் கடந்துசென்றவற்றைத் துல்லியமாய்க் கணக்கெடுக்கிற காதலி, கணக்கெடுக்கும் நேரத்தில் காதலனை வாழ்த்தவில்லை. வாழ்த்திக்கொண்டே கணக்கு எடுத்திருந்தால் கணக்கு துல்லியமானது இல்லை. இரண்டு வேலைகளை அவள் ஒரே நேரத்தில் செய்ய வல்லவள் எனக் கொண்டாலும், முழு மனத்தையும் காதலனிடம் அவள் செலுத்தவில்லை எனப் புலனாகிறது. எனவே, 'நேரம் முழுவதும்' என்ற சொற்கள், அவளுக்கு எதிராக இயங்குகின்றன. அதிலும் காதலனுக்குக் காதலி மேல் நம்பிக்கை இல்லையா, என்ன? கடந்து சென்றவற்றிடம் எதற்காகக் கேட்கவேண்டும்?

கவிதை, உணர்வுத் தளத்திலிருந்து அறிவுத் தளத்திற்குச் செல்லும்போது இத்தகைய சிக்கல்கள் வருவது இயல்பு. இவற்றை மதுமிதா, கவனிக்கவேண்டும்.

காதல் கவிதைகளைத் தவிர, மதுமிதா, பொதுக் கவிதைகளும் பல இயற்றியுள்ளார்.

கேட்ட கடைகளில் எல்லாமே
சில்லரை இல்லை என
ஒரே பதில்தான் கிடைக்கிறது

குறைந்த பட்சம்
ஒரு ரூபாய்க்கான சாக்லேட்டாவது
வாங்காதவரை

- என்றும்

எந்த வெளிச்சத்தில்
எந்தக் கோணத்தில்
எடுத்தாலும்

கண்ணாடியில்
தோன்றும் அழகை
எப்போதும்
பிரதிபலிப்பதில்லை

கேமெரா பிடித்துத் தள்ளும்
எந்தப் புகைப்படமும்

- என்றும்

கோடி புண்ணியம்
கோபுர தரிசனம்

காலம் காலமாய்
சந்ததிகளுக்கான இடங்களைப்
பாதுகாத்தவண்ணம்
வரிசைகளில்
ஒரு தலைமுறையினர்
தட்டுக்களை ஏந்தியபடி
கோபுர வாசலில்

கோபுர தரிசனம்
கோடி புண்ணியம்

- என்றும்

வேப்பம் பூவின் வாசம் சேர்த்து
தடதடத்தவண்ணம்
ஓடும் லாரியின் ஓசையைச் சுமந்து
செல்லும் காற்றின்
அதிர்வுடன் ஒத்திசைந்து ஆடும்
திரைச் சீலை

எதனைக் காட்டலாம்
எதனை மறைக்கலாம்
என்னும் பரிதவிப்புடன்...

- என்றும்

காற்று வருடிவிடுகிறது
பெயர் பொறிக்கப்பட்ட
மரத்தின் வடுவை

- என்றும் அழகிய, பொருள் உள்ள கவிதைகளை இயற்றியுள்ளார்.

மதுமிதா, சுதந்தரப் போராட்டத் தியாகி அரங்கசாமி ராஜாவின் பெயர்த்தி. தென்காசியில் பிறந்து, இராஜபாளையத்தில் வாழ்ந்து, சென்னையில் வசிக்கிறார். மெளனமாய் உன்முன்னே... என்ற கவிதை நூலைப் படைத்துள்ளார். பர்த்ருஹரியாரின் தத்துவங்களைச் சமஸ்கிருதத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்த்துள்ளார். அது, நீதி சதகம் என்ற நூலாக வெளிவந்துள்ளது. இவர், சமூகப் பணிகளிலும் ஈடுபாடுள்ளவர்.

பொறுமை பழகிட
கோவிலில்
அடிப் பிரதட்சணம்
செய்திட வேண்டாம்

நகரச் சாலையில்
சிக்னலில்
காத்திருந்தால் போதும்

-என்கிறார் மதுமிதா.

பச்சை விளக்கு எரிகிறது. பயணத்தைத் தொடருங்கள்.

Sunday, July 31, 2005

இ.வி.சிங்கன் காரைக்குடிப் பயண அனுபவங்கள்- ஒரு பார்வை




(1999ஆம் ஆண்டு மறவன்புலவு க. சச்சிதானந்தன், இ.வி.சிங்கனின் காரைக்குடி பயண அனுபவங்கள் என்ற நூலை என்னிடம் அளித்தார். அதற்கு ஒரு மதிப்புரை வழங்கக் கேட்டார். எழுதிக் கொடுத்தேன். இவ்வாறு பத்து மதிப்புரைகளை இ.வி.சிங்கன் பெற்றார். அவற்றை, 'புத்தகத்தை மதிப்புரை திறனாய்வு செய்வது எப்படி?' என்ற தலைப்பில் 2000ஆம் ஆண்டு ஒரு நூலாகவே வெளியிட்டார். அதில், என் மதிப்புரையைத் தவிர, மா.வழித்துணைவன், முனைவர் சுப.திண்ணப்பன், செ.ப.பன்னீர்செல்வம், இரா. அன்பழகன், பாத்தேறல் இளமாறன், முனைவர் லெட்சுமி மீனாட்சி சுந்தரம், முனைவர் ந.சுப்புரெட்டியார், முனைவர் எம். முத்துராமன் ஆகியோரின் மதிப்புரைகளும் இடம்பெற்றுள்ளன. அந்த நூல் குறித்தான என் மதிப்புரையை இங்கு தருகிறேன்.)

இந்நூல், இரண்டு நூல்களின் தொகுப்பாக அமைந்திருக்கிறது. சிங்கப்பூர் வாழ்த் தமிழரான இ.வி.சிங்கன், காரைக்குடி, காட்மாண்டு ஆகிய நகரங்களுக்குத் தான் மேற்கொண்ட பயணத்தைப் பற்றி, அங்குலம் அங்குலமாக விவரித்திருக்கிறார். முதற்பகுதியான காரைக்குடிப் பயணம், பக்கங்களின் இயல்பாக 1,2,3 எனத் தொடங்கி, 45இல் முடிகிறது. இரண்டாம் பகுதியான காட்மாண்டுப் பயணம், உருது, அரபு, பாரசீக மொழிகளின் இயல்பைப் போலக் கடைசிப் பக்கத்தில் இருந்து தொடங்கி, உள்ளே வந்து முடிகிறது. அதை அவர் முதல் பகுதி முடிந்தவுடன், முறையாக ஒரு தாள் விட்டு, 1,2,3 எனத் தொடங்கியிருந்தால், தமிழ் வாசகர்கள் அவர் எழுத்தை எளிதாகத் தொடர்வதற்கு வசதியாய் இருந்திருக்கும். இது நூலின் பக்க அமைப்பைப் பற்றிய கருத்து.

ஆசிரியருக்கு மிகவும் இயல்பான எழுத்து நடை கைவந்திருக்கிறது. படிப்பதற்கும் அது சுவையாக இருக்கிறது. காரைக்குடிப் பகுதிக்கு வருவதற்கு, அவருக்குக் குழந்தைப் பருவம் முதலே ஆர்வம் இருந்தது என்பதை அழகாக விவரிக்கிறார். அவர் எழுதுகிறார்:

"எங்கள் வீட்டில் செட்டிநாட்டில் இருந்து வந்த ஒரு சமையல்காரன் இருந்தான். அவனுடன் ஆடு, மாடுகளைப் பற்றி அடிக்கடி பேசுவதில் தணியாத ஆர்வம், எனக்கு இருந்து வந்தது.

மாடுகள், வெள்ளை, கறுப்பு, சாம்பல் போன்ற நிறங்களில் இருந்தன. "சிவப்பு, பச்சை, நீல நிறங்களில் மாடுகள் இருக்கின்றனவா?" என்று நான் சமையல்காரனைக் கேட்டேன்.

அவன் பரபரப்பாகச் சமையல் வேலையில் ஈடுபட்டிருந்த போதும், மிகுந்த உற்சாகத்துடன், "எங்கள் ஊரில் இருக்கின்றன" என்று அடித்துச் சொன்னான். அது எனக்குத் திகைப்பூட்டியது."

காரைக்குடியில் உள்ள இராமசாமி தமிழ்க் கல்லூரியில் திரு. இ.வி.சிங்கன் ஆற்றிய உரை, அதற்கான எதிர்வினைகள், கடிதங்கள், கல்லூரியின் பார்வையாளர் பதிவேட்டில் அவர் எழுதிய கருத்துரை உட்பட அனைத்தையும் பதிப்பித்துள்ளார்.

திருக்குறள் வகுப்பை எப்படி நடத்துவது, திருக்குறள் மூலம் எப்படித் தொண்டு செய்வது, அவை குறித்தான 10 கட்டளைகள் ஆகியவை முக்கியத்துவம் வாய்ந்தவை.

இரண்டாம் பகுதியான நேபாளத் தலைநகர் காட்மாண்டுப் பயணமும் சுவையாகவே உள்ளது. ஆப்ரிக்க, ஆசியப் புத்தகப் பதிப்பாளர் மாநாட்டில், சிங்கப்பூர் சார்பாக இ.வி.சிங்கன் கலந்துகொண்டதை இப்பகுதி விவரிக்கிறது.

ஆசிரியர், சிங்கப்பூரிலிருந்து பாங்காக் சென்று, பின்னர் காட்மாண்டு செல்லும்போது, விமானத்தில் தாய்லாந்து நாட்டுப் பத்திரிகைகளைப் படித்திருக்கிறார். அதில் இந்திய உள்துறை அமைச்சர் அத்வானி, அண்மையில் சாரநாத்தில் நடந்த உலகப் புத்தர் மாநாட்டில் 'இந்திய ஆரிய நாகரிகங்களின் பழங்கொள்கைகளையே புத்தர் ஒரு புதிய அழுத்தத்துடன் மறுபடியும் சொன்னார்' என்றும், 'பகவத் கீதையின் தத்துவத்தை அடியொற்றியே, புத்தரின் செயல்கள் இருந்தன' என்றும் கூறியிருந்த செய்தியும் அதைப் பல அறிஞர்கள் மறுத்த செய்தியும் வெளியாகி இருந்தன. அதைப் படித்த இ.வி.சிங்கன், பின்வருமாறு அதை விமர்சிக்கிறார்:

'ஒரு பெரிய மாநாட்டில், ஒரு பொறுப்புள்ள அமைச்சர், வரலாற்று ஆதாரம் இல்லாத கருத்துகளைக் கூறி இருப்பது, தேவையில்லாத கிளர்ச்சி உருவாகத்தான் உதவி செய்யும். புத்த சமயமும் சீக்கிய சமயமும் ஆரியர்களின் கொள்கைகளை எதிர்த்து உருவான சமயங்கள் என்பதே அறிஞர்களின் கருத்து. புத்த மதம், இந்து மதத்தின் அடிப்படை என்று சுருக்கமாகச் சொல்லாமல், 'புத்த சமயம்தான் என்னுடைய சமயமும்' என்று அவர் சொல்லி இருந்தால் நன்றாக இருந்திருக்கும். புத்தரையே வழிகாட்டியாகக் கொண்டு, பொருளாதாரத்திலும் உற்பத்தியிலும் முன்னேறிய நாடுகளின் அந்தக் கருத்துக்கு வரவேற்பு கிடைத்திருக்கும்.'

பதிப்பாளர் மாநாட்டில் இ.வி.சிங்கன் ஆற்றிய ஆங்கில உரைகளைப் பதிப்பித்துள்ளார். அவை தலைப்பை விட்டுச் சிறிதே விலகிச் செல்வதுபோல் தெரிகின்றது.

நூல் வணிக நோக்கில் வெளியிடப்பட்டிருக்க வேண்டும். நூலின் பின் அட்டையில் 'Welcome to Nepal' என்ற விளம்பரம் உள்ளது. நேபாளத்தைப் பற்றிய தகவல்கள், நேபாளம், காட்மாண்டு ஆகியவற்றின் வரைபடங்கள், நேபாளியப் பழமொழிகள், Tamil way of Food Preparation Yesterday and Today, Napalese way of Food Preparation ஆகியவையும் நூலில் இடம்பெற்றுள்ளன. சிங்கப்பூரில் உள்ள ராயல் நேபாளீஸ் கன்சுலேட் ஜெனரல் அலுவலகத்தில், கன்சுலேட் ஜெனரலாக இருக்கும் திரு.எம்.என்.சுவாமி, திரு.இ.வி.சிங்கனின் முப்பதாண்டுக் கால நண்பர் என்றும் குறித்திருக்கிறார். அனைத்தையும் இணைத்துப் பார்க்கும்போது நமக்குள் ஒரு செய்தி, பாயத்தான் செய்கிறது.

பூணூலை அறுத்த பாரதியை ஆசிரியர், 'பிராமணக் கவிஞன்' என்று குறிப்பிடுவதும் தம் ஆங்கில உரைகளில் பிராமணர்களை அதிகம் பேசுவதும், சிங்கப்பூரில் மலையாளிகள், தெலுங்கர்கள், பிராமணர்கள் ஆகியோர் தமிழ் ஆசிரியர்களாக வருகிறார்கள் என்று வருந்துவதும் அவருடைய மனோ நிலையை விளக்குகின்றன.

'Status of the Author in Singapore' என்ற தலைப்பில் பேச வேண்டிய இ.வி.சிங்கன்,

'Authors are of two kinds book publishing.
1. The Tamil people
2. The Tamil Speaking people
The Tamil Speaking People are non-Tamils. Their roots are different'
-என்று பேசுகிறார். மேலும் தொடர்ந்து,

'These authors are mostly Brahmins in Tamilnadu. They write books mixing plenty of Sanskrit words. Their novels consist of plots taken from European fictions in London, Paris, Frankfurt, Rome and America and are reconstructed as Delhi, Mumbai, Calcutta and Chennai and what not?'

- என்று பேசியிருக்கிறார். இவர் கருத்தை முழுவதும் ஒப்புக்கொள்வதற்கில்லை. ஏனெனில் ஆசிரியர் குறிப்பிடுவது போல, எல்லாத் தமிழரல்லாத எழுத்தாளர்களும் ஐரோப்பியக் கருத்துருவில் கதை புனைவதில்லை. சமஸ்கிருதச் சொற்களை ஏராளமாகக் கலக்கிறார்கள் என்றும் வருந்துகிறார். அது தவறுதான். ஆனால், ஆசிரியர் குறிப்பிடும் 'தமிழ் எழுத்தாளர்கள்' எவ்வளவு தூய்மையாக எழுதுகிறார்கள் என்பதை அவர் குறிப்பிடாமல் விட்டுவிட்டார். தமிழ்வேர் கொண்டோரே வெள்ளம் போன்ற ஆங்கில வார்த்தைகளில் தமிழை மிதக்க விடுவதை அவர் குறிப்பிடாமல் விட்டது, ஒருதலைப்பட்சமானது.

இப்படித் தமிழர், தமிழரல்லாதோர் என்று பிரிவினை வாதம் பேசுவது, காழ்ப்புணர்வைத் தூண்டுமேயல்லாது வேறெதையும் தூண்டாது. 'தமிழ்பேசும் அனைவரும் தமிழரே' என்ற ரஜனிகாந்த்தின் கருத்தைக் கலைஞர் கருணாநிதி வரவேற்றிருப்பதை நினைவுகூர வேண்டியது என் கடமை.

நூலில் எழுத்துப் பிழைகளும் இலக்கணப் பிழைகளும் மலிந்திருக்கின்றன. நல்ல உயர்தரமான தாளில் பளிச்சென்ற படங்களுடன் அருமையாக அச்சாகியுள்ள நூலில் ஒரு குறை, இது.

நேபாளியப் பழமொழிகளுக்கும் தமிழ்ப் பழமொழிகளுக்கும் சில இடங்களில் ஒற்றுமை இருக்கிறது.

1. He who spits at the sky gets it full in his face.
2. One hundred lies are required to hide one lie.

1. வானத்தில் துப்பினால் அவன் முகத்திலேயே அது விழும்.
2. ஒரு பொய்யை மறைக்க நூறு பொய்களைச் சொல்லவேண்டி வரும்.

ஒரு பயண அறிக்கை போல இந்நூல் இருந்தாலும், அனைத்து நடவடிக்கைகளையும் பதிய வேண்டும் என்ற முயற்சி பாராட்டுக்குரியது. அதனால் இது, வரலாற்று முக்கியத்துவமும் பெறுகிறது.

Saturday, July 30, 2005

சுரதா நேர்காணல்

(படத்திற்காக நன்றி: இன்தாம்)


'கவிதை பிடிச்சிருக்கா... காசு போடுங்க சாமீ!' என்ற தலைப்பில், சரவணா ஸ்டோர்ஸ் இதயம் பேசுகிறது (இப்போது நின்றுவிட்டது) இதழில் 11-2-2001 அன்று வெளியான நேர்காணல், இது.

'அமுதும் தேனும் எதற்கு?', 'ஆடி அடங்கும் வாழ்க்கையடா' போன்ற திரைப்படப் பாடல்களை எழுதியவரும் பாவேந்தர் விருது, இராஜராஜன் விருது, ஆதித்தனார் விருது, கலைஞர் விருது... போன்ற பல விருதுகளைப் பெற்றவரும் 'உவமைக் கவிஞர்' என்ற பட்டத்தை உடையவருமான சுரதா அவர்கள், தன் எண்பதாவது வயதினை எட்டியுள்ளார். முத்துவிழா கொண்டாடி வரும் அவரைச் சந்தித்தோம்.

நீங்கள், அவன் இவன் என்ற ஏக வசனத்தில் பேசுவது ஏன்?

எல்லாருமே இப்படிப் பேசறவங்கதான். பாரதி வந்தான். வள்ளுவன் போனான் என்று இலக்கியத்திலேயே எழுதுவாங்க. ஆளு எதிர்ல இருக்கறப்ப 'அய்யா... சாரே' என்று பேசிட்டு, அவன் அந்தாண்ட போனதும் 'மட்டிப்பய' என்று சொல்லுவானுங்க. நான் மறைஞ்சு நின்னு சொல்லலை. நேராவே சொல்றேன். இதுக்கு என்னோட வயசும் ஒரு காரணம்.

யாரைப் பார்த்தாலும் அவருடைய சாதி என்ன என்று கேட்கிறீர்களாமே?

சாதி என்பது ஒரு குழு. அந்த ஆளைப் பத்தித் தெரியணும்னா அவனோட சாதி பத்தியும் தெரியணும். நான் சாதியை வளர்க்கலை. சாதி ஒழியாது. ஒருத்தன் வழிவழியா ஒரே சாதியில இருக்கறதை என்னால ஏத்துக்க முடியாது. மிட்டாய் விக்கிறவன்கிட்ட உன் சாதி என்ன என்றால், நெசவாளர் சாதி என்கிறான். அந்தத் தொழிலைச் செய்யாட்டி அவன் அந்தச் சாதி இல்லேங்கறேன். அதனாலதான் நான் சாதியையும் கேப்பேன். தொழிலையும் கேப்பேன். இன்னிக்கு முஸ்லீமும் கிறிஸ்தவனும் புனைப்பெயர் வச்சுக்கிட்டுத் தன்னோட சாதியையும் மதத்தையும் மறைக்கப் பாக்கறான். போலித்தனம் எதுக்கு? நிஜத்தைச் சொல்லு.

சாதிக்கு அடுத்ததா ஊர்ப் பெயர் கேக்கறீங்களே ஏன்?

ஒரு ஆளுக்கு எப்படி பேர் வந்தது என்று பார்க்கிறதை விட, ஊருக்கு இந்தப் பெயர் எப்படி வந்ததுன்னு தெரிஞ்சுக்கணும். ரா.பி. சேதுப்பிள்ளை 'ஊரும் பேரும்' என்றே புத்தகம் எழுதி இருக்கார்.


(1996இல் நடந்த ஒரு கவியரங்கில் எனக்குப் பரிசளிக்கிறார், சுரதா.)

பிரபலமானவங்க பிறந்த இடத்துலேர்ந்து மண் எடுத்துச் சேர்க்கறீங்களே... ஏன்?

மலேசியாவுல ஒரு கார்ல போய்க்கிட்டிருந்தப்ப, இங்கதான் ராசேந்திர சோழன் முகாம் போட்டிருந்தான்னு பக்கத்துல உள்ளவர் சொன்னார். உடனே காரை நிறுத்தி அங்கிருந்து கொஞ்சம் மண் எடுத்துக்கிட்டேன். அது அப்படியே தொடர்ந்துச்சு. ஒட்டக்கூத்தர், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், பாரதி, பாரதிதாசன், பரிதிமாற்கலைஞர் என்று இருநூத்துச் சொச்சம் பேரோட பிறந்த ஊர்லேர்ந்து மண் எடுத்தேன். நேதாஜி இங்க தங்கினார், காந்தி இங்கதான் டீ குடிச்சார்னு சொல்றதில்லையா? அது போலத்தான் இது. இந்த வேட்டியை அவர் கட்டினார், இந்தப் பேனாவால எழுதினார் என்று சொல்றாப்லதான்! ஆட்டோகிராப் வாங்குகிறோம் இல்ல. அது ஏன் வாங்குறோம்? ஒரு ஞாபகத்துக்குத்தான். இதுவும் அது மாதிரிதான். யார் யார் எங்க எங்க மண் எடுத்தாங்கன்னு ஒரு புத்தகம் வரப்போவுது.

ஒரு ஊர்ல ஒருத்தர்தான் பிறந்தார்னு இல்லியே. பாரதியைத் தவிரவும் நிறைய பேரு எட்டயபுரத்துல பொறந்திருப்பாங்களே?

மத்தவனுக்கெல்லாம் மார்க்கெட் இல்லை. அவ்வளவுதான்.

நல்ல தலைப்பு சொன்னா ஒரு ரூபா பரிசு கொடுன்னு சொன்னீங்க. கவியரங்கத்துல கவிதை பாடறதுக்கு முன்ன தரையில ஒரு துணியை விரிச்சுட்டு வந்து பாடுங்கன்னு சொன்னீங்க. கவிதையைக் கேக்கறவங்க அந்தத் துணியில பணம்... காசு போடணும்னு சொன்னீங்க... ஏன்?

சும்மா கைதட்டிட்டு நல்லா இருக்கு என்பான். நல்லா இருக்குல்ல. அப்ப காசு போடுன்னு சொன்னேன். கச்சேரிக்கு, சினிமாவுக்குப் போனா டிக்கெட் வாங்குறே இல்ல. கவியரங்கம் மட்டும் ஓசியா? துண்டுல விழற காசு, பாடுற கவிஞனுக்கும் கிடைக்கும்தானே. அது மாதிரி நல்ல தமிழ்ல பேரு வச்சிருந்தா, நல்ல கருத்துச் சொன்னா ஒரு ரூபாயாவது கொடுத்துப் பாராட்டுன்னு சொன்னேன்.

படகுக் கவியரங்கம், விமானக் கவியரங்கம், அஞ்சல் வழிக் கவியரங்கம், மலைச்சாரல் கவியரங்கம், வீட்டுக்கு வீடு கவியரங்கம்... என்றெல்லாம் செய்தது ஏன்? கக்கூஸ் கவியரங்கம், பாத்ரூம் கவியரங்கம் கூட வைப்பார் என்று உங்களைக் கேலி செய்கிறார்களே?

சொல்றவன் சொல்லிட்டுத்தான் இருப்பான். இதெல்லாம் கவிதையை வளர்க்கிற வழி. கவிதையை மக்கள் கிட்ட கொண்டு போற வழி. நாலு சுவத்துக்குள்ள, அந்த வாழ்த்து, இந்த வாழ்த்து என்று பாடுவதைவிட இப்படிக் கவியரங்கம் நடத்துவது ரொம்ப சிறப்பானது.

'கவிதையை ஒழிக்கவேண்டும். இலக்கியங்களால் ஆபத்துதான் உண்டு' என்று சொன்னீங்களே, ஏன்?

மிகைப்படுத்திச் சொல்றது கவிதைன்னு ஆயிடுச்சு. மிகைப்படுத்தல் வந்தால் பொய் வந்திடும். உண்மை இருக்கவேண்டிய இடத்துல தந்திரம் இருக்குது. பேச்சு வழக்கிலேயே உலகை ஆண்டு விடலாம். இலக்கிய வழக்கு வந்ததால்தான் ஜாதி, மதம் வந்தது. இலக்கியங்களைக் கொளுத்திவிட்டால் நல்லது.

சந்திப்பு: அண்ணாகண்ணன்.

Tuesday, July 05, 2005

கவிதாயினி தேன்மொழி

Image hosted by Photobucket.com
பூ, செடியில் பூக்கிறது. ஆனால், அது பூத்ததற்குச் செடி மட்டுமே காரணமில்லை. அது நிற்கும் நிலம், அங்கு நிலவும் தட்பவெப்பம், கிடைக்கும் நீர், சூரிய ஒளி, பாதுகாப்பு வேலி... எனப் பலவற்றின் துணையுடன்தான் ஒரு பூ மலருகிறது. இவை, புறக் காரணிகள். அந்தப் பூவின் வண்ணம், மணம், அளவு, அடுக்கு, வாழ்நாள்... எனப் பல இயல்புகளை அதன் மரபணு தீர்மானிக்கிறது. இவை அகக் காரணிகள். இந்த அகக் காரணிகளும் புறக் காரணிகளும் சரியான விகிதத்தில் இணைந்தால்தான் ஒரு பூ பிறக்கமுடியும்.

இதே இலக்கணத்தை நாம் கவிதைக்கும் பொருத்தமுடியும். ஒரு கவிதை பிறக்கிறது. அதற்கு, முழுக்க முழுக்க அந்தக் கவிஞர் மட்டுமே காரணமில்லை. அவர் வாழும் இடம், வளர்ந்த முறை, பயணித்த இடங்கள், உணவு, உறவுகள், மனநிலை, கல்வி, அறிந்த மொழிகள், வாசிப்பு, அவரின் மொழி ஆளுமை, அனுபவம், கண்ணோட்டம், எழுதும் நேரம், எழுதுபொருள்கள், சுற்றுப்புற ஒலி-ஒளிகள், நோக்கம், நெருக்கடிகள்.... எனப் பலவும் சேர்ந்துதான் ஒரு கவிதை உருவாகிறது.

அதிகம் கவிதை எழுதப்பட்டது எப்பொழுது? போர்க் காலங்களிலா? இயல்பான காலங்களிலா?

குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்ற நிலப்பகுதிகளில் எந்தப் பகுதியில் அதிகமாகக் கவிதைகள் எழுதப்படுகின்றன?

எந்த நேரத்தில் அதிகம் எழுதுகிறார்கள்? காலையிலா? இரவிலா?

கேட்டு எழுதப்பெற்றது அதிகமா? தானாகவே எழுதப்பெற்றது அதிகமா?

தனிமை, கவிதைக்கு எவ்வளவு தூரம் முக்கியம்?

குறிப்பிட்ட மணம், மது, உணவு போன்றவை, படைப்பாளியிடம் கவிதை உணர்வைத் தூண்டுகின்றனவா?

தமிழ்ப் பெருமக்கள், மேலே குறிப்பிட்டுள்ள கருப்பொருள்களில் ஆராய்ச்சி செய்யப் புகுந்தால் புறக் காரணிகளின் தாக்கம் எவ்வளவு என்று தெரியும்.

இதனால்தான் புதியவற்றை எழுத விரும்புவோர், வெளியூருக்குச் சென்று எழுத விரும்புகிறார்கள். சிறைக் கைதியாக இருந்த பலர், சிறையிலேயே பல நூல்களை எழுதியுள்ளார்கள். காரணம், அவருக்குச் சிறை என்பது, புதிய இடம்.

எந்தப் புதிய இடமும் ஒருவருக்குக் கவிதையைத் தந்துவிடுமா? ஒரு புதிய இடம், எவ்வளவு காலத்தில் ஒருவருக்குப் பழைய இடம் ஆகும்? இந்த வாழ்விடங்கள், கவிதையை எவ்வாறு இயக்குகின்றன? இப்படிப் பல கேள்விகள் எழுந்துகொண்டே இருக்கின்றன.

ஆனால், பிறந்த ஊர் என்பது, பலருக்குப் பெரும்ஊற்றாய்க் கவிதையை வழங்கிக்கொண்டே இருக்கிறது. அதிலும் பிறந்த ஊரிலிருந்து இடம்பெயர்ந்து, வெளியூரில் வாழ நேர்ந்தவர்களுக்கு ஊர் நினைவுகள், அற்புதமாகிவிடுகின்றன; அவை, கவிதைச் சுடரின் ஒளியை வானளாவ வளர்க்கின்றன. அவ்வகையில் தேன்மொழியின் கவிதைகளை அவரின் ஊர்ப்புலமான மலைப் பகுதி, ஆட்சி புரிகிறது. தாவரங்கள், விலங்கினங்கள், நீர்நிலைகள், மலைகள், இயற்கையின் பன்முகக் காட்சிகள் ஆகியவை, தேன்மொழியின் கவிதைகளுக்குத் தனித்துவம் சேர்க்கின்றன.

குளத்தின் உச்சியில்
கழுகின் நிழல்
வட்டமடித்து நீந்திக் குளித்து
வெயில் காய்கையில்
காட்டுக் கோழிச் சிறகுகள் பதறும்
அடைக்கல ஓசையோடு

நம் காலடி அதிர்வுகள் கேட்டு
உடலிலிருந்து ஈட்டி பாய்ச்சி
புதருக்குள் பதுங்கும் முள்ளம்பன்றி
கூரானைக் குறிவைக்கும்

மரம் வெட்டுகையில் அது
வீழ்வதற்கான கடைசி முறிவில்
மிளா மான்கள் மிரளும்
மலையிலிருந்து சமதளம் நோக்கி
கிளைகள் உருட்டுகையில்
கேளையாடுகள் சிதறும்

விறகு தூக்கும் சதம்பலுக்குள்
மர அணில்கள் விளையாடும்
முயல் குட்டிகள் மிதிபடும்....
- என வரையாட்டு மொட்டை என்ற மலையின் காட்சிகளைத் தேன்மொழி விவரிக்கையில், நமக்குள் ஒரு புதிய உலகமே விரிகிறது.

மலைப் பிரதேசத்துக் காலைகள்
மூடுபனியின் ஊடே
பல்லாயிரம் தேயிலைப் பூக்களின்
வாசனையோடுதான் விடியும்...
- என வாசனைகளை விவரிக்கிறார்.

...இன்னும்
அந்த ஒற்றைப் பேருந்து
வானவூர்தி மாதிரி
என் ஊர்ப்பிள்ளைகளை
கைதட்ட வைத்துக்கொண்டுதான்
இருக்கிறது
- என்கிறபோது, அந்த ஊரின் நிலைமை நன்கு தெரிகிறது.

தோட்டத்தை இடுப்பிலே
தூக்கிக்கொள்வேன்
விடுமுறைகளில்

மண்வெட்டியால் வெட்டியிருக்கிறேன்
மண்உளிப் பாம்பை
புரட்டிப் புரட்டிப் பார்த்தும்
வரைய முடியாத ஓவியம் அது
- என்றும்

நேசமானவள்
சலிப்பைக் கொலுசென
மாட்டி நடப்பாள்
- என்றும்

வெட்டுக்கிளி
இலைவெட்டித் தின்கையில்
இலையின் உள்நரம்புகள் துடிக்குமோ
- என்றும்

உன் சுவாசக் காற்றைப்
பார்க்க ஆசையா
மூடுபனியின் ஊடே பாடு
- என்றும்

பாவாடையில் காற்றைப் பிடித்து
ஆற்றின் இக்கரையிலிருந்து
அக்கரைக்கு மிதந்து போ
- என்றும்

மான் தின்ற மலைப் பாம்பு
மரம் சுற்றி நெரிவது மாதிரி
என் உணர்வுகளை
எனக்குள்ளேயே
சடசடக்க விடுகிறேன்
- என்றும்

உன்னைப் பற்றி
நான் சிந்திக்கையில்
குக் குக் குக்கென
ஏதோ ஒரு பறவை
குரல் கொடுக்கிறது
- என்றும்
மூச்சோரம் முத்தமிட்டாய்
அக்கணம் கண்டேன்

பியானோவின்
வெள்ளைக் கட்டையும்
கருப்புக் கட்டையுமாய்
கிறங்கி இசைத்துக்கொண்டிருந்த
உன் கண்களை
- என்றும்

மல்லாந்த நெஞ்சில்
ஏந்திய புத்தகம்
இதயத் துடிப்பில்
அதிர்வது மாதிரி

மௌனத்தின் அடர்த்தியை
கோதிக் கோதி
வெளிக் கிளம்புகிறது
உன் நினைவு
- என்றும்

என் கல்லறைக்கான வாசகம்
தேடவேண்டியதில்லை

நட்டு வையுங்கள் என் மீது
ஒரு பூமரத்து நாற்றை
- என்றும்

சாயங்காலம் முற்றத்தில் தெளிக்கும்
தண்ணீர்த் திவலை மிதித்து
படியேறும் தனிமை

மெழுகுதிரி வெளிச்சத்தினடியில்
கருமையாய் தேங்கி நிற்கிறது..
- என்றும்

எழுதுகின்ற நிழல்
விரலுக்குப் பக்கத்தில் இருள்மரமாய்
ஊர்ந்து வருவதை
உணர்ந்தபடி எழுதுகிறேன்
யாருமில்லை
- என்றும்

நான் வாழ்வதற்கான இடம்
இருக்கிறது

வாழ்ந்துகொண்டிருக்கிற இடம் அல்ல அது
- என்றும்

புருவத்து ரோமங்கள்
ஆயிரங்கால் பூச்சி போல்
நெற்றியில் படுத்துக் கிடந்தன
- என்றும்

பள்ளத்தாக்குகளை
பயமின்றிக் கடக்கும் அந்தப்
பறவை

கூடடைகையில்
நடுங்கிக் குறுகுகிறது
- என்றும்

முத்தத்தின் ஓடுடைத்துப் பறந்த
பறவைகளின் சிறகு ஒலி

- என்றும் தேன்மொழியின் கவிதை வெளிக்குள் எண்ணற்ற முத்துகளைக் காண முடிகிறது. இவர் கவிதைகளில் புறப் பொருள்களும் அகப் பொருள்களும் தேர்ந்த முறையில் ஒன்றிணைந்துள்ளன. வளமான மண்ணில் பிறந்து, அரிய காட்சிகளைக் கண்டு, அவற்றை நமக்கு அறிமுகப்படுத்தி வருகிறார். பலரும் தவற விடுகிற சாதாரண காட்சிகள், இவரின் கவிதைகளுக்குள் வலிமையோடு இடம் பிடிக்கின்றன. மூடு மந்திரம், ஜால வித்தை ஏதும் இல்லை; எளிய சொற்களில் ஒரு குழந்தைகூட கவிதைக்குள் நுழைய வாய்ப்பளித்து, வாழ்வின் பிழிவாய் - பதிவாய் இவரின் கவிதைகள், விளங்குகின்றன.

மேற்குத் தொடர்ச்சி மலையின் மணலாறு என்ற தேயிலைத் தோட்டத்தில் 4-1-1976 அன்று பிறந்த தேன்மொழி, 8 வயது வரை அங்கு வாழ்ந்துள்ளார். அதன் பிறகு அதே தேனி மாவட்டத்திலேயே உத்தமபாளையம், ராயப்பன்பட்டி ஆகிய இடங்களிலும் மதுரையிலும் வசித்துவிட்டு, கடந்த பத்து ஆண்டுகளாகச் சென்னையில் வசிக்கிறார். ஆனால், அவர் எட்டு வயது வரை வாழ்ந்த பகுதிதான், அவரின் கவிதைகளில் எல்லாம் அழுத்தமாகப் பதிவாகி வருகின்றது. ஏழு வயதிலேயே கவிதை எழுதத் தொடங்கிய இவர், இயற்கையை ஆராதிக்கும், அதற்காக ஏங்கும் மனத்தவர்.

இவரின் முதல் தொகுதியான இசையில்லாத இலையில்லை என்ற நூல், தேவமகள் அறக்கட்டளை விருது, 'சிற்பி' பாலசுப்பிரமணியன் இலக்கியப் பரிசு, திருப்பூர் கலை இலக்கியப் பெருமன்றப் பரிசு ஆகிய விருதுகளைப் பெற்றுள்ளது. அதை அடுத்து, அநாதி காலம் என்ற கவிதைத் தொகுதியைப் படைத்துள்ள தேன்மொழி, திரைப்படப் பாடல்களும் எழுதி வருகிறார். இயற்பெயர் : ரோஸ்லீன் ஜெயசுதா.

முதன்முதலாக, பாரதிராஜா இயக்கத்தில் ஈர நிலம் என்ற திரைப்படத்தில் பாடலாசிரியர், வசனகர்த்தா, உதவி இயக்குநர் ஆகிய பொறுப்புகளை ஏற்றுள்ளார். சிறுகதைகளும் எழுதி வருகிறார். தமிழ்த்திரைத் தொலைக்காட்சிக்காக, நிகழ்ச்சிகளைத் தயாரித்து வழங்கிவரும் இவர், திரைப்பட இயக்குநராகும் முயற்சியில் உள்ளார்.

இவருடைய கவிதைகளில் குறிப்பிடவேண்டிய ஒன்று: பற்பல மலர்கள், மரங்கள், தாவரங்கள், விலங்கினங்கள் ஆகியவற்றின் பெயர்களைக் கவிதைக்குள் பதிவு செய்துள்ளார். அவற்றுள் பலவும் நாம் அறியாதவை; ஆனால், அறிய வேண்டியவை. அவற்றை வெறும் பட்டியலாகவோ, பெயர்களாகவோ பதியாமல், கவித்துவத்துடன் இயல்பாக, கவிதை என நம்பும்படியாகப் பதிந்துள்ளமை, போற்றத் தகுந்த செயல்.

தேன்மொழியின் படைப்புகள், படிப்படியாகச் சுருக்கமும் கூர்மையும் பெற்று வருகின்றன. நம் உணர்வுகளைத் தம் வயமாக்கும் வலிமை, அவற்றுக்கு உண்டு.

நேற்று ஒரு காட்டுப்
பூவுக்குப்
பெயரிட்டேன்
'காஞ்சனி'
என்று
- என்கிறார், ஒரு கவிதையில்.

யாரேனும் பெயரில்லாத காட்டுப் பூவைக் காண நேர்ந்தால், தேன்மொழி என்ற பெயரைப் பரிசீலியுங்கள்.

Saturday, July 02, 2005

திருவாசகம் - சிம்பொனி - இளையராஜா



திருவாசகம் - சிம்பொனி - இளையராஜா

நேற்று (30-6-05) மாலை சென்னை மியூசிக் அகாதெமி அரங்கில் இளையராஜாவின் சிம்பொனி இசையில் திருவாசகம் வெளியானது. மத்திய செய்தி-ஒலிபரப்பு & கலாசார அமைச்சர் மாண்புமிகு ஜெய்பால் ரெட்டி வெளியிட, பாலமுரளி கிருஷ்ணா முதல் பேழையைப் பெற்றுக்கொண்டார். கிறித்தவர்களால் நடத்தப்பெறும் தமிழ் மையம் என்ற அமைப்பும் இளையராஜா மரபிசை, கலை, பண்பாட்டு அறக்கட்டளையும் இணைந்து இந்த நிகழ்வுக்கு ஏற்பாடு செய்திருந்தன.

அழைப்பிதழில் பெயர் இல்லாத போதும் ரஜனிகாந்த், நிகழ்ச்சிக்கு வந்திருந்து கடைசி வரை(இரவு 10.40) இருந்தார். ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, மிக அற்புதமான சொற்பொழிவை நிகழ்த்தினார். கமலகாசன், பாரதிராஜா, பீட்டர் அல்போன்ஸ், என். ராம், இளையராஜாவின் குரு தட்சிணாமூர்த்தி சுவாமிகள், தமிழ் மையத்தைச் சேர்ந்த அருட்திரு ஜெகத் கஸ்பார், அருட்திரு வின்சென்ட் சின்னதுரை, அருட்திரு ஆனந்தம் ஆகியோர் விழாவில் கலந்துகொண்டனர்.

6 மணிக்கு விழா தொடங்கும் எனப் போட்டிருந்தார்கள். நான் 5.50க்குச் சென்றேன். அப்போதே அரங்கு நிரம்பி, வெளியில் நூற்றுக்கணக்கானோர் நின்றிருந்தார்கள். பின்னர் ஒரு வழியாக உள்ளே சென்று, இடம் பிடித்து, உட்கார்ந்தேன். சுமார் 6.30க்குத்தான் விழா தொடங்கியது. மத்திய அமைச்சர், (29-6-05)முந்தைய நாள் மாலை இதே அரங்கில் அகில இந்திய வானொலி நிலையத்தின் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டார். பின்னர் மத்திய அமைச்சரவையின் திடீர் கூட்டத்தில் கலந்துகொள்ள டெல்லி சென்று, இரண்டு பண்பலை வானொலி அலைவரிசைகளைத் தொடங்கும் முடிவை எடுத்து, அதைப் பத்திரிகையாளர்களுக்கு அறிவித்துவிட்டு, மும்பை வழியாக மீண்டும் சென்னை வந்தார்.

"சமூகத்தின் அடிநிலையிலிருந்து வந்து, இசையின் சிகரத்தைத் தொட்டிருக்கிறார். இசையின் ராஜா இளையராஜா" என்றெல்லாம் பாராட்டிய பின்னர் தன் உரையை முடித்துவிட்டு இருக்கைக்குத் திரும்பும் முன், மீண்டும் ஒலிவாங்கிக்கு வந்தார். "அடுத்து, பெங்களூர் செல்கிறேன். 12 மணியில் டெல்லி, மும்பை, சென்னை, பெங்களூர் என நான்கு மெட்ரோபாலிட்டன் மாநகரங்களைக் காண்கிறேன்" என நகைச்சுவையுடன் குறிப்பிட்டார்.

சிம்பொனி ஓரட்டோரியோ(தெய்வீக அருளிசை) என்ற வடிவில், திருவாசகத்தின் ஆறு பாடல்களை இளையராஜா வழங்கியுள்ளார். அந்தக் குறுந்தட்டிலிருந்து ஒரு பாடலை அரங்கில் அனைத்து விளக்குகளையும் அணைத்துவிட்டு, சுழலவிட்டனர். "பொல்லா வினையேன்" என்று தொடங்கி, திருவாசகத்தின் வரிகளைப் புதுமையான முறையில் தந்துள்ளார். இடையிடையே ஆங்கிலத்தில் அதன் பொருளைப் பாடலாகத் தந்துள்ளமை, நல்ல கலவை. கிறித்தவத் தன்மை உள்ள பின்னணி இசையை வெளிநாட்டவர் இசைக்க, பல்வேறு நிலைகளில் இழைந்தும் குழைந்தும் இளையராஜாவின் குரல், ஒரு பெரும் அனுபவத்தை அளிக்கிறது.

திருவாசகத்தின் ஒரு பாடலை எடுத்துக்கொண்டு சென்னையைச் சேர்ந்த இசைக் குழுவினர், நடனமாக ஆடிக் காட்டினர். திருவாசகத்தின் வேறொரு பாடலை பள்ளிக்கூட மாணவியர் பலர், பியானோ இசைப் பின்னணியில் பாடினர். தமிழகம் முழுவதும் நடத்தப்பெற்ற திருவாசகப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசுகள் வழங்கினர்.

பாலமுரளி கிருஷ்ணா, "இது தெய்வீக இசை. இறைவன் இசை வடிவமானவன்" என்றார்.

பீட்டர் அல்போன்ஸ், "இளையராஜா இந்தப் பணியை ஏன் கத்தோலிக்க பாதிரிமார்கள் நடத்தும் தமிழ் மையத்திடம் கொடுத்தார்? தமிழ்நாட்டின் எவ்வளவோ அமைப்புகள், தமிழும் சைவமும் வளர்க்கும் திருமடங்கள், திரைத் துறை வித்தகர்கள் ஆகியோரிடம் கொடுக்காமல் தமிழ் மையத்திடம் கொடுத்ததற்குக் காரணம், சமய நல்லிணக்கமே" என்றார்.

"இதை யாரும் இணையத்திலிருந்து பதிவிறக்கம் செய்யாதீர்கள். திருட்டுத்தனமாய்க் கேட்காதீர்கள். காசு கொடுத்து வாங்கிக் கேளுங்கள்" என்று இந்து பத்திரிகையின் முதன்மை ஆசிரியர் என். ராம் கூறினார்.

"இறைப்பற்று இல்லாதோரையும் ஈர்க்கும் இசை, இது. இதை ஆக்கும் திறமை, இளையராஜாவுக்கு 25,30 ஆண்டுகளுக்கு முன்பே உண்டு. இப்போது தாமதமாக வெளிப்பட்டுள்ளது" என்றார் கமலகாசன்.

"இளையராஜா, ஒரு வகையில் என் குரு. அவர்தான் எனக்கு ரமண மகரிஷியையும் திருவண்ணாமலையையும் அறிமுகப்படுத்தினார்" என்றார் ரஜனிகாந்த்.

"கும்பினியர்கள் ஆண்ட மண், இது. அந்த வெள்ளைக்காரர்களை உன் இசையை வாசிக்கச் செய்திருக்கிறாய். நீ பாடும்போது நானே பாடுவதுபோல் இருக்கிறது. நீ புகழ் பெறுவது நானே புகழ் பெறுவது. வைகை ஆற்றுக்கும் மேற்குத் தொடர்ச்சி மலைகளுக்கும் நன்றி. இளையராஜா, பல முறைகள், இனி எனக்குப் பிறவி இல்லை. என் பிறவியின் நோக்கம் நிறைவடைந்துவிட்டது என்கிறான். அது தவறு. நீ ஆயிரமாயிரம் முறை மீண்டும் மீண்டும் பிறந்து வந்து, இசையை வழங்கிக்கொண்டே இருக்கவேண்டும். உனக்கு இறப்பே கிடையாது. பிறப்பு மட்டுமே உண்டு" என்றார் பாரதிராஜா.

இறுதியாகப் பேசவந்த வைகோ, மிகவும் சிறப்பாகப் பேசினார். ஏழாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழர்களிடம் 14 வகை யாழ்க் கருவிகள் இருந்தன. பிரமிடில் யாழ்க் கருவி காணப்படுகிறது. மெசப்படோமியா-மொகஞ்சதாரோ அகழ்வில் யாழ்ச்சின்னங்கள் கிடைத்துள்ளன... எனத் தொடங்கியவர், தமிழிசையின் வரலாற்றை அடுத்துத் திருமுறைகளுக்கு வந்தார்.

பன்னிரு திருமுறைகள் எவை? முதலாம் திருமுறை முதல் பன்னிரண்டாம் திருமுறை வரை ஒவ்வொரு திருமுறையிலும் இடம்பெறும் நாயன்மார்கள் யார் யார்? என்றெல்லாம் கடகடவெனச் சொல்லிக்கொண்டே வந்த அவர், எட்டாம் திருமுறையான திருவாசகத்திற்கு வந்தார்.

திருவாசகத்தில் எத்தனை பதிகங்கள் உள்ளன? ஒவ்வொரு பதிகத்தின் பெயர் என்ன? மாணிக்கவாசகரின் பின்னணி என்ன? குதிரை வாங்குவதற்காக அரசன் தந்த பணத்தில் சைவப் பணி செய்தது, பின் அரசன் கேட்டபோது, இறைவன் கட்டளைப்படி, குதிரைகள் பின்னால் வருகின்றன என ஓலை அனுப்பியது, நரிகள், பரிகளாக(குதிரைகளாக) மாறி, லாயத்தில் அடைக்கப்பெற்றது, இரவில் அனைத்தும் மீண்டும் நரிகளாக மாறி ஊளையிட்டு அறுத்துக்கொண்டு ஓடியது, இதற்காக அரசன், மாணிக்கவாசகரைச் சினந்தது, மதுரையில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது, இறைவன் பிட்டுக்கு மண் சுமக்க வந்தது, பிட்டை வாங்கிக்கொண்டு மண்ணை அடைக்காமல் நீரில் விளையாடியது, அதைக் கண்ட காவலர்கள் இறைவன் முதுகில் பிரம்பால் அடித்தது, இறைவன் மீது பட்ட அடி எல்லோர் மீதும் பட்டது, அதன் பிறகு மாணிக்கவாசகர் ஊர் ஊராகச் சென்று பாடியது... எனத் திருவாசகத்தின் பின்னணி, வரலாறு, நோக்கம் என அனைத்தையும் விளக்கமாக எடுத்துக் கூறினார்.

இங்கு எந்த இடத்திலும் பார்த்துப் படிக்கவோ, தடுமாறவோ, மறந்துவிடவோ செய்யாமல் ஆற்றொழுக்காக வைகோ, மடை திறந்தார். இளையராஜாவின் பெருமைகள், இந்தத் திருவாசகத்தில் இளையராஜா எந்த ஆறு பாடல்களை எடுத்துக்கொண்டார்? ஏன் அவற்றை எடுத்துக்கொண்டார்? அவற்றின் பொருள் என்ன? என அவர் பேசப் பேச, அரங்கமே அதிசயித்தது. இளையராஜாவும் ரஜனியும் பிரமித்தார்கள். ரஜனி பேசும்போது, "வைகோவின் கர்ஜனையைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேன். இன்றுதான் கேட்கவிருக்கிறேன்" என்றார். வைகோ பேசப் பேச, ரஜனியின் புருவம் ஏறியே இருந்தது.

பின்னர் பேச வந்த இளையராஜா, வைகோவை, "அரசியலை விட்டுவிட்டு ஆன்மீகத்திற்கு வந்துவிடுங்கள். சைவ சித்தாந்த உரையைக் கேட்டதுபோல் இருந்தது" என்றார். பாரதிராஜாவிற்குப் பதில் அளித்த அவர், "நீ வேண்டுமானால் பிறந்துகொள். நான் பிறக்க விரும்பவில்லை. வள்ளுவரே
தோன்றிற் புகழோடு தோன்றுக அ·திலார்
தோன்றலின் தோன்றாமை நன்று
என்று கூறியிருக்கிறார். பிறப்பதோ, புகழ் பெறுவதோ நம் கையில் இல்லை" என்றார். அவருக்கு முன் நன்றியுரை கூறிய அருட்திரு ஆனந்தம், "சிம்பொனி ஓரட்டோரியோவை முடித்து, பிரசவ வேதனையில் இருப்பார். அதைப் பற்றி அவர் கூறக்கூடும்" என்று கூறியிருந்தார். அதற்குப் பதில் அளித்த இளையராஜா, "தாயைக் கொச்சைப்படுத்தாதீர்கள். பிரசவ வலிக்கு உலகின் எந்த வலியும் ஈடானதில்லை" என்றார்.

"ஒரு பாட்டுப் பாடு தலைவா", என ரசிகர் ஒருவர் குரல் கொடுத்தார். "என்ன பாட்டு வேணும் தலைவா?" என்ற இளையராஜா, 'என் ஊரு சிவபுரம்' எனத் தொடங்கும் பாடலைப் பாடினார்.

இந்த நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிய அருட்திரு ஜெகத் கஸ்பார், தமிழ் / ஆங்கிலம் இரண்டிலும் சிறப்பான ஆளுமையுடன் பேசினார். கணீர் என்ற குரல், நல்ல சிந்தனைகள், அவையை ஆளும் திறம் எனப் பலவிதங்களில் பரிமளித்தார். அவர் நிர்வாக இயக்குநராக உள்ள தமிழ் மையம்தான் இந்தத் திருவாசகத் திட்டத்தை முன்நின்று நிறைவேற்றியுள்ளது. சமய நல்லிணக்கம் செழித்தோங்கவும் தமிழிசையும் தமிழும் வளரவும் இந்தத் திருவாசகம் தொண்டாற்றும். "இன்னும் 24 மாதங்களில் கிராமி விருது பெறும் முதல் தமிழர் என்ற பெருமையை இளையராஜா பெறுவார்" என ஜெகத் கஸ்பார் நம்பிக்கை தெரிவித்தார்.

"இந்தத் திட்டத்தை நிறைவேற்றும் முயற்சியில் இதுவரை ஒரு கோடி கடன் உள்ளது. மக்கள் நினைத்தால் இதை ஒரே வாரத்தில் தீர்த்துவிடலாம்" என்றார் ஜெகத்.

மக்கள் நினைப்பார்களா?

(தொடர்பு கொள்ள : தமிழ் மையம், 153, லஸ் சர்ச் சாலை, மயிலாப்பூர், சென்னை - 600 004. தொலைபேசி : 91-044-2499 3380, 2499 3390)

Thursday, June 30, 2005

கானல் காட்டில் கவிதைக் கருத்தரங்கம்



கொடைக்கானல் மலைத் தொடரில் கானல் காடு என்ற தோட்டப் பகுதியில் கவிதைக் கருத்தரங்கு ஒன்று, அண்மையில் நடந்தது. திசைகள் இயக்கமும் சிவகாசி பாரதி இலக்கியச் சங்கமும் இணைந்து ஜூன் 18, 19 ஆகிய நாட்களில் இதனை நடத்தின. மிகவும் இயற்கை எழில் சூழ்ந்த இந்தப் பகுதியில், மெல்லிய குளிரில், சுடாத வெய்யிலில் கவிதை குறித்து உரையாடினோம்.

பொன்னீலன் (மணிகட்டிப் பொட்டல்), தொ.பரமசிவம் (திருனெல்வேலி), பிரம்மராஜன் (தருமபுரி), திலகபாமா (சிவகாசி), தேவேந்திர பூபதி (மதுரை), ரெங்கநாயகி (ஆழ்வார் குறிச்சி), லட்சுமிஅம்மாள் (சிவகாசி), நித்திலன் (கோவை), பெரியசாமி (மதுரை), கண்ணன் (தருமபுரி), சிவக்குமார் (மதுரை), மதுமிதா (இராஜபாளையம்), பா.வெங்கடேசன் (ஓசூர்), த. பழமலய் (விழுப்புரம்), ஜெயச்சந்திரன் (விழுப்புரம்) பா.சத்தியமோகன்(நெய்வேலி), சென்னையிலிருந்து மாலன், இந்திரன், ஆர்.வெங்கடேஷ், வைகைச்செல்வி, கிருஷாங்கினி, இராதாகிருஷ்ணன், தேசபந்து ஆகியோருடன் நானும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டேன்.
யுகபாரதி, அய்யப்ப மாதவன் ஆகியோர் முதலில் வர இசைந்திருந்து, பின்னர் வரவில்லை.

நன்கு திட்டமிட்டு இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தார்கள். ஒவ்வோர் ஊரிலிருந்தும் யார் யார், எப்படி எப்படி வருகிறார்கள், அவர்களுக்கான வாகன வசதி, அவர்களை எப்படி குறித்த நேரத்தில் குறித்த இடத்தில் ஒன்று கூட்டுவது, உணவு, உறையுள், பானங்கள்... என அவர்களுக்கான வசதிகள், நிகழ்ச்சிக்கான ஒழுங்குகள், பேசப்படவேண்டிய கருப்பொருட்கள், எதை எதை எவ்வளவு நேரம் பேசுவது என்பவை தொடங்கி, எழுவது, உறங்குவது வரை ஒவ்வொன்றையும் பார்த்துப் பார்த்துக் கவனித்துச் செய்திருந்தார்கள்.

அறைக்குள் தூங்குவோருக்கு அதற்கேற்பவும் கூடாரத்தில் தங்குவோருக்கு அதற்கு ஏற்பவும் உதவத் தயாராய் இருந்தார்கள். உணவைப் பொறுத்தவரை சைவ / அசைவ விரும்பிகளுக்கு அவரவர்க்கு ஏற்ற உணவை வழங்கினர். அதுவும் மலைப்புறத் தோட்டப் பகுதியில் 'டாண் டாண்' என்று குறித்த நேரத்தில் உணவு வழங்கியது, உரையாடலுக்கு உதவியாக அமைந்தது. காலை, நண்பகல், இரவு என மூன்று வேளை உணவு மட்டுமின்றி, மணிக்கு மணி கொறிப்பதற்கும் ஏதாவது கொடுத்து, வயிற்றைக் குளிர வைத்துவிட்டார்கள். குளிர்ப் பகுதி ஆயிற்றே! வேண்டுவோருக்கு, காலையில் எழுந்ததும் குளிப்பதற்கு வெந்நீர் வழங்கினர். மிகவும் நடுக்கும் குளிர் இல்லை என்றாலும் வந்திருப்பவர்கள் மீதான அவர்களின் அக்கறை வெளிப்பட்டது.

திலகபாமாவின் பிறந்த ஊரான பட்டிவீரன்பட்டியில் ஜூன் 18 அன்று காலை செளந்திரபாண்டியனார் இலக்கியச் சந்திப்பு என்ற நிகழ்ச்சி நடந்தது. அதில் மாலன், பொன்னீலன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டனர். இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில், தாம் பிறந்த நாடார் குலம் உயரப் பாடுபட்டு, பின்னர் அந்த நாடார் பட்டத்தைத் துறந்து, சாதி நல்லிணக்கத்துக்கு உழைத்த செந்திரபாண்டியனாரைப் பற்றி இருவரும் பேசினர். உள்ளூர்ப் பேச்சாளர்களும் கவிஞர்களும் கலந்துகொண்டனர்.

மதியம் அங்கிருந்து கிளம்பி, கானல் காட்டிற்குப் பயணித்தோம். மாலை போய்ச் சேர்ந்தோம். மலையும் காடுமான பகுதி வழியே நடந்து சென்றோம். இதுவரை பார்த்திராத ஏராளமான மரங்கள், செடிகொடிகள், கண்ணுக்கும் கருத்துக்கும் விருந்து அளித்தன. அங்கு உலவிய அடர்த்தியான - கலவையான நறுமணம், இன்னும் நாசியில் நிற்கிறது.

முதலில் சுய அறிமுகமும் கவிதை வாசிப்பும் நிகழ்ந்தன. அதைத் தொடர்ந்து கவிதை, தற்காலக் கவிதை, கவிஞர்களிடம் வாசிப்புக் குறைவு, பொருள் புலப்பாடு, இருண்மை... எனப் பலவற்றைப் பற்றியும் கலந்துரையாடினோம். தனிக் கவிதை, பொதுக் கவிதை என்பது பற்றி உரத்த விவாதம் நிகழ்ந்தது. குறிப்பிட்ட கட்டத்தில் தனிக் கவிதையும் பொதுக் கவிதையாகிவிடும் என்ற கருத்து முன்வைக்கப்பெற்றது.

இரவு உணவிற்குப் பிறகும் விவாதம் தொடர்ந்தது. நள்ளிரவில் தொ.பரமசிவன் எப்படியோ வந்து சேர்ந்தார். அவரும் உரையாடலில் சேர்ந்துகொண்டார். படுக்கச் சென்ற சிலர், உரையாடலைக் கேட்டு மீண்டும் எழுந்து வந்தனர். பாலியல் சொற்களைப் பெண்கள் கையாளும் முறை குறித்து, பிரம்மராஜன் ஆதரவான கருத்துத் தெரிவிக்கவில்லை. "கலிங்கத்துப் பரணியின் காதல் பாடல்களில் காமம் மிதமிஞ்சி இருந்தாலும் அவை, கவிதைகளாக இருந்தன. இக்காலத்தவர் எழுதுபவை, கவிதைகளாக இல்லை" என்றார்.

காலையில் trecking என்று அழைக்கப்பெறும் மலைநடைக்குச் சென்றோம். இரவில் முன்பின்னாக உறங்கியதில் எல்லோரும் ஒரே நேரத்தில் இப்படி நடந்து செல்லவில்லை. நான் கொஞ்சம் பின்னதாகத்தான் நடந்தேன். காலையில் மெல்லிய குளிரில் நடந்தது, நல்ல அனுபவம்.

காலை உணவிற்குப் பிறகு, பேரா. தொ.பரமசிவம், இதுவரை கவிதை என்ற தலைப்பில் ஒன்றரை மணிநேரம் அருமையான உரை நிகழ்த்தினார். "ஒவ்வொரு நூற்றாண்டிலும் ஒரு செவ்வியல் இலக்கியம் தலைமை இடத்தை வகித்தது", "மது என்ற ஒரு சொல்லைக் குறிக்கப் பல சொற்கள் உள்ளன. இது, தமிழர்கள் மதுவை எந்த அளவு பயன்படுத்தினார்கள் என்பதைக் காட்டுகிறது", "பண்பாடு மட்டுமின்றி மொழியும் பெண்களின் வழியேதான் தொடர்ந்து அடுத்தடுத்த தலைமுறைகளுக்குச் செல்கிறது. பெண்கள் பயன்படுத்தாததால்தான் சமஸ்கிருதம் அழிந்தது".... போன்ற பல கருத்துகளைத் தெரிவித்தார். "சங்க காலத்துப் பாடல்களில் எட்டுத் தொகையை மட்டும் குறிப்பிட்டது ஏன்?" என்று உரைக்குப் பின் பழமலய் கேட்டார். பத்துப் பாட்டு, காலத்தால் சற்றே பிந்தையது என்ற கருத்து இருப்பதாகத் தொ.ப. கூறினார்.

அவரைத் தொடர்ந்து பிரம்மராஜன், ஐரோப்பியக் கவிதைகளுடனான தம் அனுபவங்களையும் தம்மைக் கவர்ந்த கவிஞர்களையும் தாம் மொழிபெயர்த்தவற்றையும் பற்றிச் சுருக்கமாகப் பேசினார். அவரை அடுத்து இந்திரன், ஆப்பிரிக்கக் கவிதைகளுடன் தமக்கு எப்படி அறிமுகம் ஏற்பட்டது, அவற்றை மொழிபெயர்த்தது எப்படி?, அவை எத்தகைய வரவேற்பைப் பெற்றன? என்று கூறிவிட்டு, தாம் மொழிபெயர்த்த ஒரு கவிதையையும் வாசித்தார்.

அதன் பிறகு, பாலுக்கும் அப்பால்: சமகாலக் கவிதைகள் என்ற தலைப்பில் விவாதம் நடந்தது. அதில் பல விமர்சனங்களை முன்வைத்தனர். வழக்கம்போல் திலகபாமா, வைகைச்செல்வி, மதுமிதா, ரெங்கநாயகி ஆகியோர் பால்மொழிகளைக் கண்டித்தனர். "எங்களைப் பலரும் ஒரு மாதிரியாகப் பார்க்கின்றனர்" என வைகைச்செல்வி குறிப்பிட்டார். "அது, அவர்களின் விடுதலைக்கான குரல் எனில் அதை முன்வைப்பதில் என்ன தவறு?" என இந்திரன் கேள்வி எழுப்பினார். மாலன் உள்பட பலரும், பால்மொழியானது கவன ஈர்ப்புக்கான கருவி, வணிகத்திற்கு உதவும் உத்தி என்ற கருத்துகளைக் கொண்டிருந்தனர்.

"பெண்களின் பால்மொழி, சமூகத்தின் சகல விதமான அடக்குமுறைகளுக்கும் (பாலியல் உள்பட) எதிரான ஆயுதம். மொழி, ஆண்களால் கட்டமைக்கப்பெற்றுள்ளது. அதை உடைக்கப் பெண்கள், பாலியல் சொற்களை ஆயுதமாகப் பயன்படுத்துகின்றனர். பாலுணர்வை எழுதுவதைத் தவறாகக் கருதுகிற சமூகக் கண்ணோட்டத்திற்குப் பதிலடி கொடுக்கும் முயற்சியாகவும் இதைக் கருதலாம். இது இப்போதுதான் அரும்பு விட்டுள்ளது. இதற்கே இப்படி உணர்ச்சி வயப்பட்டால் பெண்கள், உண்மையிலேயே தங்கள் பாலுணர்வை வெளிப்படுத்தத் தொடங்கினால், அதை உங்களால் தாங்க முடியாது" என்ற கருத்தை நான் முன்வைத்தேன். கிருஷாங்கினியும் இக்கருத்தை ஆதரித்தார். பலரும் உரத்த குரலில், ஆவேசமாகக் கருத்துரைத்தனர். அனைவரும் தங்கள் கருத்தை முன்வைக்கும் தன்மையில் விவாதம் அமையவில்லை. "எனக்கு மனநிலை பாதிக்கப்பெற்ற மூன்று குழந்தைகள் இருந்தால் நான் கவிதை எழுதிக்கொண்டிருக்க மாட்டேன்" என்று கிருஷாங்கினி கூறினார்.

பெரும்பாலும் பெண் கவிஞர்களின் படைப்புகள் குறித்தே விவாதம் சென்றது. விக்ரமாதித்யன், மகுடேஸ்வரன் ஆகியோரின் பெயர்களைச் சிலர் குறிப்பிட்டாலும் விவாதமாக அது வளரவில்லை. எனினும் கவிதையைக் குறித்துப் பலரும் பல்வேறு கருத்துகளைக் கொண்டிருக்கின்றனர் என்பதை உறுதிப்படுத்தவும் யார் யார் என்னென்ன கருத்துகள் உடையவர்கள் என்பதைச் சிறிது அறியவும் இயற்கை எழில் சூழ்ந்த இடத்தில் தங்கவும் நல்ல காற்றை நுகரவும் இந்த நிகழ்ச்சி, ஒரு வாய்ப்பாக அமைந்தது.

கவிதையை எவ்வாறு புரிந்துகொள்வது, கவிதைக் கலையின் நுணுக்கங்கள், உத்திகள் எனப் பல, இந்த நிகழ்வில் இடம்பெறவில்லை. பிரம்மராஜன், இந்திரன் போன்றோர், இந்தப் பணியைச் செய்வார்கள் என மாலன் நினைத்திருக்கலாம். ஆனால், அவர்கள் வேறு கோணத்தில் உரை நிகழ்த்தினர்.

பல நூறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டுள்ளதால், எனக்கு ஒரு கருத்து உறுதிப்பட்டு வருகிறது. கவிதை போன்ற நுண்கலைகளைப் பேச்சின் மூலம் அல்லாது எழுத்தின் மூலம் அறிவதே சிறந்ததோ என்று தோன்றுகிறது. பேசும்போது கவிதைகளை அப்படியே மேற்கோள் காட்டுவது கடினம். வெறும் வாய்மொழியிலேயே அனைத்தையும் ஆற்றொழுக்காக, எதையும் விட்டுவிடாமல், முழுமையாகக் கருத்துரைக்கும் அளவுக்கு நம்மவர்கள் திறனை வளர்த்துக்கொள்ளவில்லை. அதற்கு அளப்பரிய நினைவாற்றல் தேவை.

திறந்த வெளியில் நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்வோர், ஒலிவாங்கி ஒன்றை அவசியம் வைத்திருப்பது நல்லது. திறந்த வெளி என்பதால் அதில் ஒலி இழப்பு அதிகம் ஏற்படுகிறது. 'நானும்' என்பது 'ஞானம்' எனச் சிலருக்குக் கேட்கிறது. வாக்கியத்தின் முடிவில் குரல் தேயும்போது, இறுதிச் சொற்களைச் சரியாகக் கேட்க முடியவில்லை. அறைக்குள்ளாவது ஒலிஇழப்புக் குறையும். பதிவு செய்வதிலும் ஒவ்வொருவரும் ஒவ்வோர் ஒலிஅளவில் பேசுவதால் பொது இடத்தில் வைத்திருக்கும் ஒலிப்பதிவுக் கருவியால் துல்லியமாக அவர் பேச்சைப் பதிய இயலாது. கழுத்துப் பட்டை ஒலிவாங்கி போன்றவை இருந்தால் இந்தப் பதிவு, இன்னும் சிறந்ததாக இருக்கும்.

வைகைச்செல்வியுடன் வந்த இராதாகிருஷ்ணன் என்ற வில்விஜயன், சுற்றுச் சூழல் கலைக்குழுவில் பணியாற்றி வருபவர். இவர், இரண்டு நாள்களும் 'மிமிக்ரி' என்ற பல்குரல் கலையின் மூலம் அபாரத் திறமையை வெளிப்படுத்தினார். மு.கருணாநிதி, வைரமுத்து, கமலகாசன், எம்.ஆர்.ராதா, ஜனகராஜ், எம்.ஜி.ஆர்., கிருபானந்த வாரியார்.. எனப் பலரின் குரலில் அன்றைய விவாதத்தில் பேசிய கருத்துகளுக்கு மறுமொழி போல் பேசியமை, அவரின் கவனிப்புக்கும் நினைவாற்றலுக்கும் ஆற்றொழுக்குத் தன்மைக்கும் சான்றாக விளங்கியது.

இலக்கிய நண்பர்களின் அணுக்கத்துடன் கவிதை குறித்து விவாதிக்க ஒரு வாய்ப்பாக, இந்நிகழ்வு அமைந்தது. அந்த மட்டில் இந்த நிகழ்ச்சி, வெற்றிதான். இதே போன்று சென்னைக் கடற்கரையில் தொடர்ந்து நிகழ்ச்சி நடத்தலாம் என்று மாலன் கூறியுள்ளார். இது தொடர்ந்தால், தமிழுக்கு நல்லது.

Saturday, June 11, 2005

புத்தகங்களும் நானும்

அண்ணாகண்ணன்

வலைப்பதிவு உலகில் நூல்களின் சங்கிலி வரிசையாகச் சிலர் எழுதி வருகின்றனர். அவ்வரிசையில் இணையுமாறு ஜெயந்தி சங்கர் அழைத்தார். அவர் அழைத்திராவிட்டால் இப்பொழுது இதை நான் எழுதியிருக்க மாட்டேன். அதற்காக அவருக்கு என் நன்றி. சற்றே வேறான ஒரு கோணத்தில் என் நூலுறவுகளைக் குறிப்பிடுகிறேன்.

சுமார் ஐந்து வயதிலிருந்தே எனக்குப் புத்தகங்களுடனான உறவு தொடங்கிவிட்டது. ராணி காமிக்ஸ், லயன் காமிக்ஸ்..., அம்புலிமாமா, கோகுலம்... எனச் சில கிடைத்தன. கிடைக்கும் எல்லாவற்றையும் ஆர்வத்துடன் வாசித்துக்கொண்டிருந்தேன். காமிக்ஸ் புத்தகங்களை அடுத்து, கல்கி, சாண்டில்யன் போன்றோரின் வரலாற்றுப் புதினங்கள், பாலகுமாரன், சுஜாதா போன்றோரின் சமூகப் புதினங்கள் என ஏராளமாக வாசித்திருக்கிறேன்.

தஞ்சை மாவட்டத்தில் உள்ள வேப்பத்தூரில் என் உறவினர் ஒருவர் நூலகராய் இருந்தார். எனவே விடுமுறைக்கு ஊருக்குச் செல்லும்போதெல்லாம் விரும்பும் நூல்களையெல்லாம் எடுத்து வாசிக்க முடிந்தது.

திருவாரூரில் நான் ஒரு விடுதியில் தங்கிப் படித்தேன். அப்போது அந்தப் பள்ளியின் தாளாளர் ஜானகி அம்மாள் அவர்கள், நூலகத்திலிருந்து நூல்கள் எடுத்து வாசிக்க ஊக்குவித்தார். அதுமட்டுமின்றி, படித்த நூல்களில் உங்களுக்குப் பிடித்த/ பிடிக்காத அம்சங்கள் என்னென்ன என்று ஒரு குறிப்பேட்டில் எழுதிவரச் சொன்னார். அப்படிச் சில புத்தகங்களைக் குறித்து, ஓர் ஏட்டில் எழுதி வந்தேன். அப்போது எனக்கு 15 வயது. புத்தகத்தின் பெயர், ஆசிரியர், பதிப்பகம், பக்கம், விலை எனச் சில விவரங்களையும் எழுதினேன். பின்னர் நாட்குறிப்பு எழுதத் தொடங்கியபோதும் இந்தப் பழக்கம் தொடர்ந்தது. அன்றன்று படித்த புத்தகத்தைப் பற்றி ஒரு சிறிய குறிப்பு / விமர்சனம் எழுதி வைத்தது உண்டு.

பதின்ம வயதில் மாலைமதி வாசித்தேன். அப்போது அதில் பாலியல் சார்ந்த காட்சிகள் இல்லாமல் கதையே இருக்காது. 'மாலைமதி படிக்காதே. கெட்டுப் போய்விடுவாய்' எனப் பெரியவர் ஒருவர் எச்சரித்தார்.

அதே பருவத்தில் அகிலனின் 'சித்திரப் பாவை'யையும் வாசித்த நினைவு உண்டு. பூவண்ணனின் 'புதையல் வீடு' கூட படித்துள்ளேன். சிலவற்றை நூல்களாகவும் தொடராக வெளிவந்த பலவற்றைத் தைத்துக் கட்டிய (பைண்டு செய்த) தொகுதிகளாகவும் வாசித்துள்ளேன்.

கதைகளுக்குப் பிறகு வாழ்க்கை வரலாறுகள், பயண இலக்கியங்கள், அறிவியல் புனைகதைகள் என என் கவனம் திரும்பியது. 'காரின் அழிவுக் கதிர்' என்ற இரஷ்ய மொழிபெயர்ப்பு நூல், என் கவனத்தைப் பெரிதும் கவர்ந்தது. அது குறித்து, நானும் நண்பர்கள் சிலரும் சேர்ந்து நடத்திய இலக்கியப் பாசறை என்ற சிற்றிதழில் ஒரு விமர்சனம் எழுதினேன்.

நான் மிகவும் விரும்பிப் படித்த நூல்கள் சில உண்டு. 'ஜே.ஜே. சில குறிப்புகள்' நூலை வாசிக்க எடுத்திருந்தேன். அந்நேரம் எனக்கு வேறு வேலைகளும் இருந்தன. என்ன செய்வது? உடற்பயிற்சி செய்யும் போது, பலவித ஆசனங்களைச் செய்துகொண்டே அந்நூலை வாசித்தேன். குனிந்து செய்யும் உடற்பயிற்சியின்போது நூலைத் தரையில் வைத்தேன். அண்ணாந்து பார்த்துச் செய்பவற்றில் நூலை ஆகாயத்தில் தூக்கிப் பிடித்துக்கொண்டேன். பக்கவாட்டில் சாய்ந்து செய்யும் ஆசனங்களில் நூலையும் பக்கவாட்டுக்குக் கொண்டு சென்றேன். நான் எந்தக் கோணத்தில் சென்றாலும் என் கண்களுக்கு எதிரே அந்த நூலைக் கொண்டு சென்றேன்.

ஆனால், இப்படித் தீவிரமாகப் படித்த நூல்களின் கருத்துகளை எல்லாம் நான் ஏற்றுக்கொண்டு விட்டேனா என்றால் இல்லை. கண்ணுக்குத் தெரியாத ஒரு தீச்சுவர் நம் மனத்தில் உள்ளது. அது, நம் மனம் விரும்பாதவற்றை உள்ளே அனுமதிக்காது.

பலவிதமான தருணங்களில் எனக்குப் பலவிதமான நூல்கள் பரிசாகவும் அன்பளிப்புகளாகவும் வந்துள்ளன. போட்டிகள் பலவற்றில் வெல்பவருக்கு நூல்கள் அளிப்பது வழக்கம். கவியரங்கம், கருத்தரங்கம் ஆகியவற்றில் கலந்துகொள்ளும்போதும் இந்த வழக்கம் உண்டு.

பழைய புத்தகக் கடைகளில் பலவிதமான நூல்களை மிகவும் குறைவான விலையில் வாங்கிப் படித்தது உண்டு. நண்பர்களிடம் இரவல் வாங்கிப் படித்ததும் உண்டு. நானும் பலருக்கு நூல் இரவல் அளித்துள்ளேன். இரவல் நூல்கள் பலவும் போனவரிடம் தங்கி விடுவது உண்மை. அதனால் அடுத்த வேறு யாரேனும் நூல் கேட்டாலும், முன் எச்சரிக்கையோடு 'இல்லை' என்று கூறியிருக்கிறேன். ஆயினும் மனம் கேட்காமல் கொடுத்த நூல்கள், நண்பர்களிடம் இன்னும் பத்திரமாக இருக்கின்றன!

நூல்களைப் பாதுகாக்கும் பணி, இன்னும் சிரமமானது. அடிக்கடி தூசி அடையும் அவற்றைத் தூய்மை செய்வது, கடினம். தூசி ஒவ்வாமை உள்ள எனக்கு, இன்னும் மிகக் கடினம். வேறு யாரையேனும் இதைச் செய்யப் பணித்தால், துறை வாரியாக நான் பிரித்து வைத்த நூல்கள் கலைந்து, மூலைக்கு ஒன்றாக, அட்டை மாறிப்போய், ஓரங்கள் கிழிந்துபோய்க் கிடக்கும்.

வாசகராக மட்டுமின்றி, வேறு வகைகளிலும் புத்தகங்களுடன் எனக்கு உறவு உண்டு.
நான் படைப்பாளியாக உருவெடுத்த பின், இன்று வரை 8 நூல்கள், நூல்வடிவம் பெற்றுள்ளன. அவை:
1. பூபாளம் (கவிதைகள் - 1996)(சொந்த வெளியீடு)
Image hosted by Photobucket.com
2. உச்சம் அடம் ஞானம் உயிர்ப்பு (கவிதைகள் - 1997)(சொந்த வெளியீடு)
Image hosted by Photobucket.com
3. காந்தளகம்-20 ஆண்டுகள் (வணிக வரலாறு -2000)(காந்தளகம் வெளியீடு)
Image hosted by Photobucket.com
4. தகத்தகாய தங்கம்மா (வாழ்க்கை வரலாறு - 2001)(காந்தளகம் வெளியீடு)
Image hosted by Photobucket.com
5. சிங்களவர் வரலாற்று நூல்களின் நம்பகத்தன்மை (மறவன்புலவு க. சச்சிதானந்தனுடன் இணைந்து மொழிபெயர்ப்பு / 2002)(காந்தளகம் வெளியீடு)
Image hosted by Photobucket.com
6. கலாம் ஆகலாம் (சிறுவர் பாடல் / 2002)(கங்காராணி பதிப்பகம்)
Image hosted by Photobucket.com
7. நூற்றுக்கு நூறு (சிறுவர் கதை / 2003)(கங்காராணி பதிப்பகம்)
Image hosted by Photobucket.com
8. தமிழில் இணைய இதழ்கள் (ஆய்வு / 2004)(அமுதசுரபி வெளியீடு)
Image hosted by Photobucket.com

இவை தவிர, சில நூல்களை எழுதி அளித்துள்ளேன். இன்னும் அச்சாகவில்லை. அத்தகையவை:
1. அரசுக்கு எதிராக இரண்டு வழக்குகள் (தஞ்சையில் நடந்த உலகத் தமிழ் மாநாட்டிற்கு வந்திருந்த ஈழத் தமிழர்கள் சிலரைத் தமிழக அரசு திருப்பி அனுப்பியது. அதை எதிர்த்து மறவன்புலவு க. சச்சிதானந்தனும் பெருங்கவிக்கோ வா.மு. சேதுராமனும் சென்னை உயர்நீதி மன்றத்தில் தொடர்ந்த வழக்குகள் தொடர்பான நூல்)

2. ஈழத்திற்கு மருந்துகள் கடத்தச் சதி செய்ததாக மறவன்புலவு க. சச்சிதானந்தன் உள்பட சிலரைத் தமிழக அரசு கைது செய்தது. பின்னர், தகுந்த ஆதாரம் இல்லை என்று இவர்களை நீதிமன்றம் விடுவித்தது. இது தொடர்பான விவரங்களைத் திரட்டி, ஒரு நூல் எழுதி அளித்துள்ளேன்.

வெளிவராத என் நூல்கள்:
1. சோதனை முயற்சியாக என் இரண்டு கவிதைகளை 33 மொழிகளுக்கு மொழிபெயர்க்கச் செய்துள்ளேன். அவை: தெலுங்கு, மலையாளம், கன்னடம், துளு, இந்தி, சிந்தி, குஜராத்தி, கொங்கணி, மராத்தி, ஒரியா, சமஸ்கிருதம், மைதிலி, போஜ்புரி, பஞ்சாபி, லடாகி, இராஜஸ்தானி, செளராஷ்டிரா, அவதி, பெங்காலி, உருது, பெர்சியன், அரபி, மகஹி, பிரிஜ்பாஷா, ஆங்கிலம், சிங்களம், இரஷ்யன், ஜப்பானீஸ், ஸ்பானிஷ், ஹீப்ரூ, காசி(Khasi)..... இவற்றை, கவிதைகள் குறித்த மொழிபெயர்ப்பாளர் கருத்துகளோடு ஒரே நூலாக வெளியிடத் திட்டம். தகுந்த வெளியீட்டாளர் அமையாததால் தாமதமாகிறது.

2. அ.க. 47 / AK 47:
என்னுடைய 47 கவிதைகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கும் பணி நடந்து வருகிறது. இது முடிந்தால் இடது பக்கம் தமிழும் வலது பக்கம் ஆங்கிலமுமாக, இருமொழி நூலாக வெளியிட எண்ணம். இவை இரண்டுக்கும் நல்ல பதிப்பாளரை எதிர்நோக்கியுள்ளேன்.

3. நான் எடுத்த நேர்காணல்கள், எழுதிய கட்டுரைகள், வானொலி உரைச்சித்திரங்கள், கவிதைகள், சிறுவர் பாடல்கள்... எனச் சுமார் 10 நூல்கள், இன்னும் நூல் வடிவம் பெறவேண்டி உள்ளது.


இவை தவிர, நான் பதிப்பாசிரியராகவும் சில நூல்களுக்குப் பணியாற்றியுள்ளேன். அவை:
1. விவாதங்கள்... சர்ச்சைகள்... - வெங்கட் சாமிநாதன் (அமுதசுரபி வெளியீடு)
2. மலர்மன்னன் கதைகள் - மலர்மன்னன்(அமுதசுரபி வெளியீடு)
3. காப்டன் கல்யாணம் - வசுமதி ராமசாமி (அமுதசுரபி வெளியீடு)

நான் தயாரித்து அளித்த நூல்கள்:
1. பாரதியார் சரித்திரம் - செல்லம்மா பாரதி(அமுதசுரபி வெளியீடு)
2. தங்கம்மாள் பாரதி படைப்புகள் - தங்கம்மாள் பாரதி(அமுதசுரபி வெளியீடு)

இவை தவிர நூற்றுக்கணக்கான நூல்களுக்கு மெய்ப்பாளராக(proof reader)ப் பணியாற்றியுள்ளேன்.

எழுத்துத் திறம் குறைவான சிலருக்காக, அவர்களிடமிருந்து கருவைப் பெற்று நூலாக்கித் தந்துள்ளேன் (நூல், அவருடைய பெயரில் வரும்).

நூலாக்கத்தில் மட்டுமின்றி, இதழ்களிலும் அரங்குகளிலும் பல முறைகள் நூல் திறனாய்வு புரிந்ததும் உண்டு.

என் இல்லத்தில் புதிதும் பழையதுமாக 500க்கும் மேலான புத்தகங்கள் உள்ளன. என் அலுவலகத்தில் இரண்டு ஆயிரத்திற்கும் மேலான நூல்கள் உள்ளன. மாதந்தோறும் சுமார் 100 புத்தகங்கள், அமுதசுரபி நூல் விமர்சனத்திற்கு வருகின்றன. இவை அனைத்தையும் நான் படித்ததில்லை. அதற்கு நேரமும் இல்லை. தேவைக்கு ஏற்பவும் மனநிலைக்கு ஏற்பவும் சிலவற்றைப் படிக்கிறேன்.

மூன்று நூலகங்களில் நான் உறுப்பினராக உள்ளேன். இந்த நூலகங்களுக்கு நூல் எடுப்பதற்காகச் சென்று, ஆண்டுக் கணக்கில் ஆகின்றன. இணையத்தில் இலவச மின்னூல்களும் மதுரைத் திட்டம், சென்னை நெட்வொர்க் போன்ற தளங்களில் நல்ல தொகுப்புகளும் கூடிக்கொண்டே வருகின்றன. இன்று நம் வீட்டில் எவ்வளவு புத்தகங்கள் உள்ளன என்பது முக்கியமில்லை. படிப்பதற்கு நமக்கு எவ்வளவு நேரம் உள்ளது என்பதே முக்கியம்.

இன்னொரு முக்கிய நோக்கு: நான் இன்று வரை சில ஆயிரம் நூல்களைப் படித்திருப்பேன். அவை அனைத்தும் என் நினைவில் இல்லை. அப்படி இருப்பது சாத்தியமும் இல்லை. நான் படித்து மறந்து போய்விட்டேனே! அந்தப் புத்தகங்களை நான் எந்த வகையில் சேர்ப்பது? படித்த வகையிலா? படிக்காத வகையிலா?

என் வாசிப்பு, இந்த அழகில் இருக்கும்போது, நான் இன்று படிக்கும் நூல்கள் எதிர்காலத்தில் என் நினைவில் இருக்குமா? இருக்காது எனில் நான் இன்று படிப்பதன் பயன் என்ன? இன்பமோ, துன்பமோ, உடனடியாகக் கிடைக்கும் ஏதோ ஓர் உணர்வுதான் பயனா? எழுத்து, என் வாழ்வை மாற்றி அமைக்க நான் அதை ஞாபகத்தில் வைத்திருக்க வேண்டாமோ?

வரி விடாமல் படித்த ஒரு தலையணைப் புத்தகம், ஒரு கனவுக் காட்சியைப் போல் தோன்றுகிறது. சில வேளைகளில் ஒரு நூலில் வாசித்த காட்சி, வேறொரு நூலுடையதாகத் தோன்றுகிறது. எங்கோ படித்திருக்கிறேன்... ஆனால், எங்கே என்று நினைவில்லை என்ற நிலையிலும் பல வாசகங்கள், சம்பவங்கள் நினைவில் ஆடுகின்றன.

யாருக்கேனும் இளவயதில் படித்த பாடப் புத்தகங்கள் முழுதும் நினைவில் உள்ளனவா? கட்டுரைப் போட்டிகளில் குறிப்புத் திரட்டி நான் எழுதிய ஆக்கங்கள், பேச்சுப் போட்டிகளில் நான் பேசிய பேச்சுகள், நண்பர்களுடன் உரையாடிய நாட்கள்... இவை யாவற்றையும் புகை நடுவேதான் காண முடிகிறது.

நான் எழுதுவதற்கான பல காரணங்களில் ஒன்று: எழுதாவிட்டால் நான் மறந்துவிடுவேன்.

இளவயதில் நான் நூல்களைக் கண்டு மலைத்ததில்லை. வாசிப்பதாயினும் படைப்பதாயினும் இன்றுவரை அது எனக்கு எளிதே. எழுத்தாளர் ஒருவர் (அலெக்சாண்டர் டூமாஸ் என்று நினைவு), உலகிலேயே அதிக அளவாக 1,400 நூல்கள் எழுதியதாக ஒரு செய்தி படித்தேன். 'இந்தச் சாதனையை நான் முறியடித்துக் காட்டுகிறேன்' என்று அப்போது நான் சொல்லிக்கொண்டேன்.

உலகிலேயே அதிகப் பக்கங்கள் உள்ள ஒரு நூல் என ஏதோ ஒன்றைப் பற்றிப் படித்தேன். அப்போதும் 'இதைத் தாண்ட என்னால் முடியாதா, என்ன?' என என்னை நானே கேட்டுக்கொண்டேன்.

உலகிலேயே அதிக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட நூல் என்ற செய்தியைக் கேள்விப்பட்டேன். 'ஆகா, இந்தப் பெருமையையும் நான் விட்டுத் தரமாட்டேன்' என எனக்குள்ளேயே கூறினேன்.

அளவு மட்டுமே சாதனை ஆகாது. உள்ளடக்கமே முக்கியம் என அறிவேன். சிறப்பான உள்ளடக்கத்துடனேயே பேரெண்ணிக்கையில் படைப்பது சாத்தியம் என எண்ணியிருந்தேன்.

இலக்கியத்திற்கான நோபல் பரிசு அறிவிப்பானது, வெளியான நூல்களில், கிடைத்த சிலவற்றை ஆராயும் சிலரின் கருத்தே தவிர, அறிவிக்கப்படும் அவர் உலகிலேயே சிறந்த படைப்பாளி எனக் கருத முடியாது. என் சமகாலப் படைப்பாளி, என் எழுத்துக்குப் பதில் சொல்லிவிட்டு என்னைக் கடந்து போகட்டும். வெற்றியோ, தோல்வியோ அதைப் பற்றிக் கவலையில்லை. ஒரு கடும் போட்டி அவருக்குக் காத்திருக்கிறது என்றெல்லாம் சொல்லிக்கொண்ட காலம், அது.

மிதமிஞ்சிய தன்னெழுச்சியுடன் நான் நூல்களை அணுகினேன். புத்தகத்தை எடுக்கும்போது, அடிமைச் சிந்தனையுடன் கண்ணில் ஒற்றிக்கொள்ளுவோர், பலர். நானோ, அவற்றைச் செவ்வி கண்டேன். 'நீ இப்போது புதிதாக என்ன சொல்லப் போகிறாய்?' எனக் கேள்விக்குறியோடு பலவற்றை நான் அணுகியுள்ளேன்.

சில நிகழ்வுகள், இதை வலுப்படுத்தின. என் கருத்தினை யாரோ ஒரு வெளிநாட்டுச் சிந்தனையாளனின் பொன்மொழிகளில் வாசித்தபோதும், நான் எழுதியதுபோன்ற கவிதைகளைச் சில மொழிபெயர்ப்புகளில் கண்டபோதும், என் உணர்வுகளை வேற்றுநாட்டுப் படைப்பாளி பிரதிபலித்த போதும் என்னைப் போலவே இவர்களும் சிந்தித்திருக்கிறார்களே என எண்ணியது உண்டு. அவர்களுக்கு நான் எந்த வகையிலும் குறைந்தவன் இல்லை; அவர்களை விடவும் சிறந்த உயரங்களுக்கு என்னால் செல்ல முடியும் என்று கூறினேன்.

அ·து, ஒரு காலம். பிற்பாடு நான், மாறினேன். யாவற்றின் மீதும் பற்றற்ற மனநிலையை நோக்கி இப்போது பயணிக்கிறேன். பயணச் சீட்டு எடுத்துவிட்டேன்; போய்ச் சேர்ந்தேனா என்பதை உடனே சொல்ல இயலாது. இது மிகப் பெரிய பிம்பமாக இருந்தால், பற்றுக் குறைந்த நிலை என்று வைத்துக்கொள்ளுங்கள். நடப்புகளின் மீது, நான் ஆவேசம் கொள்ளுவது இல்லை. அப்படி நான் உணர்ச்சிவயப்படுவேன் ஆயின் அது என் பொருட்டு அன்று. மருத்துவர், கத்தியைக் கையில் எடுப்பது, உணர்ச்சிவயப்பட்டு அன்று. சிகிச்சையின் பொருட்டே.

'இங்கே ஒருவன் இருக்கிறேன், இருக்கிறேன் என்று இந்தச் சமூகத்திற்கு நான் நினைவுபடுத்திக்கொண்டே இருக்கவேண்டுமா, என்ன? தேவையானால் சமூகமே, உனக்கு என்ன வேண்டும் என்று கேள். தர முயல்கிறேன்' என்று இப்போது என் மனம் சொல்கிறது.

புத்தகங்கள், எப்போதும் எனக்கு எண்ணற்ற சிறகுகளை அளிக்கக் கூடியவை. பறந்துகொண்டே இருக்கிறேன். சிறகடிக்காமலும் சில நேரங்கள் என்னால் பறக்க முடிகிறது. அது, ஏற்கெனவே சிறகசைத்ததாலேயே இயல்கிறது. பரந்த வானில் ஒரு புள்ளியாகப் பறக்கிறேன்; பறந்துகொண்டே இருக்கிறேன்.

Friday, June 10, 2005

தமிழில் மிதிவண்டி உதிரி பாகங்கள்

மூன்று மாதங்களுக்கு முன் முதல்வர் ஜெ. ஜெயலலிதா, சட்டப் பேரவையில் பேசினார். விவாதத்திற்கு இடையில் 'சைக்கிள் ஸ்பேர் பார்ட்சுகள் நூற்றினைத் தமிழில் சொல்ல முடியுமா?' எனக் கோ.க. மணியிடம் கேட்டார். அதற்கு அவரால் உடனே பதில் சொல்ல முடியவில்லை.

கடந்த இரண்டு வாரங்களாக இது குறித்துத் தொடர்ந்து சிந்தித்து வந்தேன். மிதிவண்டி உதிரி பாகங்களுக்கான ஆங்கிலப் பெயர்களை முதலில் பட்டியலிட்டேன்; http://www.firstflightbikes.com உள்பட பல்வேறு இணைய தளங்களில் தேடினேன். தொழிற்கருவிகள், துணைப் பொருள்கள், செய்யும் வேலைகள் ஆகியவற்றையும் சேர்த்துக்கொண்டேன். பிறகு, அவற்றுக்குப் பொருத்தமான தமிழ்ச் சொற்கள் குறித்து ஆராய்ந்தேன். என் இளவல், எந்திரப் பொறியாளர் பிரசன்னா ஒத்துழைத்தார்.

உதிரி பாகங்களை அவற்றின் உருவம், செயல்பாடு, பயன்பாடு ஆகியவற்றின் அடிப்படையில் தமிழாக்கியுள்ளேன். பெரும்பாலும் காரணப் பெயர்களாக வருமாறு அமைத்துள்ளேன். மிதிவண்டியின் முன்பகுதியிலும் பின்பகுதியிலும் உள்ளவற்றைத் தனித்தனியே கூற வேண்டியுள்ளது. ஏனெனில் அவை, ஒரே மாதிரியானவை அல்ல. முன்னதைப் பின்னதன் இடத்திலோ, பின்னதை முன்னதன் இடத்திலோ பயன்படுத்த இயலாது. எனவே, இரண்டும் தனித்தவை ஆகின்றன. ஆகவே, தனித் தனிப் பொருட்களாகக் காட்டியுள்ளேன். இப்போதைக்கு 153 சொற்கள் கிடைத்துள்ளன. அவை பின்வருமாறு:

Tube - மென் சக்கரம்
Tyre - வன் சக்கரம்
Front wheel - முன் சக்கரம்
Rear wheel (or) Back wheel - பின் சக்கரம்
Free wheel - வழங்கு சக்கரம்
Sprocket - இயக்குச் சக்கரம்
Multi gear sprocket - பல்லடுக்குப் பற்சக்கரம்
Training wheels - பயிற்சிச் சக்கரங்கள்

Hub - சக்கரக் குடம்
Front wheel axle - முன் அச்சுக் குடம்
Rear wheel axle - பின் அச்சுக் குடம்
Rim - சக்கரச் சட்டகம்

Gear - பல்சக்கரம்
Teeth - பல்
Wheel bearing - சக்கர உராய்வி
Ball bearing - பந்து உராய்வி
Bottom Bracket axle - அடிப்புறத் தண்டியக்கட்டை அச்சு
Cone cup - கூம்புக் கிண்ணம்
Mouth valve - மடிப்பு வாய்
Mouth valve cover - மடிப்பு வாய் மூடி

Chain - சங்கிலி
Chain link - சங்கிலி இணைப்பி
Chain pin - இணைப்பி ஒட்டி
Adjustable link - நெகிழ்வு இணைப்பி
Circlip - வட்டக் கவ்வி
Chain lever - சங்கிலி நெம்பி

Frame - சட்டகம்
Handle bar - பிடி செலுத்தி
Gripper - பிடியுறை
Cross Bar - குறுக்குத் தண்டு
Cross Bar cover - குறுக்குத் தண்டு உறை
Sissy Bar - சிறுமியர் இருக்கைத் தண்டு

Dynamo - மின் ஆக்கி
Head light - முகப்பு விளக்கு
Danger light (or) Light reflector - அபாய விளக்கு (அ) ஒளிதிருப்பி
Rearview Mirror - பின்காட்டி

Back Carrier - பொதி பிடிப்பி
Front Carrier Basket - பொதி ஏந்தி
Carrier support legs - பொதி பிடிப்பித் தாங்கு கால்கள்
Side box - பக்கவாட்டுப் பெட்டி

Stand - நிலை
Side stand - சாய்நிலை
Speedo meter (Odo meter) - வேகம்காட்டி
Fender - வண்டிக் காப்பு
Derailleurs - பற்சக்கர மாற்றி
Peg - ஆப்பு
Air pump - காற்றழுத்தி
Shock absorber - அதிர்வு ஏற்பி

Brake - நிறுத்தி
Brake shoes - நிறுத்துக்கட்டை
Brake wire - நிறுத்திழை
Brake Lever - நிறுத்து நெம்பி
Front Brake ankle - முன் நிறுத்துக் கணு
Back Brake ankle - பின் நிறுத்துக் கணு
Disc Brake - வட்டு நிறுத்தி
Brake connecting links - நிறுத்தி இணைப்பிகள்

Pedal - மிதிக்கட்டை
Reflecting Pedal - ஒளிதிருப்பி மிதிக்கட்டை
Pedal cover - மிதிக்கட்டை உறை
Pedal cup - மிதிக்கட்டைக் குமிழ்
Pedal rod - மிதிக்கட்டைத் தண்டு
Spindle - சுழலும் மிதிக்கூடு

Seat (Saddle) - இருக்கை
Seat Post - இருக்கை தாங்கி
Baby Seat - குழந்தை இருக்கை
Seat cover - இருக்கை உறை
Leather Seat - தோல் இருக்கை
Cushion seat - மெத்திருக்கை

Washer - நெருக்கு வில்லை
Tension washer - மிகுநெருக்கு வில்லை
Screw - திருகுமறை
Nut - ஆணி இறுக்கி
Bolt - திருகாணி
Spring - சுருள்
Bush - உள்ளாழி
Lever - நெம்பி
Rust - துரு
Balls - பொடிப்பந்துகள்
Crank - வளைவு அச்சு
Rivet - கடாவு ஆணி
Axle - அச்சு
Spring chassis - சுருள் அடிச்சட்டம்
Nose spring - சுருள் முனை
Fork - கவை
Horn - ஒலியெழுப்பி
Cable - கம்பியிழை
Knuckles - மூட்டுகள்
Clamp - கவ்வி
Ring - வளையம்
Hole - ஓட்டை
Hook - கொக்கி
Spokes - ஆரக்கால்கள்
Spoke guard - ஆரக் காப்பு
Spoke fixing screw - ஆரக்கால் திருகாணி
Spanner - மறைதிருகி
Spokes spanner - ஆரக்கால் மறைதிருகி
Screw driver - திருப்புளி
Tools - கருவிகள்
Pocket tools - பையடக்கக் கருவிகள்

Front Mud Guard - முன் மணல் காப்புறை
Back mud guard - பின் மணல் காப்புறை
Chain Guard - சங்கிலிக் காப்புறை
Dress Guard - ஆடைக் காப்புறை
Gloves - கையுறை
Head set - தலைக்கவசம்
Wrist band - மணிக்கட்டுப் பட்டை

Bell - மணி
Bell lever - மணி நெம்பி
Bell cup - மணி மூடி
Bell spring - மணிச் சுருள்
Bell frame - மணிச் சட்டகம்
Bell rivet - மணி கடாவி
Bell fixing clamp - மணிப் பொருத்தி

Lock - பூட்டு
Lock fixing clamp - பூட்டுப் பொருத்தி
Key - சாவி
Key chain - சாவிக் கொத்து
Chain lock - சங்கிலிப் பூட்டு

Inner wire - உள்ளிழை
Electrical parts - மின்னணுப் பாகங்கள்
Lighting Spoke - ஒளிரும் ஆரக்கால்
Spokes with balls - மணிகோத்த ஆரக்கால்
Extra fittings - கூடுதல் பொருத்திகள்

Foot rest - கால்தாங்கி
Baby foot rest - குழந்தைக் கால்தாங்கி
Water bottle - தண்ணீர்க் குடுவை

Racing cycle - பந்தய மிதிவண்டி
Mini cycle - சிறு மிதிவண்டி
Mountain cycle - மலை மிதிவண்டி
Foldable cycle - மடக்கு மிதிவண்டி
Wheel chair - சக்கர நாற்காலி
Beach cruiser - கடற்கரைத் துரிதவண்டி
One-wheel cycle - ஒரு சக்கர மிதிவண்டி
High-tech bike - அதிநுட்ப வண்டி
Kid cycle - சிறுவர் மிதிவண்டி
Ladies cycle - மகளிர் மிதிவண்டி
Tri cycle - முச்சக்கர வண்டி (அ) பொதி மிதிவண்டி
Cycle with motor - உந்து மிதிவண்டி

Inflating - காற்றடித்தல்
Patch - பட்டை
Patching - பட்டை வைத்தல்
Patch work - சிறு வேலை (அ) சில்லறை வேலை
Over hauling - முழுச் சீரமைத்தல்
Painting - வண்ணம் தீட்டல்
Lubrication - எண்ணெய் இடல்
Wheel bend removal - கோட்டம் எடுத்தல்

Puncture - துளை
Puncture closure - துளைமூடல்
Puncture lotion - துளைமூடு பசை
Emory paper (Abrasive sheet) - தேய்ப்புப் பட்டை (உப்புத் தாள்)
Wooden mallet - மரச் சுத்தி

Grease - உயவுப் பசை
Lubricant oil - உயவு எண்ணெய்
Waste oil - கழிவு எண்ணெய்

இந்தச் சொற்களை விடச் சிறந்த - பொருத்தமான சொற்கள் உங்களுக்குத் தோன்றினால் தெரிவியுங்கள்; மாற்றலாம். இவை தவிர மேலும் உள்ள சொற்களை, படிக்கிற நீங்கள் தெரிவியுங்கள். அவற்றையும் தமிழாக்க முயல்வோம். முதலில் சொற்களை வரையறுப்போம்; பின்னர் அவற்றைப் பயன்படுத்துவோம்.

Wednesday, June 01, 2005

கவிதாயினி பூரணி


பாட்டுக்கும் கவிதைக்கும் வேறுபாடு உண்டா? இல்லையா?

உறுதியாக உண்டு. ஒழுங்கமைவு உள்ள ஓசையே இசை. அந்த இசை பயின்று வருவதே பாடல். சாதாரண பேச்சுவழக்குச் சொற்களைக்கூட விருப்பம்போல வளைத்துப் பாடலாக்கிவிடலாம். இதனால்தான் 'இழுக்குடைய பாட்டுக்கு இசை நன்று' என்றார்கள். இவை, காதுகளுக்கானவை.

பாடலுக்குள் இடம்பெறும் எதுகை, மோனை, இயைபு, சந்தம் அல்லது இசை, பாடுபவரின் குரல், பக்க வாத்தியங்கள், பின்னணி இசை ஆகியவை, கேட்பவரை ஏமாற்றக் கூடியவை; கவிதை போன்ற ஒரு மயக்கத்தைத் தரவல்லவை. பாடலின் கருத்தையோ, கவிநயத்தையோ(அப்படி ஒன்று இருந்தால்) அணுக விடாமல் கேட்பவரின் கவனத்தைத் திசைதிருப்பக் கூடியவை.

இப்படி எதிர்மறையாக இல்லாமல் சில தருணங்களில் இவை, கவித்துவத்திற்கு உதவும் கூறுகளாகவும் திகழும். அனைத்தும் சேர்ந்து கவிதையை மிக ஆழமாக நம் மனத்தில் பதியவும் வைக்கும். அது, அரிதாகத்தான் நிகழும்.

பாடல், கவிதை என்ற வடிவங்களின் மேல் தவறில்லை. அவற்றைக் கையாளுவோரின் திறனுக்கு ஏற்ப, பாடலுக்குள் கவிதையும் கவிதைக்குள் பாடலும் இடம்பெற வாய்ப்பு உண்டு. அத்தகைய இணைவு, அரிதாகத்தான் நிகழும். திரைப்படப் பாடல்கள் கவிதை ஆகுமா என்ற கேள்விக்கும் இந்தப் பதில் பொருந்தும்.

தமிழ் யாப்பு வடிவங்களுக்குப் பா என்றே பெயர். வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா என்பவை, நான்கு வகைப் பாக்கள். இந்தப் பா என்பது, பாட்டைக் குறிக்கிறதா? இல்லை. பாடப்படுபவையே பாடல்கள்; பாடப்படாத நிலையில் இவை செய்யுள்களே. செய்யப்பட்டவை என்பதால் இப்பெயர்.

இந்தச் செய்யுள், பாடல் ஆகியவற்றிலிருந்து கவிதையை எப்படிப் பிரித்து அறிவது? ஓர் எளிய வழி உண்டு. இசையையும் அலங்காரங்களையும் படைப்பிலிருந்து உருவி எடுத்த பின்னும் ஓவியம், புகைப்படம் ஆகியவற்றிலிருந்து விலக்கி வைத்தபின்னும் படைப்பு, உயிர்த் துடிப்புடன் உள்ளதா? நம் உள்மனத்தைக் கவருகிறதா? அத்தகைய படைப்பிற்குள் கவிதை வாழ்கிறது. இன்றைய சூழலில் அதைக் காண்பது கொஞ்சம் கடினம்தான். இந்தச் சிக்கலைப் பிறகு அவிழ்த்துக்கொள்ளலாம். இப்போது பூரணியின் படைப்புகளுக்குள் நுழைவோம். 'படைப்பு' எனச் சொல்லக் காரணம் உண்டு. அது, பாடலா, செய்யுளா, கவிதையா எனக் காணும் வேலையை நான் உங்களிடமே அளிக்கிறேன்.

இன்று 92 வயதுள்ள பூரணி, 1913இல் பிறந்தவர். பாரதி மறைந்த 1921ஆம் ஆண்டு பூரணிக்கு 8 வயது. அடுத்த ஏழு ஆண்டுகளில், தன் 15ஆவது வயதிலிருந்து பூரணியும் படைப்பு முயற்சியில் இறங்குகிறார். அந்தக் காலத்தில் எத்தகையவற்றைப் படைத்தனர் எனப் பூரணியின் ஆக்கங்களிலிருந்து நாம் காணலாம். இவற்றைப் படிக்கும்போது பாரதியை மகாகவி என அழைப்பதன் பொருத்தத்தை உணரலாம்!

புராண, இதிகாசக் கதைமாந்தர்களை வைத்து பாடலுக்குள் கதைசொல்லும் முயற்சியில் பூரணியும் ஈடுபட்டுள்ளார். தமயந்தி ஸ்வயம்வரக் கும்மி என்பதை 1929ஆம் ஆண்டு படைத்துள்ளார். 15 பாடல்களில் தமயந்தியின் கதையைச் சொன்ன பூரணி, இதில் ஒரு புதுமை செய்துள்ளார். 15 பாடல்களையும் அக்காலத்தின் பிரபல பாடல் மெட்டுகளில் வழங்கியுள்ளார்.

நொண்டிச் சிந்தை அடுத்து, "பொன்னுலவு சென்னிகுள", "பத்தொன்பதாம் நூற்றுக்குமேல்", "வாழ்க திலகர் நாமம்", "தந்தனமடி", "ரத்ன ஊஞ்சல் ஆடினார்", "அன்னையே என்", "மாதவர் போற்றிடும்", "கானகம் தாண்டி", "நந்தவனத்தில்", "ஐயா, பழனி மலை", "மருவே சரித்த", "அம்மா வயிற்றைப் பசிக்குது", "வேட்டையாடினான்", "மங்களம் மாதவற்கு" ஆகிய பாடல்களின் மெட்டுகளில் தமயந்தி கதையைக் கூறியுள்ளார். ஒரு கதையை இவ்வளவு பாடல்களின் மேல் ஏற்றிச் சொன்ன பூரணியின் இசையார்வத்தைப் பாராட்டலாம். மூலப் பாடலுடன் ஒப்புநோக்கினால் மட்டுமே இவை எவ்வாறு அந்த இசையில் பொருந்தியுள்ளன எனப் பார்க்க முடியும். ஆனால், இங்கே பாடலின் கருத்தைவிட வடிவத்திற்கே முக்கியத்துவம் தந்துள்ளது தெளிவாகிறது.


1930 முதல் 1945 வரை ஆக்கியவற்றில் அக்கால வழக்கங்களை நன்கு பதிந்துள்ளார். முக்கியமாக முடுகுச் சந்தத்தில்,

சுட்டி பட்டம் ஜடை
சிங்காரம் போச்சு
இஷ்டமுடன் தலையிலே
சிலைடு ரிப்பன் ஆச்சு...

- எனத் தொடங்கும் பாடலின் மூலம் அந்தக் காலத்தில் நிகழ்ந்த பல்வேறு மாற்றங்களை அறிய முடிகிறது. அந்த வகையில் இதற்கும் ஒரு முக்கியத்துவம் உண்டு. இதே காலத்தில் நலங்குப் பாடல்களும் இயற்றியுள்ளார். அவற்றில் மீண்டும் பிரபல மெட்டுகளைக் கையாண்டுள்ளார். "மாயப் பிரபஞ்சத்தில்", "நந்தகே லாலா", "பஜனை செய்வோம்", "உள்ளம்தான்" மெட்டுகளில் இந்த நலங்குப் பாடல்கள் அமைந்துள்ளன.

எல்லா உணவுப் பண்டங்களையும் சேர்த்து, 'போஜனப் பாட்டு' என்ற ஒன்றை மெல்லிய நகைச்சுவையுடன் இயற்றியுள்ளார். அக்காலத்தில் என்னென்ன உணவுகள் இருந்தன என்பதை இதன் வழியே அறியலாம். இதையும் "சதா போரே" மெட்டில் பாடியுள்ளார்.

பல பாடல்களில் இவர் என்ன கருவில் பாட்டு எழுதியுள்ளார் என்பதைவிட என்ன மெட்டில் பாட்டு எழுதியுள்ளார் என்பதே முக்கியமாய் இருக்கிறது. ஏனெனில் அக்காலத்தில் இன்னின்ன பாடல்கள் பிரபலமாக இருந்தன என்பதற்கான வரலாற்றுச் சான்றாக இந்த முயற்சி இருக்கிறது. "யாவரும் சுதந்திரமாக", "ஸ்ரீ கண்டேசனை", "பார்க்கப் பார்க்க" ஆகிய மெட்டுகளிலும் இவரிடம் பாடல்கள் உண்டு.

பாரதி பாடல்களின் மெட்டிலும் இவர் பாடல் புனைந்துள்ளார். "விடுதலை விடுதலை", "விட்டு விடுதலையாகி", "ஒளி படைத்த கண்ணினாய்", "ஆடுவோமே பள்ளு பாடுவோமே", "என்று தணியும்" ஆகிய பாடல்களின் மெட்டிலும் இசை நகல் எடுத்துள்ளார். இந்தப் பாடல்கள், மிகச் சாதாரணமானவை; ஆழமற்றவை; ஏதோ விளையாட்டுப் போல் எழுதியுள்ளார்.

திரைப்படப் பாடல்களை அடியொற்றியும் எழுத முயன்றுள்ளார். "சிட்டுக் குருவி", "தங்கத்திலே", "கண்ணும் கண்ணும்", "சொல்லத்தான் நினைக்கிறேன்", "காதலிக்க நேரமில்லை", "நெஞ்சத்தை அள்ளிக் கொஞ்சம்"...போன்ற திரையிசைப் பாடல் மெட்டுகளிலும் பாடல் இயற்றிப் பார்த்துள்ளார்.

பூரணியம்மாளின் தொடக்கக் கால எழுத்து முயற்சிகள், ஏதேனும் ஒன்றைப் பார்த்துப் போலச் செய்தல் முயற்சியிலேயே உள்ளன. தொடக்க நிலைக்கு அது சரி. ஓவியம் கற்க விழைவோர், ஒரு படத்தை மாதிரியாக வைத்தே வரைவது வழக்கம். ஆனால், சில ஆண்டுகளிலேயே அவர், சிறந்த கவிதையை நோக்கி நகர்ந்திருக்கவேண்டும். ஆயினும் பூரணியின் படைப்புகளை வைத்துப் பார்க்கும்போது, அவர் எழுதத் தொடங்கி 40 ஆண்டுகள் வரையும் இப்படி இசை நகல் எடுத்துள்ளார். இது, மிக அதிகமான காலம்.

தன் சொந்த வலுவின் மேல் நம்பிக்கை இல்லாத படைப்புத்தான், இன்னொன்றின் செல்வாக்கை வேண்டி நிற்கும். பிரபலமான ஒன்றைப் பிரதி எடுப்பது, பிரச்சாரத்திற்கு வேண்டுமானால் உதவலாம். அதற்கு இலக்கியம் என்று பெயரில்லை.

படைப்பாளியை ஊக்குவிக்கும் எண்ணமுள்ள நம் நாட்டுப் பெரிய மனிதர்கள் பேரிலும் குற்றமுண்டு. பூரணி என்ன எழுதினாலும் பாராட்டியுள்ளார்கள். ஏனெனில் அதற்கு மேல் சிறப்பாக எழுதுவோர் இல்லை போலும். இது, உண்மையாகவும் இருக்கலாம். ஏனெனில், பெண்கள் படிப்பதே கூடாது என்று இருந்த காலத்தில் பிறந்த பூரணி, ஐந்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ளார். அதன்பிறகு தன் சொந்த முயற்சியின் பேரில் இந்த அளவு எழுதியதே அவருக்குப் பெரியதாகத்தான் இருந்திருக்கும்.

ஆனால், அவரை மேலும் மேலும் எழுதத் தூண்டியவர்கள், அவரின் இசையாற்றலைத் தவறாகப் பயன்படுத்தியுள்ளனர். தலைவரை வரவேற்க, ஆண்டுவிழாவில் பாட, நாடகத்துக்கு இடையே பாட.. என்று பாடலாசிரியரைச் சிறிய வட்டத்திற்கு உள்ளேயே சுற்றி வரச் செய்திருக்கிறார்கள்.

பாரதி, காந்தி, நேரு போன்ற தேசத் தலைவர்களைப் போற்றும் துதிகள் எழுதிய பிறகு பூரணி, அடுத்த கட்டத்தை எட்டியுள்ளார். அது, இன்றும் கூட பலரும் பின்பற்றும் உத்திதான். அதாவது, ஒரு கருப்பொருளைப் பல்வேறு விதமாக உவமிப்பது, அந்த உவமைகளை அடுக்குவது. இதன்படி, வாசலில் இட்ட கோலம் எப்படியெல்லாம் இருக்கிறது?, மின்னல் எப்படியெல்லாம் தெரிகிறது?, அலை, கரையை நோக்கி ஏன் ஓடிவருகிறது?, மலை எப்படி தோன்றுகிறது?, வாழ்க்கை எப்படியெல்லாம் நம்முன் நிற்கிறது? எனக் காட்டுகிறார். இங்குதான் கொஞ்சம் உருப்படியான யாப்பமைவு இருக்கிறது.

இதன் பிறகு காட்சி விவரணைகளுக்கு வருகிறார். என்ன பார்த்தார், கேட்டார், உணர்ந்தார் என்பதை அப்படியே அழகாகச் சொல்லத் தெரிந்துவிட்டது. இங்கு பூரணி, தன் பெயர் சொல்லும் அளவுக்குச் சில படைப்புகளை வழங்கியுள்ளார்.

கட்டிவிட்ட கருந்திரையாய்
கங்குல் தன் இருட்பரப்பில்
வெட்டவெளி வானிடையே
மெளனத்தின் சொற்பொழிவாய்
கண்சிமிட்டும் தாரகைகள்
காலக்கதை உரைக்க
மண்சுமக்கும் மானுடங்கள்
மயங்கித் துயின்றுவிட

உறங்கும் உலகத்தில்
உறங்கா ஒரு ஜீவன்
கிறங்கக் குழலெடுத்து
கீதம் இசைக்கிறது.
வெள்ளை மணற்பரப்பில்
வேய்ங்குழலின் மோகனத்தில்
உள்ளம் லயித்திருக்க
ஒரு மனிதன் இசைத்தவமாய்
பரவச நிலை அடைந்து
பாட்டாய் மாறிவிட்டான்

-'நாதம்' என்ற தலைப்பிலான இந்தப் பாடல், இவருடைய முந்தைய படைப்புகளிலிருந்து வேறான ஒரு படைப்பு. 'மெளனத்தின் சொற்பொழிவு' என்ற சொற்சேர்க்கை, பூரணியிடமிருந்து வெளிப்பட்டுள்ளது, அவருடைய மாற்றத்திற்கான சான்று.

அவைகள் மனிதர்கள்
அல்ல, அதனால்
இணையைப் பிரித்து
இஞ்சக்ஷன் செய்து
இனத்தைப் பெருக்கி
இலாபமடை;

நீயோ மனிதன் ஆகையால்,
கருத்தடை மூலம்
குழந்தைகள் ஒழித்து
கட்டற்றுக்
கலவியில் திளை

-'கலி நீதி' என்ற இந்தப் படைப்பில் மனிதனின் முரணை நறுக்கெனக் கூறுகிறார். இதன் மூலம் தன்னால் சுருக்கமாகவும் வலுவாகவும் ஆழமாகவும் ஒரு கருத்தை முன்வைக்க முடியும் எனக் காட்டியுள்ளார்.

அண்மைக் காலமாக இவர் எழுதியுள்ள பாடல்களில் நல்ல பல கேள்விகள் உள்ளன. அவர், சமூகத்தைக் கூர்ந்து கவனிப்பதோடு அதை விமர்சிக்கிறார். அதற்கு எதிர்வினையும் ஆற்றுகிறார்.

போக்குவரத்துப்
பாதைகளும்
நாக்கு வறளாமல்
நல்ல குடிநீரும்
நாட்டு மக்களுக்கு நல்குவது
அரசாங்கத்தின் கடமை.
இதைப்போய் ஏன்
விளம்பரப்படுத்துகிறார்கள் டி.வி.யில்?
கிராமங்கள் அந்நிய நாடா?
தர்மம் செய்கிறார்களா அதற்கு?

- என்ற கேள்வியை அரசியல்வாதிகளின் முன் உரக்க வைக்கிறார்.

ஒற்றைச் சிலம்பால் குற்றவாளி கோவலன்
மற்றதால் நிரபராதி

- என்று சிலப்பதிகாரக் காதையை இரண்டே வரிகளில் கூறுகிறார்.

தாம்பத்யம், போலிகள், கொழுப்பு, எண்ணமும் செயலும், சலிப்பு, பண்பாடு, ஆண் குணம், பெண்களின் நிலை, முதுமை, பெண்ணியம்...இவையெல்லாம் இவரின் படைப்புகளுக்கான தலைப்புகள். தலைப்பு வைப்பதில் பூரணி இன்னும் கவனம் செலுத்தவேண்டும். இவருடைய தலைப்புகளில் கவித்துவத்தை மத்திய புலனாய்வுப் பிரிவேனும் கண்டுபிடிக்குமோ, என்னவோ!

மிக அரிதான ஒன்றைக் குறிப்பிடவேண்டும். பாரதியின் சமகாலத்தில் வாழ்ந்த ஒருவர், இன்றும் நம்மிடையே இருக்கிறார்; அதுவும் அவ்வப்போது ஏதாவது எழுதியபடி. கவிஞர்கள், ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு, கவிதையின் மீது சலிப்படைவது இயல்பு. பூரணி அவ்விதம் இல்லாமல் தொடர்ந்து இயங்குவதே பாராட்டத்தக்கது. இக்காலச் சூழலுக்கு ஏற்ப, புதுக்கவிதையிலும் எழுத முயலுகின்றார்.

பூரணியின் இயற்பெயர், சம்பூர்ணம். பிறந்த ஊர், பழனி. புகுந்த ஊர், தாராபுரம். இப்போது சென்னையில் வசிக்கிறார். தமிழாசிரியரின் மகளாகப் பிறந்தார். மிக இளம் வயதிலிருந்தே எழுதி வந்தாலும் 2001ஆம் ஆண்டில்தான் இவரின் முதல் நூல் வெளிவந்துள்ளது. அதன் தலைப்பு, பூரணி கவிதைகள். இவர், கபீர் கவிதைகளை தமிழாக்கியுள்ளார். இவருடைய மகளே கிருஷாங்கினி. நூற்றாண்டை நோக்கி வீறு நடைபோடும் பூரணி, நல்ல உடல்நலத்தோடும் மனநலத்தோடும் படைப்பாற்றலோடும் விளங்க வாழ்த்துகிறோம்.

கடமைகள் ஓய்ந்தாலும்
முதுமைநிலை வந்தாலும்
செயலற்ற நினைவோட்டம்
சலியாது தொடர்கிறது
- என்கிறார் பூரணி.

முதியவர்கள், குழந்தைகளுக்குச் சமானம்; குழந்தைகள், தெய்வங்களுக்குச் சமானம்.

Wednesday, May 25, 2005

தமிழ் தமிழர் தமிழ்நாடு!!???

உண்மையில் நாம் மிகவும் இக்கட்டான நிலையில்தான் இருக்கிறோம். கடந்த ஞாயிறு அன்று தமிழன் தொலைக்காட்சியில் இயக்குநர் சீமான், மக்கள் எழுதி அனுப்பிய கேள்விகளுக்கு விடையளித்துக்கொண்டிருந்தார். பேச்சின் இடையே அவர் சொன்னது: அண்மையில் ஒருநாள் அவரும் அறிவுமதியும் திரையரங்கு ஒன்றிற்குச் சென்றார்களாம். அங்கு நின்றிருந்த இளைஞர்கள் அவ்வளவு பேரும் மேற்கத்திய கலாசாரம் உடையில் தெரிய, கலப்புத் தமிழில் பேசிக்கொண்டிருந்தார்களாம். அப்போது அறிவுமதி சொன்னது: 'நாம் போராட்டத்தை மிகவும் தாமதமாகத் தொடங்கியிருக்கிறோம். நாம் இப்போது மிகவும் பின்தங்கி இருக்கிறோம். எல்லாம் நம் கையை மீறிச் சென்றுவிட்டன'.

இந்தக் கூற்றில் எவ்வளவு உண்மை இருக்கிறது என்பதை ஒவ்வொருவரும் சிந்திப்பது நல்லது.

மிகவும் அச்சம் தரும் உண்மை என்னவெனில், பெரும்பான்மைத் தமிழர்களுக்குத் தமிழ்ப் பற்று குறைந்துவிட்டது. அது மட்டுமின்றி, அவர்களிடம் தமிழை வலியுறுத்துவதை அவர்கள் தவறு என்றும் கருதத் தொடங்கிவிட்டார்கள். தவறு என்ற மனப்பான்மை வளருவதால் நல்ல தமிழைப் பேசும் தவற்றைப் பலரும் செய்வதில்லை. இயல்பான பேச்சு என்ற பெயரில் எவ்வளவுக்கு எவ்வளவு வேற்றுமொழிச் சொற்களைக் கலக்க முடியுமோ அவ்வளவுக்கு அவ்வளவு கலக்கிறார்கள். மிகவும் கவனிக்க வேண்டியது, இப்படிக் கலப்பது குறித்து அவர்களுக்கு எந்தக் குற்ற உணர்வும் இல்லை. இதுவே சரி என்றும் கருதுகிறார்கள்.

இந்த மனப்பான்மையின் அடிப்படையிலேயே அவர்களின் பல செயல்களும் அமைகின்றன.

1. குழந்தைகளுக்கு வடசொற்கலப்புடன் பெயர் வைப்பது, 'மம்மி', 'டாடி' என்று அழைக்கவைப்பது, தம் குழந்தைகளை ஆங்கிலப் பாட வழியில் சேர்ப்பது, ஆங்கிலத்தில் பேசுபவரைப் பெரிய அறிவாளியாகக் கருதுவது...... போன்றவை இன்று எங்கும் காணத் தகுந்த காட்சிகள்.

2. தம் முதலெழுத்துகளை ஆங்கிலத்திலேயே வைத்துக்கொள்வோர் பெருகி வருகின்றனர். முதல் கோணல் முற்றிலும் கோணல் என்பது போல் அதன் பிறகு அவர்கள், தமிழை வலியுறுத்திப் பேசும் தகுதியையும் இழந்துவிடுகிறார்கள்.

3. கடைகள், வணிக நிறுவனங்கள், விளம்பரங்கள்.. என வணிகம் சார்ந்த அனைத்திலும் ஆங்கிலமே கோலோச்சுகிறது. இன்னும் வணிகத்தில் ஈடுபட்டுள்ளவரின் முகவரி அட்டை முதற்கொண்டு, கடிதக் கட்டு, தம்மைப் பற்றிய அறிமுகம், விலைச் சீட்டு, வணிக ஒப்பந்தம்... என அனைத்தும் ஆங்கிலத்தில் இருப்பது எழுதப்படாத விதியாகிவிட்டது.

4. துறைதோறும் துறைதோறும் புழங்குகிற வேற்றுச் சொற்களைக் கணக்கெடுக்கத் தொடங்கினால் தமிழ் அகராதி தோற்றுவிடும் ஆபத்து உள்ளது.

5. எழுத்தாளர்களும் வெட்கம் இல்லாமல் இந்தப் போக்குக்குத் துணை போகின்றனர். தமிழ்ப் படைப்புகள் பலவும் வேற்று மொழிச் சொற்களைத் தம் உடலோடு ஒட்டிக்கொண்டுள்ளன. புகழ் பெற்ற, மூத்த எழுத்தாளர்களே இது குறித்து அக்கறை ஏதும் இல்லாதவர்களாக இருக்கிறார்கள். எங்கே அதை ஆதரித்தால் தாம் நாளை கலப்புத் தமிழில் படைக்கத் தடை உண்டாகிவிடுமோ என்ற அச்சத்தில் 'படைப்பிலக்கியத்தில் தூய தமிழைப் பேண முடியாது' என்று மறுக்கின்றனர். அவர்களுக்கு அதற்குத் தகுதியும் திறமையும் இல்லை என்று ஒப்புக்கொள்ள அவர்கள் எவரும் முன்வருவதில்லை. மாறாக, தம் குறையைத் தமிழின் குறையாக ஏற்றிக் கூறுவதில் எழுத்தாளர்கள் முனைப்புடன் உள்ளனர்.

6. தமிழாசிரியர்களும் தமிழ்ப் பேராசிரியர்களும்கூட தம் எல்லையான வகுப்பறை அளவிலும் கூட நல்ல தமிழில் பேசுவதில்லை; மாணவர்களையும் பேசத் தூண்டுவது இல்லை. 'கூலிக்கு மாரடிப்பது' என்பதுபோல் வகுப்பறைக்குள் நுழைந்து, நேர நிரப்பிகளாக நிற்கிறார்கள். தமிழை வைத்து வயிறு வளர்க்கும் இவர்கள், தன் பக்க இலக்கிலேயே கால்பந்தை அடிக்கிறார்கள்(same side goal). மாறும் உலகில் தமிழால் எதுவும் முடியாது என்ற எண்ணத்தை வளர்ப்பவர்களாகவே இருக்கிறார்கள்.

7. தமிழ்நாட்டு ஊடகங்கள், தமிழுக்குப் பெரும் கேட்டினைச் செய்து வருகின்றன. தலைப்புகளைத் தமிழில் வைக்காமல், தமிழைச் சரியாக உச்சரிக்கத் தெரியாமல் நிலைமையை மோசமாக்கி வருகிறார்கள். இவர்களும் நல்ல தமிழுக்கு எதிர்நிலையையே எடுக்கிறார்கள். தம்மைச் சார்ந்த எழுத்தாளர்களுக்கும் வாசகர்களுக்கும் நேயர்களுக்கும் தவறான வழிகாட்டி வருகிறார்கள்.

8. அரசு நிர்வாகம், நீதிமன்றம், ஆலயம், கல்வி, தொழில்நுட்பங்கள்.. எனப் பல துறைகளிலும் தமிழ், இரண்டாம் தர நிலையிலேயே உள்ளது.

இந்தச் சூழ்நிலையில் தமிழை எல்லாத் துறைகளிலும் வலியுறுத்த வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளோம். தமிழைப் பேசுவோர், அதுகுறித்துத் தாழ்வு மனப்பான்மை கொள்ளாமல் பெருமிதம் கொள்ளச் செய்வது, பெரிய சவாலாக உள்ளது.

நல்லவேளையாக, தமிழ் அரசியல் கட்சிகள் சிலவற்றுக்குத் தமிழைப் பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றியிருக்கிறது. முதல் நோக்கில் இது, பாராட்டப்பட வேண்டியது. இவர்கள் வெறும் அறிக்கை மட்டும் விட்டுக்கொண்டிருக்காமல் களத்தில் இறங்கிப் போராட முன்வந்துள்ளனர். இதில் அரசியல் ஆதாயம் தேடுகிறார்கள் என்ற குற்றச்சாட்டை நான் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. காரணம், தமிழர்கள் தமிழை விட்டு விலகி நிற்கிறார்கள். இன்றைய சூழலில் தமிழர்களிடம் தமிழைச் சொல்லி வாக்குக் கேட்க முடியும் என்பதை நான் நம்பவில்லை.

இப்படி வெகு சிலர், போராட்டக் களத்தில் நிற்கும்போது களத்தில் இறங்கிப் போராட முடியாதவர்கள் சும்மாவாவது இருக்கலாம். வெண்ணெய் திரண்டு வரும்போது தாழியை உடைப்பது போல், எதிர்க்கருத்தைக் கூறி, மட்டையடி அடிக்காமல் இருக்கலாம். இந்தப் போராட்டத்தால் தமிழ் மக்கள், தமிழுணர்வு பெற்றுவிடுவார்கள் என்ற நப்பாசையில் இருக்கும் சிலர், அதனால் தொடக்கத்திலேயே சோர்ந்துபோய்விடலாம்.

இந்தப் போராட்டம், முனை மழுங்கிப் போவது, நம்மிடம் இருக்கும் மொக்கைக் கத்தியையும் நாம் இழந்துவிடுவதற்குச் சமானம். தமிழ்ப் பாதுகாப்புப் போராட்டத்தைப் பலவீனப்படுத்துவது, நம் தலையில் நாமே மண்ணை வாரிப் போட்டுக்கொள்வது போலாகும்.

ஏறத்தாழ, பத்து ஆண்டுகளுக்கு முன் இத்தகைய ஒரு போராட்டத்தில் நானும் கலந்துகொண்டேன். 'செந்தமிழ் விரும்பிகள் மாமன்றம்' என்ற அமைப்பின் சார்பில், பெயர்ப் பலகைகளைத் தமிழில் வைக்கக் கோரி, சென்னையில் சில சாலைகளின் வழியே பேரணி நடத்தினோம்; காவல் துறையின் அனுமதியுடன்தான். வழியில் உள்ள கடைகளில் எல்லாம் துண்டறிக்கையை விநியோகித்து வந்தோம். இறுதியில் ஒரு கூட்டம் போட்டு, சில தீர்மானங்களை நிறைவேற்றினோம். அன்று எங்களால் செய்ய முடிந்தது அவ்வளவே.

இன்றைய நிலையில் இந்தக் கோரிக்கைக்காகப் போராடுவதற்கு ஆட்கள் கிடைப்பதே அரிது. ஆயிரக்கணக்கான தொண்டர்கள், தம் வேலையை விட்டுவிட்டு, அக்கினி நட்சத்திர வெய்யிலில் தொண்டை கிழியக் கத்தி, ஆர்ப்பாட்டம் செய்து, வாகனங்களை மறித்து, வேற்று மொழி விளம்பர/ பெயர்ப் பலகைகளைக் கரிநெய் பூசி அழித்து, கைதாகி, சிறை செல்லுவது எதற்காக?

அரசின், வணிக நிறுவனங்களின், பொதுமக்களின் கவனத்தைத் தமிழின்பால் ஈர்ப்பதற்கே. அவர்கள் முயற்சிக்கு நாம் ஆதரவளிக்கா விட்டாலும் எதிர்க்காமலாவது இருக்கலாம். உங்களுக்கு மாற்றுக் கருத்து இருக்கிறதா? ஐயப்பாடு இருக்கிறதா? வேறு ஆலோசனை இருக்கிறதா? போராடும் தோழர்களிடம் எடுத்துச் சொல்லுங்கள். அவர்கள், அணுக முடியாத தொலைவில் இல்லை.

போராட்டம் எப்படி அமையலாம் என்பதை ஆலோசனையாகக் கூறலாமே அன்றி, போராட்டமே தவறு என்று அவர்களைத் தூற்றக் கூடாது. நம் பொறுப்பு உணர்ந்து செயல்பட வேண்டும். நாம் சொல்வதைக் கேட்கவும் ஆமோதிக்கவும் ஒவ்வொருவருக்கும் நாலு பேர் இருக்கத்தான் செய்வார்கள். ஆகவே வலைப்பதிவாளர்கள், தமிழைக் குறித்து விவாதிக்கும் போது மிகுந்த விழிப்போடு இருக்குமாறு வேண்டுகிறேன். சமூகத்திற்கு நிகழ்காலத்திலும் எதிர்காலத்திலும் நன்மை செய்யும் ஒரு முயற்சிக்கு நாம் நம் வேற்றுமைகளை மறந்து ஆதரவு தெரிவிக்கவேண்டும்.

Sunday, May 15, 2005

பெண் எம்.எல்.ஏ. சூரியகலா (குடியாத்தம்)
சந்திப்பு: அண்ணாகண்ணன்

தேநீர்க் கடையை அரசியல் பாடசாலை என்று சொல்வார்கள். ஒரு நாளிதழைப் பத்து நூறு பேர் படிப்பதும் காரசாரமாக விவாதிப்பதும் அது சிலநேரங்களில் அடிதடியில் முடிவதும் அங்கு வாடிக்கை. இதற்கு அஞ்சி, 'இங்கு அரசியல் பேசாதீர்' என்று எழுதி வைப்போரும் உண்டு.

சில கிராமத்துத் தேநீர்க் கடைகளில் இட்லி, வடை போன்றவையும் விற்பார்கள். இக்கடையை 'ஓட்டல் கடை' என்பார்கள்.

வேலூர் மாவட்டத்தில் உள்ளது விரிஞ்சிபுரம் கிராமம். அங்கு 43 ஆண்டுகளுக்கு முன் நாராயணசாமி என்பவர், ஒரு ஓட்டல் கடை தொடங்கினார். 'சூரியகலா ஓட்டல்' என்று, அப்போது பிறந்த தன் மகளின் பெயரையே கடைக்கு வைத்தார். அந்தத் தேநீர்க்கடைக்காரரின் மகள் சூரியகலா(43), இன்று குடியாத்தம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஆகிவிட்டார்.

சூரியகலாவைச் சந்திக்க விரிஞ்சிபுரத்துக்குச் சென்றோம். 'சி.எம்.சூரியகலா' என்ற பெயர்ப் பலகையைப் பார்த்தபடி வீட்டுக்குள் நுழைந்தோம்.

"பெயருக்கு முன்னால் இருக்கும் சி.எம்., எதிர்காலத்தில் பெயருக்குப் பின்னாலும் வரக்கூடுமா?" என்று சிரித்தபடி கேட்டோம்.

"நானாவது... சி.எம். ஆவதாவது? அந்தத் தகுதி 'அம்மா' ஒருவருக்கு மட்டும்தான் உண்டு!" என்று சூரியகலாவும் சிரித்தார்.

"என் கணவர் சி.எம்.மகாலிங்கத்தின் முன்னோர் சின்னசாமி, முனுசாமி என்ற இருவர். அவர்களின் முதலெழுத்துகளைச் சேர்த்து 'சி.எம்.' ஆக்கினார்கள். 50 ஆண்டுகளாக அவர் குடும்பத்தில் எல்லோருக்குமே இதுதான் முதலெழுத்து. அவரை மணந்தபிறகு எனக்கும் அதுவே முதலெழுத்தானது" என்று விளக்கினார்.

இளமைப் பருவம் பற்றிக் கேட்டோம். சூரியகலா விவரிக்கத் தொடங்கினார்-
"என் அப்பா நாராயணசாமி. அம்மா, ராஜாமணி. இவர்களுக்கு 3 பெண்களும் 4 ஆண்களும் பிறந்தார்கள். நான் இரண்டாவது குழந்தை.

சின்ன வயதில் அப்பாவின் கடைக்குப் போய் விரும்பியதைச் சாப்பிடுவேன். வேடிக்கை பார்ப்பேன்.

11ஆம் வகுப்பு வரை விரிஞ்சிபுரத்திலேயே படித்தேன். அதன்பிறகு அஞ்சல் வழியில் வரலாறு பாடத்தில் பி.ஏ. பட்டம் பெற்றேன்.

சிறுவயதிலிருந்தே நான் 'அம்மா'வின் ரசிகை. 'அம்மா' நடித்த படம் என்றால் முதல்நாளே போய்ப் பார்ப்பேன். 1978 முதல் நான் அ.தி.மு.க.வில் இருந்தாலும் 1980 முதல்தான் வேகமாகப் பணியாற்றத் தொடங்கினேன்.

1996 சட்டமன்றத் தேர்தலில் அணைக்கட்டு தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளராகப் போட்டியிட்டேன். 19 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்தேன். அதில் சொத்துகளை இழந்து கடனாளி ஆனேன். எனினும் மனம் தளரவில்லை. இறுதிமூச்சு உள்ளவரை 'அம்மா'தான் எனத் தொடர்ந்து பணியாற்றினேன்.

இந்த 2001 தேர்தலில் குடியாத்தம் தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்டேன். அங்கு போட்டியிட அ.தி.மு.க. சார்பில் 36 பேர் விண்ணப்பித்தார்கள். 'அம்மா' எனக்கு 'சீட்டு' கொடுத்தார்கள். அது சொந்தத் தொகுதியாக இல்லாதபோதும் 24 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் வென்றேன். எல்லாமே 'அம்மா'வுக்காக விழுந்த வாக்கு. அம்மா என் தெய்வம்.

நானும் என் கணவரும் 1991இல் சென்னைக்கு வந்தோம். அப்போது 'அம்மா' முதலமைச்சராய் இருந்தார். அமைச்சர் ஒருவரிடம் போய் 'அம்மாவைப் பார்க்கணும்' என்றோம். எதிரில் இருந்த புகைப்படத்தைக் காட்டி, 'இதோ, போட்டோவுல இருக்காங்க. பார்த்துக்குங்க' என்றார். மனவேதனையுடன் திரும்பினோம்.

அந்த வலியைத் துடைத்தெறிந்து விட்டுத் தொடர்ந்து உழைத்தேன். 'அம்மா' என்னை சட்டப் பேரவை உறுப்பினராக்கி அழகு பார்க்கிறார். இப்போது 'அம்மா'வை அடிக்கடி பார்க்கிற வாய்ப்புக் கிடைக்கிறது. ரொம்ப மகிழ்ச்சி, எனக்கு.

1990இல் என் மகள் மாலதியையும் மகன் சதீசையும் கடத்தினார்கள். அவர்கள் படிக்கும் பள்ளிக்கூடத்திற்குச் சென்று 'அப்பாவுக்கு விபத்து' என்று சொல்லிக் கூட்டிச் சென்றான், ஒருவன். எனக்கு விசயம் தெரிந்ததும் நாலாபுறமும் ஆட்களை அனுப்பித் தேடினேன். வேலூரில் பிள்ளைகளுடன் அவன் நடந்து சென்றபோது பிடிபட்டான். பிறகு விசாரணையில், 'என்னை அரசியலில் இருந்து வெளியேற்றவே இந்த முயற்சி' என்று தெரிந்தது. அன்று எங்களின் திருமண நாளும்கூட.

1994ஆம் ஆண்டு 'அம்மா'வைத் தாக்கிப் பேசியதற்காக வாழப்பாடி ராமமூர்த்தியின் கொடும்பாவியை எரித்தேன். அடுத்த ஆண்டில் சென்னாரெட்டி, சுப்பிரமணியசாமி ஆகியோரின் கொடும்பாவிகளையும் எரித்தேன். மூன்று முறைகளும் கைதாகி விடுதலையானேன். பொம்மை மேல் அவர்களின் பெயர் எழுதி உள்ளே 500 சரவெடியை வைத்துக் கொளுத்தினேன். அவை தூள் தூளாக வெடித்துச் சிதறின.

1995இல் ஆளுநர் சென்னாரெட்டியைத் திரும்பப் பெறக் கோரி, குடியரசுத் தலைவருக்கும் பிரதமருக்கும் மனு அனுப்பினோம். அதில் நான் முதலில் இரத்தக் கையெழுத்து வைத்தேன். என் தலைமையில் ஆயிரம் பேர் இரத்தக் கையெழுத்து இட்டார்கள்.

தேர்தலில் வென்ற பிறகு நன்றி தெரிவிக்கச் சென்றபோது மக்கள், பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட கோரிக்கை மனுக்களைத் தந்துள்ளார்கள். வீட்டு மனைப் பட்டா, முதியோர் உதவித் தொகை, ஆழ்குழாய்க் கிணறு, சாலை வசதி, மருத்துவமனைச் சுகாதார வசதி, பேருந்து வசதி, மின்விளக்கு, கல்வி, வேலைவாய்ப்பு, தொகுப்பு வீடு, கள்ளச் சாராய ஒழிப்பு, காவல்துறை மீது புகார்.... எனப் பல கோரிக்கைகளுடன் மனுக்கள்.

இதுவரை 2,650 மனுக்களுக்குப் பதில் எழுதியுள்ளேன். அந்தந்தத் துறைக்கு அவற்றை அனுப்பிப் பரிசீலிக்கச் சொல்லியுள்ளேன். விரைவில் எல்லாக் குறைகளையும் தீர்ப்பேன்" என்றார், சூரியகலா.

சூரியகலாவின் கணவர் மகாலிங்கம், ஒரு சித்த மருத்துவர். ஓமியோபதி, யுனானி மருத்துவமும் அறிந்தவர். வீட்டிலேயே நோயாளிகளைப் பார்த்து மருந்து தருகிறார். "கட்சிக்காரர் வந்தால் காசு வாங்கமாட்டேன். ஏழைகள் என்ன கொடுக்கிறார்களோ, வாங்கிக்கொள்வேன்" என்றார். ஆங்கில மருந்துக் கடை ஒன்றும் வாகனத்தை வாடகைக்கு விடும் நிறுவனமும் வைத்துள்ளார்.

மனைவியைக் குறித்துக் கேட்டோம். "1979இல் திருமணம் செய்துகொண்டோம். நான் என் மனைவியைச் 'சீதா' என்றுதான் அழைப்பேன். விட்டுக் கொடுத்து வாழ்ந்து வருகிறோம். சீதா, நேர்மையும் உண்மையும் பொருந்தியவர்" என்றார் மகாலிங்கம்.

மகாலிங்கம் மொட்டைத் தலையுடன் இருந்தார். காரணம் கேட்டோம். "அம்மா முதல்வரானால் திருப்பதிக்கு வந்து அன்னதானம் செய்து மொட்டை அடித்துக்கொள்வதாக வேண்டியிருந்தேன். அதைத்தான் நிறைவேற்றினேன்" என்றார்.

இவர்களுக்கு 3 பிள்ளைகள். இளையவர் ராஜேஷ்காந்தி +2 படிக்கிறார். நடுவர் சதீஷ்காந்தி +2 முடித்துள்ளார். மூத்தவர் மாலதி பிரியதர்சினி, மருத்துவப் படிப்பு 4ஆம் ஆண்டு படிக்கிறார். நடனம், நடிப்பு, பாட்டு, ஓவியத் திறமைகள் உடையவர். "நரம்பியல் மருத்துவத்தில் முதுகலைப் பட்டம் பெற்று, 'அம்மா'வின் மருத்துவக் குழுவில் இடம்பெற விரும்புகிறேன்" என்றார் மாலதி.
(நன்றி: ராணி 26-8-2001)

Friday, May 13, 2005

பெண் எம்.எல்.ஏ. சாண்டிரா டான் கிரேவல்

சந்திப்பு:அண்ணாகண்ணன்

தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு மக்கள் நேரடியாகத் தேர்வுசெய்யும் உறுப்பினர்கள் 234 பேர். இவர்கள் தவிர, ஆங்கிலோ இந்திய சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவரை எம்.எல்.ஏ. ஆக ஆளுநர் நியமிப்பது வழக்கம். தேர்ந்து எடுக்கப்படும் எம்.எல்.ஏ.களுக்கு உள்ள எல்லா உரிமைகளும் இவருக்கும் உண்டு (தீர்மானங்களின் மீது வாக்களிக்கும் உரிமை தவிர).

இப்போதைய சட்டமன்றத்தில் ஆங்கிலோ இந்தியன் எம்.எல்.ஏ. ஆக, சாண்டிரா டான் கிரேவல் என் 47 வயதுப் பெண் நியமிக்கப்பட்டுள்ளார். சென்னையை அடுத்த தாமஸ்மலையில் வசிக்கும் சாண்டிராவைச் சந்தித்தோம்.

"நீங்கள் நடிகை லைலாவைப் போல் இருக்கிறீர்கள்!" என்றோம். குபீரெனச் சிரித்தார். "லைலா, தமிழ் நடிகையா?" எனக் கேட்டார். "தமிழ்ப் படங்களில் நடிக்கிறார். ஆனால், மும்பை நடிகை" என்றோம்.

பேட்டி தொடர்ந்தது. சரளமான ஆங்கிலத்தில் மகிழ்ச்சியோடு பேசினார், சாண்டிரா.

ராணி: நீங்கள் பிறந்ததில் இருந்து இன்றுவரை உங்கள் வாழ்வைப் படிப்படியாகச் சொல்லுங்கள்?
சாண்டிரா: நான் இதே தாமஸ் மலையில் 1953இல் பிறந்தேன். சென்னை, அண்ணா சாலையில் உள்ள கிறித்து ஆலய ஆங்கிலோ இந்தியப் பள்ளியில் 11ஆம் வகுப்பு வரை படித்தேன்.சென்னை, நுங்கம்பாக்கத்தில் உள்ள மகளிர் கிறித்தவக் கல்லூரியில் பி.யூ.சி. முடித்தேன். தாம்பரத்தில் உள்ள கிறித்தவக் கல்லூரியில் ஆங்கில இலக்கியத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றேன்.

படித்து முடித்துவிட்டு, 'இந்தியாவின் உலகப் பார்வை' என்ற தொண்டு நிறுவனத்தில் எழுத்தராக மூன்றாண்டுகள் பணியாற்றினேன். பிறகு பெட்ரோலிய வேதிப் பொருள் நிறுவனம் ஒன்றில் எழுத்தராகச் சேர்ந்தேன். அங்கு 21 ஆண்டுகள் பணியாற்றினேன். அங்கு ஆட்குறைப்பு நடந்தபோது கட்டாய ஓய்வு கொடுத்து என்னை அனுப்பினார்கள். அதன்பிறகு நான் எங்கும் வேலைக்குப் போகாமல் சமூகசேவை செய்துவருகிறேன்.

ராணி: நீங்கள் செய்துவரும் சமூக சேவை என்ன?

சாண்டிரா: நான் பணியாற்றியபோது இரண்டு மாணவர்களின் கல்விச் செலவு முழுவதையும் ஏற்றிருந்தேன். இப்போது எங்கள் பகுதியில் நடமாட முடியாமல் இருக்கும் முதியோருக்கு உதவி வருகிறேன். மின்சாரக் கட்டணம் செலுத்துவது, கடைக்குச் சென்று பொருள் வாங்கி வருவது, தொலைபேசிக் கட்டணம் செலுத்துவது... போன்ற சின்னச் சின்ன உதவிகள் செய்கிறேன். ஏழைகளின் வீட்டுக்குச் சென்று அவர்களின் குடும்பச் சிக்கல் தீர ஆலோசனை வழங்குகிறேன்.

எழும்பூரில் உள்ள முதியோர் இல்லத்திற்குச் சென்று ஏசுவின் மீது பாடல் இசைத்துப் பிரார்த்தனை செய்கிறேன். 'மதுரையில் கால் ஊனமுற்ற ஒருவர் தெருவில் வசிக்கிறார்' என்ற செய்தியை நாளிதழில் கண்டேன். உடனே 'உதவும் கரங்கள்' வித்யாகருக்குத் தொலைபேசி செய்தேன். 'நானும் அந்தச் செய்தியைத்தான் படித்துக்கொண்டிருக்கிறேன்' என்றார், அவர். என்னால் முடிந்த தொகையைக் காசோலையாக அனுப்பி வைத்தேன்.

ராணி: உங்களுக்கு எப்படி இந்தப் பெருமை மிகுந்த நியமனம் கிடைத்தது?
சாண்டிரா: ஒரு நாள், தொலைபேசியில் ஒருவர் என்னை அழைத்தார். என் வாழ்க்கைக் குறிப்பை அனுப்புமாறு கேட்டார். "எதற்கு?" என்றேன். "வேலைக்காக" என்றார். "எனக்கு வேலை வேண்டாம். நான் சமுதாய சேவை செய்கிறேன்" என்றேன். "இந்த வேலையே அப்படிப்பட்டதுதான்" என்றார். அனுப்பிவைத்தேன்.

பிறகொருநாள் முதல்வர் என்னைச் சந்திக்க விரும்புவதாகச் செய்தி வந்தது. போய்ப் பார்த்தேன். "உங்களால் உங்கள் சமுதாயத்திற்குச் சேவை செய்ய முடியுமா?" என்று முதல்வர் கேட்டார். "உங்கள் உதவியோடு முடியும்" என்றேன். ஜூன் 29ஆம் தேதி என்னை எம்.எல்.ஏ. ஆகத் தமிழ்நாடு அரசு அறிவித்தது.

ராணி: 'ஆங்கிலோ இந்தியன்' என்பவர் யார்?
சாண்டிரா: (இந்திய அரசியல் அமைப்புச் சட்டப் புத்தகத்தை எடுத்துக் காட்டி) ஐரோப்பியத் தந்தைக்கும் இந்தியத் தாய்க்கும் பிறந்தவரே ஆங்கிலோ இந்தியன். 'ஐரோப்பிய' என்று குறிப்பிட்டு இருந்தாலும் அவர் ஆங்கிலம் பேசுபவராய் இருக்கவேண்டும்.

ராணி: உங்கள் பெற்றோரைப் பற்றிச் சொல்லுங்கள்?
சாண்டிரா: என் அம்மா பெயர், ஈவான். இப்போது 74 வயது ஆகிறது. தாமஸ் மலை தபால் தந்தி அலுவலகத்தில் கண்காணிப்பாளராக இருந்து ஓய்வு பெற்றவர். என் அப்பா காலின்ஸ். நாற்பது வயதுக்குள் இறந்துவிட்டார். அதன்பிறகு என் அம்மா, தன் சக ஊழியராய் ரொசாரியோவை மணந்தார். அவர்களுக்குப் பிறந்தவளே என் தங்கை மிஷல். இப்போது அவள் மும்பையில் கல்லூரிப் பேராசிரியையாக இருக்கிறாள். அவள் கணவர் ஒரு மலையாளி. என் கணவர் பஞ்சாபி.

ராணி: உங்களுடையது காதல் திருமணமா?
சாண்டிரா: ஆங்கிலோ இந்திய சமுதாயத்தில் முழுக்கக் காதல் திருமணம்தான்.

சாண்டிராவின் தாய்: ஆமாம். ஒருநாள் பலத்த மழை பெய்தது. என் வீட்டருகே வரும்போது அரீந்தர்சிங் கிரேவலின் மோட்டார் சைக்கிள் பஞ்சர் ஆகிவிட்டது. எங்கள் வீட்டில் நிறுத்திவிட்டுச் சென்றார். பிறகு நட்பு முறையில் நான் அவரது வீட்டுக்குச் சென்றேன். நட்பு வளர்ந்து காதலானது. மூன்றாண்டுகள் கழித்து எங்கள் திருமணம் நடந்தது.

ராணி: உங்கள் கணவர் சீக்கியராகவும் நீங்கள் கிறித்தவராகவும் இருப்பதால் ஏதும் மோதல் ஏற்பட்டதுண்டா?
சாண்டிரா: இல்லை. அவரும் அவர் வீட்டாரும் மிகவும் நல்லவர்கள். அவர் சீக்கியராய் இருந்தாலும் கிறித்தவரான என் அம்மாவை அவரது மோட்டார் சைக்கிளின் பின் இருக்கையில் உட்காரவைத்து ஞாயிறுதோறும் தேவாலயத்துக்கு அழைத்துச் செல்வார். நானும் பஞ்சாபி உடையான சல்வார் கமீசை அணிவேன். என் கணவர் இப்போது பஞ்சாபில் ஒரு தனியார் நிறுவனத்தில் மேலாளராகப் பணியாற்றுகிறார். அவர் ஆங்கிலம் பேசுபவராய் இருந்ததால்தான் எங்களுக்குள் எளிதில் காதல் வளர்ந்தது.

ராணி: சாண்டிரா டான் என்றால் என்ன பொருள்?
சாண்டிரா: சாண்டிரா என்றால் உதவிசெய்பவர் என்றும் டான் என்றால் அதிகாலை என்றும் பொருள்.

ராணி: தமிழ்நாட்டில் எம்.எல்.ஏ. ஆக இருக்கிறீர்கள். தமிழ் கற்க விருப்பம் உண்டா?
சாண்டிரா: நிறைய விருப்பம் உண்டு. ஒன்றிரண்டு தமிழ்ச் சொற்கள் தெரியும் (கண்ணாடி, பாரு, மெல்லப் போங்க என்ற சொற்களை மழலையில் சொல்லிக் காண்பித்தார்). இன்னும் ஆறு மாதத்திற்குள் தமிழ் கற்றுவிடுவேன்.

ராணி: இப்போது உங்கள் சமுதாயத்தின் கோரிக்கைகள் யாவை?
சாண்டிரா: கிறித்தவர் எல்லோரும் பணக்காரர் இல்லை. எங்கள் சமுதாயத்தில் பலரும் ஏழ்மையில் இருக்கிறார்கள். சிலருக்கு அறிவுக் கூர்மை இருந்தும் தொழில் கல்லூரிகளில் இடம் கிடைக்கவில்லை. கல்வியும் தொழிற்பயிற்சியும் வேலைவாய்ப்பும்தான் எங்கள் முதன்மையான கோரிக்கைகள்.

ராணி: அந்தக் காலத்துப் புதுவை மக்களுக்கு பிரெஞ்சு அரசு, பல சலுகைகளை வழங்கியுள்ளது. அதைப் போல் இங்கிலாந்து அரசு உங்களுக்கு ஏதும் சலுகை வழங்குகிறதா?

சாண்டிரா: அந்தக் காலத்தில் இங்கிலாந்துப் படையில் இருந்த சிலர் ஓய்வூதியம் பெற்று வருகிறார்கள். வேறு எந்தச் சலுகையும் இல்லை.

ராணி: இந்திய தேசிய கீதம், இங்கிலாந்து தேசிய கீதம்- இரண்டில் எதற்கு முக்கியத்துவம் கொடுப்பீர்கள்?
சாண்டிரா: நான் ஒரு இந்தியப் பெண். என் மூதாதையரைப் பற்றி எனக்குக் கவலை இல்லை. என் தாத்தாவின் தாத்தா, இங்கிலாந்தில் ஒரு மருத்துவராய் இருந்தார். அவர் இந்தியாவுக்கு வந்து உத்திரப்பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணை மணந்தார். அது நான்கு தலைமுறைக்கு முந்தைய சமாசாரம். நான் இந்தியாவில் பிறந்து, வளர்ந்து, படித்து, இந்தியரைத் திருமணம் செய்துள்ளேன். வேற்றுமையுள் ஒற்றுமை கண்டுள்ள இந்தியாவைக் கண்டு நான் பெருமைப்படுகிறேன்.

ராணி: ஆங்கில சமுதாயத்தின் தாக்கம் உங்கள் வாழ்க்கையில் எந்த அளவு இருக்கிறது?
சாண்டிரா:குறிப்பிடும்படி ஒன்றும் இல்லை. நான் ஆங்கிலம் பேசுகிறேன். கர்த்தரைப் பின்பற்றுகிறேன். கவுன் அணிகிறேன். ஆனால், சல்வார் கமீஸ், சேலை போன்றவற்றையும் உடுப்பேன். பியானோ, கிடார் வாசிப்பேன். மதப் பாடல்கள் பாடுவேன். ஓவியம் வரைவேன். நான் நகை அணிவதில்லை. மேக்கப் போடுவதில்லை. மது அருந்துவது, புகை பிடிப்பது, சூதாடுவது எதுவும் கிடையாது. பாட்டோடு சரி. நடனம்கூட ஆடமாட்டேன். பைபிளின்படி வாழ்கிறேன். தமிழ்ப் பண்பாட்டோடு ஏறக்குறைய கலந்து விட்டேன்.
"தமிழ்ப் படித்துவிட்டால், முழு தமிழ்ப் பெண்ணாகவே ஆகிவிடுவீர்கள்" என்று வாழ்த்திவிட்டு வந்தோம்!

இந்தக் காதல் தம்பதிகளுக்குக் குழந்தை இல்லை. "ஏழை மக்கள் எல்லோருமே என் குழந்தைகள்தான்" என்கிறார், சாண்டிரா.

சாண்டிராவின் வீடு, பழங்காலத்து மண்டபம் போல இருக்கிறது. அதன் வாசல் கதவு குறுக்குக் கம்பியுடன் கூடிய மெல்லிய மரத்தால் ஆனது. அந்தப் பெரிய வீட்டில் வயதான தாயாருடன் சாண்டிரா தனியே வசிக்கிறார். "இது பாதுகாப்பான வீடுதானா?" என்று கேட்டோம்.

"1994இல் எங்கள் வீட்டில் ஒரு திருடன் புகுந்தான். பணம், வீட்டுப் பத்திரம் ஆகியவற்றைத் திருடிச் சென்றான். வெளியே போய்ப் பார்த்துவிட்டு, 'தேவையில்லை' என வீட்டுப் பத்திரத்தை வீசி எறிந்தான். அது, மதிலுக்கு அப்பால் கிடந்தது. கடவுளின் கருணையால் அது தப்பியது.

இதுபோல் எங்கள் வீட்டில் பல முறைகள் திருட்டு நடந்துள்ளது. என்மேல் அக்கறை கொண்ட சிலர், நாய், பெரிய கதவு, காவல்காரர் போன்ற பாதுகாப்பு வழிகளைச் சொல்வார்கள். எனக்கு அவை மேல் நம்பிக்கை இல்லை. ஏனெனில் கடவுள் காப்பாற்றுவார்" என்றார், சாண்டிரா.
(நன்றி: ராணி 12-8-2001)